Thursday, October 23, 2014

மகாபாரதக் கல்வி ஏன் பொலிவிழந்தது ?

மகாபாரதக் கல்வி ஏன் பொலிவிழந்தது ?

(ஜெயமோகனின் "பெரிதினும் பெரிது"  கட்டுரைக்கு பதில்)

நேற்றைய தினமலர் நாளிதழோடு தீபாவளி சிறப்பு மலர் ஒன்று சேர்த்துக் கொடுத்தார்கள். உள்ளே  இன்ப அதிர்ச்சி . ஜெயமோகனின் " பெரிதினும் பெரிது " என்ற கட்டுரை. கிடைத்த இடத்தில் உட்கார்ந்து வாசித்தேன். மகாபாரதத்தின் பெருமையை, மகிமையை அறிந்தவர்களில் இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகனுக்கு ஈடாக யாரும்  இல்லை என்றே கூறி விடலாம். ஜெயமோகனின் இணைய தளத்தில் இப்போது<இங்கே> வாசிக்கக் கிடைக்கிறது.

அவரும் தன இணைய தளத்தில் தமிழ் மகா பாரதம் எழுதி வருகிறார்- புது வடிவத்தில். தினமும் ஒரு அத்தியாயம் எழுதி வருகிறார். அதிலேயே மூழ்கி இருப்பதால் , அது சம்பந்தமாக பல விஷயங்களை அனாயாசமாக , இயல்பாக இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

வியாசர் மகாபாரதத்திப் பற்றிக் கூறுகையில் , "இங்கில்லாதது எங்கும் இல்லை " என்று கூறினாராம். இது எனக்கு முன்னமே தெரியும். ஆனால் மலையாள சினிமா எழுத்தாளர்  லோஹித தாஸ் கூறிய செய்தி எனக்கு தேன் போன்றது . "வ்யாஸோச்சிஷ்டம்  ஜகத்ஸர்வம் " ( வியாசனின் எச்சிலே ஜகம் முழுவதிலும் ) என்ற சொற்றொடரை அவர் நினைவு கூர்ந்து ஜெயமோகனுக்கு சொல்ல அவரும் அதை கொடுத்து விட்டார். எல்லாரும் படிக்க வேண்டி பரிந்துரைக்கிறேன்.

ஜெயமோகன் சமீப காலமாக மகாபாரதம் மற்றும் அது சார்ந்த படிப்பு தமிழ் நாட்டில் வீழ்ந்ததற்கு காரணம் தேடி , தன முடிவாக சிலவற்றை வைக்கிறார். இந்து மதம் மூன்று கட்டுமானங்கள் மேல் நிற்கிறது.அவை 1 . தத்துவம், 2. பக்தி மன  நிலை, மற்றும் 3.சடங்கு.  நாத்திகப் பிரச்சாரம் காரணமாக தமிழ் நாட்டில் உண்மை பக்தி குறைந்ததாகவும் , அதன் காரணமாக சடங்குகள் மேலோங்கிய ஒரு மதம் மட்டுமே இங்கு நீடிக்கிறது என்று கூறுகிறார்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது உண்மையாகவே தெரியும். நான் மாறுபடுகிறேன். அதன் விளைவே இந்த கட்டுரை. முதலில் ஜெயமோகன் யார் என்று சற்று பார்த்து விட்டு முன்னகர்வது ஒரு சரியான ஆரம்பமாக இருக்கும். அவர் குழப்பமான காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்.கிறித்துவர்கள் அதிகம் சூழ்ந்த நிலையில் வாழ்ந்தவர்.  திராவிடம் வேறு உச்சக் கட்டத்தில் அக்காலத்தில் பிரச்சாரம் செய்து இருக்கிறது. 

நம்மில் யாரைக் கேட்டாலும் தங்கள் பழக்க வழக்கங்கள் பெற்றோரிடம், அதுவும் குறிப்பாகத் தாயிடம் இருந்தே வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவருக்கு மதத்தைப் புகட்ட வேண்டிய தாய் ஒரு சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண்மணி. பைபிளும், எழுத்தச்சனும்  சேர்ந்து படித்தவர். ஜெயமோகன் தன்னுடைய இருபதாம் ஆண்டளவில் ஆர். எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக இருந்து பின்பு விலகி , அரசு வேலையில் சேர்ந்த பின் கம்யூனிச அமைப்பில் சேர்ந்து அதன் பிரச்சாரத்திலும் தீவிரமாக இருந்து பின்பு எழுத்தாளர் ஆன பின், அதையும் நிராகரித்தவர். பின்பு நாராயண குருகுலத்தில் பற்றுக் கொண்டு அவர்களது வேதாந்தம் சார்ந்த மதத்தில் , நம்பிக்கையில் எழுதி வருகிறார்.

