Thursday, July 15, 2010

மனசாட்சியே இறை சாட்சி !- ஒரு சிறுகதை

விநாயகம் யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினார். "ஒ! செல்லப்பன் ! எங்கே இத்தனை நாளா காணோம் ?"

வண்டியில் இருந்து இறங்கிய செல்லப்பன் , இவர் கையைப் பிடித்துக் கொண்டு , "இன்னிக்கு உங்களை ஒரு கிலோமீட்டர் விரட்டிப் பிடிச்சேன் சார் " என்றார். இருவரும் வண்டியை ஓரத்தில் நிறுத்தினர். விநாயகம் அப்போதுதான் கவனித்தார். செல்லப்பன் மீசை இல்லாமல் , சட்டையை கால் சரைக்குள் 'இன்' செய்து, ஷூ ,  பர்ப்யும்  எல்லாம் போட்டு அமர்க்களமாக இருந்தார்.

"என்ன செல்லப்பன் , ரெண்டாவது கல்யாணம் ஏதாவது செஞ்சுக்கிட்டீங்களா ?  ஆளே மாறிட்டீங்க !" என்று குறும்போடு கேட்டார்.


" உண்மையாகவா ? ஒண்ணுமில்ல சார் , புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சேன். அதுக்காகத்தான் இந்த மாற்றம் ." என்றார் செல்லப்பன்.

" ஏதாவது ஆம்வே ஏஜன்ட் ஆயிட்டீங்களா என்ன ?" இது விநாயகம். செல்லப்பன் உடனே உஷாராகி " எப்படி சார் கண்டு பிடிச்சீங்க ? அது விஷயமாத் தான் உங்களை நிறுத்தினேன் ." என்றார்.


விநாயகம் இது போன்ற பல போர்க்களம் கண்டு மீண்ட  வீரர். அலட்டிக்  கொள்ளாமல், " அருமையான தொழில் சார்.என் நிலைமை இப்போ வேற மாதிரி. பையன் மெட்ரிக்கு , பொண்ணு ப்ளஸ் டூ. ரெண்டு வருஷம் ஆகட்டும். நானே உங்களைத் தேடி வருவேன் பாருங்க! " என்றார்.

ஏமாற்றமடைந்தாலும், செல்லப்பன் தளராமல், " ஏன் சார் , நம்ம சுந்தர மூர்த்தி இப்போ பீளமேட்டில தானே இருக்கார் ? என்று கேட்க, ஆமாம் , போன மாசம் கூட பாத்தேன். வீடு எல்லாம் கட்டி முடிச்சுட்டார்." என்றார் விநாயகம். செல்லப்பன் உற்சாகமாகி " சார் கொஞ்சம் போன் நம்பரும் அட்ரசும் குடுங்க " என்று கேட்டு வங்கிக் கொண்டார்.


"ன்னங்க , கொஞ்சம் ஆர்த்திக்கு ஷூ பாலிஷ் போட்டு விடுங்க !" பார்வதி சொல்லி முடிக்கும் முன்னேயே அங்கே சுந்தர மூர்த்தி இருந்தார்.  பெண்ணைப் பார்த்து  " மேடம் , பாலீஷுக்கு ரெண்டு ருபா ! அர்ஜண்டுக்கு அஞ்சு ருபா !" என்று குறும்போடு கேட்க, ஆர்த்தி சளைக்காமல், "ஏம்ப்பா , உங்க ஊர்ல கடன் எல்லாம் உண்டா ? அஞ்சே வருஷம் தான் ! "என்று ஏட்டிக்கு போட்டி பேசினாள்.

அம்மாவையும் பெண்ணையும் ஸ்கூட்டரில் ஏற்றி விட வராந்தா வரை சென்று நின்றார். பார்வதி வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது, " உப்புமா காஸ் மேல இருக்கு. தயிர் பிரிட்ஜில இருக்கு. ஊறுகாயும் இருக்கு. நான எப்படியும் ஒரு மணிக்குள்ள வந்திடுவேன்." என்று உரக்க சொன்னாள். அவரோ, " சரி ரோட்டைப் பார்த்து போ. லைசன்சு பர்சில வச்சியா ? மொய் கவர் எடுத்தியா ?" என்று கேட்க , பார்வதி " எல்லாம் ஆச்சுங்க . நான வர்ரேன் " என்று கிளம்பினாள்.

