Thursday, June 24, 2010

நாமக்கல் !! - ஒரு சிறு கதை


"ன்ன லலிதா , ஏற்பாடு பண்ணியாச்சா ?" ஆபீசுக்குள் நுழையும் போதே கோமதி கேட்டாள்.

"வா சொல்றேன். அது ஒரு  பெரிய கதை"  லலிதா  தோள் பையை இறக்கி வைத்து ஆசுவாசப்பட்டாள். கோமதிக்கு பரபரப்பு அதிகமாகியது. "உங்க வீட்டுக்காரர் ஒத்துகிட்டாரா ? பையன் என்னங்கிறான் ? அப்புறம் மாமனார் ?"

" உன் வீட்டுல மாதிரியெல்லாம் என் வீட்டுல நடக்காது கோமு. மூணும் மூணு திக்கு. நான் ஒருத்தி என்ன பண்ண ? என்னமோ எனக்காக பண்ணிக்கிறாப்பல ஆயிடுத்து கடைசில !" லலிதா சடைந்தாள்.

"பழமா காயா அதைச் சொல்லு முதல்ல." கோமு விடாமல் குடைந்தாள்.

"பழம் மாதிரிதான் . இன்னும் தீர்மானமாகலை"  லலிதா  பாட்டிலைத் திறந்து இரண்டு முடக்கு தண்ணீர் குடித்து விட்டு கோமதியைப் பார்த்து புன்னகைத்தாள். "அவரு என் பக்கமாத்தான்  பேசினாரு. பையன் தான் எதுவுமே பேச மாட்டேங்கிறான். மாமனார் என் கண்ணுக்கே சிக்காம இருக்கார்.  இன்னைக்கு ராத்திரி மறுபடியும் ஆரம்பிக்கணும்"

"நாளை காலை ரிசல்ட்டு  . குழப்பிடாதே !" கோமதி எச்சரித்து விட்டுச் சென்றாள்.

" மேடம்  டீ  இந்தாங்க!."  நாயர் கடை வாசு !. "என்னடா ! இன்னிக்கு சந்தனம் குறைவா வச்சிருக்கே. அதுக்கும் பட்ஜெட்டா ?" லலிதா கிண்டலடிக்க, " போங்க மேடம், அளவாத்தான் உரைச்சேன் . அதான் சிரிசாயிடுச்சு " என்று கோணிய படியே அடுத்த டேபிளுக்குப் போய் விட்டான். லல்லி மணி பார்த்தாள். பதினொண்ணே முக்கால் !  ஸ்டேட்மன்ட் பெரும்பாலும் ரெடி. டீயை உறிஞ்சியபடியே , செல் போனில் ராமுவை அழைத்தாள்.

" சொல்லு, லல்லி, என்ன முக்கியமா ?" என்றான் ராமு. "இல்லல்ல. சீனு விஷயம் தான்.." அவள் ஆரம்பிக்கும் முன்னரே, ' சரி சரி, எல்லாம் சாயங்காலம் பேசிக்கலாம் கண்ணா. நேத்து தான் லெக்சர் பெரிசா அடிச்சாச்சே ! ஆபீஸ்ல ஏதாவது விட்டுப் போன பகுதி ஞாபகம் வந்துருச்சோ ? எதுவானாலும் தாத்தாவும் பேரனும் பேசி முடிக்கட்டும். நான் கொஞ்சம் லேட் ஆகும் இன்னிக்கு.எனக்கு ராத்திரிக்கு சிம்பிளா உப்புமாவோ அல்லது ரசம் சாதம் ஆனாலும் போதும். " வைத்துவிட்டான் ராமு.  லல்லிக்கு கோபம் வந்தது " என்ன புருஷன் ? பொறுப்பே இல்லாம !"

லஞசு  நேரத்திலும் லல்லிக்கு நிலை கொள்ளவில்லை. ஏன்தான் ஆளாளுக்கு இப்படிப் புரியாமல் நடந்து கொள்கிறார்களோ ? வீட்டிற்கு போன் போட்டாள். சீனு தான் எடுத்தான். " சாப்பிட்டியாடா செல்லம் ?" லல்லியின் கேள்விக்கு , " ம்ம், ஆச்சும்மா " என்றான். சுரத்தே இல்லை. "பொரியல் போட்டுண்டியா ? சுண்டக்காய் வறுத்து வச்சேனே சாப்பிட்டியா ? " அவளுடைய தொடர்ந்த கேள்விகளுக்கும் " ம்ம் " போட்டுக்கொண்டே தான் இருந்தான். "தாத்தா எங்க ? "

நான்கைந்து வினாடிகள் மௌனம் . பின்னர் "மாடியில இருக்கார்மா " என்றான். அவளுக்கு நன்றாகத் தெரியும், மாமனார் அவளைத் தவிர்த்து வருகிறார். பக்கத்திலே தான் இருக்கிறார் ! தாத்தாவைப் போலவே பேரன் !   "நான்தான் வில்லி ஆயிட்டேன்!" லல்லி அலுத்துக் கொண்டாள்.

"கு , பிசியா ? " ராமுவின் குரல் கேட்டதும் போனின் மறுபக்கத்தில் இருந்து உற்சாகமாக பதில் வந்தது. ஏண்டா , என்கிட்டே எதுக்கு இந்த பார்மாலிட்டி ? சொல்லு, இத்தனை நாளா ஒரு தகவல் இல்லை . லல்லி , குழந்தை, மாமா எல்லாம் எப்படி இருக்கா ?

விசாரிப்புகளுக்குப் பின் ராமு விஷயத்திற்கு வந்தான். ரகு, உன் பையன் சேஷுவை ரெண்டு வருஷம் மின்ன ஒரு போர்டிங் ஸ்கூல்ல விட்டு ப்ளஸ்  டூ  படிக்க வச்சியே, எப்படிடா மார்க்கு வாங்கினான் ? ஸ்கூல் எல்லாம்  எப்படி ?

" எது அந்த நாமக்கல் ஸ்கூல் தானே ? சேஷு சுமாரா படிக்கற பையன். உள்ளூர்ல எண்பது வாங்கினான். நாமக்கல் ல  போயி தொண்ணூறு வாங்கினான். சீனுவுக்கு எதுக்குடா அதெல்லாம் ? அவன்தான் ஸ்கூல் பர்ஸ்டாச்சே ?"

ராமு சற்று திணறினான். " அது ஒண்ணும் இல்லடா . இங்க என்னமோ தொண்ணூத்தி அஞ்சு பர்சன்ட் வாங்கறான். அங்க நாமக்கல் போனா, ஸ்டேட்  ரேங்கு வாங்க வச்சுடுவாங்களாம். உண்மையா ?"

