Sunday, July 25, 2010

சுப விரயம் - ஒரு சிறு கதை



"அய்யா, கிட்டய்யர் வந்திருக்காருங்க !" சிப்பந்தி கூறினான்

கிட்டு உள்ளே நுழைந்தார். கையில் எப்போதும்  போல் ஒரு டயரி. இன்று கூடவே சில காகிதங்கள். இவரைப் பார்த்து நமஸ்கரித்து புன்னகைத்தார்.

"வாங்க கிட்டு சார் " என்று எழுந்து உபசரித்து  விட்டு மனோகர் உட்கார்ந்தார். அவரைப் பார்த்தாலே மதிக்கத் தோன்றும். என்றுமே வெள்ளை வேட்டி சட்டை தான். கிட்டு நேராக விஷயத்துக்கு வந்தார். "  இன்னிக்கு பேங்குல இருந்து மில் சைட் பார்க்க வர்றாங்க.நம்ம பத்து மணிக்கு அங்கே இருக்கணும். பன்னிரண்டு மணிக்கு நம்ம ஓட்டல் புது கிளை பீளமேட்டுல மூன்றாவது கிளை துவக்க விழா. சுகி சிவம் பேச்சு இருக்கு. கிளம்ப மணி ரெண்டாயிடும்.  அஞ்சு மணிக்கு காலேஜ் விழா"

மனோகர் கிட்டு அய்யருடன் கிளம்பினார். "இவரையா சுவாமி அப்படிச் சொன்னார் ?"

னோகருக்கு அந்த நாள் இன்றும் நன்கு  நினைவிருந்தது . அன்று மனோகர் குழம்பிய மனத்துடன் தான் வழக்கமான பௌர்ணமி சந்திப்புக்குச் சென்றார். ஓட்டலில் பணக் குளறுபடிகள், மில் கட்டுவதில் தொய்வு, மகனின் சந்தேகமான நடவடிக்கைகள், மாப்பிள்ளையின்  ஊதாரித்தனம் எல்லாம் சேர்ந்து அன்று அவரை உச்ச கட்ட விரக்தியில் ஆழ்த்தியிருந்தன.

மனோகரன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரின் தலையை வாஞ்சையோடு தொட்ட சுவாமி 'சௌக்கியமா ?' என்று ஆதுரமாய் விசாரித்தவுடன், மனோகருக்கு கடந்த மாத மன உளைச்சல்கள்  எல்லாம் கரைந்து விட்டது போல் இருந்தது. பழங்களை சமர்ப்பித்த பிறகு சுவாமி எல்லோரையும் அமரச் செய்தார்.

அப்போது சீடர்கள் பஜனையை ஆரம்பித்தனர். இந்த ஒரு நாளை மனோகர் என்றுமே தவற விட்டதில்லை. பிரதி பௌர்ணமி சுவாமி மக்களுக்காகவே இருப்பார். சிரிப்பு, உபசரிப்பு, சிறிய உபதேசம், புத்தகங்கள் அன்பளிப்பு என்று ஒவ்வொருவரிடமும் தனிக் கவனம் செலுத்துவார். இன்று மனோகர் பஜனையில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். ஒவ்வொரு பாட்டும் அவருக்கு புது உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தது.

மாலை எல்லோரும் கிளம்புகையில் , சுவாமி மனோகரை அழைத்தார். கண்களாலேயே 'என்ன' என்பது போல விசாரிக்க, மனோகர் அது வரை அடக்கியிருந்த சோகங்கள் அங்கே பீறிட்டன. கண்களில் நீர் தழும்ப தன் துக்கங்களை விவரிக்க, சுவாமியோ, " கிருஷ்ணா ! இத்தனை சோகமா ? முக்தியை மட்டும் ஒன்றாக வைத்த நீ  பந்தமும் ஏன் அதுபோல் ஒன்றாக வைக்கவில்லை ?" என்று தன் முன்னே இருந்த வேணுகோபாலனின் திருவுருவத்தைப் பார்த்து வினவினார் .

சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, மனோகரனை நோக்கி, உங்களுக்கு ஒரு நல்ல உதவியாளர் வேண்டும் . சரியா ? என்று விட்டு மனோகரைப் பார்த்தார். மனோகருக்கு அது சரியா தவறா என்று சொல்ல முடியவில்லை. ஸ்வாமியே தொடர்ந்தார், " இங்கே கிட்டு என்ற சீடர் இருக்கிறார். அவரை நீங்கள் இரண்டு வருடம் வைத்திருக்கலாம். தற்போது தான் ஒய்வு பெற்றவர்.  அவரை அனுப்பி வைக்கிறேன் " என்று முடித்தார்.. அப்போது மற்றவர்களும் வந்து விடவே, மனோகர் விடை பெற்றார்.

பௌர்ணமிக்கு இரண்டாம் நாள் கிட்டு அவரைச் சந்தித்தார். அவரை கம்பனியின் விருந்தினர் அறையில் தங்க வைத்து விட்டு , சுவாமிக்கு போன் செய்தார் மனோகர். " வந்து விட்டாரா ? நல்ல மனிதர். எதையும் நம்பிக் கொடுக்கலாம். "  பின்பு சிரித்து விட்டு , "உங்க பணமும் , சொத்தும் பத்திரமாப் பாத்துக்குங்க . ஹரி ஓம் "  சுவாமி போனை வைத்து விட்டார். மனோகருக்கு அந்த சிரிப்பின் பொருளும், கடைசி வார்த்தைகளின் பொருளும் புரியவில்லை.

கிட்டுவோ , எத்தனை வேலை கொடுத்தாலும் , அசராத ஆளாக இருந்தார். முதலில் அவருக்கு ஓட்டல் பொறுப்பைத் தான் கொடுத்தார். இரண்டாவது நாள் அவர் முன் இருபது ஊழியர்களின் வேலை நீக்கப் படிவத்துடன் வந்தார். அன்னூரில் இருபது விவசாயிகளிடம் நேரடி ஒப்பந்தம் போட்டு காய் கறிகளும் தேங்காயும் வாங்க ஏற்பாடு, சாப்பாட்டு மெனுவில் மாற்றம், முகப்பில் பிள்ளையாருக்கு அனுதினமும் ஒவ்வொரு அலங்காரம் என்று ஒரே மாதத்தில் பல மாற்றங்கள். மனோகரும் அவரது பணப் பரிமாற்றங்களை உற்றுக் கவனித்தார். ஒரு சிலரிடம் குறுக்கு விசாரணையும் செய்தார்.

எல்லாரும் அவரை ஒரு மகானாகவே பார்த்தனர். அன்னூர் விவசாயிகளில் ஒருவர் , " சார், கிட்டய்யரைப் போல கிடைக்குமா சார் ? என்னை கந்த புராணம் தினமும் படிக்கச் சொன்னார். என் மகளுக்கு கல்யாணம் நிச்சயமாக ஒரு ஸ்லோகம் எழுதிக்  கொடுத்திருக்கார் " என்று புகழாரம் பாடினார். புதிதாக போர்டு எழுதிய ஓவியன், பலசரக்குக் கடை செட்டியார் எல்லாம் ஏறக்குறைய இதே போன்றே தான்.