சுந்தர மூர்த்தி வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்த முற்படும் போது , செல்லப்பன் வீட்டின் முன் நின்று ஹாரன் அடித்தார். இவர் கேட்டைத் திறக்கச் செல்லும் முன்பாகவே, " என்ன சார் சௌக்கியமா ? " என்று உற்சாகமாக விளிததார். சுந்தர மூர்த்தி புன்னகையுடன் , எல்லாம் நல்லா இருக்கேன், வாங்க ! " என்று அன்புடன் வரவேற்றார்.

" எனக்கு ஒரே சம்சயம் . நீங்க இன்னிக்கு வீட்டில இருப்பீங்களோ இல்லையோன்னு.  சனிக்கிழமையாச்சே ! எதுக்கும் பாத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்." என்றார் செல்லப்பன்.

குளிர்பானம் கொடுத்தார் மூர்த்தி. " என்ன சார் இன்னிக்கு லீவு தானே ? கொஞ்சம் பேச முடியுமா ?" என்று செல்லப்பன் கேட்டார் .

" இன்னிக்கு நான ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டேன். வீட்டுக்காரிக்கு ஒரு கல்யாணம் . என் பையன் இன்னிக்கு ஐ ஐ டி கோச்சிங் கிளாசுக்கு போயிட்டு  வருவான். வேலைக்காரி ஒன்பது மணிக்கு வருவா. இன்னிக்கு மதியம் பால் கார்டு வாங்கணும். ஒண்ணா லீவு போட்டுட்டேன் " என்று மூர்த்தி தனக்கே உரிய சாந்த குணத்தோடு பதில் சொன்னார்.

" என்னது ? ஸ்கூல் பிரின்சிபால் இந்த வேலை எல்லாம் செய்யறதா ? நோ நோ ! சார் , இதை எல்லாம் விடுங்க. நான உங்களுக்கு நேரத்தைக் காசாக்குற வித்தை சொல்லித் தர்ரேன் . உங்க ஸ்கூல் ல குடுக்கற இருபதினாயிரத்துக்கு நீங்க பாடு பட்டது போதும் !" செல்லப்பன் மூர்த்தியைக் கூர்ந்து கவனித்தார்.

மூர்த்தி சற்று நெளிதலுடன், "என்ன செல்லப்பன் இன்னிக்கு ஒரே கலாட்டாவாக இருக்கீங்க ? என்னை எதுலயும் சிக்க வைக்காதீங்க . காசு இருந்தாத்தானே ?" சிரித்தார்.

"உங்களைக் காசு யாரு கேட்டா ? உங்க நேரமும் , உங்க செல்வாக்கும் மட்டும் தான் உங்களுக்கு இதுல துணை நிக்கும்" என்றபடி, தான் ஆம்வே யில் முகவராக சேர்ந்ததையும் , கை நிறைய பணம் சம்பாதிப்பதையும் கூறினார். "வெறும் அஞ்சா யிரம் தான் போட்டு சேர்ந்தேன். இன்னிக்கு எனக்கு கீழே காரமடையில ஒரு லைன் , அவனாசில ஒண்ணு, திருப்பூர்ல ஒண்ணு ஓடுது. இருநூறுக்கு மேலே ஏஜன்ட் இருக்காங்க . நல்லா ஓடுது. இப்ப தான் ஒரு ஆல்டோ வாங்கினேன். " என்றார் பெருமிதமாக.

சுந்தர மூர்த்திக்கு இந்த நடைமுறை எல்லாம் புரியாது. செல்லபபனைப் பார்த்து , " ஆமா , ஏதோ ஏஜன்ட் னு சொன்னீங்க. இந்த தொழில் ல என்ன பொருளை விக்குறீங்க ?" என்று அப்பாவியாய் வினவினார்.