ரகு இப்போது அமைதியாகி விட்டான். " அதெல்லாம் ஆளைப் பொறுத்து தான் எல்லாம். நீ சிங்கத்த வீட்டுல வச்சுட்டு வேட்டையாட சொல்லித் தரணும்னு பேசிட்டு இருக்கே . ஆமா இது யார் ஐடியா ? லல்லியோடதா ? "

ராமுவுக்கு இனிமேல் எதையும் மூடி மறைப்பதில் இஷ்டம் இல்லை. " ஆமாண்டா. அவ ஆபீஸ்ல ப்ரெண்டு  ஒருத்தி தன பையனை அனுப்பி அவன் ஏகப்பட்ட மார்க்கு வாங்கி உள்ளூர்லயே பெரிய காலேஜுல சொல்ப பீஸ் கட்டி சேந்துட்டானாம். ஏதோ ரொம்ப நல்ல ஸ்கூலாம். நல்லா பாத்துக்குறாங்களாம் . இந்த ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டா போதுமாம். அப்புறம், காலேஜு, கேம்பஸ் இன்டர்வ்யூ எல்லாம் நம்மைத் தேடி வருமாம் . நாளைக்கு  மெட்ரிக்கு ரிசல்ட்டு. முடிவு உடனே எடுக்கணுமாம். "

ரகு சிரித்தான் " சரி சரி ! இந்நேரம் லல்லி பையனோட அமேரிக்கா வேலை, கல்யாணம், அப்புறம் இவ அங்க போயி டெலிவரி பாக்கற வரைக்கும் மனசுக்குள்ள பிலிம் ஓட்டியிருப்பா !  நேத்து தூங்கவாவது விட்டாளா ? வண்டு மாதிரி ரீங்காரம் பாடியிருபபாளே !" லல்லி இவர்கள் இரண்டு பேருக்கும் முறைப் பெண். ரகு ராமுவை விட பெரியவன். அவனுக்கு சீக்கிரமே திருமணம் ஆகிவிட்டபடியால், லல்லியை இவன் மாமா இவனுக்கு மணமுடித்தார். ரகு தொடர்ந்தான் " நான் இன்னிக்கு ராத்திரி அங்க வர்ரேன்.  அங்க பேசிப்போம்" .

அவன் பிடி கொடுத்துப் பேசாதது ராமுவுக்கு சற்றுக் கவலையாகத்தான் இருந்தது. லல்லியின் ஆலோசனை அவனுக்கும் சற்றுப் பிடித்துத் தானிருந்தது.   நல்ல காலேஜில் சீட்டு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது அஞ்சுக்கு மேலே தரணும். கௌன்சலிங்கில் வெளியூர் கிடைத்து தொலைந்தால் ஹாஸ்டல் அது இது என்று பெரிய செலவு வைக்கும். நாமக்கல்லில் ரெண்டு வருஷமும் சேர்த்து விட்டால் ரெண்டு லட்சம் போதுமாம். தொண்ணூத்து அஞ்சுக்கு மேலே வாங்கினால் அதுல பாதி தந்தா போதுமாம். ஆனா இந்த ரகுப்பயல் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறான் !

சிவராமன் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். கூடவே சீனுவும். தெருமுனைக்கு வந்ததும்  பழனிசாமிக் கவுண்டர்  சேர்ந்து கொண்டார். அங்கே பாத்திரம் வாடகைக்கு விடுபவர். "என்ன சிவராமா , இன்னிக்கு லேட்டு ? ஏதாவது சீரியல் பாக்குறியா ? " என்று அவரைச்  சீண்டினார். சிவராமன் புன்னகைத்தார்.  கவுண்டருக்கு அந்த ஊரிலேயே சிவராமன் ஒருவர் மட்டும் நண்பர். அதுவும் அறுபத்தைந்து வருஷமாக ! இருவரும் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள். இவர் வாத்தியாராக , இவர் விவசாயியாக , இடையில் பிரிந்திருந்தனர். பத்து   வருஷம் முன்பு, கவுண்டர் இங்கேயே கடை போட்டுவிட, இவர்கள் தினம் மாலை கோவிலில் சந்திப்பது வழக்கம். இன்று பிரதோஷம்.  

கோயிலில் நுழைந்தவுடன் சிவராமன் உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார். பிள்ளயார் முன்பாக நின்று 'சுக்லாம் பரதரம்.. " சொல்லும் போதே அரைக்கண் மூடி ஏதோ உலகத்திற்குச் சென்று விடுவார். அவரிடம் யாரும் பேச முடியாது.  இன்று பிரதோஷக் கூட்டம் நிரம்பியிருந்தது . குருக்கள்  சீனுவைக் கண்டதும், "வாடா, குழந்தே   உக்கார். ஸ்லோகம் சொல்லுடா. நான் அபிஷேகம் முடிக்கறேன்" என்றார்.

சீனு லிங்காஷ்டகம் சொல்ல ஆரம்பித்தான். குருக்கள் அபிஷேகம் ஆரம்பித்தார். இப்போது சிவராமன் ஸ்ரீ ருத்ரம் சொல்ல ஆரம்பித்தார். இருவர்  கண்களிலும் நீர் வழிந்தது.  கவுண்டர் உருகிப் போய் விட்டார். இன்று ஏதோ தாத்தாவும் பேரனும் உணர்ச்சியின் பிடியில் இருப்பதாகத் தோன்றியது கவுண்டருக்கு . பின்னால் இருந்த மீனாட்சி மாமி , "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்று  ஆரம்பித்தவுடன் சிவராமன் குரலே எழாமல் விக்கித்து நின்று விட்டார்.

தீபாராதனை முடிந்து பிரசாதம் வாங்கி விட்டு மண்டபத்தில் அமரும் போது தான் கவுண்டர் கவனித்தார். "என்ன ஐயரே, என்ன விவரம் ? முகம் வாடியிருக்கு . பிரசாதம் பத்தலையா ? " என வினவி விட்டு சீனுவைப் பார்க்க , அவனும் சுரத்தில்லாமல் இருப்பதைப் பார்த்து , "என்னப்பா பேராண்டி,  உனக்கு என்ன கவலை ? டெண்டுல்கர்  டக் அவுட்டு ஆயிட்டானா ? " என கிண்டலடிக்க, இருவரும் மௌனம் காக்கவும், பழனிச்சாமி கவுண்டருக்கே திக் என்று ஆகி விட்டது. எதையும வெளிக்காட்டிக் கொள்ளாமல் , "நான் குந்தி  தேவி மாதிரி. யாருக்கும் சொல்ல மாட்டேன். தாராளமா சொல்லலாம் " என்று நாசூக்காக  துருவினார்.