அவரது எழுத்தில் மேற்கூறிய அனைத்து நீரோட்டங்களின் தாக்கம் இருக்கும். தாயிடம் இருந்து மதம் கற்காததால் இயல்பாக அவருக்கு சடங்குகள் மீது பிடிப்பு இல்லை.

இந்தப் பின்னணியில் வைத்து  அவரது மேற்கூறிய வாசகத்தைப் படிக்கையில் இந்த முழு கட்டுரையின் குறைபாடு விளங்கி விடும். உண்மையில் இந்து மதத்தின் கட்டுமானம் 1. தத்துவம் 2 புராணம் மற்றும் 3. சடங்கு இந்த மூன்றின் மேலும் தான் உள்ளது.பக்திமன நிலை என்று இரண்டாவது காரணம் சுருக்கப் பட்டதற்கு அவரது இளமைச் சூழலே காரணம் என நான் நினைக்கிறேன்.

இந்த மூன்றும் தனித் தனியாக பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இனக்குழுவும் இங்கே தங்களுக்கென புராணம் வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கென தனி சடங்கு முறைகள் (ஆகமங்கள்).  தனித் தத்துவ கோட்பாடுகள்.  தத்துவமும் , சடங்கும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கிறது இங்கே.  புராணங்களிலும் மக்களின் வாழ்க்கை எப்படி சடங்கையும் தத்துவத்தையும் சமம் செய்து முன்னேறியது என்று வகை வகையாய் கதைகள் கிடைக்கின்றன. இந்த வாழ்க்கை முறைக்கு உபாசனை என்பது பெயர்.உபாசகனின் வாழ்க்கையில் சடங்கும், தத்துவமும் பிரிக்க முடியாதவை.

உதாரணத்துக்கு ஒரு சைவன் திருநீற்றிலும் மனிதனின் நிலையாமையை உணர்கிறான். ருத்திராக்ஷத்தில் இயல்பான துளையைப் பார்த்து அனைத்து கொட்டைகளின் வழியே ஊடுருவும் இழை போன்று பரமாத்மா மகேஸ்வரன் அனைத்து ஜீவன்களிலும் ஊடுருவி நிற்பதாக காண்கின்றான். சைவனின் , உணவு, படிப்பு அனைத்துமே அவன் வாழ்வின் தத்துவம், மற்றும் நம்பிக்கையின் கலவையே. ஒவ்வொரு குழுவிற்கும் இதே போன்று இங்கே அடையாளம் காட்டி விடலாம்.

மகாபாரதம் இங்கே சற்று உயர்ந்த பீடத்தில் இருக்கிறது. அது சைவமும், வைணவமும் தோன்றியதற்கு முன்பே தோன்றியதால் அதற்கு இந்த இரண்டு சம்பிரதாயங்களும் மதிப்பளித்தன.  ராமாயணமும் அப்படியே. 

மகாபாரதமும்  தமிழ் மண்ணும் ஒன்றாகப் பிணைந்தவை தான்.சங்க இலக்கியம் முதல் சென்ற நூற்றாண்டு வரை  பாரதம் நம் மக்களின் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்திருந்தது. மகேந்திர வர்ம பல்லவன் கிராமம் தோரும் பாரத மண்டபங்களை எழுப்ப ஆணையிட்டு மக்களுக்கு தினமும் பிரசங்கிக்க அந்தணர்களுக்கு நிவந்தம் கொடுத்தது வரலாறு. அவை இன்னும் உள்ளன. 

இப்படி இருக்க, ஏன் இதிகாசப் படிப்பு குறைந்தது ? 
1. நேருவியப் பார்வை. இது அகில இந்தியாவையும் பாதித்தது. தமிழகத்தை மட்டுமல்ல. நேருவிய லட்சியங்களைக் கைக்கொண்ட மூன்று தலைமுறைகள் தங்கள் இலக்கை மாற்றி வைத்தன. பொருளியல் சுதந்திரம் என்ற தாரகம் நோக்கி பாரதம் நகர்ந்தது. இதிலும் பிராம்மணர்கள் முன்னணி வகித்து விட்டனர்.ஜெயமோகன் கூறும் அனைத்து விஷயங்களும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

2. பிராம்மணர்கள் அருகிய சூழல்.: குமாஸ்தாக்களில் இருந்து அறிவியல் வல்லுநர் வரை பிராம்மணர்கள் சென்றது, பாரதத்தின் முதல் சோதனை. அது வரை கிராமம் தோரும் இதிஹாச, புராணப் பிரசங்கத்துக்கு அமைப்புக்கள் இருந்தன. இது தவிர எப்போதும் சஞ்சாரத்தில் இருக்கும், பண்டிதர்கள் , துறவியர் என எல்லாரும் கிராமங்களில் தங்கி தர்ம பிரச்சாரம் செய்ததால் இந்தப் பாரம்பரியம் நீடித்து வந்தது. பிராம்மணர்களின் வெளியேற்றத்தால் அது குலைந்தது. ஓரிருவர் தவிர , பெரும்பாலும் எல்லாரும் இதிகாசங்களை வாய்மொழியாகவே கற்றவர்கள். 