செல்லப்பன்
நாக்கைக் கடித்துக் கொண்டார். " என்ன சார் இது ? ஆம்வே பொருட்களைத் தெரியாம இருக்கீங்க. இதோ பாருங்க " என்று தான் பையில் கொண்டு வந்த சாமான்களைக் காட்டினார். இது டூத் பேஸ்ட். இது கிளீனிங் சொல்யூஷன். உலகிலேயே நம்பர் ஒன. இது வைட்டமின் பொடி. இது ஓமேகா.. என்று அடுக்கினார். அதன் சிறப்புகளையும்  விளக்கிக்கொண்டே போனார்.

"பரவாயில்லையே ! துணி துவைச்ச பின்னாடி சோப்பு கலந்த தண்ணிய செடிக்கு கூட விடலாமா ? இது வேணா ஒரு பாட்டில் குடுங்க சார். நூறு மில்லி இருந்தா காமிங்க " என்றார்.

செல்லப்பன் ஏதோ சொல்ல முற்படுமுன், கதவு திறக்கும் ஒலி கேட்டது. மூர்த்தி சாரின் மகன் தோளில் பையோடு வந்தான். "ஸ்ரீராம்! என்று அறிமுகம் செய்தார். அவன் கை குவித்து வணக்கம் சொல்லி, பிறகு தந்தையை நோக்கித் திரும்பினான். " அப்பா, காய்கறி இதோ பையில் இருக்கு. பிரிட்ஜில வைக்கறேன்." என்று விட்டு உள்ளே சென்று விட்டான். உடனே மூர்த்தியும் பின்னாடியே சென்றார். உள்ளே ஏதோ பாத்திரம் நகர்த்தும் சத்தம் கேட்டது.

ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார் மூர்த்தி. " மன்னிக்கணும். அவன் காலைல அஞ்சுக்கு போனவன். இப்பத்தான், ஒன்பதுக்கு வந்திருக்கான். சாப்பிட வச்சிட்டு வந்தேன்." என்று தோள் துண்டால் கையைத் துடைத்தார். " என்னமோ சொல்ல வந்தீங்க "

செல்லப்பன் உற்சாகமானார். இந்த மாதிரி சிச்சுவேஷன் அவருக்கு தினம் நிகழும். ஒரு முறை தன் முன்னோடிகள் சொல்லிக் கொடுத்ததை நினைவு படுத்திக் கொண்டு ஆரம்பித்தார். " சார், உங்க பையனோட படிப்புச் செலவு, பொண்ணோட படிப்பு, கல்யாணச் செலவு எல்லாம் கணக்கு பண்ணி பாருங்க. மலைச்சுப் போயிடுவீங்க. ஒத்த சம்பளத்துல இதெல்லாம் பண்ணனும்னா முடியுமா ? நான உங்களை என்ன மாதிரி ஏஜன்ட் ஆக மாறச் சொல்லறேன். நீங்க என்னடானா சொந்த தேவைக்கு வேணும் அது இதுன்னு பேசறீங்க "

போன் மணி அடித்தது. மூர்த்தி எடுத்தார்." ம்ம் சொல்லும்மா . கல்யாண டிபன் எப்படி ? ஆர்த்தியை சரியாய் கிராஸ் பண்ணி ஸ்கூல் ல விட்டியா ? சரி , சரி, மெல்ல வா " போனை வைத்து விட்டு நிமிர்ந்தார்.

"செல்லப்பன், இப்போ நீங்க சொன்னீங்களே, சொந்த உபயோகத்துக்கு வேண்டி இந்த ஏஜன்ட் ஆகறது சரியில்லையா ? அப்படித்தான் உங்க கீழே உள்ள எல்லாரும் பண்ணறாங்களா? உங்க வீட்டுல இந்த பொருட்கள் எல்லாம் உபயோகம் பண்ணறது இல்லையா ? " என்று மூர்த்தி கேட்டார்.

" ஆமாம் சார். இது பணம் பண்ணுற செயின். இதுல சொந்த உபயோகம் எல்லாம் வீண் " என்றார் செல்லப்பன்.

