Monday, February 17, 2014

கீதை இடைச் செருகலா ?

கீதை இடைச் செருகலா ?
இந்தக் கேள்வி பலராலும் குறிப்பாக திராவிட இயக்கத்தினராலும், கம்யூனிஸ்டுகளாலும் முன் வைக்கப் படுவது. இதற்கு சரியான பதில் முன்வைக்கப் படாததால் அதுவும் ஒரு தரப்பாகப் பேசப்படும் அந்தஸ்து பெற்று விட்டது.இவர்களின் பொதுவான வாதம் கீதை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் குப்தர் ஆட்சியில் எழுதப் பட்டது என்பதே. இந்த வாதம் சற்றும் அடிப்படை இல்லாதது என்பது பாரதமும் , கீதையும் சற்றே படித்தவர்களுக்குப் புரிந்து விடும்.

ஆனாலும் இந்த விஷயம் நம்முடைய "பிற்போக்கு" சிந்தனையாளர்களான இடது சாரிகளும், திராவிட வாதிகளும் திரும்ப திரும்ப பேசியதன் விளைவு , இந்த விஷயம் பாமர அளவிலான விவாதங்களிலும் இடம் பெற்று விட்டது. 

என் நண்பர்களுக்காக ஒரு தேடல் பட்டியல் இட்டு இந்த விஷயத்தை எழுதுகிறேன். இதை முன்பே தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும் அனுப்பியிருந்தேன். அதில் சற்று மெருகூட்டி இதோ கீழே எழுதுகிறேன்.

எனக்கு சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட வியப்பு அளித்தது ஓஷோ வின் கீதை தரிசனம். இதில் ஓஷோ ஒரு விஷயத்தை அலசுகிறார். கொதிக்கும் கொலைக் களத்தில் எழுநூறு பாடல்கள் சொல்லப்பட்டிருக்குமா ? படைகள்தான் பொறுக்குமா ? என்பது தான் அந்த விஷயம்.
ஓஷோவின் அலசல் இதோ (என்றோ படித்தது. சற்று சொந்த சரக்கும் இருக்கலாம் )
கீதையை சொன்னவனும் கேட்டவனும் சாமானியர்கள் அல்ல. அர்ஜுனனே சிறந்த தவ யோகி . இதற்கு பாரதத்தில் சான்றுகள் உண்டு. இப்படியிருக்க, இதை நேரடியாக வாய்மொழி உபதேசமாகக் கொள்ளுதலே இந்த “கீதை உண்மையாகவே குருக்ஷேத்திரத்தில் சொல்லப்பட்டதா ? ” என்ற குழப்பத்துக்குக் காரணம். ஏன் இது ஒரு மானசீக உபதேசமாக இருக்கக் கூடாது ? மனோ வேகம் என்பது அளவிட முடியாதது. ஒரு முழு வாழ்க்கையையே ஒருவன் ஒரு கனவாகக் கண்டு முடித்து விடுவான். ஆனால் ஒரு கனவின் அதிக பட்ச நேரம் பதினேழு நொடிகள் தான்.
இது ஒரு மானசீக உபதேசமே என்பது ஓஷோவின் முடிவு. போர்க்களத்தில்தான் கீதை சொல்லப்பட்டது என்பதில் ஓஷோ காட்டும் உறுதி என் போன்ற கிருஷ்ண பக்தர்களையே அதிர வைக்கிறது. எனக்குக் கூட சமயத்தில் பாரதம் உண்மையா என்றெல்லாம் சந்தேகம் வந்து விடும். ஓஷோ தன்னுடைய ” krishna- The man and his philosophy ” என்ற மகத்தான நூலில் கிருஷ்ணன் பரமாத்மாவே தான் என்று ஒரு சின்ன சந்தேகம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். 