சிப்பந்திகளோ , ஒரு படி மேலேயே புகழ்ந்தனர். " தினமும் பிரார்த்தனை பண்ண பிறகு தான் வேலை ஆரம்பிக்கச் சொன்னார் சார் . அவரும் கூடவே இருந்து சொல்வார் சார். எங்களுக்கு எல்லாம் புது பாயும் , போர்வையும் குடுத்தார் சார். ". முன்னமே இந்தசலுகையைக்  கிட்டு கேட்ட போது, மனோகர் தயங்க , கிட்டு தான், " இத்தனை நாள் ந்யூஸ் பேப்பர் விரிச்சு தூங்கறாங்க. முழுசா தூங்காம பகலில் எப்படி வேலை செய்வாங்க ? " என்று நேராக அவர்கள் தூங்கும் ஹாலைக் கூட்டிக்  கொண்டு போய்  காட்ட, மனோகர் வெட்கத்தில் சிறுத்து விட்டார். மூன்றாயிரம் சதுர அடிக்கு இரண்டே ஜன்னல்கள் !   

" சார் இவங்களுக்கு ஏதாவது செய்யணும். நீங்களே சொல்லுங்க"  என்று கிட்டுவைக் கேட்க, அவரோ , " இந்த கீழ் தளம் அவங்க தங்க வைக்க தகுதியில்லாதது. இங்கே சாமான்களும்  , காய் கறிகளும் வச்சுக்கலாம். மூணாவது மாடியிலே இருக்கற ஸ்டோர் ரூம் அவங்களுக்குக் குடுங்க " என்று சிபாரிசு செய்ய உடனடியாக அது அமலுக்கும் வந்து விட்டது. எல்லாருக்கும் மாதம் ஒரு முறை   பஜனை , மனோகரனுடன் நேரடி சந்திப்பு, அதிக சம்பளம் என்று சலுகைகள் பொழிந்தன.

ரண்டு மாதத்தில், ஓட்டல் நிமிர்ந்தது. காந்தீபுரத்தில் மனோகருக்கு  பழைய வீடு இருந்தது. அதை இன்னொரு ஓட்டலாக மாற்றச் சொன்னார் கிட்டு. வீட்டை சிறிய மாற்றங்களுடன் , குறைந்த செலவில் புதுப்பித்து ஆரம்பிக்க, அது சக்கைப் போடு போட்டது. கிட்டு தினமும் இரவு வசூல் தொகையை எஸ் எம் எஸ் செய்வார். புதிய ஓட்டல் , பழைய ஓட்டலின் வசூலை நெருங்கிக் கொண்டிருந்தது.

மனோகருக்கு  அப்போது தான் சுவாமி நினைவு வந்தது. கிட்டுவிடம் , " அய்யா , நீங்க சுவாமி சொல்லி வந்தீங்க. அவரை நினைவு  படுத்தீட்டே  இருக்கீங்க. பணப் பிரச்சினை இப்போ இல்ல . இப்போ உங்கள் அறிவுரை என்ன ? " என்று கேட்க , " உங்க மகன் பேரில் ஒரு ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் ஒரு ஆசிரமம் ஆரம்பிங்க " என்று விட்டு மனோகரை உற்றுப் பார்த்தார். மனோகருக்கு அப்போது தான் மகன் செல்வம் நினைவு வந்தது. முன்பெல்லாம் ஓட்டலில் இருக்கும் கேஷியரிடம் மிரட்டிக் காசை வாங்கிக் கொண்டு போய் விடுவான்.  இப்போதோ ? கிட்டு அய்யர் செய்த மாயம் தான் !

அன்று இரவு அவர் மனைவி படுக்கையில் , " ஏங்க ! நீங்க செல்வம் கிட்ட பேசிக் கூட நாளாச்சு. அவன் என்ன பாவம் பண்ணினான்.? நீங்க பேசாதது அவனுக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்குத் தெரியுமா, நேற்று அவனோட பிரின்சிபால் கூப்பிட்டு அவனோட பிராஜக்ட்டு தேசிய அளவில தேர்வு ஆகியிருக்குன்னு சொன்னார். அவனோட புது அறுவடை கருவிக்கு 'மனோவெஸ்ட்' என்று உங்க பேர் வெச்சிருக்கான். இதோ பாருங்க அவன் போட்டோ " என்று காட்டினார். மனோஹருக்குப் புல்லரித்தது. அதில் ஒரு பெரிய இயந்திரத்தின் முன் செல்வம் நின்றிருந்தான். அசப்பில் தன் தாத்தாவை நினைவு  படுத்தும் தோற்றம்.!

அவர் மனைவி தொடர்ந்தார் ," எல்லாம் கிட்டு அய்யர் தாங்க அவனை இப்படி மாற்றினது.

மனோகருக்கு எல்லாம் தெரியும் . செல்வத்துக்கு தன் சொந்த மதிப்பு தெரிய வேண்டும் என்று தான் இத்தனை நாளும் மௌனம் காத்தார்.

கிட்டு அய்யரிடம் செல்வம் மாட்டினதே ஒரு தனிக் கதை. ஒரு நாள் செல்வம் தன் நண்பர்களுடன் காரில் வந்து , நேராக காஷியரிடம் பணம் கேட்க , அவர் இதோ வர்ரேன் என்று விட்டு கிட்டு அய்யரிடம் சொல்ல, சமையல் கட்டில் இருந்த அவர் , ஓடி வந்தார். " ஒ, செல்வம் நீ  தானா ? வாப்பா ! உன்னைத் தான் பார்க்கனும்னுட்டு இருந்தேன் என்றபடி அவன் கையைப் பிடித்துக் கொண்டார். காஷியரைக் கூப்பிட்டு, சாருக்கும் அவர் நண்பர்களுக்கும் சாப்பிட ஏற்பாடு பண்ணுங்க " என்று அவரை விரட்டினார்.

திடீரென்று எதோ நினைத்துக் கொண்டவராக , "தம்பி , கொஞ்சம் கல்லால உக்காருங்க. இதோ காய்கறி சப்ப்ளையர் வந்திருக்கார். அனுப்பிச்சிட்டு வந்துடறேன். " என்று விட்டு உள்ளே ஓடினார். செல்வத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அய்யர் சொன்ன மாதிரி அடுத்த அரை மணி நேரம் பணம் வாங்கிப் போட்டுக் கொண்டு இருந்தான். அப்போது காஷியர் கையில் காமராவுடன் ஓடி வந்தார். "சார்! அப்படியே உட்காருங்க . ஒரு போட்டோ எடுக்கறேன் "  என்றவாறு பல போட்டோ எடுத்து விட்டார்.

அய்யர் அப்போது செய்த வேலை அவனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு பெரும் கூட்டத்தையே கூட்டிக் கொண்டு வந்து விட்டார். " இவங்கல்லாம் நம்ம அலுவலக பணியாளர்கள் " என்றவாறு எல்லாரயும் அறிமுகப் படுத்தினார். பின்பு செல்வத்தை சமையல் அறை, குளிர் சாதன  அறை, தாங்கும் வளாகம் எல்லாம் சுற்றிக் காண்பித்தார்.

செல்வத்துக்கு இதெல்லாம் புதிது. அவனை எல்லாரும் சின்னப் பையனாகவே கருதி வந்தனர். ஆனால் கிட்டு அய்யர் ?