"செல்லப்பன், இப்ப நீங்க சொன்னதில இருந்து எனக்கு
இந்த பிசினஸ் மேல ஒரு மாதிரியான ஊகம் வந்திருக்கு . அதாவது, சுகாதாரப் பொருட்களை தான் வங்கி விற்றாலும், அதை என்ன தான் ஆகா ஓகோ ன்னு சொல்லி வித்தாலும் , அது பிறர் வாங்கி தான் லாபம் சம்பாதிக்கணும் அப்படி ன்னு எல்லாரும் நினைக்கறாங்க. இதனால உங்க செயின் ல உள்ள ஒருவருமே தனக்காக இதுகளை உபயோகம் பண்ணறது இல்ல. இதே தப்பை என்னையும் பண்ணச் சொல்லறீங்க. அப்படித் தானே ? "

செல்லப்பனுக்கு இந்தக் கேள்வி ஒரு சரியான அடிதான். தான் சென்ற செமினார்களில் இந்த மாதிரி வாதம் செய்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்களா என்று யோசித்தார்.

அதற்குள் மூர்த்தியே, " இதில இன்னொன்னு இருக்கு. உங்க ஒருத்தருக்கு, சிறிசா வருமானம் வரணும்னா கூட , உங்க மூலமா இரண்டு பேர் இதில சேரணும். அவங்களுக்கும்  காசு கொஞ்சம் வரணும்னா , அவங்களுக்குக் கீழே மேலும் ஆளு கூடணும். உங்களுக்கு போட்ட பணம் திரும்பணும்னா இந்த செயின் நீண்டுகிட்டே போகணும். இதில எப்பவுமே ஏமாளி , கடைசியாய்ச் சேர்ந்தவன் தான் . இல்லையா ?" என்று மெல்ல , ஆனால் தெளிவாக கேட்டார்.

செல்லப்பன் , இதை எதிர்பார்க்கவில்லை. "நீங்க தேவை இல்லாமல் அடுத்தவரைப் பத்தி கவலைப்படுறீங்க. இதுல மோசம் போனவன் கிடையாது.". என்று ஏதோ ஆரம்பிக்க, மூர்த்தி சிரித்தார்.

"செல்லப்பன், சில வருடத்துக்கு முன்னாடி என்னை சில பேர் ஷேர் மார்க்கட்டுக்கு வந்து சேர சொன்னாங்க. விசாரிச்ச பிறகு தெரிந்தது. காலையில வாங்கின ஷேரை சாயங்காலமே விககறதாம். எப்படி நமக்கு ஒரு கம்பனியோட நிலவரம் ஒரு நாளைக்குள்ள தெரியும் ? அதுக்குள்ளே இதில இப்படி அவசரமா விக்கறது எதுக்குனு நான கேட்டப்ப , இப்ப நீங்க சொன்ன அதே பதில் தான் எனக்குக் கிடைச்சது. எனக்கு புரிந்தது ஒரே விஷயம். இந்த பணம் ஒரு ஏமாத்து பணம். பொருளுக்காக வியாபாரம் பண்ணாம பணத்துக்காக வியாபாரம் பண்ணி  ஒருத்தனை சிக்க வச்சு அவனை இழக்க வைக்கறதுதான் இந்த வியாபாரம் எல்லாம் ! "  மூர்த்தி முடிப்பதற்குள் செல்லப்பன் முந்தினார்.

"என்னைப் பார்த்துமா இப்படி சொல்லறீங்க ? நான சம்பாதிச்சது எப்படி ? என் உழைப்பினால தானே ?"

இப்போது மூர்த்தியின் கண்கள் செல்லபபனை உற்றுப் பார்த்தன. " நீங்க அப்பவே எனக்கு ஒரு உத்தரவாதம் குடுத்தீங்களே, போட்ட பணம் ரெண்டே மாசத்தில வரும் அப்படீன்னு ! அது யாரு பணம் ? உங்க கம்பனி பணமா அல்லது புதுசா சேர்ரானே அவன் பணமா ? நீங்க போயி பாக்கற ஒவ்வொரு ஆளும் சம்பளம் பத்தாம மாசக் கடைசியில கையைப் பிசையறவன் தானே ? அவனுடைய பணத்தைத் தின்னா நானும் கார் வாங்கணும் ?"

