Friday, January 23, 2009

தமிழ்ப் பாட்டி


அவ்வைத் தமிழ்

என் காலத்தில் (ஐயோ, ரொம்ப ஒன்றும் இல்லை , சுமார் முப்பத்தைந்து வருடம் முன்பு தான்), சிலேட்டும பலப்பமும் கையுமாய் பள்ளிக்கு போனவன் எல்லாம், அவ்வையை அறியாமல் இருக்க முடியாது. ஏன், இன்றும் அவ்வை இல்லாமல் தமிழ் ஆரம்பப் பாடம் இல்லை.

ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனையும் கொடுத்த கவித் தெய்வம் அவ்வை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கு என் வயதில் எல்லோர் மனதிலும் வேரூன்ற அந்தப் பாட்டியன்றோ காரணம் ? மணப் பிராயத்திலேயே இளமையைத் துறந்து, என்றும் முதுமை வேண்டி நின்ற கருணைத் தெய்வம் அவள். உலகில் அல்லலுறும் மானிடர் பேரில் அவ்வைக்கு அவ்வளவு பரிவு !

அவ்வையார் என்பவர் யார் , எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாளர்கள் பல விதமாய்ப் பேசுகிறார்கள். ஆனால் என் சுதந்திரம் பழத்தை மட்டுமே ருசிப்பது; வேரை நோண்டுவதல்ல. அவ்வையின் கனிகளாகிய பாடல்கள் மட்டுமே எனக்கு வேண்டும்.

சிறு வயதில் ஏனோ தானோ வென்று படித்தாலும் , முப்பது வயதுக்கு மேல் தான் அவ்வையின் அருமை எனக்குப் புரிந்தது. நல்வழியும், மூதுரையும் தமிழ்ப் பொக்கிஷங்கள் என்பது என் மண்டைக்கு அப்போதுதான் உறைத்தது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பழ மொழிகள் அவ்வையின் பாட்டுக்களிலிருந்தே கடன் வாங்கியவை. இந்தப் பாட்டைக் கவனியுங்கள்

சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்;-
நடையும்
நடைப்பழக்கம்; நட்பும்
தயையும்
கொடையும் பிறவிக்குணம்.

இந்தப் பாடலின் சொல்லும் , பொருளும் இடி போன்ற முழக்கத்தோடு இறங்கும். ஆனால் இதனுள்ளே குறைந்தது இரண்டு பழ மொழிகள் நாம் தேடிக் கண்டு பிடிக்கலாம். அவ்வை தமிழ் மொழியோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்டவள்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே
ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே
ஆகுமாம் குணம்.

இதிலும், கடைசி வரி அடிக்கடி சுட்டப்படும் ஒன்றாகும்.

நான் அவ்வையின் பாடல்களில் மிகவும் விரும்பும் ஒன்று இதோ

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
நட்டாலுநண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும்
வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)

(பால் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாததைப் போல, எதிரிகள் எவ்வளவு பழகினாலும், நண்பர்கள் அல்லர். சங்கைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் அது கருக்காமல் வெண்மையான சுண்ணத்தையே தருவது போல, நற்பிறப்பு வாய்த்த மக்கள் வறுமை வரினும் மேன்மையோடு இருப்பார்)

இதோ இன்னொன்று

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று
தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா
வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே
தான் தருதலால்.

(நிமிர்ந்து தளராது வளரும் தென்னை வேரிலே ஊற்றிய நீரைச் சுவையாக்கி தலையில் இளநீராகத் தருவது போல , தான் செய்த நன்றி பலமடங்காகத் திரும்பி வரும். ஆகவே அது என்று வரும் என்பது குறித்துப் பேசற்க.)

மேலே கூறியவை அனைத்தும் சமுதாய, மற்றும் அறவழிப் பாடல்கள். அவ்வைக்கு ஒப்புயர்வற்ற ஆன்மீகப் பக்கம் ஒன்று உண்டு. விநாயகனின் சிறந்த பக்தை அவ்வை என்பது நாம் அறிந்ததே. "வாக்கு உண்டாம், நல்ல மனமுண்டாம் ..." என்று தொடங்கும் பாடல் அவ்வையுடையது தான். ஆனால், என் அன்றாட ஆன்மீக வழிபாட்டிற்கு நானும் என் குடும்பமும் பாடும் ஒரு பாடல் அவ்வை வாய் வந்ததுதான். அது பாடல் என்று சொல்வதை விட, யோக நெறியின் முற்றிய விளக்கம் என்றே சொல்லலாம். அந்தப் பாட்டு " விநாயகர் அகவல்"

அந்தப் பாட்டு இதோ கீழே உள்ள இணைப்பில்.சொடுக்குங்கள். நம் தமிழகத்தின் சிகரப் பாடகர், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இறவாப் பாடல்.



விநாயகர் அகவல் முழுவதையும் படிக்க விரும்புபவர்கள் இதோ இந்த இணைப்பிலிருந்து தங்கள் கணினிக்கு இறக்கிக் கொள்ளலாம். கீழ் உள்ள வரியின் மேல் சொடுக்குங்கள்.

