Wednesday, May 5, 2010

துக்க தோஷம் (ஒரு சிறு கதை)

" னுங்க இங்க ஒரு ஆம்புலன்ஸ் வந்துதா ? "

அந்த பெரியவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். "இங்கே எல்லாமே ஆம்புலன்ஸ் ல தான் வரும். எது அந்த லாட்ஜ் கேசா ?"

"ஆமாம், டாடாபாத் லாட்ஜ் தானே சொல்றீங்க ? ". என் பதில் அவர்களைக் குழப்பி விட்டது போலும். அவர் தன் பக்கம் இருந்தவரைப் பார்த்து, 'பாய், அது ரயில்வே ஸ்டேஷன் லாட்ஜ் பாடி தானே நம்ம வண்டியில வந்துது ? '

அந்த லுங்கி கட்டின பாய் " சார், இன்னி மேல வந்தாலும் வரும், மார்ச்சுவரி அதோ மூலையிலே இருக்கு. போயி பாருங்க. சரி ... பேரு என்ன சொன்னீங்க ? "

"பூமிநாதன்" என்றுவிட்டு நகர்ந்தேன் .

பூமிநாதன் !. இனி அப்படி ஒரு மனிதரைப் பார்க்க முடியுமா ?

நேற்று நடந்தது போல் இருக்கிறது அவர் வந்த நாள். இருபத்தைந்து வருடம் இருக்கும். நான் அப்போதுதான் காலேஜ் முடித்த நேரம். பக்கத்து வீட்டில் ஏகப்பட்ட களேபரம். கிருஷ்ணராஜ் சாருடைய நண்பர் வருகின்றார் என்று என் தங்கை கூறினாள். அமேரிக்காவில் இருந்தாம் !

ஆள் குட்டையாக வெளுப்பாக இருந்தார். இரண்டொரு நாளிலேயே தெரிந்து வில்லது அவர் ஒரு அறிவு ஜீவி என்று. பெரிய அமெரிக்கக் கம்பனியில் இன்ஜினியராக இருந்தாராம். திரும்பிப் போவார் என்றார்கள். அவர் போகவில்லை. அமேரிக்கா அவருக்குப் பிடிக்கவில்லையாம். என்னை விடப் பத்து வருடம் பெரியவர்.

அவருடைய பரிமாணங்கள் எனக்குப் புரிய சில வாரங்கள் ஆனது. கிருஷ்ணராஜ் சார் வீட்டில் தான் தங்கி வந்தார். அதுவே எங்கள் வீடு மாதிரி ஒரு ரயில்வே கம்பார்ட் மென்ட் வீடு. நேராக மூணு ரூம் அவ்வளவு தான். கிருஷ்ணராஜ் சார் மனைவி வெளிய போக வரணும்னா இவரைத் தாண்டித் தான் போகணும். ஓரிரு வாரங்களிலேயே முகச்சுளிப்பு ஆரம்பமாய் விட்டது.

இவரோ வெள்ளைச் சோளம். பற்பல நேரடி மற்றும் மறைமுக உணர்த்தலுக்குப் பிறகே 'புரிந்து' கொண்டு ஜாகையை மாற்றினார். ஒரு மாதாந்திர வாடகை 'லாட்ஜு' க்கு . இருபத்தைந்து வருடம் அங்கேயே தான். நேற்று வரை.

இதற்குள் அவர் என்னைத் தன் இன்ஜினீரிங் விஷயங்களுக்காக ஒரு உதவியாளனாகவே ஆக்கிக் கொண்டார். தன் புதிய சிறு தொழில் நிறுவனத்துக்கு பாகங்களை டிசைன் செய்து வந்தார். இளம் பொறியாளனான என்னை துணைக்கு வைத்துக் கொண்டார். சமயத்தில் தன் பழைய நண்பர்களின் நிறுவனங்களில் எனக்கு வேலை தேடவும் அனுப்புவார்.

