Sunday, May 19, 2013

மாமிசமும் ஆன்மீகமும்

உணவும் ஆன்மீகமும்

ஒரு வருடத்துக்குப் பின்பு எழுத வருகிறேன். இப்போது கதை அல்ல. ஒரு விஷயம் படித்து அதற்கு என்னளவில் மறுப்பும் மேல் விளக்கமும் தர இதை எழுதுகிறேன்.  
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இந்த கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது.  உணவும்  விதியும் 

ஒரு வாசகர் அவரிடம் மாமிசம் ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றதா என்று கேட்க , அதற்கு தன பாணியில்  விளக்கியிருந்தார். அதில் கொஞ்சம் உடன்பாடு,  சிறிது மாற்றுக் கருத்து என்னுடையது.

இந்த புலால் விஷயம் தொன்று தொட்டது என்று ராதா ஷியாம் பிரம்மச்சாரி போன்ற ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. ராமர் , சீதை மற்றும் இலக்குவன் மூவரும் புலால் உண்டதை வால்மீகியே பதிவு செய்திருக்கிறார் என்று பிரம்மச்சாரி கூறுகிறார்.வேத காலத்தில் பிராம்மணர்களே இறைச்சி , அதுவும் பசு இறைச்சியை உண்டனர் என்கிறார் அவர். தேவி பாகவதத்தில்  விசுவாமித்திரர் பஞ்ச காலத்தில் ஒரு புலையன் சேமித்து வைத்திருந்த நாயின் மாமிசத்தை திருடி உண்டதாக வருகிறது என்று தம்பண்ண செட்டியார் சமீபத்திய நூலில் கூறுகிறார்.

ராதா ஷியாம் பிரம்மச்சாரி கீதையில் எங்குமே புலால் உணவைக் கண்டித்து நேரடியாக ஒரு வார்த்தை கூட இல்லை என்கின்றார். 

இது இப்படி இருக்க , இன்றைய ஆன்மீக குருக்கள் , சிந்தனையாளர்கள் அனைவரும் புலால் விலக்கம் ஆன்மீக முன்னேற்றத்துக்கு அடிப்படைத் தகுதி என்கின்றனர். திருக்குறளும் , திருமந்திரமும் புலாலை வன்மையாகக் கண்டிக்கின்றன. 

தன்னூண் பெருக்கிற்குப் பிறிதூண்  தான் தின்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

இது திருக்குறள்.

ஜெயமோகன் அப்படியெல்லாம் இல்லை என்று கூறி , விவேகானந்தரையும் , சீன ஞானிகளையும் உதாரணம் காட்டி  அவர்கள் புலால் உண்டவர்கள் என சுட்டுகிறார். 

இப்போது எல்லாருக்கும் சந்தேகம் வந்திருக்கும். இந்த பின்னணித் தகவல்களால் சற்று குழம்பி , புலால் நன்மை தானோ என்ற கருத்தும் வந்திருக்கலாம். முதலில் நவீனத்தில் இருந்தே செல்வோம். விவேகானந்தர் ஒரு இடத்தில் ஆகாரத்தைப் பற்றிக் கூறுகையில் " ஒரு கால கட்டம் வரை உணவில் கவனமாக இரு. புலால் தவிர்.  முதிர்ந்த கால கட்டம் ஒன்று வரும் அப்போது நீ என்ன உண்டாலும் அது உன்னை ஒன்றும் செய்யாது." என்கிறார். இது வங்காளத்தில் கொடுக்கப் பட்ட அறிவுரை. அங்கே பிராம்மணர்கள் கூட மீன் சாப்பிடுவார்கள். 


சமீபத்தில் வெளிவந்த விரிவான வாழ்க்கைக் குறிப்பில் , யாரிடம் என்ன வாங்கி உண்கின்றோம் என்பதில் கவனம் செலுத்தியே இருந்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர் . அமெரிக்காவில் இரண்டாம் முறை இருந்த போது " நானும் அந்தக் கிழவர் (ராமகிருஷ்ணர் ) மாதிரியே ஆகிவிட்டேன். ஒரு சிலர் சமைத்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை " என்று கூறி ஒரு ஓட்டலில் சாப்பிட்டதை வாந்தி எடுத்தாராம்.