இந்த நிலையில் தான் மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளி வரத்தொடங்கின. கும்ப கோணப் பதிப்பு 1930 முதல் தொடங்கியது. 1952 ஆம் ஆண்டு முதல் அதுவும் நின்றது. பின்பு ராஜாஜியின் குறுகிய பதிப்பு, சோ வின் 'மகாபாரதம் பேசுகிறது " போன்ற முயற்சிகள் மட்டுமே இங்கே நிகழ்ந்தன.

3. மதச் சார்பற்ற படிப்பு:மூன்று  தலைமுறையாக இந்த துரதிருஷ்டம் நம்மைப் பிடித்தாட்டுகிறது.

எந்தக் கால கட்டத்திலும் இந்த இரண்டு இதிகாசங்கள் மட்டுமே நம் வாழ்க்கை முறையின் போக்கை நிர்ணயித்தன. இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் இவைகள் பெருமையை இழப்பதைக் காணுகையில்   இந்த பாரதம் தழுவிய காரணங்களையே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்ட நாத்திக இயக்கங்களினால் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் இல்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நம் புராண , இதிகாசப் படிப்பு முப்பது நாற்பதாண்டு காலமாக குறைந்தே வருகிறது.

அப்படியானால், தமிழகத்தில் நாத்திக இயக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் தான் என்ன ? முதலில் நாத்திக இயக்கம் இங்கே ஜாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கவோ, பகுத்தறிவை புகுத்தவோ வரவில்லை. அவர்களிடம் ஆன்மிகம் குறித்த தெளிவு இல்லை. முதிர்ச்சியும் இல்லை. அவர்களது நாத்திகம்  சமுதாய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஏற்படுத்தப்பட்டது. ஈ வெ ரா சமுதாய அதிகாரத்தை கைப்பற்றிக் கொடுத்தார். அண்ணாதுரை மற்றும் அவரின் சீடர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நாத்திக இயக்கத்தை உபயோகப் படுத்தினர். 

அந்த இயக்கத்தின் தொண்டர்கள் என்பவர்கள் பெரும்பாலும் பாரம்பரியமாக ஆன்மீக பாரம்பரியம் அற்றவர்கள். நாயக்கர்கள், வெறும் இரண்டு மூன்று நூற்றாண்டு வைணவப் பாரம்பரியம் கொண்டவர்கள். மேலும், தமிழ் வைணவ முறைகள் அவர்களுக்கு முற்றிலும் போதிக்கப் பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே. செட்டியார்களில் நகரத்தார் தங்கள் வெள்ளைக்கார பாசத்தால் இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். நாத்திக இயக்கம் பெரும்பாலும் வெள்ளாள ஜாதிகளைக் குறிவைத்தது . வெள்ளாளர்களில்அடுக்கு ஜாதிகள் பல உண்டு. மேல் தட்டு மக்கள் ராஜாக்கள்/ ஜமீன்தார்கள்/பண்ணையார்கள். இவர்கள் 'காங்கிரஸ்காரர்கள்'. நடுத்தட்டு சிறு நில உடைமையாளர்கள் மற்றும் மேற்பார்வை பணி செய்பவர்கள். இந்த இரண்டு தட்டு பிரிவினருக்கும் தத்துவம், புராண சடங்கு சார்ந்த ஆன்மீகப் பின்புலம் அதிகம். 

கடைத் தட்டு வெள்ளாளர்கள் கூலித் தொழிலாளிகள். இந்தக் கடைத்தட்டுக்கு, ஆன்மிகம் என்ற பாரம் பரியம் இருந்தது இல்லை. குல தெய்வம், கிடா வெட்டு போன்ற சடங்குகளுக்கு மேல் இவர்கள் அறியாதவர்கள். இன்றும் கழகத் தலைவர்கள் பலரும் இந்தப் பிரிவில் இருந்தே வந்தவர்கள். இவர்கள் தான் நம் கல்விக்கொள்கைகலை வகுப்பவர்கள்.

வெள்ளாளர்களில் பல தட்டுக்களையும் இணைக்க உத்திகள் நடக்க, இக்கால கட்டத்தில் தான் மேல் தட்டு வெள்ளாளர்களுடைய   பாரம்பரியம் பதவிக்காக தியாகம் செய்யப் பட்டது. அவர்களும் காங்கிரசை உதறி , இறங்கி வந்து திராவிட அரசியலில் இணைந்தார்கள்.