செல்லப்பனுக்கு இப்போது வியர்த்தது. மூர்த்தி மேலும் தொடர்ந்தார். செல்லப்பன், நீங்களும் என்னைப் போல ஒரு டீச்சர். நான இன்னிக்கு என் மனைவிக்காகவும், குடும்பத்துக்காகவும் லீவு போட்டு கவனிக்கிறேன். ஆனா நீங்க பணத்துக்காக லீவு போட்டிருக்கிறீங்க. இதோ , இப்ப சித்த முன்ன என் பையனுக்கு என் கையால நான சாப்பாடு போட்டேனே , அந்த திருப்தியை இந்த ஆம்வே வியாபாரம் குடுக்குமா ?  இல்லை !, இந்த மாதிரி விஷயங்களால என் குற்ற உணர்வு தான் ஏறும். மேலும், என்னால பொய் சொல்லி வியாபாரம் பண்ண முடியாது. ஆனா, நான சொன்ன மாதிரி , அந்த க்ளீனிங் சொல்யூஷன் நூறு மில்லி வாங்கறேன். இது என் மனசுக்குப் பிடிச்ச வியாபாரம் "

மூர்த்தி தொடர்ந்தார் . " நீங்க முதல்ல தவறாம யோகா செய்வீங்க . எல்லோருக்கும் சொல்லிக் குடுப்பீங்க. இப்போ அதெல்லாம் விட்டுட்டீங்க போல. வில் போல இருந்த நீங்களே இப்ப பணம் பணம்னு அலைஞ்சு தொப்பையை வச்சிக்கிட்டு இருக்கீங்க. தினம் மகனோட ஸ்கூலுக்கு ஸ்கூட்டர்ல வருவீங்க. இப்ப அவனை ஹாஸ்டல் ல விட்டுட்டீங்க. வெறும் பணத்தால நீங்க இழந்த உறவுகளை, ஆரோக்கியத்தை , திரும்ப பெற முடியுமா ? நான உங்களைக் கேட்கிறேன். ஒரு குடும்பத்தின் ஆணிவேரான தலைவர் நீங்க திசை திரும்பி ஆச்சுன்னா , உங்க குடும்பம் என்னவாகும் ?  நீங்க என்னை விட சின்னவர். உங்க மகன் என் ஸ்டூடன்ட் . அந்த உரிமையில் தான் இதெல்லாம் சொன்னேன். தப்புன்னா மன்னியுங்க." என்று முடித்தார்.

அந்த ஹால் முனையில் நின்றிருந்த ஸ்ரீ ராம்  தன் தந்தையை பெருமிதமாகப் பார்த்தான். செல்லப்பன்   சற்று நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். பிறகு மெல்ல நிமிர்ந்து, "சார் , பையனுக்கு படிப்பு தடை படக் கூடாதுன்னு தான் ஹாஸ்டல்ல போட்டேன். அவனும் இது வரை ஒண்ணும் சொல்லல்ல." என்று சொல்ல, குறுக்கிட்ட மூர்த்தி, "உங்க மகனும், ஸ்ரீ ராமும் நண்பர்கள். அடிக்கடி இங்கே போன் பண்ணுவான். ஒரு நாள் ரொம்ப அழுது பேசினான். அப்பா வர்றதே இல்ல அப்படீன்னு. நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்தினேன். " என்று சொல்ல, செல்லப்பன் அப்படியே நிலை குலைந்து நாற்காலியில் சாய்ந்து விட்டார். கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

"சார், நான இத்தனை நாள் சம்பாதிச்சது அவனுக்காகத் தானே சார். நாளைக்கு அவனுக்கு ஆகட்டுமேன்னு தானே சார் இத்தனயும் பண்ணினேன் ? அவனே புரிஞ்சிக்கலை பாருங்க ! " என்று விரக்தியோடு பேசினார்.