அடுத்தது கீதை. கீதையில் உணவு பற்றி வரும் குறிப்புகள் இதோ
1 . அளவான உணவே யோகிக்கு ஏற்றது. (அதிகம் உண்ணாமலும் பட்டினி இல்லாமலும் இரு.) (ப கீ 6-16)
2 . சாத்வீக உணவு என்பது ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ருசி, ஆகியவைகளை வளர்த்தும், ரசம் (நீர்பிடிப்பு) , மற்றும் பசை (எண்ணெய் பிடிப்பு)  உள்ளது வாகவும் , வலிவு தருவது வாகவும் , இன்பம் விளைவிப்பதுமாக இருக்கும்.
 3 . கசப்பு, புளிப்பு,  துவர்ப்பு , அதிக சூடு, வறட்சி, எரிச்சல் மிகுந்தவை ராஜச உணவுகள் . இவை துக்கம், சோகம், நோய் ஆகியவற்றை உண்டு பண்ணும்.
4 . சாமம் கழிந்த , சுவை அற்ற, ஊசிப் போன, பழைய , எச்சில் செய்யப்ப்பட்ட, மற்றும் தூய்மை அற்றது தாமச உணவு.  (ப  கீ 17-8,9,10)


 ஹோமியோபதி என்னும் மருத்துவம் பற்றி இங்கே கொஞ்சம் சொல்ல வேண்டும். மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கையில் ஒருவருக்கு ஒரு செடியின் சாறோ , ஒரு வேதிப் பொருளோ  அளிக்கப் பட்டு அவர் உடல் மற்றும் மனம்  அந்த புது பதார்த்தத்துக்கு எப்படி எல்லாம்  ஆட்பட்டு மாற்றம் அடைகிறது என்பது ஆராயப் படுகிறது. அவை குறிப்பெழுதப் பெறுகின்றன. பிற்பாடு வேறு யாருக்கேனும் அதே விதமான மாற்றங்கள் கொண்ட உடல் நோய் இருந்தால் அதே பதார்த்தம் வீரிய  படுத்தப்பட்டு  அந்த நபருக்கு கொடுக்கப் படும் பொது அந்த நோய் குணமாகிறது.  இது ஹோமியோபதியின் எளிய விளக்கம்.  இன்று ஹோமியோபதியில் மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட மருந்துகள் உள்ளன. அவை யாவும் ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு , விளைவுகள் பதிவாகி உபயோகத்துக்கு வந்தவை. இன்னும் அந்தப் பட்டியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டுவது மன மாற்றம். உதாரணம் ஊமத்தை. இந்த சாற்றை கொடுத்தால் மனம் தடுமாறும், வார்த்தை குழறும். இடை விடாது சிரிப்பார் அல்லது இடைவிடாது பேசுவார். இருட்டைக் கண்டால் பயம். பேய்களைப் பார்த்தது போல பேசுவார். மொத்தத்தில் ஒரு பயித்தியம் பிடித்த நிலை. இதன் முழு விளைவுகளை  இங்கே படிக்கலாம். 

நம் ஊரில் ஊமத்தை காய் தின்றால் பயித்தியம் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பயித்தியம் பிடித்த ஒரு மனிதருக்கு பல சமயம் ஊமத்தை மருந்தாகவும் ஆகிறது ஹோமியோபதி விதியின் படி.