ஆக , நாத்திகம் நம் பாரம்பரியத்தை மறைக்கவில்லை. சுயநலம் மட்டுமே.

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவருக்கும், தான் வசித்த கிராமம், உள்ளூர் கோவில், சாதி, குலம், மற்றும் தொழில்  சார்ந்த மதப் பாரம்பரியம் உண்டு. எங்க அய்யரூ, எங்க பூசாரி, எங்க பண்டாரம், எங்க ஜோசியர், என்று அங்கே உண்டான பந்தம் உண்டு. கிராமங்களில் நிவந்தங்களோடு வாழ்ந்த பௌராணிகர்கள் , நேருவின் திட்டத்தால் இடம் பெயர ஆரம்பிக்கவே, கிராமங்களின் ஆன்மீகக் கல்வி பொலிவிழந்தது. இன்னும் கட்டுக் குலையாத கிராமங்களில் பிராம்மண துவேஷம் என்பதே என்னவென்று தெரியாது. அந்தக் கிராமங்களில் பாரம்பரியம் செழித்துத் தான் இருக்கிறது.

மகாபாரதம் இன்னும் குடும்பங்களின் நினைவில், அங்கங்கே கிடைக்கும் சொற்பொழிவுகளில், பொக்கிஷங்களாய் பாதுகாக்கப் படும் பழைய பிரதிகளில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Thursday, February 20, 2014

கீதையை எப்படிப் படிப்பது ?

கீதையை எப்படிப் படிப்பது ?

ஆசாரியர்கள் அருகி விட்ட இன்றைய சூழ்நிலையில் ஒருவர் கீதையை எப்படிக் கற்க முடியும் ? இதற்கு விதிமுறைகள் உண்டா ? யார் யார் கீதையைப் படிக்க வேண்டும் என்று வரை முறை உண்டா ? கீதை நூலை வீட்டில் வைக்கலாமா ?

இந்தக் கேள்விகள் இயல்பாக இன்றைய இளைய தலைமுறையினர்  மனதில் எழுகின்றன. காரணம், இரண்டு தலைமுறைகள் ஆங்கிலக் கல்வி கற்கும் சமுதாயமாக நாம் மாறி விட்டதும், மதச் சார்பின்மை என்ற பெயரில் "எல்லா மதமும் உண்மை, ஒரே குறிக்கோளை நோக்கிச் செல்பவை " என்னும் அப்பட்டமான பொய்களைப் படிப்பதாலும், சமஸ்கிருதம் என்னும் நமது பண்பாட்டு மொழியில் இருந்து விலகியதாலும் தான்.

இதையும் மீறி எப்படி கீதை கற்பது ?  இன்றைய இந்து சமூகத்தின் அடிப்படையே வேதாந்தம் தான். தங்கள் கொள்கைகளை நிலை நாட்ட சங்கரர் முதலிய  வேதாந்த ஆச்சாரியர்களின் மூன்று தேர்வு நூல்களில் கீதையும் ஒன்று..  காந்தி ஒவ்வொரு இந்துவும் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நூல் கீதை என்கின்றார் . முதலில் ஒரு சில கேள்விகளுக்கு விடை கூறிய பின் எப்படிப் படிப்பது என்று பார்த்து விடலாம்.

கீதையை அனைத்து சாதியினரும் படிக்கலாமா ?

கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. இதிகாசங்கள் நான்கு வருணங்களுக்கும் பொதுவானவை. ஆகவே பகவத் கீதையை எல்லோரும் படிக்கலாம்.

எப்படி ஆரம்பிப்பது ?

குழந்தைக் கண்ணனோ,  பசுவுடன் நின்ற கோலத்தில் உள்ள கண்ணன் படமோ இருத்தல் உத்தமம். அந்தப் படத்துக்கு ஒரு நல்ல நாளில் அலங்காரம் செய்து, ஜகத் குருவான கண்ணனை அந்தப் படத்தில் ஆவாஹனம் செய்து , நைவேத்தியம் படைத்து, தீப தூப மரியாதைகளுடன் வணங்க வேண்டும். கீதை உரை எடுத்து  ஒரு பலகையில் செய்யப் பட்ட மனையில் அல்லது பீடத்தில் வைத்து அதனை தூப தீபம், நைவேத்தியம் செய்து வணங்கி, பின்பு கண்ணனிடம் பாராயணத்தில் நம்முடன் கூடவே இருக்கும் படி வேண்டி சிரத்தையுடன் படிக்க ஆரம்பிக்க வேண்டும். முதல் ஒரு வாரம் , கீதையின் தியான சுலோகங்களை படிக்க வேண்டும். அவை நன்கு மனப்பாடம் ஆனா பின், முதல் அத்தியாயம் ஆரம்பிக்கலாம். (குழலூதும் கண்ணன் படம் இப்போது வேண்டாம்.)