என்னுடைய பொறியியல் அறிவைச் சோதிப்பார். திடீரென்று , " ஒரு குண்டு தர்றேன் . போயி உன் காலேஜில வச்சிட்டு வா" என்பார். நான் படித்த கல்லூரி மேலும், நம் பாடத் திட்டத்தின் மீதும் அவ்வளவு வெறுப்பு ! அவரது அணுக்கத்தில் சில மாதங்களிலேயே நான் அடிப்படை விஷயங்களில் தேர்ந்து விட்டேன். எனக்கும் வேலை கிடைத்து நான் என் வழியைப் பார்க்க போய் விட்டேன். என்றாவது தான் சந்திப்பு.

பாக்கேட்டில் மணி அடித்தது. என் மனைவிதான். ' என்னங்க எங்க இருக்கீங்க ? பாத்துட்டீங்களா ? கூட்டமா இருக்கா ? எல்லாரும் வந்தாச்சா ?'

'இன்னும் பாடி வரலை. வந்ததும் சொல்றேன்.நீ சாப்பிட்டாச்சா ?'

'ஆச்சுங்க . வெய்யில்ல நிக்காதீங்க. அஞ்சு மணிக்குள்ள வந்துடுங்க. தண்ணி காச்சி வக்கறேன்.' போனை வைத்து விட்டு அந்த வளாகத்தை பார்த்தேன். போலீஸகாரர் மோட்டர்சைக்கிளில் வேகமாகச் சென்றார்.

பூமிநாதன் சாரிடம் எனக்கு மிகவும் பிடித்ததும் , பிடிக்காததும் அவரது பட்டும் படாததுமான போக்கு. அவரது வாழ்க்கையில் அது ஒரு பெரிய தீம் ஆகவே இருந்தது. ஏதோ ஒரு ஆயத்தத்தில் இருக்கும் போது , அது பற்றி மேலோட்டமாகக் கேட்டாலும், 'எதுக்காகக் கேட்கிறீங்க ?' என்பார். நான் பல வருடங்கள் பழகிய பின் அவரை இது மாதிரிக் குடைந்த போதும் இதே மாதிரி மழுப்புவார்.

என் தகப்பனார் அவருக்கு ஓயாமல் பெண் பார்ப்பார். 'உங்க ஜாதியில பொண்ணா கிடைக்காது ? என்று அவருக்கு பெண் மேல பெண்ணாக சொல்லுவார். பூமிநாதனோ , ஒவ்வொன்றிலும் ஏதோ சொல்லி நிராகரிப்பார். என் அப்பா சடைந்து போயஅவரிடமே , ' என்ன சார், இதுல என்ன குறை கண்டீங்க , நல்ல குடும்பம்,.. என்று விளக்கப் போவார். அப்போதும் அதே ஒட்டாத பதில். அவருடைய நண்பர்களும் இதே புலம்பலைத்தான் என்னிடம் வைப்பார்கள். 'உன்னோட இன்ஜினியர் உருப்பட மாட்டான் ' என்று வைவார்கள்.

அவருடைய திரையை யாராலுமே விலக்க முடியவில்லை. வரிசையாக என்னுடைய தமக்கைகளுக்கும், எனக்கும் , அவரது பெரும்பாலான நண்பர்களுக்கும், பணியாளர்களுக்கும் திருமணம் முடிந்த காலத்திலும், அவரது நிராகரிப்பு படலம் தொடர்ந்தது. அவருடைய அறைக்கு எப்பொழுதேனும் சென்றால் அங்கே ஒரு புரோக்கர் ஜாதகக் கட்டை வைத்துக் கொண்டு நிற்பார். நான் அவரிடம், 'இது போல ஆளுகளை நம்பாதீங்க சார். உங்க கிட்ட நூத்துக்கும் அம்பதுக்கும் தான் வர்றாங்க. பேசாம ஒரு நல்ல பேமிலி பெண்ணா பாத்து முடிங்க ' என்று கண்டித்த போதும் அதே புன்னகை. ஒட்டாத புன்னகை.

அவருடைய பாகஸ்தர்களுக்கும் அவருக்கும் இடையே வந்த சிறு மனத் தாபத்தினால் அவர் தன் கம்பனியில் இருந்து விலகியது எனக்கு பின்பே தெரியும். விவரம் அறிய நான் கேட்ட போதும் இதே பாணி புன்னகை. 'உடுங்க. ஒத்து வரலை' அவ்வளவுதான் பதில். பிறகு அவர் ஒரு பிசினஸ் ஆரம்பித்து அது பறக்க ஆரம்பிக்கும் முன்னேயே நொடிந்து விட்டார். பழைய பார்ட்னர்கள் உலகம் அறிந்தவர்கள். நெளிந்து கொடுத்து சென்றனர். இவரோ மண்பானை ராகம். ஒடுக்கு எல்லாம் எடுக்க முடியாது. உடைத்தே விட்டார். உடைந்தும் போனார்.