நான் இதை விரிவாக எழுதக் காரணம் அந்நிய உணவுகள்/ பொருட்கள் ஏற்படுத்தும் மன மாற்றம் நிஜமே என்பது.  காமத்தை தூண்டுகின்ற பொருட்கள் ஆன்மீகத்துக்கு தடைக் கற்கள். ஆன்மீக ஆற்றலை விரயம் செய்பவை. வெங்காயம், பூண்டு, முருங்கை, போன்றவை இந்த வகையை சேர்ந்தவை. துளசி, வேம்பு போன்றவை இதற்கு எதிர் ரகத்தைச் சேர்ந்தவை. அவை மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சி தேவை இல்லை.


மாமிசம் மனித உடலின் அதன் தன்மையை ஏற்றி விடும். ஜெயமோகன் சொல்வது போல் இது குடல் சார்ந்தது அல்ல. தூல உடல் என்பது புலன்கள், மனம், புத்தி, மற்றும் பிராணன் சார்ந்தது. உலகின் ஒவ்வொரு பொருளும் பிராணனை பல வகைகளில் கொண்டுள்ளன. மனித உடலில் அவை பலவேறு வகைகளில் இயங்குகின்றன. மனிதனின் பிராணனை அந்த அந்நிய பிராணன்கள் தாக்கி மாற்றும் போது நோய் உருவாகிறது. ( மேலும் படிக்க இங்கே)

மாமிசம் உடல் பலத்தை ஏற்றுகிறது என்பது ஒரு வகையில் உண்மை. ஆனால் பல வகைகளில் பலவீனத்தை ஏற்படுத்திய பிறகே அது நிகழுகிறது. 

கீதை உபதேசமா, விவாதமா அல்லது உரையாடலா ?

கீதை உபதேசமா, விவாதமா  அல்லது உரையாடலா ?

"இந்தத் தலைப்பு வைத்து எழுதுவது சரிதானா ? " என்று பலரும் யோசிப்பர் . நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த விஷயம்  சமீப காலமாக  முற்போக்கு, பின் நவீனத்துவ , நவீன இலக்கியவாதிகளின் கையில் வேறு சிக்கி விட்டது. இதனால் என்னைப் போன்ற பாரம்பரிய ( பிற்போக்கு, மூட ஆச்சார, பழமை  ) வாதிகளுக்கு இது விஷயமாக விளக்க அவசியம் வந்து விட்டது.

 நவீன வாதிகள் பலர் கீதை ஒரு விவாதமே என்கின்றனர். ஜெயமோகன் அதில் ஒருவர். நம்முடைய நெடும் பாரம்பரியமோ  கீதையை உபதேசம் என்கின்றது.

கீதை எழுதப்  பெற்ற காலத்தில் உபதேசம் என்றால் குரு  சீடருக்கு உபதேசிப்பது.    உரையாடல் என்றால் இரு சம அந்தஸ்து பெற்றோர் பேசுவது.   விவாதம் என்றால் இருவரோ பலரோ தம் கருத்துகளை நிலை நாட்ட வாதம் செய்வது.

கீதையில்  விவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அர்ஜுனன் கிருஷ்ணனை விட மேதாவி அல்ல. அவன் எந்த இடத்திலும் அறிவு பூர்வமாக விவாதிக்கவே இல்லை. ஜெயமோகன் மற்றும் நடராஜ குருவின் "விவாத" வாதம் தள்ளுபடி ஆகிறது..

இப்போது நமக்கு உரையாடல் மற்றும் உபதேசம் மட்டுமே மீதம் உள்ளன

இது பற்றி நடுநிலையாகவே பார்ப்போம். சமீப காலமாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தலைவர் பிரபு பாதா தன்னுடைய ஆங்கில கீதை உரையை அமெரிக்காவில் வெளியிடுகையில் " the greatest dialgue ever" அதாவது  "உரையாடல்களிலேயே மிகச் சிறந்தது " என்று குறிப்பிட்டு  விளம்பரம் செய்தார்.

கிருஷ்ணரே கூட பதினெட்டாம் அத்தியாயத்தில்  " இந்த உரையாடலை (சம்வாதம்) என் பக்தர்களிடம் பரப்புபவன் எனக்கு மிகவும் உகந்தவன் " என்கிறார் .