அப்போது அவர்களிடம் சொல்லிக் கொண்டு போக ஒரு உயரமானவர் வந்தார். பார்த்தாலே விவசாயி என்று தெரிந்தது. "ஐயரே , வரட்டுங்களா ?  அந்த உரம் இல்லாம வளர்த்த கீரை எப்படீன்னு சொல்லுங்க " என்று சொல்லி விட்டுக் கிளம்ப , "அய்யர் அவரை நிறுத்தி, கவுண்டரே , இவர் யார்னு கேட்காமலே போறீங்களே " என்று அழைக்க , அவரும் கேள்விக்குறியோடு செல்வத்தைப் பார்த்தார். "இவரு நம்ம முதலாளியோட மகன் செல்வம். எஞ்சினியரிங் படிக்கறார்." என்று அறிமுகப்படுத்த , அவரோ, "அடடே, மன்னிக்கணும் கண்ணு. பார்த்தாலே பெரிய இடத்துப் பையன் மாதிரி தெரியுது. நல்லா இருக்கீங்களா " என்று கேட்டு விட்டு வணக்கம் போட்டார். செல்வமும் பதில் வணக்கம் போட்டான்.

மூவரும் திரும்பி  நடந்தனர் , " செல்வம் எஞ்சினியரிங் கடைசி வருஷம் தானே ! பிராஜக்ட் வருமே ? என்ன பண்ணறதா உத்தேசம் ? இதோ கவுண்டருக்கு உதவற மாதிரி ஏதாவது பண்ணுங்க . அவரு பெரிய விவசாயி " என்று விட்டு அவரைப் பார்க்க , கவுண்டர் செல்வத்தை நோக்கித் திரும்பி, "தம்பி நீங்க அறுவடை எந்திரம் ஒண்ணு பண்ணுங்க . இப்ப இருக்கறது எல்லாம் இந்திய நாட்டுக்கு பொருந்தாது . நம்ம தோட்டத்துக்கு கட்டாயம் வாங்க " என்று அழைப்பு வைத்து விட்டு விடை பெற்றார்.

அதற்குள் அவர்களுக்கு சிற்றுண்டி தயாராக இருந்தது . செல்வம் அப்படியொரு உபசாரத்தை அனுபவித்ததே இல்லை. அவன் நண்பர்களோ வாயடைத்தே போயினர். போகும் போது , " செல்வம் பணம் ஏதாவது வேணுமின்னா என்கிட்டே கேளு  . உன்  பேர்ல ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்க சொல்லி பாங்க மானேஜர் கிட்ட பேசியாச்சு. நாளைக்கு  செக் புக் அனுப்பறேன்." என்றார்.

னிதர் அடுத்த நாள் காலை காலேஜு வாசலிலேயே இருந்தார் . " ஏர்போர்ட் வேலை இருந்தது. அப்படியே உன் கிட்ட செக் புக் குடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன் " என்றவர், உங்க டிபார்ட்மென்ட் ஹெட் யாரு ? அவரண்டை கொஞ்சம் பேசணுமே ? " என்றார்.

பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் கிட்டு அய்யரிடம் மயங்கியே போனார். அவரும் சுவாமியின் சிஷ்யர் . சற்று நேரம் பேசி விட்டு செல்வத்தின் பிராஜக்ட் பற்றிப் பேசினார். அறுவடை எந்திரத்தைப் பற்றிச் சொல்ல , அவரோ " பிரமாதம் ! நான எல்லா வகையிலும் ஒத்தாசை செய்யறேன் " என்று உறுதி வேறு கொடுத்தார்.

என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே செல்வத்தை வேலைகள் சூழ்ந்து கொண்டன. அவன் நண்பர்கள் கிட்டு அய்யரிடம் மகுடியில் மயங்கிய நாகங்கள் போன்று இருந்தனர்.கவுண்டர் தனது தோட்டத்தில் இவர்களுக்கு ஒரு கொட்டகையே போட்டுக் கொடுத்து விட்டார். அய்யர் அங்கே ஊரில் இருந்த ஒர்க் ஷாப் ஒன்றுடன் பேசி செல்வத்துக்கு தேவையான பாகங்களைச் செய்ய சொல்லி விட்டார்.

அதன் பலன் தான் இன்று செல்வத்துக்கு ஜனாதிபதி விருது. செல்வம் காலேஜில் நாளை மாணவர்களை விடை அனுப்பும் நாள் வேறு.  செல்வம் அய்யரிடம் தனியாகப் பேசி பீளமேட்டில் ஒரு கிளை ஓட்டல் ஆரம்பிக்குமாறு சொல்லி இருக்கிறான். அய்யரும், அது பற்றி ஆலோசித்து பார்க்க, அங்கே ஒழுங்கான ஓட்டலே இல்லை என்றும் , நன்றாக ஓடும் என்றும் செல்வம் இப்போது வியாபாரத்துக்குத் தயாராகி விட்டான் என்றும் தெரிவித்தார்.  மனோகரன் ஆனந்தத்தில் திளைத்தார்.


" ய்யர் சார். நீங்க சொன்ன மாதிரியே செல்வம் பேர்ல ஆசிரமம் ஆரம்பிச்சுடலாம். எவ்வளவு பணம் ஒதுக்கணும் ? " என்று கேட்க , " ஒரு கட்டிடமும் , பணமா இருபது லட்சமும் தேவைப்படும். இதோ விவரம்  " என்று கிட்டு அய்யர் ஒரு காகிதம் நீட்டினார். "இருபது லட்சமா ? " மனோகர் தயங்கினாலும் , இரண்டே மாதத்தில் தன் வருமானத்தை இரட்டித்தவரிடம் வாதாடாமல் , "செஞ்சுடுங்க . பேப்பர் ஒர்க் எல்லாம் ஆடிட்டர் கிட்ட சொல்லி செய்யச் சொல்லுங்க " என்று விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார். என் மகன் பேரில் வேறு அல்லவா நடக்கிறது ?

மனோஹருக்கு அது மட்டும் புதிராகவே இருந்தது " இந்த மனிதரைப் பற்றி ஏன் சுவாமி அப்படிச் சொன்னார்? "


காரில் திரும்புகையில் மனோகரனுக்கு மில் விவகாரம் நினைவு வந்தது . போன வாரம் தான் மாப்பிள்ளை வந்து , தன்னுடைய பூர்வீக இடத்தில் மில் கட்டப் போவதாகவும் , மனோகரனிடம் பண உதவி வேண்டும் என்றும் கேட்டார். ஆளே மாறிப் போயிருந்தார். அய்யரிடம் ஏதும் கேட்கும் முன்பே அய்யர் விவரங்களோடு தயாராக இருந்தார். " மில் தொழில் பரவாயில்லை. ஆள் பற்றாக்குறை மட்டும் தான் . அதுக்கு ஒரு வழி இருக்கு. " அடுத்த நாளே அங்கே சென்றனர்.

ந்த ஊர்க் கவுண்டர் மரியாதையான மனிதர். " எங்க ஊர்ல பல பேரு வேற ஊர்களுக்கு போறாங்க. இங்கயே மில் கட்டினா நல்லது தான். ஒரு விண்ணப்பம் ... " என்று இழுக்க , மனோகர் " தயங்காம சொல்லுங்க ," என்றார்.

" எங்களுக்கு எல்லாம் பொன்காளியம்மன் தான் குல தெய்வம். ஆத்தா கோயில் போன வருஷம் இடி இறங்கி சேதாரமாயிடுச்சு. விக்கிரகம் மட்டும் தான் மிஞ்சுச்சு. நீங்க மில் கட்டும் போதே ஆத்தா கோயிலையும் கட்டிக் குடுத்தீங்கன்னா இந்த ஊர் ஜனங்க உங்களுக்கு எல்லா வகையிலையும் ஒத்தாசையா இருப்போம்.  " என்று மிக பவ்வியமாக கேட்டார்.

