Sunday, June 30, 2013

ராமாயணத் தருணம்

ராமாயணம் உலகின் முதல் காவியம் - "ஆதி காவ்யம்" என   போற்றப் படுகிறது. மகரிஷி வால்மீகி உலகின் முதல் கவி.

மேலே சொன்னவை பலர் முதலிலேயே கேட்டது. பலரும் அப்படியே ஒப்புக் கொண்டு சென்றிருப்பர் . இந்த இரண்டு விஷயங்களை சிறிது ஆராயப் புகுந்தால் ஒரு புதையல் அளவு விஷயங்கள் மறைந்திருப்பது தெரிகிறது. நான் வால்மீகி ராமாயணத்தை இப்போது தான் மூல ஸ்லோகங்களின் மூலம் படிக்க ஆரம்பித்துள்ளேன். சற்றே ஆசுவாசமாக இதைப் படியுங்கள். நான் அனுபவித்த அந்த 'கண்டு கொண்டேன்" தருணம் உங்களுக்கும் வாய்க்கட்டும் .

வால்மீகி காலம் வரை உலகில் இருந்த ஒரே கல்வி வேதக் கல்வி. வேதங்கள் மந்திரங்களால் ஆனவை .மந்திரங்கள் தங்களுக்கென தனி உச்சாடன பாணி கொண்டவை. மிகப் பழையவை. மேலும் அநநாளில் பேச்சுக்கென்று, எழுத்துக்கென்று   சம்ஸ்கிருத மொழி இருந்திருக்கின்றது என்றாலும் அது வேத மொழியினின்று சற்று வேறுபட்டது. பிற்பட்டது.

இந்தச் சூழலில் தான் மூன்று நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அவைகளைத் தான் நான் "ராமாயணத் தருணம்" என்று அழைக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்.

முதல் நிகழ்வு - வால்மீகியும், நாரதரும் சந்திக்கின்றனர். நாரதரிடம் , " இந்த உலகில் சத்தியம், தர்மம், ரூபம், வீரம், கல்வி, அறிவு, கருணை , ஒழுக்கம் போன்ற பண்புகளை பூரணமாகக் கொண்ட மானுடர் இருந்திருக்கிறார்களா ? அப்படியிருப்பின் அவரது கதையை எனக்குக் கூறுங்கள் என்று கேட்க , நாரதரும் . " அப்படி ஒரு தீரன் இருந்தான். நெடு நாட்களுக்கு முன் வாழ்ந்தவன் அவன். ராமன் என்பது அவன் பெயர் " என்று ஆரம்பித்து ராம சரிதத்தை சுருக்கமாகக் கூறுகிறார்.

இரண்டாவது நிகழ்வு - நாரதர் வால்மீகியிடம் விடை பெற்றுச் சென்ற பிறகு , வால்மீகி அழகிய தமஸா நதியில் நீராடிய பின் ,நதிக் கரையில் உலாவச் செல்கிறார். அங்கே இரு கிரவுஞ்ச பட்சிகள் சல்லாபித்தபடி விளையாடுகையில், அழிவே நோக்கமாகக் கொண்ட வேடன் ஒருவன் அதில் ஆண் பறவையை அம்பால்  அடித்து வீழ்த்துகிறான். இறந்து விழுந்த இணையைப் பார்த்து பெண் பறவை கதறுகிறது. சாதுவான் வால்மீகி துடிதுடிக்கிறார். உணர்ச்சி மேலீட்டால் , அந்த வேடனைச் சபிக்கும் வண்ணம் தன வாயினின்று சில சொற்றொடர்களை உதிர்த்தார்.

அது இது தான்

मा निषाद प्रतिष्ठाम्त्व | मगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एक | मवधीः काम मोहितम् || १-२-१५

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வ மகம: ஸாஸ்வதீ:  ஸமா: |
யத் க்ரௌஞ்ச மிதுநாதேக  மவதீ: காம மோஹிதம் || (1-2-15)


இதன் பொருள் :- ஓ நிஷாதனே ! கிரௌஞ்ச பட்சிகளின் வேட்கை மிகுந்த சேர்க்கையில் நீ அவற்றில் ஒன்றைக் கொன்றதால் நீ வருங்காலத்தில் நிரந்தரமாக (அவ) கதியை அடைவாயாக !