மூர்த்தி இப்போது அவரருகே நெருங்கி அமர்ந்தார். " இப்போ நான சொல்லறதை நிதானமா கேளுங்க. நீங்க ஒரு வாத்தியாரா இருந்த வரைக்கும் நீங்க பணத்தை சம்பாதிச்சீங்க. உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம பொருள் சம்பாதிச்சீங்க. உங்க குடும்பம் தெளிஞ்ச ஓடை போலே ஓடிக்கொண்டிருந்தது. கடமையைச் செய்ததால பணம் உங்களுக்கு வந்தது. இப்போ   பணம் பண்ணறதுக்கு மட்டும் உழைக்க ஆரம்பிச்சீங்க . பணம் உங்களை சம்பாதிக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நீங்க முழுக்க பணத்தின் பிடியில் இருக்கீங்க. இதில இருந்து நீங்க வெளிய வரலைன்னா அந்த வருமானத்தின் நோக்கமே சிதைஞ்சிடும். நல்லா யோசியுங்க. இப்போ நான பால் கார்டு  வாங்கப் போயிட்டு இருக்கேன். மாடியிலே என்னோட ரூம் இருக்கு. கொஞ்ச நேரம் தியானம் செஞ்சுட்டு இருங்க. அரை மணியில வந்துடுவேன்." என்று அவரை மாடியில் விட்டு விட்டு தெருவில் இறங்கி நடந்தார்.

 திரும்பி வந்த போது செல்லப்பன் இல்லை. " அங்கிள் இப்போதான் போறார் பா " என்றான் ஸ்ரீராம்.

ன்று மாலை , மூர்த்தி , காயப் போட்ட துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். உள்ளே பார்வதி, விருந்துண்ட மயக்கத்தில் தூங்கியிருந்தாள். மணி ஐந்தாயிற்று. சின்னவள் வரும் சத்தம் கேட்டது.

 'அப்பா!"

"என்னடா செல்லம் ? ஏன் ரொம்ப களைச்சு இருக்கே ?
பால் சாப்பிடுறியா ?"

சரிப்பா . இதோ முகம் கழுவிட்டு வர்ரேன்.

மூர்த்தி வேலை முடித்து , சமையலறையில் சென்று நிமிடத்தில் பால் கலந்து வந்தார். பெண் ஆசையாய் குடிப்பதைப் பார்த்து விட்டு, திருப்தியாய் புன்னகைத்தார்.

வாசலில் ஏதோ அரவம். கதவைத் திறந்தார். விநாயகமும் அவரோடு இன்னொரு பெண்மணியும். " ஒ வாங்க, வாங்க ! " மூர்த்தி வரவேற்றார்.

" அந்த பெண்மணி சற்று பரபரப்பாக இருந்ததை உணர்ந்த மூர்த்தி , விநாயகத்தைப் பார்க்க, அவர் , " சார் இவங்க செல்லப்பன் மனைவி. அவர் இங்க வந்தாரான்னு விசாரிக்க வந்திருக்காங்க "

அந்த பெண்மணி அவரைப் பார்த்து , " என் வீட்டுக்காரர் மதியம் உங்க வீட்டுல இருந்து வந்ததும், என்னண்டை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசினார். ஏதோ இந்த ரெண்டு வருஷத்துல இழந்ததைப் பற்றியும் சொன்னார். குழந்தையை ஹாஸ்டல் ல விட்டதைப் பற்றி ரொம்ப வருத்தப் பட்டார். சாப்பிடக் கூட இல்லை. நான சமையல் உள் வேலை முடிச்சிட்டு வந்து பார்த்தப்போ, அவர் போயிட்டார்.வண்டியைக் கூட எடுக்கலை.செல் போனும் அணைச்சிருககு   உங்க வீட்டு விலாசம் விசாரிக்க விநாயகம் அண்ணன் கிட்ட போன் பண்ணேன். அவர் தான் இங்கே கூட்டிட்டு வந்தார் " என்று பயத்தோடு விவரித்தார்.

மூர்த்தி " இல்லையே, அவர் போன பின் இங்க வரவே இல்லை. வேற எங்கயும் கேட்டீங்களா ? என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செல்  போன் மணி அடித்தது. செல்லப்பன் !

" என்ன மூர்த்தி சார் . தொந்தரவுக்கு மன்னிக்கணும். உங்க கிட்ட ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா ?"

" ஒ தர்ராளமாக . அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி. இப்போ எங்கே இருக்கீங்க ? உங்க மனைவி உங்களைத் தேடி இங்கயே வந்தாச்சு." என்றார் மூர்த்தி.