"பழனிச்சாமி, உன்கிட்ட சொல்லறதுக்கு என்ன ? இவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கிறுக்குப் பிடிச்சிருச்சு. இவனை நாமக்கல்லுக்கு அனுப்பறாங்களாம் " என்ற சிவராமன், கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டார். கவுண்டருக்கு புரியவில்லை " எதுக்கு ? ஆஞ்சநேயர் கோவிலுக்கா ?" என்று பொதுவாகக் கேட்டு வைத்தார்.

 சிவராமனோ வேதனை தாளாமல், " விளையாடாதே. அது நமக்கு புரியாத விளையாட்டு. காசு விட்டெறிஞ்சு, குழந்தையை சக்கையாய் பிழிஞ்சு , மார்க்கு வாங்கற புது வித்தை. தமிழ்நாட்டை புடிச்சு ஆட்டற புது வியாதி. " கவுண்டருக்கு நாமக்கல் விவரம் விளக்கினார். அவரோ, " என்னடா இது , அய்யமார் வூட்டுக் குழந்தைக்கே இந்த கதின்னா, குடியானவன் வீட்டுல என்னதான் நடக்காது ? குழந்தைய படி , படின்னு கொன்னே போடுவாங்க போலிருக்கே ? ஏன் கண்ணு, நீ தானே உன் ஸ்கூல்ல மொத மார்க்கு ? உனக்கே இந்தக் கதியா ? "

சீனு  முதல் முதலாய் வாயைத் திறந்தான். " தாத்தா, அம்மா பிடிவாதமா சொல்லறாங்க. அப்பாவும் போன்னுதான் சொல்லறார். எனக்கு படிப்பும் வேணும். எல்லோரும் வேணும் . அங்கே போனா தாத்தா கிட்ட கேட்கிற ராமாயணம், பாகவதம், அப்புறம் பாட்டு கிளாஸ் எல்லாம் போயிடும். வீட்டுல எல்லாரும் சேர்ந்து சாப்பிட முடியாது. ஸ்லோகம் , கோவில்  எதுவும் முடியாது " சொல்ல சொல்ல கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

கவுண்டர்,  "சரி சரி , நீ கோவில்ல அழுகாதே. தைரியமா வீட்டுக்கு போ." என்று தேற்றி அனுப்பி வைத்தார். இரண்டு பேரும் தளர்ந்து நடப்பதைப் பார்த்ததும், " ஈஸ்வரா, இந்தச் சின்னப் புள்ளைக்கா சோதனை ? சிவராமனைப் பாரு! உன்னை தினமும் பாடற வாய் அது. அதுல அழுகையை உண்டாக்காதே " என்று சிவனுக்கு கடைசியாய் வேண்டுதல் வைத்து விட்டு, கடையை நோக்கி நடந்தார்.

ராமு   களைத்து  வந்திருந்தான். சீனு எங்க என்று கேட்க, "மாடில" என்று லல்லி காட்டினாள்.

ரகு  வரும் போது எட்டாகி விட்டது.   சேஷுவையும் கூட்டி வந்திருந்தான் . " லல்லி , நல்ல பசி. நீங்க ஒண்ணும் எல்லாத்தையும் முடிச்சிடலயே ?  எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தனர். ரகு படபடப்பாக சிவராமனோடும், சீனுவோடும் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் , ஏதோ  செல் போன் மணி சத்தம். " என்னோடதுதான்" என்ற  சேஷு சாப்பிடும் போதே இடது கையால் போனை எடுத்து  காதில் வைத்துக் கொண்டான் . " ஹை , என்னடி இந்நேரத்தில ? ஆங் ! நானா ? இங்கே ஒரு இடத்தில மாட்டிட்டு இருக்கேன். என்னது ! இப்ப வரவா ? ம்ஹும் ! செக் போஸ்ட் இருக்கு. நாளை பார்க்கலாம். எஸ் எம் எஸ் போடு. என்னது, ஐயோ ! அதுக்கெல்லாம் இது நேரமில்லைடீ " பெரிதாகச் சிரித்து விட்டு போனை ஆப பண்ணினான். ரகு குனிந்த தலையை நிமிரவே இல்லை.

சிவராமன் அப்போது தான் முதன் முறையாக நிமிர்ந்து பார்த்தார். "சேஷு ! யாரண்டை இப்படி பேசினாய் ?"

சேஷு ஏதோ விசித்திர ஜந்துவைப் போல் அவரைப் பார்த்து விட்டு , "தாத்தா , இந்தக் கேள்விக்கு நான அப்பா கிட்டயே பதில் சொன்னது இல்லை. ஐ திங் இட் இஸ் அன் இன்ட்ருஷன் இன் மை ப்ரைவசி !"  சிவராமன் திரும்பி ரகுவைப்  பார்த்தார். " பெரியப்பா , இவன் நன்னா சொன்ன பேச்சு கேட்டுண்டு தான் இருந்தான். வெளியூர்ல படிச்சு வந்ததும் ஏதோ அவிழ்த்து விட்டாப்பல இப்படி இருக்கான். இவன் அம்மா ஏதோ பையன் படிப்பு வரும்னு அனுப்பிச்சா. இப்ப என்னடான்னா உள்ளதும் போச்சு. இப்பத்தான் காலேஜு இரண்டாம் வருஷம் . இதுக்கே இப்படி அலட்டல் " 

 சாப்பிட்டு முடித்து ரகுவை நோக்கி ராமு கேட்டான், " நீ இன்னும் நான கேட்டதுக்கு பதிலே சொல்லல்லை" என்றான் . ரகு, ஒரு வறண்ட சிரிப்புடன், உனக்கு வார்த்தையை விட உதாரணம் தான் புரியும்னுட்டு அதையே காட்டியாச்சு. இன்னுமா புரியலை ?  நீங்க ரெண்டு பேரும் நன்னா கேட்டுக்கோங்கோ. சீனு தெய்வப் பிறவி. அவனை கிணத்திலே தள்ளிடாதீங்கோ. மேலும் பெரியப்பாவோட உயிரோட நீங்க விளையாடுறீங்க" .

ரகுவை வாசல் வரை வழியனுபபித் திரும்பியதும், உள்ளே ஹாலில் சிவராமன் நின்றிருந்தார். " ராமு, லல்லி இங்க வாங்கோ"  என்று விட்டு சோபாவில் அமர்ந்தார். " எனக்கு மனசு சரியில்லை. நான கொஞ்ச காலம் காசியில் இருந்துட்டு வரலாம்னுட்டு இருக்கேன். அதான் உங்களைக் கூப்பிட்டேன்." கையில் இருந்த காகிதக் கட்டை எடுத்தார்.