கீதையில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் ஒரு முத்தாய்ப்பு வரும். அதை "புஷ்பிகை" எனவும் வர்ணிப்பர். அதில் முதல் அத்தியாயத்தின் முடிவில்   " ஓம் தத்ஸ திதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு  உபனிஷத்ஸு  ப்ரஹ்ம  வித்யாயாம்  யோக ஸாஸ்த்ரே ஸ்ரீ க்ருஷ்ணார்ஜுன  ஸம்வாதே அர்ஜுன விஷாத யோகோ நாம ப்ரதமோத்யாய : || " என்று வரும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்தந்த அத்தியாயத்தின் பேர் அடிக்கோடிட்ட இடத்தில் வரும்.

இங்கே சிவப்பில் எழுதப் பட்ட வாக்கியம் அனைத்து புஷ்பிகைகளிலும் வரும். இங்கே சம்வாதம் என்று வியாசரே கூறி விட்டார்.  சஞ்சயன் பதினெட்டாம் அத்தியாயத்தில் "ஸம்வாதம் இமம் அத்புதம் ..." என்று கிருஷ்ணரின் கீதையை வர்ணிக்கிறார். சம்வாதம் என்றால் உரையாடல் என்று தான் பொருள்.

இதில் தெளிவு பெற கீதையின் உள் ஸ்லோகங்களையே பார்ப்போம். அர்ஜுனன் மொத்தம் பேசியது  85  ஸ்லோகங்கள்.
முதல் அத்தியாயம்  47 ஸ்லோகத்தில் அவன் பேசியது மட்டூம் 26.
இரண்டாம் அத்தியாயத்தில் அவர் பேசியது 5 ஸ்லோகங்கள்.
மூன்றாம் அத்தியாயத்தில்  3 ஸ்லோகங்கள்.
நான்காம் அத்தியாயத்தில் 1
ஐந்தாம் அத்தியாயத்தில் 1

ஒன்றாம் அத்தியாயம் முழுதும் அர்ஜுனனின் மனக் குழப்பமே நம் முன் நிற்கிறது. பாரத யுத்தத்துக்கு சில மாதம் முன்பு இதே அர்ஜுனன் ப்ருஹன்னளை ரூபத்தில் அவன் இன்று உறவு கொண்டாடுகின்ற அனைத்து வீரர்களையும் யுத்த களத்தில் தோற்கடித்திருந்தான். திடீரென்று அவனுக்கு கலக்கம் வந்து செய்தது  வெறும்  சண்டித்தனம் மட்டுமே. அன்று அவன் செய்தது புலம்பல் மட்டுமே.

இரண்டாம் அத்தியாயத்தில்  அர்ஜுனனின் புலம்பல் வாதத்தை க்ருஷ்ணன் அலித்தனம்  என்று விவரித்தமையால் அர்ஜுனன் மேலும் குழப்பமடைந்து நான் உங்கள் சீடன் . எனக்கு நல்லுரை கூறுங்கள் என்று ஆரம்பிக்கிறான். ( " சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் ")  இதே அத்தியாயத்தில் இடையில் 54 வது ஸ்லோகத்தில் அவன் கேட்டது ஸ்திதப் ப்ரக்ஞனின் இலக்கணம் பற்றி.

 மூன்றாம் அத்தியாயத்திலோ அர்ஜுனன் கிருஷ்ணனைக் கேட்டது சன்யாசம் அல்லது கர்மம் இதில் எது சிறந்தது என்ற கேள்வி.இதிலும் அர்ஜுனனின் சண்டித்தனத்தின் எச்சங்களைக் காணலாம்.

நான்காம் அத்தியாயத்தில் அர்ஜுனன் க்ருஷ்ணனின் திவ்ய பிறப்பு பற்றி சந்தேகம் எழுப்புகிறான்.