" அடடா ! மனசுக்குள்ள ஒரு வேகம் சார். எங்கப்பா அம்மா வைப் பார்க்கனும்னு தோணிச்சு. ரெண்டு வருஷம் ஆச்சு அவங்களைப் பார்த்து. நேரா திருப்பூர் போயிட்டேன். என் மனைவிக்குச் சொல்லுங்க இன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு வந்திருவேன் னு " செல்லப்பன் கூறி விட்டு , " சார் இன்னொரு விஷயம். நான படிச்சு, பெரியவங்க சொல் கேட்டு, அப்புறம் அவங்க நடத்தையைப் பார்த்து, இப்படி பல பாடம் படிச்சிருக்கேன். இன்னிக்கு முதல் நாளா , உங்க சொல்லும், எண்ணமும் ரெண்டும் குன்றின் மேல் வச்ச விளக்குப் போல பிரகாசித்ததை பார்த்தேன். என்னக்கு இத்தனை நாளா பணப் பித்து பிடித்தவர்களே உதாரணமாக இருந்தாங்க . முதன் முதலா பணத்தை துச்சமா பார்த்த நீங்கள் தான் என் வாழ்க்கைக்கு குரு. "

செல்லப்பன் தொடர்ந்தார் " நாளைக்கு எங்கப்பா அம்மாவோட உங்களைப் பார்க்க வர்ரேன். எங்கம்மா என்னைப் பார்த்ததும் அழுதுட்டாங்க சார். பணத்து பின்னால் சுத்திட்டு இருந்த என்னை ..."   இதைச் சொல்லும் பொழுதே அவர் நாத் தழு தழுத்தது .

" அட, இதுக்கெல்லாம் அழலாமா ?  சியர் அப். கட்டாயம் நாளைக்கு வாங்க. சாயங்காலமா பார்க்கணும்னா , நான நாளைக்கு சலிவன் வீதி வேணுகோபால் சாமி கோவில்ல பகவத் கீதை சொற்பொழிவு பண்ணறேன். ஆறு மணிக்கு. அங்கே வாங்களேன் " என்று அழைத்தார்.

" கண்டிப்பா வர்ரேன் சார். எங்க குல தெய்வமே கிருஷ்ணன் தான் . ரெண்டு வருஷமா கோவில் பக்கம் எங்க போனான் இந்தப் பாவி ?  கொஞ்ச போனை என் மனைவிக்குக்  கொடுங்க " என்றார்.

விநாயகமும் , செல்லப்பன் மனைவியும்  விடைபெற்ற பிறகே, அவர் பார்வதியை எழுப்பினார்.

வேணுகோபால சாமி கோவில் அன்று களை கட்டியிருந்தது. முன் மண்டபத்தில் ஒரே கூட்டம். மேடையில் மூர்த்தி தனக்கே உரிய அமைதியான ஆனால் அழுத்தமான பாணியில் கீதையை மக்களுக்கு விவரித்தார்.

தியான ஸ்லோகம் மற்றும் பீடிகை முடிந்து, எல்லாரும், அமைதியானவுடன், மூர்த்தி கூடி இருந்தவர்களைப் பார்த்து  " இப்போ நாம் பார்க்கப் போறது பக்தியும் கர்மமும் இணைந்த ஒரு ஸ்லோகம். நாம் எதைச் செய்தாலும், எதை உட்கொண்டாலும், எந்த யாகம் செய்தாலும், எந்த தானம் செய்தாலும், எந்த தவம் செய்தாலும், அதை அப்படியே பகவானுக்கு அர்ப்பணம் பண்ணனும்னு இந்த ஸ்லோகம் சொல்லறது.  இப்போ , உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். "நாம் ஒரு தப்பான கார்யம் பண்ணி விட்டு, அதை எப்படி பகவானுக்கு அர்ப்பணிக்கிறது ?  இது சாஸ்திர விரோதமல்லவா ?"  இந்த சிக்கலுக்கு உங்களிடம் விடை இருக்கா ?" என்று கூட்டத்தைப் பார்த்தார்.