"இதுல வீட்டுப் பத்திரம் இருக்கு. நான திரும்பி வருவேனோ என்னமோ. இன்னும் கொஞ்ச நேரத்தில பழனிச்சாமி ஒரு லாயரோட வருவார். உயில் எழுதிடறேன். குழந்தையை நன்னா பாத்துக்கோங்கோ ..." கடைசி வார்த்தையை சொல்லும் போதே வாயைப் பொத்திக் கொண்டு விட்டார். சோபாவில் அப்படியே சாய்ந்தும் விட்டார்.

"மாமா" என்று லல்லி பதறி அவர் கையைப் பிடித்துக் கொள்ள, சிவராமன் மெதுவாக " அம்மா, உங்களுக்கெல்லாம் புத்திமதி தேவை இல்லை. கோசலை குழந்தை வேண்டினப்போ, தனக்கு பிள்ளை வேணும்னு வேண்டிக்கலை. உலக நன்மைக்காக எல்லாருக்கும் நல்லதையே செய்யப் போற மகா புருஷன்  தனக்கு பிறக்கணும்னு  தான் வேண்டினாள். அவளுக்கு ராமன் பிறந்தான்.  இப்போ கலி யுகத்துல குழந்தை பிறந்த உடனேயே, "நீ நல்லா படிச்சி, நல்லா சம்பாதிக்கணும்"  இப்படித்தான் தாய் சொல்லறா. பின்ன கொழந்தைகளும் எப்படி வளரும் ? "

" ராமு, தெய்வாதீனமா, சீனு காசுக்கு மயங்கற பையன் இல்ல. எங்க பாத்தாலும், பெத்தவாளே குழந்தையை சபிக்கற காலத்தில நமக்கு சொக்கத் தங்கம் கிடைச்சிருக்கு. அதை காசுக்கு மயங்கிச் சிதைச்சிடாதீங்கோ. இனிமே நீங்க தான் அவனுக்கு எல்லாம்." என்று ஒரு பெருமூச்சு விட்டார். "இதோ என் பேங்கு பாஸ் புக். லச்சத்தி சொச்சம் இருக்கு. செலவுக்கு வச்சிக்கோ.  நான நாளைக்குப் புறப்படறேன். நீ நாளைக்கு ரிசல்ட்டு வந்ததும் புறப்படணும் இல்லையா ? அதான் இப்பவே சொல்லிட்டேன்".

ராமு விக்கித்து நின்றான். "என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம் பேசறேள். உங்களுக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம்பா . சீனுவை இங்கேயே சேத்திடலாம். " என்று சொல்லிவிட்டு , அவருடைய காலடியில் அமர்ந்து கொண்டான். வேண்டாம்பா உங்களை மீறி எதுவும் நான செய்ய மாட்டேன். நீங்க இல்லேன்னா சீனு சிதறிப் போயிடுவான் அப்பா ! "

ப்போது சீனு , கவுண்டருடனும், வக்கீல் குமாஸ்தாவுடனும் நுழைந்தான். தாத்தாவும் தந்தையும் கலங்கி நின்றதைப் பார்த்ததும், " ஏன் தாத்தா , என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கேள் ? என்று ஓடி வந்தான். தன ஒரு கையால் பேரனை வாரி இழுத்த சிவராமன், இன்னொரு கையால் ராமுவின் தலையை வருடி விட்டார்.

 லல்லி   நெகிழ்ந்து நின்றாள்   , " மாமா என்னை மன்னிசச்சிடுங்க ! என்னோட பேராசை தான்... " என ஆரம்பிக்க, சிவராமனோ " அம்மாடி ! இன்னிக்கு சமூஹம் அப்படி. நாம தான் திடமா இருக்கணும்."

கவுண்டர் நெகிழ்ந்து போனார். " சிவராமா உன் குடும்பமே தெய்வீகம் "

பின்பு லல்லியை நோக்கி . " தோ பார் லல்லிம்மா ! உன் மாமன் தான் என்னை வினோபா கிட்டயும், சிவானந்தர் கிட்டயும் கொண்டு போனவன். காளைக் கண்ணு போட்ட ஒரே மாசத்தில வித்துடுவோம் எங்க ஊர்ல. உங்க மாமன் உபதேசத்தில நான் தான் திடமா வைக்கோல் கன்னுக்குட்டியை காட்டி பால் கறக்குறது மகா பாவம்னு வாதாடி ஜெயிச்சவன். நீங்க இப்படிப் பண்ணலாமா.?"

கவுண்டர் தொடர்ந்தார் " அது என்னமோ வெறும் உருப் போட வைக்குறது தான் நாமக்கல் பாணியாம். கத்திச் சண்டைக் காரனை காய்கறி வெட்டப் போட்ட மாதிரி. ராமுத் தம்பி, இந்த வீண் வேலையை விடு. இனி எனக்கும் இவருக்கும் வேலை இல்லை. நான் வரட்டுமா "  கவுண்டரும் குமாஸ்தாவும் விடை பெற  , சிவராமன் தான் மௌனத்தைக் கலைத்தார். "போம்மா லல்லி. உன் புருஷனைக் கவனி. நான எங்கயும் போகலை, போறுமா ? போயி எல்லாரும் தூங்குங்கோ. வாடா சீனு"  என்று கட்டளையிட்டார்.  ராமுவும் லல்லியும்  மாடியில் அவர் தூங்கி வெகு நேரம் அவர் காலடியிலேயே அமர்ந்திருந்தனர்.

அடுத்த நாள்  தேர்வு முடிவு அறிவிப்பு  !

காலையில், லல்லி பூஜை அறையில் சஹஸ்ர நாமம் சொல்லிக் கொண்டே   கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். ராமு குளித்து விட்டு ஹாலில் அமர்ந்திருந்தான். " சீனு, இப்பவே மணி எட்டு. எட்டே முக்காலுக்கே இன்டர்நெட் சென்டருக்கு போயிடணும்.   தாத்தா எங்கே ?" என்று கேட்க, " பாத் ரூமிலே இருக்கார்.வந்துடுவார் " என்றான் சீனு.