அடுத்த நாள் அய்யர் மில் திட்ட அறிக்கையுடன் வந்தார். கூடவே கோவிலுக்காக ஸ்தபதி கொடுத்த வரை படமும்  இருந்தது. "மில்லுக்கு கட்டம் ஒண்ணரைக் கோடி ஆகும். நம்ம மாணிக்கம் குடுத்த எஸ்டிமேட். " கிட்டு அய்யர் விளக்கினார்.

"அபப கோவிலுக்கு எவ்வளவு ? ". மனோகரன் கேட்டார்.

"ஸ்தபதி பத்து லட்சம் ஆகுமின்னு சொன்னார் " என்றார் கிட்டு அய்யர்.

"இது அவசியமா ?" என மனோகரன் கேட்க , கிட்டு அய்யரோ , "அந்த ஊர்ல நம் தொழில் நடக்கப் போகுது. சொல்லப் போனா இனிமே அதுவும் நம்ம ஊர்தான். செய்யறதுல தப்பில்லை . என்னைக் கேட்டா கண்டிப்பா செய்யனும்பேன் " என்றார்.

மனோகரன் சரியென்று சொல்லிவிட்டார். அவருடைய மனமெல்லாம் அவருடைய மகள் மற்றும் மாப்பிள்ளையின் எதிகாலம் பற்றி சிந்தித்தது. மாப்பிள்ளை எப்படி மாறி விட்டார் ? அய்யர் எப்படி மாற்றினாரோ ?

 அன்று மாலை காலேஜ் விழாவில் முதல்வர் செல்வத்தை ஆகோ ஒகோவெனப் புகழ்ந்தார். செல்வத்தின் இயந்திரத்தின் செயல் விளக்கம் வீடியோவோடு இருந்தது. ஒரே கரகோஷம் ! மனோகர் குடும்பமே மகிழ்ச்சியில் மிதந்தது. . வீடு திரும்புகையில் செல்வத்தை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார் மனோகரன். "அய்யர் தாம்பா என்னை இந்த அளவு ஊக்குவிச்சார் " செல்வத்தின் குரல் உணர்ச்சியால் கம்மியிருந்தது.  மனோகரனுக்கு புல்லரித்தது. இந்த மனிதனிடமா ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார் சுவாமி ? ஏன் ? இந்த தடவை சுவாமியிடம் கண்டிப்பாக கேட்டு விட வேண்டும் !

டுத்த பௌர்ணமி அன்று சுவாமியை  குடும்பத்தோடு சந்தித்தார் மனோகர். " கிருஷ்ணன் அருள் உங்க கிட்ட பூரணமா இருக்கு போலே. கவலை தீர்ந்ததா ? " என்று சுவாமி ஆதுரமாய் வினவ,  மனோகரோ , " சுவாமி , எல்லாம் உங்க கருணை. உங்க சீடர் கிட்டு அய்யர் என் வாழ்க்கையையே  மாற்றிட்டார். என் மகன் இன்று எனக்குத் தோள் கொடுக்கத் தயாராயிடான். என் மாப்பிள்ளை நல்ல பழக்கத்துக்கு மாறீட்டார். என் தொழில் நல்ல படியா போகுது. " என்றார்.

"சுவாமியோ, ஹரே கிருஷ்ணா !  உன் கருணையே கருணை " என்று கிருஷ்ண விக்கிரகத்தை பார்த்துப் பார்த்து ஆனந்தித்தார்.

மனோகரோ சற்றுத் தயங்கி ," சுவாமி , ஒரு கேள்வி! " என்றார்.

சுவாமியோ, சிரிப்பு மாறாமல் அவரைப்  பார்த்து மேலே சொல்லச் சொன்னார்.

" அன்னிக்கு கிட்டு அய்யரை அனுப்பும் போது , சொத்தையும் பணமும் பத்திரமா பாத்துக்க சொன்னீங்களே ! எதுக்குன்னு விளக்கமா சொல்லுங்க சுவாமி "

சுவாமி அதற்கு மறு மொழி பேசவில்லை. அருகில் இருந்த சீடரிடம் சொல்லி , கிட்டுவை வரச் சொல்லு என்றார். கிட்டு பவ்வியமாக நின்று நமஸ்கரித்தார்.

" எத்தனை செலவு வைத்தாய் இவருக்கு ?" என்று அவரைப் பார்த்தார்.

 '" ஆசிரமத்துக்கு இருபது. கோவிலுக்கு பத்து . ஆக மொத்தம் முப்பது லக்ஷம் சுவாமி " 

மனோகர், பார்த்தாயா ? நான்கே மாதத்தில் உன்னிடம் இருந்து முப்பது லக்ஷம் பறித்து விட்டார் கிட்டு. இன்னும் ஒரு வருஷம் கூட இருந்தால் என்ன நடக்கும்?  "

மனோகர்  சிரித்தபடி , " இந்த மாதிரி  பணம் பறிக்கறதுக்கு நான என்றுமே உடன் படுவேன் சுவாமி " என்றார். 

"இதெல்லாம் ஆண்டவன் கொடுத்தது . நமக்கே எல்லாம்னு இல்லாம அதை எல்லாருக்கும் குடுக்கணும். தர்மம் தழைக்கணும். " சுவாமி எல்லாரையும் ஆசீர்வதித்தார்.

கிருஷ்ணன் எல்லாருக்கும் அருள் தரும் புன்னகையை வீசி நின்றான்.

Thursday, July 15, 2010

மனசாட்சியே இறை சாட்சி !- ஒரு சிறுகதை

விநாயகம் யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினார். "ஒ! செல்லப்பன் ! எங்கே இத்தனை நாளா காணோம் ?"

வண்டியில் இருந்து இறங்கிய செல்லப்பன் , இவர் கையைப் பிடித்துக் கொண்டு , "இன்னிக்கு உங்களை ஒரு கிலோமீட்டர் விரட்டிப் பிடிச்சேன் சார் " என்றார். இருவரும் வண்டியை ஓரத்தில் நிறுத்தினர். விநாயகம் அப்போதுதான் கவனித்தார். செல்லப்பன் மீசை இல்லாமல் , சட்டையை கால் சரைக்குள் 'இன்' செய்து, ஷூ ,  பர்ப்யும்  எல்லாம் போட்டு அமர்க்களமாக இருந்தார்.

"என்ன செல்லப்பன் , ரெண்டாவது கல்யாணம் ஏதாவது செஞ்சுக்கிட்டீங்களா ?  ஆளே மாறிட்டீங்க !" என்று குறும்போடு கேட்டார்.


" உண்மையாகவா ? ஒண்ணுமில்ல சார் , புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சேன். அதுக்காகத்தான் இந்த மாற்றம் ." என்றார் செல்லப்பன்.

" ஏதாவது ஆம்வே ஏஜன்ட் ஆயிட்டீங்களா என்ன ?" இது விநாயகம். செல்லப்பன் உடனே உஷாராகி " எப்படி சார் கண்டு பிடிச்சீங்க ? அது விஷயமாத் தான் உங்களை நிறுத்தினேன் ." என்றார்.