இதோடு அர்ஜுனனின் குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன. இப்போது  அவர் க்ருஷ்ணரின்  கருத்துகளை ஸ்ரத்தையோடு கேட்க  தயாராகிறார்.  க்ருஷ்ணரின் உபதேசத்தை எதிர் மறை எண்ணங்கள் இல்லாமல் கேட்கிறார். சில சிறு சந்தேகங்களை அங்கங்கே நிவர்த்தி செய்து கொள்கிறார். பத்தாம் அத்தியாயத்தில் அவர் க்ருஷ்ணனை பரம் பொருளாக ஏற்றுக் கொள்கிறார். பதினொன்றாம் அத்தியாயத்தில் க்ருஷ்ணனின் விராட ரூபம் கண்டு களிக்கிறார். சரணாகதி அடைவதாகக் கூறுகிறார். இதன் பின்னர் பகவான்  கூறும் அனைத்து ஸ்லோகங்களையும் அப்படியே ஸ்வீகரிக்கிறார்.

 இந்த நான்காம் அத்தியாயத்துப் பிறகு உரையாடல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அது சுத்தமாக உபதேசம் மட்டுமே. உபதேசத்தின் இன்னொரு விளக்கம் தகுதி வாய்ந்தவனுக்கு மட்டுமே கொடுப்பது . இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் தன்னுடைய தனிக் கருத்துகளை விட்டு க்ருஷ்ணரின் மொழிகளை ஏற்க முற்பட்ட உடனே உபதேசம் ஆரம்பிக்கிறது எனலாம். நான்காம் அத்தியாயத்தில் முதிர்ந்த சிஷ்யராகி விடுகிறார்.

இதற்குப் பிறகு அவர் அதிக பட்சமாக பதினொன்றாம் அத்தியாயத்தில் 32 ஸ்லோகம் சொல்கிறார். அனைத்தும் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு பிரமித்து சொன்னவை.

நம்முடைய முன்னோர் கீதையை உபதேசம் என்றது இது போன்ற திடமான ஆராய்ச்சியால் தான். வியாசர் சம்வாதம் என்ற போதிலும் அது  சம்வாதத்தில் ஆரம்பித்து வேண்டுமானால் இருக்கலாம். ஆனால்  முடிவதோ உபதேசத்தில் தான் என்று நான் கூறுகிறேன்.

Sunday, May 12, 2013

தமிழில் எந்த கீதை உரை சிறந்தது ?




தமிழில் எந்த கீதை உரை சிறந்தது ?

என்னுடைய கீதை வாசிப்பு இப்போது பதின்மூன்று வருடங்களை தொட்டு விட்டது. முப்பது வருடங்களுக்கு மேலாகவே எங்கள் வீட்டில் சித்பவானந்தரின் உரை ஒன்று இருந்தது. பிறகு ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் யோகானந்தரின் ஆங்கில உரை, பாரதியின் தமிழ் உரை, ஜெயதயால் கோயந்தகா அவர்களின் இந்தி உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு - தத்துவ விவேச்சனி (கீதா பிரஸ் ), சுவாமி ராம்ஸுகதாஸ் அவர்களின்  சாதக சஞ்சீவியின் தமிழ் மொழி பெயர்ப்பு (கீதா பிரஸ் ), பிரபு பாதாவின் கீதை உரை (இஸ்கான் ) போன்றவைகள் வாங்கி விட்டேன். கடைசியில் ஓஷோவின் உரை இரண்டு அத்தியாயம் வாங்கினேன். 

என்னுடைய வாசகர்களுக்கு நான ஒரு நல்ல தமிழ் உரையை சிபாரிசு செய்யவே இந்தப் பதிவு என்பதினால் சித்பவானந்தரின் உரை, ஜெயதயால் கொயந்தகாவின் தத்வ விவேச்சனி (இனி இப்பெயரில்) , சாதக சஞ்சீவனி, மற்றும் பிரபுபாதாவின் கீதை  ஆகியவைகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டியுள்ளது. பாரதியின் உரை உத்தமம் என்றாலும், அதில் பதவுரை இல்லை. ஒரு உரையின் உயிர் போன்ற விளக்கவுரை (அல்லது பொழிப்புரை அல்லது நயவுரை) இல்லை. ஆகையால் அதை மேற்கண்ட உரைகளுக்கு பின்னரே வைக்கிறேன்.