அப்போது வாசலில் சத்தம். சீனு தான் எட்டிப் பார்த்தான். அவன் முகத்தில் பெரும் ஆச்சரியம்! " வணக்கம் சார். வாங்க !" என்று கூறிக் கொண்டே உள்ளே ஓடி வந்தான். "அப்பா, எங்க பிரின்சிபாலும் கரஸ்பாண்டென்டும்    !"  . பிரின்சிபால் நேரடியாக சீனுவைப் பிடித்து அனைத்துக் கொண்டார். " யூ நோ வாட் ? யூ ஆர் இன் டாப் பைவ் மான் !" இடி மாதிரிச் சிரித்தார். கூட இருந்தவரிடம், "சார் நான சொல்லலை, இவன் தான் ஸ்ரீனிவாசன். அவர் ப்ரௌட் ஸ்டுடென்ட்.! "  இதற்குள் லல்லியும் சிவராமனும் ஹாலுக்கு வந்து விட்டனர்.

சீனுவும் ராமுவும் வாய் மூடவில்லை. கரஸ்பாண்டென்ட், ராமுவின் கையைப் பிடித்துக் குலுக்கி, " உங்க பையனால எங்க பள்ளிக்கும், இந்த ஊருக்கும் , இந்த மாவட்டத்துக்கும் பெருமை. நானூத்து தொண்ணூறு மார்க்கு ! " என்று சொன்னார். லல்லி விக்கித்து நின்றாள்.

இவன் மாவட்டத்தில் முதல். மாநிலத்தில் ஐந்தாவது. இப்போதான் டி இ ஒ ஆபீஸ்ல இருந்து நேரா இங்க வர்றோம். கங்ராஜுலேஷன் மிஸ்டர் ராமு . இப்போ நான தயாராக வரவில்லை . இருந்தாலும் , இது என் சின்னப் பரிசு "  என்றபடி, நூறு ரூபாய் கட்டு ஒன்றை சீனுவில் கையில் வைத்து விட்டு, "உங்களை சீக்கிரம் ஸ்கூல் விழாவில் சந்திக்கிறேன்" என்றார்.

செல்லும் போது " வாட் எ பிடி ! எங்க பள்ளியே இப்படிப்பட்ட ரிசல்ட்டு குடுக்குது. இந்த ஜனங்க ஏன்தான் போர்டிங் ஸ்கூல் அது இதுன்னு பறக்கறாங்களோ ? சீனு , ப்ளஸ் டூ இங்கே தானே " என்று   சீனுவின் கன்னத்தில் செல்லமாக தட்டி கேட்க, லல்லி தான் " கண்டிப்பா , இங்க தான் சார் " என்று புன்முறுவலித்த படியே கூறினாள்.

சிவராமன் "பரமேஸ்வரா , காப்பாத்திட்டேடா " என்றபடியே பேரனை உச்சி முகர்ந்தார்.

அன்று பூஜை மிக ரம்மியமாக நடந்தது.

Sunday, June 20, 2010

உயிரில் முளைத்த உணர்வு - சிறு கதை

ன்னிரண்டு  மணியா ? மாலதிக்கு பரபரப்பு அதிகமானது. கீ போர்டை தள்ளி விட்டு , இன்டர் காம் பட்டனை அழுத்தினாள். 'சொல்லுங்க மாலதி' என்றது ஆப்பரேட்டரின் பரிச்சயமான குரல்.

'இன்னிக்கு மொரிஷியசில் இருந்து ரெண்டு கெஸ்ட் வரணும். ரிசப்ஷனை  தான் கூப்பிடச் சொல்லி இருக்கேன். ஏர்போர்ட்டுக்கு வண்டி காலம்பர அஞ்சுக்கே போயாச்சு. பிளைட் லேட்டாம்."

' எனக்கு மொதல்லயே தெரியுமே. டிரைவர் அப்பப்ப  கூப்பிட்டுகிட்டே தான் இருக்கார். வந்தவுடனே உங்களுக்கு சொல்லறேன் "

'அப்பாடா ! இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறுபடியும் கம்ப்யுட்டரில் மூழ்கினாள். " ச்சே ! என்னிக்கும் அரை மணியில முடியற ஒர்க் சீட்  ரெண்டு மணியாகியும் முடியலை. நாளே சரியில்லை. குடும்பத்தில பொம்பளை என்ன அவ்வளவு மட்டமா ? எனக்கு சொந்த புத்தி இல்லையா ? கொழந்தை பாவம் சாப்பிடாமல் வேறு ஸ்கூலுக்கு போனான்."

நினைக்க நினைக்க ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மாலதிக்கு. "எவ்வளவு ப்ளான் போட்டேன் ராஜுவிற்கு ? பெரிய கொள்கை ! நாளைக்கு மார்க்கு வாங்காமல் மகன் தவிக்கட்டும் ! அப்போ எங்க போகும் கொள்கையும் மண்ணாங்கட்டியும் ?"

நேற்று ராஜூ மெல்லத் தான் ஆரம்பிச்சான். எப்பவும் போல், மாலதிக்கும் சங்கருக்கும் நடுவில் படுத்துக் கொண்டு, "ஏம்மா நான் பிரெஞ்சு எடுத்துக்கட்டுமா ?" என்றான். சங்கரோ ஒரு பெரிய புத்தகத்தில் மூழ்கியிருந்தான். மாலதி தான் கவனித்தாள். "ஏண்டா கண்ணா ? தமிழ் பிடிக்கலையா ? நீதான் இலக்கண மேதையாச்சே ? உங்கப்பாவுக்கே சொல்லிக் கொடுப்பியே ?"


"இல்லம்மா . என் பிரெண்டுங்க ரெண்டு பேர் நேத்து தான் மாத்தினாங்க. பிளஸ் டூவில மார்க்கு குறையறதுக்கு தமிழ் தான் காரணமாம். நூத்தி எண்பது போட்டாலே பெரிசாம். பிரெஞ்சுல இருநூறு காரண்டியாம். போர்ஷனும் ரொம்ப கம்மி."

"ஏங்க கேட்டீங்களா ?" சங்கர் நிமிர்ந்தான்." ராஜூ , உனக்கு இந்த குறுக்கு புத்தி யாரு சொல்லிக் கொடுத்தா ? மார்க்கா பிரதானம் ? உனக்குத் தான் புரியலைனா உங்கம்மாவுக்குமா ? முடிஞ்ச மார்க்கு வாங்கு போதும்."

"அப்பா, மெட்ரிக் எக்சாம்ல கூட தமிழ் தான் என்னோட டோட்டலை குறைச்ச்சது. பிரெஞ்சு ஸ்டூடன்ட் தான் ஸ்கூல் பஸ்ட்டு."