விநாயகம் இது போன்ற பல போர்க்களம் கண்டு மீண்ட  வீரர். அலட்டிக்  கொள்ளாமல், " அருமையான தொழில் சார்.என் நிலைமை இப்போ வேற மாதிரி. பையன் மெட்ரிக்கு , பொண்ணு ப்ளஸ் டூ. ரெண்டு வருஷம் ஆகட்டும். நானே உங்களைத் தேடி வருவேன் பாருங்க! " என்றார்.

ஏமாற்றமடைந்தாலும், செல்லப்பன் தளராமல், " ஏன் சார் , நம்ம சுந்தர மூர்த்தி இப்போ பீளமேட்டில தானே இருக்கார் ? என்று கேட்க, ஆமாம் , போன மாசம் கூட பாத்தேன். வீடு எல்லாம் கட்டி முடிச்சுட்டார்." என்றார் விநாயகம். செல்லப்பன் உற்சாகமாகி " சார் கொஞ்சம் போன் நம்பரும் அட்ரசும் குடுங்க " என்று கேட்டு வங்கிக் கொண்டார்.


"ன்னங்க , கொஞ்சம் ஆர்த்திக்கு ஷூ பாலிஷ் போட்டு விடுங்க !" பார்வதி சொல்லி முடிக்கும் முன்னேயே அங்கே சுந்தர மூர்த்தி இருந்தார்.  பெண்ணைப் பார்த்து  " மேடம் , பாலீஷுக்கு ரெண்டு ருபா ! அர்ஜண்டுக்கு அஞ்சு ருபா !" என்று குறும்போடு கேட்க, ஆர்த்தி சளைக்காமல், "ஏம்ப்பா , உங்க ஊர்ல கடன் எல்லாம் உண்டா ? அஞ்சே வருஷம் தான் ! "என்று ஏட்டிக்கு போட்டி பேசினாள்.

அம்மாவையும் பெண்ணையும் ஸ்கூட்டரில் ஏற்றி விட வராந்தா வரை சென்று நின்றார். பார்வதி வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது, " உப்புமா காஸ் மேல இருக்கு. தயிர் பிரிட்ஜில இருக்கு. ஊறுகாயும் இருக்கு. நான எப்படியும் ஒரு மணிக்குள்ள வந்திடுவேன்." என்று உரக்க சொன்னாள். அவரோ, " சரி ரோட்டைப் பார்த்து போ. லைசன்சு பர்சில வச்சியா ? மொய் கவர் எடுத்தியா ?" என்று கேட்க , பார்வதி " எல்லாம் ஆச்சுங்க . நான வர்ரேன் " என்று கிளம்பினாள்.

சுந்தர மூர்த்தி வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்த முற்படும் போது , செல்லப்பன் வீட்டின் முன் நின்று ஹாரன் அடித்தார். இவர் கேட்டைத் திறக்கச் செல்லும் முன்பாகவே, " என்ன சார் சௌக்கியமா ? " என்று உற்சாகமாக விளிததார். சுந்தர மூர்த்தி புன்னகையுடன் , எல்லாம் நல்லா இருக்கேன், வாங்க ! " என்று அன்புடன் வரவேற்றார்.

" எனக்கு ஒரே சம்சயம் . நீங்க இன்னிக்கு வீட்டில இருப்பீங்களோ இல்லையோன்னு.  சனிக்கிழமையாச்சே ! எதுக்கும் பாத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்." என்றார் செல்லப்பன்.

குளிர்பானம் கொடுத்தார் மூர்த்தி. " என்ன சார் இன்னிக்கு லீவு தானே ? கொஞ்சம் பேச முடியுமா ?" என்று செல்லப்பன் கேட்டார் .

" இன்னிக்கு நான ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டேன். வீட்டுக்காரிக்கு ஒரு கல்யாணம் . என் பையன் இன்னிக்கு ஐ ஐ டி கோச்சிங் கிளாசுக்கு போயிட்டு  வருவான். வேலைக்காரி ஒன்பது மணிக்கு வருவா. இன்னிக்கு மதியம் பால் கார்டு வாங்கணும். ஒண்ணா லீவு போட்டுட்டேன் " என்று மூர்த்தி தனக்கே உரிய சாந்த குணத்தோடு பதில் சொன்னார்.

" என்னது ? ஸ்கூல் பிரின்சிபால் இந்த வேலை எல்லாம் செய்யறதா ? நோ நோ ! சார் , இதை எல்லாம் விடுங்க. நான உங்களுக்கு நேரத்தைக் காசாக்குற வித்தை சொல்லித் தர்ரேன் . உங்க ஸ்கூல் ல குடுக்கற இருபதினாயிரத்துக்கு நீங்க பாடு பட்டது போதும் !" செல்லப்பன் மூர்த்தியைக் கூர்ந்து கவனித்தார்.

மூர்த்தி சற்று நெளிதலுடன், "என்ன செல்லப்பன் இன்னிக்கு ஒரே கலாட்டாவாக இருக்கீங்க ? என்னை எதுலயும் சிக்க வைக்காதீங்க . காசு இருந்தாத்தானே ?" சிரித்தார்.

"உங்களைக் காசு யாரு கேட்டா ? உங்க நேரமும் , உங்க செல்வாக்கும் மட்டும் தான் உங்களுக்கு இதுல துணை நிக்கும்" என்றபடி, தான் ஆம்வே யில் முகவராக சேர்ந்ததையும் , கை நிறைய பணம் சம்பாதிப்பதையும் கூறினார். "வெறும் அஞ்சா யிரம் தான் போட்டு சேர்ந்தேன். இன்னிக்கு எனக்கு கீழே காரமடையில ஒரு லைன் , அவனாசில ஒண்ணு, திருப்பூர்ல ஒண்ணு ஓடுது. இருநூறுக்கு மேலே ஏஜன்ட் இருக்காங்க . நல்லா ஓடுது. இப்ப தான் ஒரு ஆல்டோ வாங்கினேன். " என்றார் பெருமிதமாக.

சுந்தர மூர்த்திக்கு இந்த நடைமுறை எல்லாம் புரியாது. செல்லபபனைப் பார்த்து , " ஆமா , ஏதோ ஏஜன்ட் னு சொன்னீங்க. இந்த தொழில் ல என்ன பொருளை விக்குறீங்க ?" என்று அப்பாவியாய் வினவினார்.

செல்லப்பன்
நாக்கைக் கடித்துக் கொண்டார். " என்ன சார் இது ? ஆம்வே பொருட்களைத் தெரியாம இருக்கீங்க. இதோ பாருங்க " என்று தான் பையில் கொண்டு வந்த சாமான்களைக் காட்டினார். இது டூத் பேஸ்ட். இது கிளீனிங் சொல்யூஷன். உலகிலேயே நம்பர் ஒன. இது வைட்டமின் பொடி. இது ஓமேகா.. என்று அடுக்கினார். அதன் சிறப்புகளையும்  விளக்கிக்கொண்டே போனார்.

"பரவாயில்லையே ! துணி துவைச்ச பின்னாடி சோப்பு கலந்த தண்ணிய செடிக்கு கூட விடலாமா ? இது வேணா ஒரு பாட்டில் குடுங்க சார். நூறு மில்லி இருந்தா காமிங்க " என்றார்.