விநாயகர் அகவல் பாட்டு

முடிக்கவே மனமில்லை. இதோ ஒரு முத்தாய்ப்பு.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

( ஆறு கோடையில் வற்றிய நிலையிலும் தன் மணல் ஊற்றால் உலகுக்கு நீரூட்டும். அது போல் நல்ல குடிப்பிறந்தார் வறியவர் ஆனாலும் மனம் ஒப்பி இல்லை எனச் சொல்ல மாட்டார்.)

ஔவையார் உங்களையும் சிந்திக்கத் தூண்டினால் மகிழ்வேன்.





Monday, January 12, 2009

வர கவி, வீர கவி



என்
உயிர் தமிழ் மக்களே

வர கவி வீர கவி

காணி நிலம் கேட்ட மீசைக் கவி என்னைப் பாடாய் படுத்துகிறான். இத்தனை காலமா என்னைப் பற்றி எழுத என்று !

"அடேய் ! என்னிடம் கற்றுக்கொண்டு விட்டு என்னையே மறந்தாயா ? என் பராசக்தியின் பக்தனாகி இருந்து விட்டு என் எழுத்தை மறந்தாயா ? " என்றெல்லாம் என் கனவில் அந்த பைத்தியக்கார கவிஞன் உறுமினான்.

"ஐய! இது என்ன அபசாரம்! நீ சரஸ்வதியின் அவதாரமல்லவா? என் கண்ணனை நீ குழந்தையாக, பணியாளனாக, காதலனாக, காதலியாக, தாயாக, நண்பனாக கண்டவனல்லவா ? நீ கீதைக்கு உரை எழுதிய ஞானியன்றோ ? " நான் உன்னை
மறப்பதாவது ! ஆங்கிலம் என் தொழிலையும் எழுத்தையும் ஆட்டுகிறது . சற்றே அசதியால் இருந்து விட்டேன். என்னை மன்னி." என்று கூறி சினம் ஆற்றினேன்.

என் அன்பு வாசகர்கள் நான் யாரைப் பற்றி எழுதுகிறேன் என்று ஊகித்திருப்பர். ஆம் ! அவன் தான் தமிழ்த் தாய்க்கு செல்ல மகன்! பாரதி !! 38 வயதிலேயே உடற்கூட்டை விடுத்து சென்று விட்ட அவசரக்காரன் !

அந்தச் சிறு ஆயுளிலே அவன் செய்து காட்டியது எத்தனை ? எழுதிக் காட்டியது எத்தனை ?

சில வாரங்களுக்கு முன் என் சிறிய மகன் பள்ளியில் கற்றுக்கொண்ட பாடல் ஒன்றைப் பாடிக்காட்டினான். இதோ அந்தப் பாடல்

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூம்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றி பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !

நம்புவதே வழியென்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்
கும்பிட்ட நேரமும் சக்திஎன்றால் உனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

வெள்ளை மலர் மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல் சக்திவேல் !

இந்தப்பாட்டை எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிக் கேட்க வேண்டும். கானம் கேட்க கீழே சொடுக்குங்கள்.




என்னாசான் பாரதியின் வேகமும் பக்தியும் இதில் தழும்பும். அவன் நிறை குடம். தன்னை அடுத்தவர்கவளுடைய இதயப் பாத்திரத்திலே அவன் நிரப்பினானே தவிர , அவன் யாரையும் அறிவுப்பிட்சைக்காக அண்டியதில்லை.

அவனுடைய தீர்க்க தரிசனம் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருகிறது.

" ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்"
" வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்"
" சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம்"
" சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"

இந்தப் பட்டியல் பெரியது. பாரதியின் மனதைப் போல. இதில் சில நிறைவேற வேண்டும். இன்றைய தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பதர்களைப் பார்த்தால் பாரதி ரௌத்திரம் அடைந்து ஆயுதமே எடுத்து விடுவான்.

பார்ப்பனனாய்ப் பிறந்தும் கழுதைக் குட்டியை ஆசையாய் கட்டிக்கொண்ட ஆள் அவன். இன்றைய ஜாதி சார்ந்த கட்சிகளையும் அதில் அவர்கள் நடத்தும் இட ஒதுக்கீட்டு அரசியலையும் பார்த்தால் தன் கவிதை ஆகிய அக்கினிக் குஞ்சால் நாட்டையே எரித்து விடுவான்.

" பாருக்குள்ளே நல்ல நாடு, இந்த பாரத நாடு " என்று அவன் பாடிய நேரம் பொய்யாகுமோ ? வாழ்வாங்கு வாழ்ந்தவனல்லவா ? இன்று தெய்வமாகி நின்று நம்மை ஏளனமாகப் பார்ப்பானோ ? நினைக்கவே கூசுகிறது.

இன்று அவனிடம் கனவில் ஒன்று கேட்கப் போகிறேன். " ஐய ! நீ மீண்டும் பிறந்து வர வேண்டும். கவிதை மழை பொழிந்து தமிழ்த் தாய் மனது குளிர வேண்டும். " ஏற்பானா ?