பொதுவாகவே கீதைக்கு உரை எழுதுவதென்பது சமய ஆச்சாரியர்கள் (சங்கரர், மத்துவர், ராமானுசர், நிம்பார்க்கர், வல்லபர், சைதன்யர் ) காலத்தோடு நின்று விட்டது எனலாம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெரும் தத்துவ தளத்தை நிறுவ முயற்சிக்கும் மாபெரும் உரைகள்.மற்றும் இவை ஒன்று மற்றொன்றை மறுப்பவை. இவைகளில் புகுந்து மீளுவது சாமானியனால் ஆகாது.

ஆச்சாரியர்களின் காலத்துக்குப் பிறகு, இவ்வுரைகள் குரு சீட பரம்பரை வழியாகவே பரவி வந்தன.நூற்றைம்பது வருடத்துக்கு முன் வேதாந்தம் பற்றி பிரசங்கமோ, பிரவசனமோ  நடை பெற்றே இருக்காது. குரு இல்லாமல் அது நடக்காது. ராமகிருஷ்ண இயக்கத்தின் தாக்கம் ஒன்றே வேதாந்த பரவலுக்கு வித்திட்டது. புத்தகம் மூலமாக வேதாந்தம் பரவத் தொடங்கியது இக்கால கட்டத்தில் தான். 

இஸ்கான் உரையை நீக்கி விட்டால் ஐம்பது வருடங்களாக தமிழில் வெளியான உரைகள் அனைத்தும் தனிப்பார்வை (exclusivity)  கொண்டவை அல்ல. ராமகிருஷ்ண மடத்து உரைகள் , கீதா பிரஸ்ஸின் உரைகள் எல்லாவற்றிலும் இந்த சார்பின்மையைக் காணலாம். இல்லையெனில், அத்துவைத மார்க்கத்தை நிருபிக்கப் புகுந்தால் 2/ 22 இல் " ஆத்துமா இன்னொரு உடலுக்குள் புகுகிறது" என்ற சொற்றொடருக்கு சுற்றி வளைத்தே உரை எழுத வேண்டியிருக்கும். அங்கும் மடக்கப் படலாம். துவைத மார்க்கத்தில் உரை சொல்லப் புகுந்தால்,  2/ 24, இல் எங்கும் விரவியவன் ஆத்துமா என்னும் போது சறுக்கும்.

ஆக, உள்ளதை உள்ளபடி உரைத்து  படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி , அவரை அந்த அமர வாக்கியங்களை அநுபூதி வாயிலாகவே அடையத் தூண்டும் ஒரு உரையை மட்டுமே நான சிபாரிசு செய்ய முடியும். மேலும் , நான ஆரம்ப நிலை  சாதகர்களுக்காக மட்டுமே இப்போது எழுதுகிறேன் .  அப்படி தமிழில் உள்ள உரைகள் ஜெயதயால் கோயந்தகாவின் தத்துவ விவேச்சனிசித்பவானந்தரின் உரை ,ஸ்ரீ  ராம் ஸுகதாஸின் சாதக சஞ்சீவனி. ((((பிரபு பாதா உண்மை உருவில் என்று எழுதினாலும், அதில் திரிபுகள் ஏராளம். மத்துவ  கௌடீய பிரிவின் தத்துவங்கள் நிருபிப்பதற்காக பெரும் திரிபுகளை  பிரபு பாதா  கையாள்கிறார்.ஆகவே அது ஆரம்பத்திலேயே அடிபடுகிறது.))))