"நாளைக்கு உன் வாழ்க்கைக்கு தமிழ் தான் உதவும். பிரெஞ்சா உதவும் ?. நான் உனக்கு வாங்கி வச்ச புத்தகத்தை எல்லாம் நீ எப்படி படிப்ப ? " சங்கர் ராஜூவை உற்று நோக்கினான். "என் உடம்புல ஊறிட்டிருக்கற ஒவ்வொரு சொட்டும் தமிழ் தான். "

சங்கர் மேலே சொல்வதற்குள் மாலதி குறுக்கிட்டாள் " இவரு பாக்கற எஞ்சினியர் வேலைல தமிழ்ல தான் புழங்கராங்களோ ? குழந்தை மார்க்கு வாங்க வழியைச் சொல்லறான் . அவன் அப்பாவுக்கு பெரிய லட்சிய வேகம் ! பிழைப்புக்கு ஆகற வேலையைப் பாருடா கண்ணா ? நாளைக்கு சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு ஸ்கூலுக்கு வரேன். பிரின்சிபாலைப் பார்ப்போம்."

சங்கர் இப்போது படுக்கையில் நன்றாக உட்கார்ந்தான். 'என்னடா ராஜு ? உங்கம்மா என்ன  அந்த அபியும் நானும்  அப்பன் மாதிரி நினைச்சுட்டாளா ?  உருப்படற வழியை நான் சொல்லறேன். புத்திசாலியா இரு. சந்தேகம் என்னவா இருந்தாலும் என்னைக் கேளு. சரி இப்பப் படுத்துத் தூங்கு." ராஜுவின் ஏமாற்றமான பார்வை மாலதியை உசுப்பி விட்டது

" எப்பப் பாரு என் மகன் மொத மார்க்கு மொத மார்க்குன்னு பீத்தலுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல.அட்வைசாம் அட்வைஸ் ! புதுசா வந்த பசங்க எல்லாம் பிச்சு ஒதறும். உங்க பிள்ளை எட்டாவதோ பத்தாவதோ வாங்குவான். சந்தோசம் தானே ?"

" அம்மா மாலு ! சாப்ட்டுவேர் புரோக்கிராம் பண்ணறதோட உன்னோட குறுக்கு அறிவை நிறுத்திக்க. உங்கப்பாவோட தமிழ் துவேஷம் போகட்டும்." அவளுடைய அப்பா பாம்பேயில்   வளர்ந்தவர். வீட்டில் தமிழ் பேசினாலும், பெரிதாக மதிக்காதவர்.

மாலுவுக்கு கொதித்தது.  "அவரை எதுக்கு இழுக்கறீங்க ? குழந்தை விஷயத்தை மட்டும் பேசுங்க .நான் வரலை.  நீங்களே வேணா போயி மாத்தி விடுங்க. "

" ஆகற விஷயத்தைப் பேசு. இத விட கொழந்தைக்கு விஷம் குடுன்னு சொன்னால் கூட ஒத்துக்குவேன். இனிமே உனக்கு எட்டாத விஷயத்தைப் பத்தி பேசாத ! " சங்கர் படுக்கையில் சரிந்து கொண்டே சொன்னான். எங்கப்பா தமிழ்லையும் சரி , சமஸ்கிருதத்திலையும் சரி, பெரிய வித்வான். 'பண்டிதன்னா ரெண்டு மொழியும் தெரியணும். தெரிஞ்சா மட்டும் போறாது . ஊறி நனையனும்'பார்  . என்னையும் அப்படித்தான் வளர்த்தார்."

"ஆரம்பிச்சுடீங்களா . முதல்ல மார்க்குக்கு வழி சொல்லுங்க. பண்டிதன் ஆகறதை பின்னாடி பார்க்கலாம். இங்க பாருங்க , மத்த பிள்ளைக மாதிரி ராஜூ இல்லை. படிக்க ஆர்வம் உள்ள பையன். அதுல மண்ணைப் போடாதீங்க."

சங்கர் எப்போதும் அலாதியான அமைதியுடன்தான் இருப்பான். கீதையும், வேதப் படிப்பும் , தேவாரமும், திவ்வியம் பிரபந்தமும் அவனை அப்படி மாற்றி இருந்தன. இப்போது சற்றே கோபத்துடன் " இதுல யாரும் பேச முடியாது. இன்னும் யாரும் பேசாதீங்க" என்று கண்டிப்புடன் கூறி விட்டு ராஜுவைப் பார்க்க , அவன் அதற்குள் தூங்கியிருந்தான்.

மாலதியின் எண்ணம் கம்ப்யூட்டரில் பதிய மறுத்தது." பாவம் ராஜூ. காலைல அப்பாவோட  மூஞ்சியைப் பார்த்ததும் , பயந்து சாப்பிடாமல் ரோஷத்தோட போயிட்டான்.இருக்கட்டும் இருக்கட்டும். இன்னைக்கு சாயங்காலம் ரெண்டுல ஒண்ணு கேட்டுடறேன். "

போன் அலறியது. " மாம், கெஸ்ட் வந்துட்டாங்க ". மாலதி பரபரப்போடு "நேரா கெஸ்ட் ரூமுக்கு அனுப்பிடுங்க" நான் அங்க தான் போறேன்"

. அவள் நிமிர்வதற்குள் , "மன்னிக்க வேண்டும். இங்கேயே வந்து விட்டோம்." என்றனர் அந்த இருவரும். பின்னாடியே டிரைவரும். "மேடம், உங்களைப் பார்க்கனும்னாங்க அதான் " என்றார். மாலதி கை குலுக்க நீட்ட முற்படுமுன், அவர்கள் இருவரும், குவித்த கரங்களோடு நின்றனர். அதில் உயரமானவர்  , "வணக்கம், திருமதி மாலதி " என்று சிரித்தார். ' நான் மாயவன். இவர் கண்ணப்பன்.". மாலதி சுதாரித்துக் கொண்டு ' வணக்கம். உட்காருங்க " என்றாள்." ஹவ் வாஸ் யுவர் ஜர்நீ ? வாட் வில் யு ஹவ் ?"

மாயவன் சிரித்தார். "திருமதி  மாலதி, நாங்க மொரிஷியஸ் தமிழர்கள். தமிழிலே பேசலாம். தமிழுக்கு ஏங்கிப் போயிருக்கோம் நாங்க. " மாலதி சிரித்துக் கொண்டு, " உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு ஆகியிருக்கு . ரெசிடென்சிக்கு போகலாமா அல்லது ரத்னா ரீஜன்சிக்கு போகலாமா? " அவர்கள் குறுக்கிட்டு , "அவசரமில்லை, ஆனா ஒரு விண்ணப்பம் .சின்னதா ஒரு அய்யர் ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போங்க. ரெண்டு வருஷம் ஆச்சு , தமிழ்ச் சோறு சாப்பிட்டு " மறுபடியும் சிரித்தனர்.