செல்லப்பன் ஏதோ சொல்ல முற்படுமுன், கதவு திறக்கும் ஒலி கேட்டது. மூர்த்தி சாரின் மகன் தோளில் பையோடு வந்தான். "ஸ்ரீராம்! என்று அறிமுகம் செய்தார். அவன் கை குவித்து வணக்கம் சொல்லி, பிறகு தந்தையை நோக்கித் திரும்பினான். " அப்பா, காய்கறி இதோ பையில் இருக்கு. பிரிட்ஜில வைக்கறேன்." என்று விட்டு உள்ளே சென்று விட்டான். உடனே மூர்த்தியும் பின்னாடியே சென்றார். உள்ளே ஏதோ பாத்திரம் நகர்த்தும் சத்தம் கேட்டது.

ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார் மூர்த்தி. " மன்னிக்கணும். அவன் காலைல அஞ்சுக்கு போனவன். இப்பத்தான், ஒன்பதுக்கு வந்திருக்கான். சாப்பிட வச்சிட்டு வந்தேன்." என்று தோள் துண்டால் கையைத் துடைத்தார். " என்னமோ சொல்ல வந்தீங்க "

செல்லப்பன் உற்சாகமானார். இந்த மாதிரி சிச்சுவேஷன் அவருக்கு தினம் நிகழும். ஒரு முறை தன் முன்னோடிகள் சொல்லிக் கொடுத்ததை நினைவு படுத்திக் கொண்டு ஆரம்பித்தார். " சார், உங்க பையனோட படிப்புச் செலவு, பொண்ணோட படிப்பு, கல்யாணச் செலவு எல்லாம் கணக்கு பண்ணி பாருங்க. மலைச்சுப் போயிடுவீங்க. ஒத்த சம்பளத்துல இதெல்லாம் பண்ணனும்னா முடியுமா ? நான உங்களை என்ன மாதிரி ஏஜன்ட் ஆக மாறச் சொல்லறேன். நீங்க என்னடானா சொந்த தேவைக்கு வேணும் அது இதுன்னு பேசறீங்க "

போன் மணி அடித்தது. மூர்த்தி எடுத்தார்." ம்ம் சொல்லும்மா . கல்யாண டிபன் எப்படி ? ஆர்த்தியை சரியாய் கிராஸ் பண்ணி ஸ்கூல் ல விட்டியா ? சரி , சரி, மெல்ல வா " போனை வைத்து விட்டு நிமிர்ந்தார்.

"செல்லப்பன், இப்போ நீங்க சொன்னீங்களே, சொந்த உபயோகத்துக்கு வேண்டி இந்த ஏஜன்ட் ஆகறது சரியில்லையா ? அப்படித்தான் உங்க கீழே உள்ள எல்லாரும் பண்ணறாங்களா? உங்க வீட்டுல இந்த பொருட்கள் எல்லாம் உபயோகம் பண்ணறது இல்லையா ? " என்று மூர்த்தி கேட்டார்.

" ஆமாம் சார். இது பணம் பண்ணுற செயின். இதுல சொந்த உபயோகம் எல்லாம் வீண் " என்றார் செல்லப்பன்.

"செல்லப்பன், இப்ப நீங்க சொன்னதில இருந்து எனக்கு
இந்த பிசினஸ் மேல ஒரு மாதிரியான ஊகம் வந்திருக்கு . அதாவது, சுகாதாரப் பொருட்களை தான் வங்கி விற்றாலும், அதை என்ன தான் ஆகா ஓகோ ன்னு சொல்லி வித்தாலும் , அது பிறர் வாங்கி தான் லாபம் சம்பாதிக்கணும் அப்படி ன்னு எல்லாரும் நினைக்கறாங்க. இதனால உங்க செயின் ல உள்ள ஒருவருமே தனக்காக இதுகளை உபயோகம் பண்ணறது இல்ல. இதே தப்பை என்னையும் பண்ணச் சொல்லறீங்க. அப்படித் தானே ? "

செல்லப்பனுக்கு இந்தக் கேள்வி ஒரு சரியான அடிதான். தான் சென்ற செமினார்களில் இந்த மாதிரி வாதம் செய்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்களா என்று யோசித்தார்.

அதற்குள் மூர்த்தியே, " இதில இன்னொன்னு இருக்கு. உங்க ஒருத்தருக்கு, சிறிசா வருமானம் வரணும்னா கூட , உங்க மூலமா இரண்டு பேர் இதில சேரணும். அவங்களுக்கும்  காசு கொஞ்சம் வரணும்னா , அவங்களுக்குக் கீழே மேலும் ஆளு கூடணும். உங்களுக்கு போட்ட பணம் திரும்பணும்னா இந்த செயின் நீண்டுகிட்டே போகணும். இதில எப்பவுமே ஏமாளி , கடைசியாய்ச் சேர்ந்தவன் தான் . இல்லையா ?" என்று மெல்ல , ஆனால் தெளிவாக கேட்டார்.

செல்லப்பன் , இதை எதிர்பார்க்கவில்லை. "நீங்க தேவை இல்லாமல் அடுத்தவரைப் பத்தி கவலைப்படுறீங்க. இதுல மோசம் போனவன் கிடையாது.". என்று ஏதோ ஆரம்பிக்க, மூர்த்தி சிரித்தார்.

"செல்லப்பன், சில வருடத்துக்கு முன்னாடி என்னை சில பேர் ஷேர் மார்க்கட்டுக்கு வந்து சேர சொன்னாங்க. விசாரிச்ச பிறகு தெரிந்தது. காலையில வாங்கின ஷேரை சாயங்காலமே விககறதாம். எப்படி நமக்கு ஒரு கம்பனியோட நிலவரம் ஒரு நாளைக்குள்ள தெரியும் ? அதுக்குள்ளே இதில இப்படி அவசரமா விக்கறது எதுக்குனு நான கேட்டப்ப , இப்ப நீங்க சொன்ன அதே பதில் தான் எனக்குக் கிடைச்சது. எனக்கு புரிந்தது ஒரே விஷயம். இந்த பணம் ஒரு ஏமாத்து பணம். பொருளுக்காக வியாபாரம் பண்ணாம பணத்துக்காக வியாபாரம் பண்ணி  ஒருத்தனை சிக்க வச்சு அவனை இழக்க வைக்கறதுதான் இந்த வியாபாரம் எல்லாம் ! "  மூர்த்தி முடிப்பதற்குள் செல்லப்பன் முந்தினார்.

"என்னைப் பார்த்துமா இப்படி சொல்லறீங்க ? நான சம்பாதிச்சது எப்படி ? என் உழைப்பினால தானே ?"

இப்போது மூர்த்தியின் கண்கள் செல்லபபனை உற்றுப் பார்த்தன. " நீங்க அப்பவே எனக்கு ஒரு உத்தரவாதம் குடுத்தீங்களே, போட்ட பணம் ரெண்டே மாசத்தில வரும் அப்படீன்னு ! அது யாரு பணம் ? உங்க கம்பனி பணமா அல்லது புதுசா சேர்ரானே அவன் பணமா ? நீங்க போயி பாக்கற ஒவ்வொரு ஆளும் சம்பளம் பத்தாம மாசக் கடைசியில கையைப் பிசையறவன் தானே ? அவனுடைய பணத்தைத் தின்னா நானும் கார் வாங்கணும் ?"