மேலே உள்ள மூன்றில் சுவாமி ஸ்ரீ  ராம் ஸுகதாஸின்  உரை மெய் சிலிர்க்கும் உரை தான். சந்தேகம் இல்லை. ஆனால் அது ஏறக்குறைய இரண்டாயிரம் பக்கங்கள் கொண்டது. இரண்டாம் அத்தியாயத்துக்கு மேல் ஏறக்குறைய எல்லா சுலோகங்களுக்கும் பொழிப்புரை, விளக்க உரை மற்றும் நயவுரை மூன்றும் கொண்டது. ஆரம்ப நிலை வாசகர்கள் மற்றும் சாதகர்களை இது மிரளச் செய்து விடும். ஆகவே நான அதை மேல் நிலை சாதகர்களுக்கு மட்டுமே சிபாரிசு செய்வேன். 

இப்போது நம்மிடம் இரண்டு உரைகள் மட்டுமே என் மேற்கண்ட தகுதிகள் பெற்றுள்ளன. 
1. சித்பவானந்தர் உரை 
2. தத்துவ விவேச்சனி 

இந்த இரண்டுமே நன்கு விற்பனை ஆனவை. பிரபலமாகவும் உள்ளவை. இரண்டிலும் தேவ நாகரி எழுத்திலும் , தமிழிலும்  மூல சுலோகம் கொடுக்கப் பட்டுள்ளது. பிறகு பதம் பிரித்து பதங்களின் அர்த்தங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இது இந்த இரண்டு உரைகளின் மாபெரும் சேவை ஆகும். பிறகு இரண்டிலும் பொழிப்புரை உள்ளது. 

சித்பவானந்தரின் உரை ராமகிருஷ்ண இயக்கங்களின் பரவலான , பெருந்தன்மையான ஆன்மீக உரைகளின் தழுவல். மேலும் அவர் கையாண்ட தமிழ் கூர்மை கொண்டது.சுருக்கம் கொண்டது. பக்தி சார்பு குறைவாகவும், வேதாந்த தத்துவ விசாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் உள்ளது. உரையின் முக்கியக் கூற்றுகளை உள்ளது உள்ளபடி கூறிவிட்டு சென்று விடுகிறது.

இங்கே ஒரு முக்கிய விஷயம் கவனிக்க வேண்டும்  கீதையில் எழுநூறு சுலோகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் எண்பதுக்கும் மேலே அர்ஜுனன் மற்றும் சஞ்சயன் கூறுபவை. மிஞ்சியதில் இருந்து மட்டுமே கீதையின் மொத்த உருவை அப்படியே சாதகரின் மனதில் ஏற்ற ஒரு உரை முயற்சிக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன என்றால் சித்பவானந்தரின் உரை போதுமானதாக இல்லை என்பதே. சித்பவானந்தர் பெரும்பாலான சுலோகங்களுக்கு ராமகிருஷ்ண உபதேசங்களை மேற்கோள் காட்டுகிறார். சில சமயம் அவை அற்புதமாகப் பொருந்தினாலும், பல சமயம் அப்படி இல்லை. கீதையின் வேத, புராண, உபநிடத தொடர்பான வாக்கியங்களுக்கு அங்கே முழுமையான விளக்கம் இல்லை.


 இன்னொன்று , மிக முக்கியமானது. நுண்ணியது.  கீதை ஒற்றை செய்தி என்பதே நம்முடைய பாரம்பரியம்.  இதை விட்டு கீதை பக்தி, தியான, ஞான , கர்ம பாதைகளைக் காட்டுவதால் அவை ஒன்றொன்றும் தனி என்றும், கிருஷ்ணர் ஒன்றுக்கு ஒன்று முரணான இப்பாதைகளிடையே ஒரு விதமான சமரசத்துக்கு முயற்சிக்கிறார் என கூறும் வாதங்களுக்கு சித்பவானந்தரிடம் விடையே இல்லை. 