என்னிடமும் அவர் சில காலம் ஒரு பாகஸ்தர் ஆனார். அப்போது என் வாழ்க்கையில் பொருளாதாரப் புயல் அடித்து வீசிக் கொண்டிருந்தது. என்னுடைய இன்னொரு தொழிலையும் இந்தப் புதுத் தொழிலையும் பார்க்க முடியாமல் அவரிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டேன். மேலும் அப்போது அவரை சில நண்பர்கள் வேறொரு படுகுழியில் தள்ளி விட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நாள் நான் சீட்டு கம்பனியில பார்ட்னர் ஆயிட்டேன் என்றார்.

சில காலம் கழித்து அவர் கைப்பொருள் கரைந்து விட்ட செய்தியும் அவருக்கு சர்க்கரை வியாதி வந்ததும் தெரிந்தது. புன்னகை மன்னர் தன் எந்த துக்கத்தையும் வெளிக்காட்டவில்லை.

ப்படிப்பட்ட அமுக்கி வைக்கப்பட்ட துக்கங்களின் முடிவே அவரது தற்கொலை போலும். இன்று மதியம் அவரது லாட்ஜுக்கு பக்கத்தில் வசிக்கும் என் நண்பர் எனக்குப் போன் செய்து கூறியதும் புறப்பட்டு, லாட்ஜுக்குப் போனேன். ' யாருங்க, தூக்குப் போட்டுக்கிட்டாரே அவரா ? இப்பதான் ஆசுபத்திரிக்கு போனாங்க . போஸ்ட் மார்ட்டம் பண்ணனுமாம் . " என்றார் லாட்ஜ் சிப்பந்தி.

ந்த வேன் பெரிய அரை வட்டம் அடித்து மார்ச்சுவரி முன் நின்றது. வேனிற்கு பக்கத்தில் சில பார்த்த முகங்கள். அவருடைய கல்லூரி சகோதரர்கள். எல்லோரும் களைப்படைந்திருந்தனர். ஒருவர் போலீசிடமும், ஒருவர் மார்ச்சுவரிக்குள்ளும் சென்றனர்.

சற்று நேரத்தில் இருபது முப்பது பேர் கூடி விட்டோம். ஒரு நண்பரிடம், "சார் பாடியைப் பார்க்கலாமா" என்றேன் ?

அவர் சட்டென்று ஏதோ திகைத்தவர் போல நின்று, 'ஏம்ப்பா , கதவைத் திறந்து விடு பார்க்கட்டும்' என்றார். கதவு திறந்ததும் லுங்கி அணிந்த கால்கள் தெரிந்தன . வேனிற்குள்ளேயே ஏறிப் பார்த்தேன். பெரிதும் வலியை அனுபவிக்காத சாவு போலும். முகம் சாந்தமாகவே இருந்தது- பிதுங்கிய நாக்கு மட்டும் அகால மரணத்தை நினைவூட்டியது.

எல்லாரும் வந்து விட்டார்களா என்று நோட்டமிட்டேன். பெரும்பாலும் இருந்தனர். 'ஏதோ குறை இருப்பதாக என் மனத்திற்குப் பட்டது. ஒவ்வொருவராக 'பாடியை' பார்த்தனர்.