செல்லப்பனுக்கு இப்போது வியர்த்தது. மூர்த்தி மேலும் தொடர்ந்தார். செல்லப்பன், நீங்களும் என்னைப் போல ஒரு டீச்சர். நான இன்னிக்கு என் மனைவிக்காகவும், குடும்பத்துக்காகவும் லீவு போட்டு கவனிக்கிறேன். ஆனா நீங்க பணத்துக்காக லீவு போட்டிருக்கிறீங்க. இதோ , இப்ப சித்த முன்ன என் பையனுக்கு என் கையால நான சாப்பாடு போட்டேனே , அந்த திருப்தியை இந்த ஆம்வே வியாபாரம் குடுக்குமா ?  இல்லை !, இந்த மாதிரி விஷயங்களால என் குற்ற உணர்வு தான் ஏறும். மேலும், என்னால பொய் சொல்லி வியாபாரம் பண்ண முடியாது. ஆனா, நான சொன்ன மாதிரி , அந்த க்ளீனிங் சொல்யூஷன் நூறு மில்லி வாங்கறேன். இது என் மனசுக்குப் பிடிச்ச வியாபாரம் "

மூர்த்தி தொடர்ந்தார் . " நீங்க முதல்ல தவறாம யோகா செய்வீங்க . எல்லோருக்கும் சொல்லிக் குடுப்பீங்க. இப்போ அதெல்லாம் விட்டுட்டீங்க போல. வில் போல இருந்த நீங்களே இப்ப பணம் பணம்னு அலைஞ்சு தொப்பையை வச்சிக்கிட்டு இருக்கீங்க. தினம் மகனோட ஸ்கூலுக்கு ஸ்கூட்டர்ல வருவீங்க. இப்ப அவனை ஹாஸ்டல் ல விட்டுட்டீங்க. வெறும் பணத்தால நீங்க இழந்த உறவுகளை, ஆரோக்கியத்தை , திரும்ப பெற முடியுமா ? நான உங்களைக் கேட்கிறேன். ஒரு குடும்பத்தின் ஆணிவேரான தலைவர் நீங்க திசை திரும்பி ஆச்சுன்னா , உங்க குடும்பம் என்னவாகும் ?  நீங்க என்னை விட சின்னவர். உங்க மகன் என் ஸ்டூடன்ட் . அந்த உரிமையில் தான் இதெல்லாம் சொன்னேன். தப்புன்னா மன்னியுங்க." என்று முடித்தார்.

அந்த ஹால் முனையில் நின்றிருந்த ஸ்ரீ ராம்  தன் தந்தையை பெருமிதமாகப் பார்த்தான். செல்லப்பன்   சற்று நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். பிறகு மெல்ல நிமிர்ந்து, "சார் , பையனுக்கு படிப்பு தடை படக் கூடாதுன்னு தான் ஹாஸ்டல்ல போட்டேன். அவனும் இது வரை ஒண்ணும் சொல்லல்ல." என்று சொல்ல, குறுக்கிட்ட மூர்த்தி, "உங்க மகனும், ஸ்ரீ ராமும் நண்பர்கள். அடிக்கடி இங்கே போன் பண்ணுவான். ஒரு நாள் ரொம்ப அழுது பேசினான். அப்பா வர்றதே இல்ல அப்படீன்னு. நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்தினேன். " என்று சொல்ல, செல்லப்பன் அப்படியே நிலை குலைந்து நாற்காலியில் சாய்ந்து விட்டார். கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

"சார், நான இத்தனை நாள் சம்பாதிச்சது அவனுக்காகத் தானே சார். நாளைக்கு அவனுக்கு ஆகட்டுமேன்னு தானே சார் இத்தனயும் பண்ணினேன் ? அவனே புரிஞ்சிக்கலை பாருங்க ! " என்று விரக்தியோடு பேசினார்.

மூர்த்தி இப்போது அவரருகே நெருங்கி அமர்ந்தார். " இப்போ நான சொல்லறதை நிதானமா கேளுங்க. நீங்க ஒரு வாத்தியாரா இருந்த வரைக்கும் நீங்க பணத்தை சம்பாதிச்சீங்க. உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம பொருள் சம்பாதிச்சீங்க. உங்க குடும்பம் தெளிஞ்ச ஓடை போலே ஓடிக்கொண்டிருந்தது. கடமையைச் செய்ததால பணம் உங்களுக்கு வந்தது. இப்போ   பணம் பண்ணறதுக்கு மட்டும் உழைக்க ஆரம்பிச்சீங்க . பணம் உங்களை சம்பாதிக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நீங்க முழுக்க பணத்தின் பிடியில் இருக்கீங்க. இதில இருந்து நீங்க வெளிய வரலைன்னா அந்த வருமானத்தின் நோக்கமே சிதைஞ்சிடும். நல்லா யோசியுங்க. இப்போ நான பால் கார்டு  வாங்கப் போயிட்டு இருக்கேன். மாடியிலே என்னோட ரூம் இருக்கு. கொஞ்ச நேரம் தியானம் செஞ்சுட்டு இருங்க. அரை மணியில வந்துடுவேன்." என்று அவரை மாடியில் விட்டு விட்டு தெருவில் இறங்கி நடந்தார்.

 திரும்பி வந்த போது செல்லப்பன் இல்லை. " அங்கிள் இப்போதான் போறார் பா " என்றான் ஸ்ரீராம்.

ன்று மாலை , மூர்த்தி , காயப் போட்ட துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். உள்ளே பார்வதி, விருந்துண்ட மயக்கத்தில் தூங்கியிருந்தாள். மணி ஐந்தாயிற்று. சின்னவள் வரும் சத்தம் கேட்டது.

 'அப்பா!"

"என்னடா செல்லம் ? ஏன் ரொம்ப களைச்சு இருக்கே ?
பால் சாப்பிடுறியா ?"

சரிப்பா . இதோ முகம் கழுவிட்டு வர்ரேன்.

மூர்த்தி வேலை முடித்து , சமையலறையில் சென்று நிமிடத்தில் பால் கலந்து வந்தார். பெண் ஆசையாய் குடிப்பதைப் பார்த்து விட்டு, திருப்தியாய் புன்னகைத்தார்.

வாசலில் ஏதோ அரவம். கதவைத் திறந்தார். விநாயகமும் அவரோடு இன்னொரு பெண்மணியும். " ஒ வாங்க, வாங்க ! " மூர்த்தி வரவேற்றார்.

" அந்த பெண்மணி சற்று பரபரப்பாக இருந்ததை உணர்ந்த மூர்த்தி , விநாயகத்தைப் பார்க்க, அவர் , " சார் இவங்க செல்லப்பன் மனைவி. அவர் இங்க வந்தாரான்னு விசாரிக்க வந்திருக்காங்க "

அந்த பெண்மணி அவரைப் பார்த்து , " என் வீட்டுக்காரர் மதியம் உங்க வீட்டுல இருந்து வந்ததும், என்னண்டை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசினார். ஏதோ இந்த ரெண்டு வருஷத்துல இழந்ததைப் பற்றியும் சொன்னார். குழந்தையை ஹாஸ்டல் ல விட்டதைப் பற்றி ரொம்ப வருத்தப் பட்டார். சாப்பிடக் கூட இல்லை. நான சமையல் உள் வேலை முடிச்சிட்டு வந்து பார்த்தப்போ, அவர் போயிட்டார்.வண்டியைக் கூட எடுக்கலை.செல் போனும் அணைச்சிருககு   உங்க வீட்டு விலாசம் விசாரிக்க விநாயகம் அண்ணன் கிட்ட போன் பண்ணேன். அவர் தான் இங்கே கூட்டிட்டு வந்தார் " என்று பயத்தோடு விவரித்தார்.