உண்மையில் கீதையில் முரண்பாடு இல்லை என்பது தத்வ விவேச்சனியில் இயல்பாக   விளக்கப் பட்டுள்ளது.   ஆன்ம  நெறியில்  பக்தியும், ஆத்ம சம்யமமும், ஞானமும், கர்மமும் இணைந்தே வரும் என்பதை கீதை கோடிட்டுக் காட்டவே செய்கிறது.  

தத்துவ விவேச்சனியின் நடை, நம்முடைய புராண, வைதீக  நெறியை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்லும் பாரம்பரியமான் ஒன்று. இன்று புதிய தலைமுறையிடம் நம் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கும் ஒன்று. அதன்  மொழிபெயர்ப்பும் மிக இனிப்பானது . அதன் அமைப்பு கூட கேள்வி பதில் போன்ற அமைப்பில் உள்ளது . கீதா பிரஸ் நிறுவனத்தால் சேவை விலையில் வழங்கப் படுகிறது. 

தத்துவ விவேச்சனியின் தலையாய பகுதி அதன் முன்னுரை. ஆனால் அந்த முன்னுரை குறைந்தது மூன்று முறை கீதை படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும். 

கீதை வேதாந்த மதங்களின் மூல நூலாகி விட்டபடியால் அதை வேதாந்தம் என ஒற்றை அடைப்புக் குறிக்குள்  அடைக்க முயல்வதில் உள்ள தவறை தத்துவ விவேச்சனி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இன்றைய  வேதாந்த மதங்களின் தத்துவம் வேதாந்தமாக இருக்கலாம். ஆயினும் அவற்றின் நடைமுறை முற்றிலும் பக்தி சார்ந்தது.  சங்கரர்  , மத்துவர் , ராமானுஜர் ஆகியோரின் மதங்கள் நடைமுறையில் உபாசனை  சார்ந்தவை என்பது கண்கூடு.


அண்மைக் காலத்தில் சில விமரிசகர்கள் முதிர்ச்சியில்லாமல் கீதை முரண்பாடுகளைக் கொண்டது என்பது போன்ற கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எழுத்தாளர் திரு ஜெயமோஹனும் அதில் ஒருவர். அவர் தன குருமார்களில் ஒருவரான நடராஜ குருவின் உரையின் தாக்கத்தால் இதை எழுதி இருக்கிறார். நான் எதிர்பார்த்தது போலவே அவர் தத்துவ விவேச்சனியை காட்டமாக சாடி விட்டும் போயிருக்கிறார். 


நவீன உரைகளைப் பற்றி இன்னொரு விஷயம். அவர்கள் முற்போக்கு வாதிகளாக நினைத்துக் கொண்டு ஒரு விஷயத்தில் மழுப்பலாக இருப்பார்கள். அது இது தான். கிருஷ்ணர் பரம்பொருள் என்பதை அவர்கள் உரைகளில் நேரடியாக எழுதவே மாட்டார்கள். நடராஜ குருவும் தன உரையில் வியாசரின் " பகவான் உவாச்ச " என்ற சொற்றொடரை " கிருஷ்ணர் கூறுகிறார் " என்று திரித்துத் தான் எழுதுவார். இரண்டு பக்கமும் தப்பிக்க இது வழியாகி விடுமே !! பாரம்பரியம் சற்றும் அற்று வெற்று வேதாந்தம் பேசினால் வரவேற்பு கிடைக்கும் என நம்பியவர்கள் கீதை போன்ற முழு உபதேசத்தை படிக்கும் போது இப்படித் தான் சறுக்குவார்கள். 


முதலில் கீதை என்பது கிருஷ்ணரின் செய்தி என்பது இவர்களுக்கு சத்தமாக உரைக்கப் பட வேண்டும். கிருஷ்ணன் தன்னையே தன செய்தியின் உட் பொருளாகவும் தலைப் பொருளாகவும்  வைத்து கீதையைப் பாடினான் என்ற விஷயம்  இந்த நாட்டின் பாமரனுக்கும் தெரியும். இந்த நிலையில் இருந்தே கீதைப் படிப்பைத் துவங்க வேண்டும்.