இரண்டு மணி நேரமாயிற்று , பாடி திரும்பக் கிடைக்க. மீண்டும் வேன் தரிசனம். வெள்ளைத் துணியில் மூட்டையாக வந்து சேர்ந்தார் பூமிநாதன். நாக்கை மீண்டும் சரி செய்து கொடுத்து விட்டிருந்தனர். மாலையும் பன்னீரும் வந்தது. 'பரவாயில்லை' என அருகில் இருந்த ஒரு நண்பரிடம் சொன்னேன் "நம்ம மக்கள் ஒரு குறையும் வைக்கவில்லை "

ஆனாலும், எங்கேயோ குத்திற்று. ஏதோ குறை. ஆனால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. நண்பர் கூட்டம் ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து    செய்தது. பெரிய இடத்தில் சொல்லி சீக்கிரத்தில் போஸ்ட் மார்ட்டம் முடித்தது, போலீஸ விசாரணை முடித்தது, ஊரில் இருந்து அவரது தமையனை வரவழைத்தது, என்று எல்லா விதத்திலும் காரியம் கச்சிதமாக நடந்து வந்தது.

கடைசியாக, ஒரு டாக்சி வந்தது. ஒரு சிறு கூட்டம். 'ஆசிரமத்துக்காரங்க' என்றார் என் நண்பர். கடைசியாக அவர் ஒரு ஆன்மீகக் குழுவிடம் தொடர்பு வைத்திருந்தார்.

அந்த ஆசிரம நிர்வாகிகள் ஒவ்வொருவராக , தரிசனம் செய்தனர். கடைசியில், எல்லாரையும் அதிர வைக்கும் ஒரு வெடிக்குமுறல் கேட்டது. தலை குனிந்தும, தூணில் சாய்ந்தும் நின்ற அனைவருமே , துணுக்குற்று நிமிர்ந்தோம். வேனுக்குள்ளிருந்து தான் அந்த சப்தம். அங்கே ஒரு வயதான அம்மா கதறிக்கொண்டிருந்தார். ""அய்யா, சின்ன அய்யா, இப்படிப் பண்ணீட்டீங்களே அய்யா , ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லியிருக்கலாமே, உங்களை இந்த நிலைமைக்கு விட்டிருப்பேனா ? அய்யா, உங்களை மாதிரி ஒரு நல்லவரை இனி எப்போ பார்ப்பேன் ? அய்யா , என் வயிறு எரியுதே அய்யா ?""

அந்தக் கதறல் அனைவரையும் நிலைகுலைய வைத்தது என்னையும தான். விசாரித்த போது, அந்த ஆசிரமத்தில் எடுபிடி வேளை செய்யும் ஆயா என்றனர்.மனம் ஏதோ லேசானது மாதிரி இருந்தது.

வீட்டிற்கு வந்து , குளியல் முடிந்து வரும் போது, என்னை சுற்றி திரண்டிருந்த வீட்டாருக்கு , நடந்ததை சொல்ல ஆரம்பித்தேன். முடித்த பிறகு, நான் அனுபவித்த அந்த வினோத குத்தல் நினைவுக்கு வந்தது. அதைச் சொன்ன போது, "அங்க பொம்பளை யாராவது இருந்தாளா? என்றாள் என் சகோதரி.

இல்லை . "அவருடைய மைத்துனி கூட சும்மா நார்மலா தான் இருந்தாங்க. இந்த பாட்டி அம்மா தான் கதறினாங்க."

என் தங்கை இந்த பதிலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.

இது கூட புரியலையா ? சாவு நடந்த இடத்தில துக்கம் யாருக்கு வரும் ? பொம்பளைக்குத்தான். ஒண்ணு, அம்மாவா இருக்கணும், இல்ல பொண்டாட்டியாவோ, மகளாவோ இருக்கணும். துக்கம் இல்லாத சாவு வீட்டுலதான் நீங்க அவ்வளவு பேரும் அத்தனை நேரமும் இருந்தீங்க. எல்லா வரிசையும் செஞ்சும், அங்க பிரிவுத் துயர் இல்ல. அதான் , அந்த கிழவி எல்லாரையும் முந்திட்டா. உன் குத்தல் எதனாலையும் இல்ல. துக்கம் அனுசரிக்காத குற்ற உணர்ச்சி தான் உன் குத்தல்"

"அந்தப் பாட்டிதான் இன்னிக்கு அந்த ஆத்மாவுக்கு ஆறுதல். நீங்க யாருமே இல்லை. பிரேதத்துக்கு காசும் , பணமுமா முக்கியம் ?" என்றாள்.

1 comment:

  1. Sir,

    But for that man, it doesnt matter whether one cries or how many people attended the funeral..

    ReplyDelete