சாப்பிடும் பொது இருவரும் கலக்கி விட்டனர். கடையின் உரிமையாளரிடம் இருவரும் உரிமையோடு வம்பு பேசியதும், அவரோ நேரே டேபிளுக்கே வந்து விட்டார். இவர்கள் ஊறுகாயில் இருந்து வாழை இலை வரை சிலாகித்துப் பேச , சுற்று முற்றும் இருந்தவர்கள்  எல்லோரும்   சுவாரசியமாக ரசிக்க, மாலுவும் டென்ஷன் குறைந்து லேசாகியது போல உணர்ந்தாள். கடைக்கார அய்யர் வெற்றிலை பாக்கு எல்லாம் கொடுத்து அமர்க்களப் படுத்தி விட்டார். காசு வாங்கவும் மறுத்து விட்டார்.

'உங்களை எல்லாம் பார்த்தா என் ஆம்படையாளும், அம்மாவும் , அக்காவும் சந்தோஷப் படுவா . வீட்டுக்கு சாயங்காலம் வாங்க " என்று அழைப்பு வேறு வைத்தார். கண்ணப்பன் நெகிழ்ந்து போய், "தமிழ் மண்ணே, எங்களை மட்டும் ஏன் அந்நிய தேசத்தில் விட்டாய் ? " என்று கலங்கி நின்றார். தன கைப்பையைத் திறந்து , அதில் தான் கொண்டு வந்த ஒரு விலை உயர்ந்த பேனாவை அய்யரிடம் கொடுத்து , 'பரிசா நினைக்காதீங்க. என் மக்களுக்கு நான் தரும் நினைவுப் பொருள். தயங்காம வாங்கிக்கணும் " அனைவருமே நெகிழ்ந்து நிற்க, பிரியா விடை பெற்றனர் இருவரும்.

திரும்பி வரும் போது, மாலு " ஏன் கண்ணப்பன், நாலு தமிழ் வார்த்தையும் உபசரிப்பும் உங்களை அவ்வளவு கலங்க வைச்சது ?"

"மாலு ! உங்களை உங்க அம்மா மடியில படுக்க வைத்து தடவினா , உங்களுக்கு எப்படி இருக்கும் ?  அதப் போல பத்து மடங்கு உயர்ந்த நிலையில நாங்க இங்க இருக்கோம். தமிழின் ஒவ்வொரு வார்த்தையும் , தமிழ் மக்களின் ஒவ்வொரு உபசரிப்பும், எங்களை வினாடிக்கு வினாடி சுவர்க்கத்துல ஏற்றுது." அவர் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள , மாலதி பதறி விட, அவர்  புன்னகையுடன் ' என்னை, இந்தக் கண்ணீரை அனுபவிக்க விடுங்கள் "  என்றார்

இடது பக்கமிருந்து மாயவன், ' அவனுக்கு மட்டும் கொஞ்சம் அவகாசம் கூட இருந்தால், நேரா   இங்கே பேரூரில நூறு வருஷத்துக்கு முன்னால இருந்த  சாம்பசிவ முதலியார் பத்தி விசாரிக்க போயிடுவான். அவர் இவனோட கொள்ளுத் தாத்தா !"

'நான் வேணுமின்னா விசாரிக்கவா ? என் பெரியப்பா பேரூரில் பெரிய வேத பாடசாலை வச்சிருக்கார். என் வீட்டுக்காரருடைய குரு . அவருக்கு தெரியாதவர் அங்கே யாருமில்லை "  என மாலு வினவ, கண்ணப்பன் துள்ளித் திரும்பி, "நிஜமாவா ? இன்னைக்கே முடியுமா? " எனக் கேட்டு முடிப்பதற்குள் ,  மாலுவின் செல் போனில் பெரியப்பாவின் குரல் கேட்டது. பெரியப்பா , நான் மாலு ! என்றதும், " சொல்லுடீம்மா கொழந்தை. வீட்டுக்காரன் எப்படி இருக்கான் , குழந்தை எப்படி இருக்கான் ?"


 எல்லாம் நல்லா இருக்கா பெரியப்பா , நான் இப்ப ஸ்பீக்கர் ஆன் பண்ணியிருக்கேன்.  எனக்கு ஒரு ஒத்தாசை வேணும், என் கம்பனிக்கு   விருந்தாளியா வந்த ஒருத்தர் தன கொள்ளுத் தாத்தா பேரூரில நூறு வருஷம் மிந்தி இருந்தார்ன்னும், அவர் பேர் சாம்பசிவ முதலியார்ன்னும் சொல்றார். உங்களுக்கு யாராவது தெரியுமா ?"

போனில் மௌனம். குரல் தொடர்ந்தது " பேரூரில , நூத்துக்கு மேல முதலியார் இருக்கா. ஒரு வேளை !" , என்று நிறுத்தி, " வெள்ளைக்காரா தன குடும்பத்தை கப்பல்ல கூட்டிண்டு போனதா இங்கே வாழை இலைக் கடை முதலியார் சொல்லுவார். அவாளோ இருக்குமோ ? . நீ எதுக்கும், ஏழு மணிக்கு இங்கே வா. போயே பாத்திடலாம்." என சொல்ல, மாலு , கண்ணப்பனை நோக்கி, பெரியப்பா வரச் சொல்லறார்.சாயங்காலம் கம்பனியில் மீட்டிங் ... " என்று இழுக்க,   கண்ணப்பன் ,  நாளைக்கு  இரவு விழித்தாவது என் வேலையை முடித்து விடுகிறேன். இப்பவே போகலாம் என்று பரபரத்தார்.

ந்து மணி. செல் போன் அடித்தது. சங்கர் ! " ஏய் ! என்னடி கண்ணா பண்ணரே ?" மாலுவுக்கு முகம் சிவந்தது . செல்லமாக , " சாயங்காலம் நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினாத்தான் மனசு ஆறும் " என சிரித்து கொண்டே சொல்ல அவனும் " நானும் சாயங்காலம் உனக்கு ஒரு பரிசு தரப் போறேன் " என்றான்.

மாலதி எதையோ நினைத்தவள் போல , "கண்ணா , கண்ணா கோவிச்சுக்காதே  கண்ணா , இன்னிக்கு நான் பெரியப்பாவைப் பாக்க பேரூர் போயிண்டிருக்கேன்." என்று தொடங்கி கண்ணப்பன் விபரம் கூறி , " ஏய் ஏய் ! ப்ளீஸ் பா ! இன்னிக்கு சனிக்கிழமை தானே ? நீங்களும் காரில் பேரூர் வந்துடுங்கோ . ராஜுவையும் அழைச்சுட்டு வாங்கோப்பா ,ப்ளீஸ் ! அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம் "

"மனைவி சொல்லி மறுப்பானா இந்த இலங்கை வேந்தன் ? தயாராய் இரு . உன் பெரியம்மா கிட்டே  அந்த பழைய சாதப் புளியோதரையை மட்டும் போட வேண்டாம்னு சொல்லி வை  " என்று சீண்டிய பின்னரே போனை  வைத்தான்.