கீதையைப் படிக்க விதிமுறை உண்டா ?

பொதுவாக நம்முடைய  புனித நூல்களை பூசை அறையில் வைத்துப் படிப்பது உத்தமம். அதுவும் குளித்து அன்றாட பூசைகளை முடித்து (அல்லது  பிராம்மணர்களாய் இருப்பின் சந்தி  முடித்து)  காலையோ அல்லது மாலையோ படித்தல் சிறந்தது. பணி   ஓய்வு  பெற்றவர்கள் நாள் முழுதும் பாராயணம் செய்யலாம். நேரம் இல்லாதவர்கள் உறங்கும் முன் சுத்தமாக இருந்து ஒரு சுலோகமோ  அல்லது இரண்டு சுலோகமோ மனப்பாடம் செய்து உரை படித்து உறங்கச் செல்லலாம்.

கீதையைப் படிக்க வேண்டுமா ? பாராயணம் செய்ய வேண்டுமா ?

கீதையை வெறுமனே படிக்க மூன்று மணி நேரம் போதும்.ஆனால் கீதையை அறிய பல ஜன்மங்கள் வேண்டும் என்று சுவாமி ராம்சுகதாஸ் குறிப்பிடுவார். நானும் இரண்டாவது வகையை மட்டும் குறிப்பிடுகிறேன். இது ஒரு வகை தொடர் பயிலுதல் ஆகும். இதில் ஒவ்வொரு சுலோகமும்  உரக்க  மனப்பாடம் செய்தல் வேண்டும். இதன் பின்னர் பத உரையைப் படித்தல் வேண்டும். பின்னர் சுலோகத்தின் பொழிப்புரையை மொத்தமாக மனத்தில் பதிக்க வேண்டும். இதற்குப் பின்னர் சுலோகத்தின் விரிவுரையை மனதில் இருத்த வேண்டும். ஓரிரு நிமிடம் அன்று கற்ற சுலோகத்தை ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்வில் அதை எங்கு கடைப் பிடிக்கலாம் என்பது பற்றி சற்று தியானித்த பின்னர் எழலாம். இதை பாராயணம் என்று ஒருவாறு உரைக்கலாம். இம்முறையில் ஒரு சுலோகம் வீதம் தினம் படித்தால் தினத்துக்கு மொத்தமாக பதினைந்து முதல் இருபது நிமிடம் ஆகலாம். முழு நூல் எழுநூறு சுலோகங்களால் ஆனது. ஏறக்குறைய இரண்டு வருடம் பிடிக்கும்.

பாராயணம் செய்ய எந்த கீதை உரை சிறந்தது ?

எனக்குத் தெரிந்த வரை நம்முடைய சனாதன பாரம்பரியம் , நம்முடைய பண்பாட்டின் மூல வேரோடு பரிச்சயம் போன்ற அடிப்படை விஷயங்களோடு , சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மூல சுலோகங்கள் , பத அர்த்தங்கள், விரிவுரை ஆகிய அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவது கீதா பிரஸ்ஸின் " தத்வ விவேசனி " . திரு ஜெயதயால் கோயந்தகா அவர்களுடைய ஹிந்தி உரையை திரு சுவாமிநாத ஆத்ரேயன் தமிழில் திறம்பட எழுதியுள்ளார். இதன் விலையும் நூறு ரூபாய் தான். சித்பவானந்தரின் உரை இதற்குப் பின்னர் தான்.சுவாமி ராம் சுகதாஸின் உரை அற்புதமானது . ஆனால்நீளமானது   . ஆகவே பாராயணத்துக்கு உதவாது.

கீதையைப் படிக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ?

ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மேல் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். கீதை கற்கும் பொழுதே சமஸ்கிருதமும் ம் வந்து விடும். இந்தி ஆசிரியர் ஒருவரை அணுகி இந்தி எழுத்தைக் கற்று எளிய சொற்களை படிக்க தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம். இன்று சமஸ்கிருதமும் இந்தியும் ஒரே எழுத்தான தேவநாகரியில் தான் எழுதப் படுகின்றன. சமஸ்கிருதத்தின் அடிப்படை அமைப்பு, அடிப்படை சொற்கள் ஒரு நூறு , போன்றவை அறிந்து வைத்துக் கொள்ளுதல்  ஒரு அற்புதமான தொடக்கத்திற்கு அடித்தளம். இன்றைய இணையம் இதற்கு வெகுவாக உதவும்.




ஏன் கீதை சுலோகங்களை மனப்பாடம் செய்த பின்னரே அர்த்தத்தை ஆராய வேண்டும் ? பாராயணம் செய்யும் முறை என்ன ?