சஞ்சயன் கீதையைக் கேட்டது மிக சாதாரணமான சாத்தியம் என்றும் சொல்லி விட்டார். டெலிபதி இன்றைய மனோ விஞ்ஞானத்தில் மிக சாத்தியமாக ஒன்றாகவே பார்க்கப் படுகிறது. அஷ்டமா சித்திகளை சர்வ சாதாரணமாகக் கையாண்டு வந்த மகாபாரத காலத்து அறிஞர்களான சஞ்சயன் போன்றோருக்கு வியாசர் இந்த வித்தையை அளித்தது வியப்பே இல்லை.

கீதையைப் பற்றி பாரதத்தில் உட்குறி ப்புகள் உண்டு. இவையே இந்த இடைச் செருகல் வாத்தி முறியடிக்கும். அதில் ஒன்று 

பீஷ்ம பர்வம் 43 , 45

ஷட்சதானி சவிம்சாணி ச்லோகானாம் ப்ராஹ் கேசவ:
அர்ஜுன சப்த பஞ்சாசத் சப்த சஷ்டிம் து சஞ்சய :
திருதராஷ்டிரா : ச்லோகமேகம் கீதாயாம் மனமுச்யதே ||

இந்த  சுலோகம் கீதைப் பகுதியில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கையை விளக்குகிறது. இதன் பொருள் இது தான். 
கிருஷ்ணர் கூறியது  620 ஸ்லோகம்
அர்ஜுனன் 57 ஸ்லோகம் ,
சஞ்சய 67 ஸ்லோகம்
திருதராஷ்டிரா 1. ஸ்லோகம்
மொத்தம் 745 ஸ்லோகம்
(இதில் நாற்பத்தி ஐந்து இப்போது இல்லை )

இது பீஷ்ம பர்வத்தில் வருகிறது. இன்னொரு விஷயம் கீதை சஞ்சயனால் நேரடியாகப் பார்க்கப் பட்டது. ஆனால்  இறந்த காலத்திலேயே சஞ்சயனால் சொல்லப்படுகிறது. காரணம்  பத்து நாள் வரை சஞ்சயன் குருக்ஷேத்திரப் போர் முனையில் இருந்தார்). பீஷ்மர் இறந்த பிறகே அவர் மன்னன் திருதராஷ்டிரனிடம் வருகிறார். இந்தச் சிறிய தகவல்கள் கூட முரண்பாடு இல்லாமல் வியாசரால் சொல்லப் படுகின்றன. 

மகாபாரதத்தில் இன்னொரு இடத்தில் கிருஷ்ணரே " கீதையை கூறுமிடத்து நான யோக நிலையில் இருந்தேன். என்னாலேயே அதை மீண்டுமுரைக்க இயலாது " என்கிறார்.  

விவேகானந்தர் , சங்கரர் உரைக்கு முன்னர்  பாதராயணர்  எழுதிய உரை ஒன்று இருந்ததாகவும், இராமானுஜர் அதைப் பற்றி எழுதி உள்ளதாகவும் , அராமானுஜர்  காலத்திலேயே அந்த ஓலைக் கட்டு செல்லரித்து விட்டிருந்ததாகவும் எழுதுகிறார். பாதராயணர் காலம் நிச்சயம் பொது சகாப்தத்துக்கு ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டு காலம் முந்தையது. ( மேற்கத்திய ஆசிரியர்களின் கூற்றுப் படியே )
இன்னொரு விஷயம். திருப்பாவையில் கோதை கீதையைப் பற்றி உரைக்கிறாள். அவள் காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர். ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் எழுந்த ஒன்று உடனே தென்னகம் வந்து சேர முடியுமா ?

குப்தர் காலத்துக்கு முன்னமே எழுதப் பெற்ற புராணங்களில் வராஹ  புராணம் போன்றவைகளில் கீதையை பற்றி புகழுரைகள் உண்டு. இது கீதா மகாத்மியம் என்ற பெயரில் பாராயனத்துக்குப் பின் படிக்கப் படுகிறது.;இங்கே  கிடைக்கும்.

இவை போதும் கீதை மகா பாரதத்தின் மூல அங்கமே என்று தெளிவாக உரைக்க .


No comments:

Post a Comment