வர்கள் போவதற்குள் பேரூரில் ராமகிருஷ்ண கனபாடிகள் வீட்டில் பெரும் கூட்டமே சேர்ந்து விட்டிருந்தது.  இலைக்கடை முதலியார் தான் ஓடி வந்து கார் கதவைத் திறந்தார். இவர்கள் வாயைத் திறப்பதற்குள் அங்கே முழு விஷயமும் ஒலிபரப்பப் பட்டுவிட்டிருந்தது. கண்ணப்பன் யார் என்று மாலு சொல்லியதுதான் பாக்கி. அங்கே ஆண்களின் அணைப்புக்களும், பெண்களின் கண்ணீரும் அந்த முதலியார் சபையை உணர்ச்சி வெள்ளமாக்கி இருந்தது. இதற்குள் சங்கரும் ராஜுவும் காரில் வந்து இறங்கினர்.

கண்ணப்பனுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் மாலதி. " திரு சங்கர், இன்னிக்கு உங்க மனைவி என்னை  பல முறை அழ வைச்சிட்டாங்க. என் தாய் நாடு எனக்கு இவ்வளவு தந்து விட்டது" என்று இலைக்கடை  நாகராஜ முதலியாரைக்  காட்டினார். சங்கரும், சிரித்துக் கொண்டே " நான் அவளை இன்னிக்கு காலையில அழ வச்சேன். அவ உங்க மேல சாத்திட்டாள்  போல !'  கண்ணப்பன் கேள்விக்குறியுடன் சங்கரைப் பார்க்கவும், சங்கர் பிரெஞ்சு பாட விவகாரத்தை அவருக்கு  விவரித்தான்.

ல்லாரும் கோயிலுக்குள் சென்ற பொது, கண்ணப்பன், "மாலு, நீங்க ராஜுவிற்கு பிரெஞ்சு பாடத்தை எடுக்க சொன்னீங்களாமே ? " என்று ஆதங்கத்துடன் கேட்டார். "நாங்கல்லாம் தமிழ் தமிழ்னு உயிரை விடறோம். நீங்க இப்படிப் பண்ணலாமா ? " அங்க பாருங்க , எங்க சனங்களை . எங்க எல்லாரின் பிணைப்பு தமிழ் மட்டும் தாங்க. தயவு செஞ்சு ராஜுவைத் தமிழ் படிக்க வைங்க"

மாலதிக்கு எப்படியோ ஆகி விட்டது. இதற்குள் அர்த்த மண்டபத்தில் நுழைந்து விட்டிருந்தனர். சங்கர் சிரித்துக் கொண்டே வந்தான். "என்ன கண்ணப்பன், இந்தாங்க மாலை, அர்ச்சகர்  கிட்டே கொடுத்து வேண்டிக்குங்க"

"சங்கர், உங்களுக்கு தேவாரம் தெரியுமா ?"

"தெரியுமாவது ? இவளோட பெரியப்பா தான் என் மாமா . அவர்கிட்ட   இதே ஊரில்    தான் வேதமும், தேவாரமும் , திருவாசகமும், பிரபந்தமும் கத்துகிட்டேன்." என்று கனபாடிகளை பார்த்து சிரிக்க,அவரும்  "டேய் ,  சங்கரா சம்பந்தரோட பதிகம் ஒண்ணு பாடேன்" என்று கட்டளையிட்டார். சங்கரும் மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு , ஈசனைப் பார்த்து " தோடுடைய செவியன் ... " என்று ஆரம்பித்தான். ராஜுவும் சேர்ந்து கொள்ள , கண்ணப்பனும், கூட்டமும் மெய்மறந்து நின்றது.

சங்கர் முடித்ததும், கண்ணப்பன் திடீரென்று " மந்திரமாவது  நீறு ... " என்று திருநீற்றுப் பதிகம் பாடினார். மாலதி ஏதோ புது உலகத்தில் இருப்பவளைப் போல் உணர்ந்தாள்.

ரவு பத்து மணி ஆகி விட்டது இவர்கள் விடை பெற. கனபாடிகள் வீட்டிலேயே அன்று சாப்பாடு. கண்ணப்பனை இலைக்கடை முதலியாரிடம் ஒப்படைத்து விட்டு, இவர்கள்  மட்டும் திரும்பினர்.

"ஆ ! சங்கர் கத்தினான். "சொன்னபடி கிளளிட்டேன்". என்றாள் மாலதி. "சரி இப்ப சொல்லுப்பா , என்ன பரிசு ?"

" டேய் குட்டி, இங்க வாடா   " என  ராஜுவைப் பார்த்து " உன் இஷ்டப்படியே பிரெஞ்சு படிச்சுக்கோடா. அப்பப்போ என் தமிழையும் நினைச்சுக்கோ. நான் உன் பிரின்சிபாலைப் பார்த்து பேசிட்டேன்   "

"வேண்டாங்க, ராஜூ தமிழே படிக்கட்டும். " இது மாலதி
.
சங்கர் வியப்புடன் மாலதியைப் பார்த்து " அம்மையார் மனமாற்றத்துக்கு காரணம் யாதோ ? பேரூர் பட்டீஸ்வரன்   திருவுள்ளமோ  ? கண்ணப்பன் கைங்கர்யமோ? பெரியம்மா கை உப்புமாவோ ?" என்று  சீண்ட  ,

" அப்பா , நான் தமிழே படிக்கறேன் பா    . இன்னிக்கு நீங்க ஸ்கூலுக்கு வந்து போன பின் எங்க தமிழாசிரியர் என்னைக் கூப்பிட்டு பேசினார் . இந்த வருஷம் தமிழ் படிக்கற சில மாணவர்களில் நான் மட்டும் தான் நன்னா    படிக்கிறேன்னும் , நான் போயிட்டா  தானும்  பள்ளியை   விட்டுப்   போவதாகவும்  சொன்னார்பா . அப்புறம் , கண்ணப்பன் அங்கிளைப்  பார்த்ததும் தான் தமிழோட  அருமை   எனக்கு புரிஞ்சுது .  "

கார் நொய்யல் ஆற்றங்கரையில் இதமாக  ஊர்ந்தது .