சம்ஸ்கிருத மொழி ஆழம் மிக்கது. அது போலவே விரிவும் மிக்கது. ஒவ்வொரு சொல்லும் அந்தந்த சுலோகத்துக்கு உள்ளேயும் மற்ற இடங்களிலும் வேறு பொருளைத் தரக்கூடும். ஒரு சிறந்த உதாரணம் "கர்மம் " என்ற வார்த்தை. இதற்கு பல பொருள்கள்   கீதையில் உரை ஆசிரியர்களால் கொடுக்கப் படுகின்றன. இது போன்றே யோகம், தர்மம் போன்ற சொற்கள்.

மனப்பாடம் என்பது பாராயண விதி.இதன் முக்கியத்துவம் சொல்லி மாளாது. சுவாமி ராம் சுகதாஸ் கீதையை முதலில் சுலோக வாரியாக, பின்பு அத்தியாயம் வாரியாக, பின்பு முழு மனப் பாடம் செய்து, பின்பு தலை கீழ் மனப் பாடமும் செய்ய வலியுறுத்துகிறார். என்னுடைய வாழ்க்கையைச் செறிவுள்ளதாக்கியவை இந்த பாராயண முயற்சிகளே. இதற்கு எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவும் நமக்கு லட்சம் மடங்கு அனுகூலத்துடன் திரும்பி வரும். ஆகவே எந்த சங்கடமும் பாராமல் தொடங்கவும். முதலில் சற்று சோர்வு வரலாம். தளரக் கூடாது. முந்தைய தினம் படித்தது இன்று மறக்கலாம். சோர்வு வேண்டாம். காலையில் படித்த சுலோகத்தை ஒரு சின்ன துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு நாள் முழுதும் பத்து முறையாவது திரும்பக் கூறுதல் வெகுவாக உதவும்.

கீதா பிரஸ்ஸில் கையடக்க கீதை சுலோகங்கள் மட்டும் அடங்கிய பிரதி சமஸ்கிருதத்திலோ ஆல்லது தமிழிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. வாங்கி எப்போதும் கைவசம் வைத்திருக்கவும். திடீர் திடீர் அன்று நமக்கு சுலோகங்கள் தேவைப் படும். அந்தத் தருணங்களில் நாம் படிக்கும் சுலோகங்களை நாம் என்றென்றும் மறக்க மாட்டோம்.

பகவத் கீதையின் முழு ஒலி வடிவம் நிபுணர்களால் பாடப்பட்டு இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை தரவிறக்கம் செய்து நம் கைபேசியில் பதிந்து கொண்டால் சதா சர்வ காலமும் விரும்பிய நேரம் எல்லாம் கேட்கலாம். ஆரம்ப காலங்களில் இத்தகைய தருணங்கள் அனைத்தும் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுபவை.

நீங்கள் இரண்டு சுற்று முடிக்கும் போது (அதாவது , 4 ஆண்டுகளுக்குப் பின் ) ஒருவாறு உங்களுக்கு ஒரு ஐம்பது முதல் நூறு சுலோகங்கள் நிரந்தர மனப்பாடம் ஆகியிருக்கும். இது குறைந்தாலும் ,  பாதகமில்லை. மிகுந்தால் மகிழ்ச்சியே .

மூன்றாவது சுற்றில் இருந்து   , ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு சுலோகங்கள் பாராயணம் செய்யலாம். நான்காவது சுற்றில் பத்து செய்யலாம். ஐந்தாவது சுற்றில் முழு அத்தியாயமாக செய்யலாம். இந்த சமயங்களில் உங்களுக்கு அந்த சுலோகங்கள் நன்கு பரிச்சயம் ஆகியிருப்பதால் அந்த வேகம் உங்களுக்கு உடன்பாடாகவே தோன்றும். அர்த்தம் மனதில் ஒட , சுலோகம் வாயில் உச்சரிக்கப் பட இப்படியாக நீங்கள் அவற்றில் நிபுணத்துவம் பெற ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில், குறிப்பிட்ட சுலோகங்களில் மனம் லயித்து நின்று விடும். கண்களில் நீர் வரும். உணர்ச்சிப் பெருக்கால் தன வசம்  கூட இழப்போம். இவை எல்லாம் நாம் சரியான பாதையில் போவதை உறுதிப் படுத்தும்.

தினமும் ஒரு அத்தியாயம் பாராயணம் பண்ணும்  போது , பதினெட்டு நாட்களில் முழு பாராயணம் முடிக்கலாம். பத்து வருடம் முடிக்கையில் நீங்கள் நூற்றுக்கு மேல் சுற்று பாராயணம் முடித்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் சுலோகத்தோடு அர்த்தமும் உடனே சிந்திக்கப் படுவதால், அந்தத் தருணங்கள் விலை மதிப்பு மிக்கவை. உங்கள் வாழ்க்கையை  ஆன்மீக உச்சிக்குக் கொண்டு சேர்ப்பவை.

சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், தகுந்த பெரியார்களோடு கலந்து தெளிவு பெற முயல வேண்டும். இணையத்தில் ஏராளமான கீதை உரைகள் விரவிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு அத்தியாய பாராயணம் முடிந்த பின்னும் விசேஷ பூஜைகள் செய்து மகிழுங்கள். முழு சுற்று முடிந்ததும், உற்றார் உறவினர், நண்பர்களை அழைத்து ஒரு விஸ்தாரமான பூஜை ஏற்பாடு செய்யலாம். அன்று சில பிரதிகள் வாங்கி தகுதி உள்ளோருக்கு அப்போது தானம் செய்ய வேண்டும். அவர்களுக்கும் பாராயணம் செய்யும் முறை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கீதையைப் படிப்பதை "ஞான யக்ஞம் " என்று கிருஷ்ணர் சிலாகிக்கிறார். கீதையைப் பிரச்சாரம் செய்பவர்களை தனக்கு மிகவும் உகந்தவர்கள் என்று புகழ்கிறார். கீதையின் ரகசியங்கள் நமக்குத் தெரியத் தெரிய இந்த ஞான வேள்வி மேன் மேலும் சிறப்படையும். கண்ணன் உங்களுடன் இருந்து துணை புரிவானாக.






Monday, February 17, 2014

கீதை இடைச் செருகலா ?

கீதை இடைச் செருகலா ?
இந்தக் கேள்வி பலராலும் குறிப்பாக திராவிட இயக்கத்தினராலும், கம்யூனிஸ்டுகளாலும் முன் வைக்கப் படுவது. இதற்கு சரியான பதில் முன்வைக்கப் படாததால் அதுவும் ஒரு தரப்பாகப் பேசப்படும் அந்தஸ்து பெற்று விட்டது.இவர்களின் பொதுவான வாதம் கீதை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் குப்தர் ஆட்சியில் எழுதப் பட்டது என்பதே. இந்த வாதம் சற்றும் அடிப்படை இல்லாதது என்பது பாரதமும் , கீதையும் சற்றே படித்தவர்களுக்குப் புரிந்து விடும்.

ஆனாலும் இந்த விஷயம் நம்முடைய "பிற்போக்கு" சிந்தனையாளர்களான இடது சாரிகளும், திராவிட வாதிகளும் திரும்ப திரும்ப பேசியதன் விளைவு , இந்த விஷயம் பாமர அளவிலான விவாதங்களிலும் இடம் பெற்று விட்டது. 

என் நண்பர்களுக்காக ஒரு தேடல் பட்டியல் இட்டு இந்த விஷயத்தை எழுதுகிறேன். இதை முன்பே தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும் அனுப்பியிருந்தேன். அதில் சற்று மெருகூட்டி இதோ கீழே எழுதுகிறேன்.

எனக்கு சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட வியப்பு அளித்தது ஓஷோ வின் கீதை தரிசனம். இதில் ஓஷோ ஒரு விஷயத்தை அலசுகிறார். கொதிக்கும் கொலைக் களத்தில் எழுநூறு பாடல்கள் சொல்லப்பட்டிருக்குமா ? படைகள்தான் பொறுக்குமா ? என்பது தான் அந்த விஷயம்.
ஓஷோவின் அலசல் இதோ (என்றோ படித்தது. சற்று சொந்த சரக்கும் இருக்கலாம் )
கீதையை சொன்னவனும் கேட்டவனும் சாமானியர்கள் அல்ல. அர்ஜுனனே சிறந்த தவ யோகி . இதற்கு பாரதத்தில் சான்றுகள் உண்டு. இப்படியிருக்க, இதை நேரடியாக வாய்மொழி உபதேசமாகக் கொள்ளுதலே இந்த “கீதை உண்மையாகவே குருக்ஷேத்திரத்தில் சொல்லப்பட்டதா ? ” என்ற குழப்பத்துக்குக் காரணம். ஏன் இது ஒரு மானசீக உபதேசமாக இருக்கக் கூடாது ? மனோ வேகம் என்பது அளவிட முடியாதது. ஒரு முழு வாழ்க்கையையே ஒருவன் ஒரு கனவாகக் கண்டு முடித்து விடுவான். ஆனால் ஒரு கனவின் அதிக பட்ச நேரம் பதினேழு நொடிகள் தான்.
இது ஒரு மானசீக உபதேசமே என்பது ஓஷோவின் முடிவு. போர்க்களத்தில்தான் கீதை சொல்லப்பட்டது என்பதில் ஓஷோ காட்டும் உறுதி என் போன்ற கிருஷ்ண பக்தர்களையே அதிர வைக்கிறது. எனக்குக் கூட சமயத்தில் பாரதம் உண்மையா என்றெல்லாம் சந்தேகம் வந்து விடும். ஓஷோ தன்னுடைய ” krishna- The man and his philosophy ” என்ற மகத்தான நூலில் கிருஷ்ணன் பரமாத்மாவே தான் என்று ஒரு சின்ன சந்தேகம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். 