வால்மீகியோ முதலில் தன தவ வலிமையைக் குறைக்கும் இது போன்ற கோபமான சாபம் வெளி வந்ததே என்று துணுக்குற்ற போதிலும், இன்னொரு எண்ணம் தலை தூக்கவே அவருக்குள் மகிழ்ச்சி பரவியது. . அதற்குக் காரணம் , அவர் உதிர்த்த சொற்களின் அமைப்பு. அது இது வரை யாராலும் மொழியப்படாதது. புது லயத்தில் அமைந்திருந்தது. அவரது சீடர்களும் , அவரது சொற்களின் அமைப்பை சிலாகித்து அதன் புதுமையை எண்ணி வியந்தனர்.

மூன்றாவது நிகழ்வு : அந்த வார்த்தைகளின் புது அமைப்பை எண்ணி எண்ணி வியந்தபடி ஆஸ்ரமம்  வந்து சேர்ந்த பொழுது , அங்கே சாக்ஷாத் பிரம்ம தேவன் பிரசன்னமானார். வால்மீகியும், சீடர்களும் அவரைப் பணிந்து ஆசனம் அளித்து , உபச்சாரம் செய்து மகிழ்ந்தனர். பிரம்மன் வால்மீகி யைப் பார்த்து , " தங்கள் வாயால் உயர்ந்த சொற்களைக் கூறினீர்கள். அவை என் சங்கல்பத்தால் வெளி வந்தவை.  அந்த ஸ்லோகத்தைக் கொண்டு நீங்கள் நாரதர் கூறிய ராமன் என்னும் மகா மனிதனின் வாழ்க்கை சரிதத்தை எழுதுவீராக. உங்களுக்கு ராமனின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் உள்ளது உள்ளபடியே தோன்றும் !! " என்று ஆக்ஞை கூறி மறைந்தார்.;

மந்திரம் என்ற பழம் அமைப்பிலிருந்து வேறுபட்டு "ஸ்லோகம்" என்ற ஒரு புது வகைக் கவிதை பிறந்த தருணம் அது. வால்மீகி பாடியது அனுஷ்டுப் என்னும் சந்த வகையைச் சார்ந்தது. 32 அக்ஷரங்கள் கொண்டது. உலகின் முதல் மானுடக் கவிதை அது. 

இந்த மூன்று நிகழ்வுகளும் சேர்ந்ததே ராமாயணத் தருணம். அது ஒரு பொன் தருணம் என்று வழி வழி மகான்கள் வியந்து கூறுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ? ஒரு காவியம் ஒரு சாபம் போன்ற பாட்டால் துவங்குவதா ? என்று நண்பர்கள் கேட்கலாம்.  அதில் தான் இருக்கிறது அந்தப் பொன் முடிச்சு. அந்த ஸ்லோகம் உண்மையில் வேடன் நிமித்தமாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது புருஷோத்தமனான , திருமாலுடைய ஸ்தோத்திரம் ஆகும். இதோ மீண்டும் பொருள் எழுதுகிறேன்.

மா நிஷாத - ஓ ,  லக்ஷ்மி நிவாஸரே !
 த்வம் - நீவீர், 
காம மோஹிதம்- காம வயப் பட்ட 
கிரௌஞ்ச - அசுர 
மிதுநாத்- தம்பதிகளில் (ராவண - மண்டோதரி) 
ஏகம்- ஒருவரைக்
அவதீ :- கொன்று 
ஸாஸ்வதீ  ஸ மா:  -என்றும் நிலைக்கும் 
பிரதிஷ்டாம் - புகழை 
அ கம; - பெற்றீரே 

ஓ , திருமகளுரை திருமாலே ! நீர் காம வயப்பட்ட அசுர தம்பதிகளுள் ஒருவரை வீழ்த்தி , என்றும் நிலைக்கும் புகழை அடைந்தீரே !

எப்போதும் , ஒரு காவியம் தன உட்பொருளை முதலில , சுருங்கக் கூறி பிறகு விரித்துக் கூறும். இது நியதி. (காவ்ய அர்த்த ஸூ சனம் கஸ்சின் ஆதயம் ஏவ நிரூப் யதே ). அது போல இது இந்த மகா காவியத்தின் மங்கள ஆரம்பம் . 

அதை சாத்தியமாகிய இந்த நிகழ்வுகளே அந்த பொன்னான " ராமாயணத் தருணம் "




2 comments:

  1. அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  2. நன்றி அன்பரே ! தொடர்ந்து ஊக்கம் தருக .

    ReplyDelete