மூர்த்தி " இல்லையே, அவர் போன பின் இங்க வரவே இல்லை. வேற எங்கயும் கேட்டீங்களா ? என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செல்  போன் மணி அடித்தது. செல்லப்பன் !

" என்ன மூர்த்தி சார் . தொந்தரவுக்கு மன்னிக்கணும். உங்க கிட்ட ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா ?"

" ஒ தர்ராளமாக . அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி. இப்போ எங்கே இருக்கீங்க ? உங்க மனைவி உங்களைத் தேடி இங்கயே வந்தாச்சு." என்றார் மூர்த்தி.

" அடடா ! மனசுக்குள்ள ஒரு வேகம் சார். எங்கப்பா அம்மா வைப் பார்க்கனும்னு தோணிச்சு. ரெண்டு வருஷம் ஆச்சு அவங்களைப் பார்த்து. நேரா திருப்பூர் போயிட்டேன். என் மனைவிக்குச் சொல்லுங்க இன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு வந்திருவேன் னு " செல்லப்பன் கூறி விட்டு , " சார் இன்னொரு விஷயம். நான படிச்சு, பெரியவங்க சொல் கேட்டு, அப்புறம் அவங்க நடத்தையைப் பார்த்து, இப்படி பல பாடம் படிச்சிருக்கேன். இன்னிக்கு முதல் நாளா , உங்க சொல்லும், எண்ணமும் ரெண்டும் குன்றின் மேல் வச்ச விளக்குப் போல பிரகாசித்ததை பார்த்தேன். என்னக்கு இத்தனை நாளா பணப் பித்து பிடித்தவர்களே உதாரணமாக இருந்தாங்க . முதன் முதலா பணத்தை துச்சமா பார்த்த நீங்கள் தான் என் வாழ்க்கைக்கு குரு. "

செல்லப்பன் தொடர்ந்தார் " நாளைக்கு எங்கப்பா அம்மாவோட உங்களைப் பார்க்க வர்ரேன். எங்கம்மா என்னைப் பார்த்ததும் அழுதுட்டாங்க சார். பணத்து பின்னால் சுத்திட்டு இருந்த என்னை ..."   இதைச் சொல்லும் பொழுதே அவர் நாத் தழு தழுத்தது .

" அட, இதுக்கெல்லாம் அழலாமா ?  சியர் அப். கட்டாயம் நாளைக்கு வாங்க. சாயங்காலமா பார்க்கணும்னா , நான நாளைக்கு சலிவன் வீதி வேணுகோபால் சாமி கோவில்ல பகவத் கீதை சொற்பொழிவு பண்ணறேன். ஆறு மணிக்கு. அங்கே வாங்களேன் " என்று அழைத்தார்.

" கண்டிப்பா வர்ரேன் சார். எங்க குல தெய்வமே கிருஷ்ணன் தான் . ரெண்டு வருஷமா கோவில் பக்கம் எங்க போனான் இந்தப் பாவி ?  கொஞ்ச போனை என் மனைவிக்குக்  கொடுங்க " என்றார்.

விநாயகமும் , செல்லப்பன் மனைவியும்  விடைபெற்ற பிறகே, அவர் பார்வதியை எழுப்பினார்.

வேணுகோபால சாமி கோவில் அன்று களை கட்டியிருந்தது. முன் மண்டபத்தில் ஒரே கூட்டம். மேடையில் மூர்த்தி தனக்கே உரிய அமைதியான ஆனால் அழுத்தமான பாணியில் கீதையை மக்களுக்கு விவரித்தார்.

தியான ஸ்லோகம் மற்றும் பீடிகை முடிந்து, எல்லாரும், அமைதியானவுடன், மூர்த்தி கூடி இருந்தவர்களைப் பார்த்து  " இப்போ நாம் பார்க்கப் போறது பக்தியும் கர்மமும் இணைந்த ஒரு ஸ்லோகம். நாம் எதைச் செய்தாலும், எதை உட்கொண்டாலும், எந்த யாகம் செய்தாலும், எந்த தானம் செய்தாலும், எந்த தவம் செய்தாலும், அதை அப்படியே பகவானுக்கு அர்ப்பணம் பண்ணனும்னு இந்த ஸ்லோகம் சொல்லறது.  இப்போ , உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். "நாம் ஒரு தப்பான கார்யம் பண்ணி விட்டு, அதை எப்படி பகவானுக்கு அர்ப்பணிக்கிறது ?  இது சாஸ்திர விரோதமல்லவா ?"  இந்த சிக்கலுக்கு உங்களிடம் விடை இருக்கா ?" என்று கூட்டத்தைப் பார்த்தார்.

" அர்ப்பணம் பண்ணக் கூடிய சரியான கார்யங்களை மட்டுமே தெரிந்து செய்யறது மட்டும் தான் ஒரே வழி " கூட்டத்தில் இருந்து இந்த குரல் கம்பீரமாக வந்தது. மூர்த்தி அது யாரென்று உற்றுப் பார்த்த பொழுது அங்கே செல்லப்பன் ! . மனிதர் அலாதியான அமைதியுடன் இருந்தார். நெற்றி நிறைய குங்குமம் ! கூடவே அவர் குடும்பமும், விநாயகமும் !

கூட்டம் முடிந்ததும் செல்லப்பன் அவர் கைகளைப் பற்றிக் கொண்டார். அவர் கண்களில் நீர். அவர் மனைவியோ, " சார் இன்னிக்கு காலைல தான் என் மகன் கிட்ட பேசினோம். நாளைக்கு அவனை ஹாஸ்டல் ல இருந்து இங்கேயே அழைச்சிட்டு வந்திரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்." என்றார்.

" செல்லப்பன் ! நான ஏதோ ரெண்டு வார்த்தை பேசப் போய், அது உங்களை ரொம்ப பாதிச்சிருச்சோ ? தவறு இருந்தா மன்னிக்க...." என்று  மூர்த்தி பேச ஆரம்பிக்க ,

செல்லப்பன் மூர்த்தியைப் பேச விடவில்லை. அவருடைய கையை பிடித்து, தன் ஜிப்பா பாக்கட்டில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அவர் கையில் வைத்தார். " நீங்க கேட்ட க்ளீனிங் சொல்யூஷன். இதுதான் நான பண்ணற கடைசி ஆம்வே வியாபாரம் ! " சிரித்தார்.

அப்போது பட்டர் வந்து , "எல்லோரும் வாங்கோ !  தீபாராதனை ! கண்ணனை சேவிங்கோ " என்றார்.


 " தேவ தேவா ! கண்ணா ! ஜகத்குருவே, உன் கருணையே கருணை !" மூர்த்தி கண்ணில் நீர் மல்க கோகுல பாலகனை இமை மூடாமல் சேவித்தார்.  .

 கற்பூர ஆரத்தி குழலூதும் கண்ணன் மீது பட்டதும், செல்லப்பனுக்கு சிலிர்ப்பு கண்டது .  அங்கே இருந்த ஒரு பக்தை  "குறை ஒன்றும் இல்லை..... " , பாட்டைப் பாட ஆரம்பிக்க, அனைவர் கண்களிலும் நீர் வழிந்தது. கண்டவர்  நெஞ்சமும் நிரம்பி நின்றது.