சஞ்சயன் கீதையைக் கேட்டது மிக சாதாரணமான சாத்தியம் என்றும் சொல்லி விட்டார். டெலிபதி இன்றைய மனோ விஞ்ஞானத்தில் மிக சாத்தியமாக ஒன்றாகவே பார்க்கப் படுகிறது. அஷ்டமா சித்திகளை சர்வ சாதாரணமாகக் கையாண்டு வந்த மகாபாரத காலத்து அறிஞர்களான சஞ்சயன் போன்றோருக்கு வியாசர் இந்த வித்தையை அளித்தது வியப்பே இல்லை.

கீதையைப் பற்றி பாரதத்தில் உட்குறி ப்புகள் உண்டு. இவையே இந்த இடைச் செருகல் வாத்தி முறியடிக்கும். அதில் ஒன்று 

பீஷ்ம பர்வம் 43 , 45

ஷட்சதானி சவிம்சாணி ச்லோகானாம் ப்ராஹ் கேசவ:
அர்ஜுன சப்த பஞ்சாசத் சப்த சஷ்டிம் து சஞ்சய :
திருதராஷ்டிரா : ச்லோகமேகம் கீதாயாம் மனமுச்யதே ||

இந்த  சுலோகம் கீதைப் பகுதியில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கையை விளக்குகிறது. இதன் பொருள் இது தான். 
கிருஷ்ணர் கூறியது  620 ஸ்லோகம்
அர்ஜுனன் 57 ஸ்லோகம் ,
சஞ்சய 67 ஸ்லோகம்
திருதராஷ்டிரா 1. ஸ்லோகம்
மொத்தம் 745 ஸ்லோகம்
(இதில் நாற்பத்தி ஐந்து இப்போது இல்லை )

இது பீஷ்ம பர்வத்தில் வருகிறது. இன்னொரு விஷயம் கீதை சஞ்சயனால் நேரடியாகப் பார்க்கப் பட்டது. ஆனால்  இறந்த காலத்திலேயே சஞ்சயனால் சொல்லப்படுகிறது. காரணம்  பத்து நாள் வரை சஞ்சயன் குருக்ஷேத்திரப் போர் முனையில் இருந்தார்). பீஷ்மர் இறந்த பிறகே அவர் மன்னன் திருதராஷ்டிரனிடம் வருகிறார். இந்தச் சிறிய தகவல்கள் கூட முரண்பாடு இல்லாமல் வியாசரால் சொல்லப் படுகின்றன. 

மகாபாரதத்தில் இன்னொரு இடத்தில் கிருஷ்ணரே " கீதையை கூறுமிடத்து நான யோக நிலையில் இருந்தேன். என்னாலேயே அதை மீண்டுமுரைக்க இயலாது " என்கிறார்.  

விவேகானந்தர் , சங்கரர் உரைக்கு முன்னர்  பாதராயணர்  எழுதிய உரை ஒன்று இருந்ததாகவும், இராமானுஜர் அதைப் பற்றி எழுதி உள்ளதாகவும் , அராமானுஜர்  காலத்திலேயே அந்த ஓலைக் கட்டு செல்லரித்து விட்டிருந்ததாகவும் எழுதுகிறார். பாதராயணர் காலம் நிச்சயம் பொது சகாப்தத்துக்கு ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டு காலம் முந்தையது. ( மேற்கத்திய ஆசிரியர்களின் கூற்றுப் படியே )
இன்னொரு விஷயம். திருப்பாவையில் கோதை கீதையைப் பற்றி உரைக்கிறாள். அவள் காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர். ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் எழுந்த ஒன்று உடனே தென்னகம் வந்து சேர முடியுமா ?

குப்தர் காலத்துக்கு முன்னமே எழுதப் பெற்ற புராணங்களில் வராஹ  புராணம் போன்றவைகளில் கீதையை பற்றி புகழுரைகள் உண்டு. இது கீதா மகாத்மியம் என்ற பெயரில் பாராயனத்துக்குப் பின் படிக்கப் படுகிறது.;இங்கே  கிடைக்கும்.

இவை போதும் கீதை மகா பாரதத்தின் மூல அங்கமே என்று தெளிவாக உரைக்க .