" அர்ப்பணம் பண்ணக் கூடிய சரியான கார்யங்களை மட்டுமே தெரிந்து செய்யறது மட்டும் தான் ஒரே வழி " கூட்டத்தில் இருந்து இந்த குரல் கம்பீரமாக வந்தது. மூர்த்தி அது யாரென்று உற்றுப் பார்த்த பொழுது அங்கே செல்லப்பன் ! . மனிதர் அலாதியான அமைதியுடன் இருந்தார். நெற்றி நிறைய குங்குமம் ! கூடவே அவர் குடும்பமும், விநாயகமும் !

கூட்டம் முடிந்ததும் செல்லப்பன் அவர் கைகளைப் பற்றிக் கொண்டார். அவர் கண்களில் நீர். அவர் மனைவியோ, " சார் இன்னிக்கு காலைல தான் என் மகன் கிட்ட பேசினோம். நாளைக்கு அவனை ஹாஸ்டல் ல இருந்து இங்கேயே அழைச்சிட்டு வந்திரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்." என்றார்.

" செல்லப்பன் ! நான ஏதோ ரெண்டு வார்த்தை பேசப் போய், அது உங்களை ரொம்ப பாதிச்சிருச்சோ ? தவறு இருந்தா மன்னிக்க...." என்று  மூர்த்தி பேச ஆரம்பிக்க ,

செல்லப்பன் மூர்த்தியைப் பேச விடவில்லை. அவருடைய கையை பிடித்து, தன் ஜிப்பா பாக்கட்டில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அவர் கையில் வைத்தார். " நீங்க கேட்ட க்ளீனிங் சொல்யூஷன். இதுதான் நான பண்ணற கடைசி ஆம்வே வியாபாரம் ! " சிரித்தார்.

அப்போது பட்டர் வந்து , "எல்லோரும் வாங்கோ !  தீபாராதனை ! கண்ணனை சேவிங்கோ " என்றார்.


 " தேவ தேவா ! கண்ணா ! ஜகத்குருவே, உன் கருணையே கருணை !" மூர்த்தி கண்ணில் நீர் மல்க கோகுல பாலகனை இமை மூடாமல் சேவித்தார்.  .

 கற்பூர ஆரத்தி குழலூதும் கண்ணன் மீது பட்டதும், செல்லப்பனுக்கு சிலிர்ப்பு கண்டது .  அங்கே இருந்த ஒரு பக்தை  "குறை ஒன்றும் இல்லை..... " , பாட்டைப் பாட ஆரம்பிக்க, அனைவர் கண்களிலும் நீர் வழிந்தது. கண்டவர்  நெஞ்சமும் நிரம்பி நின்றது.


4 comments:

  1. It is a good lesson. Thank you very much
    nvenghat

    ReplyDelete
  2. dear shri venkat
    namasthe.
    i am walking along your way to counter amway..
    anyway.. wish you happy way of life.
    with greetings...
    cheenu@coimbtore

    ReplyDelete
  3. ..அன்பரே
    அருமையான எண்ணக்கோர்வை.
    எப்பொழுதும்போல் சீரான எழுத்து .
    என்னை எண்ண வைத்த வாசகங்கள் இதோ

    " நீங்க ஒரு வாத்தியாரா இருந்த வரைக்கும் நீங்க பணத்தை சம்பாதிச்சீங்க. உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம பொருள் சம்பாதிச்சீங்க. உங்க குடும்பம் தெளிஞ்ச ஓடை போலே ஓடிக்கொண்டிருந்தது. கடமையைச் செய்ததால பணம் உங்களுக்கு வந்தது. இப்போ பணம் பண்ணறதுக்கு மட்டும் உழைக்க ஆரம்பிச்சீங்க . பணம் உங்களை சம்பாதிக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நீங்க முழுக்க பணத்தின் பிடியில் இருக்கீங்க. இதில இருந்து நீங்க வெளிய வரலைன்னா அந்த வருமானத்தின் நோக்கமே சிதைஞ்சிடும். நல்லா யோசியுங்க. "

    அப்படியாயின் பணம் pannukiravargal எல்லாம் எதையாவது, குறைந்த பட்சம் மனசாட்சியை, இழந்துதான் ஆகவேண்டுமா
    மனம் அமைதியாக இருக்க விரும்புவர்கள் அதிகம் சம்பாதிக்க முடியாதா
    நல்ல அலசல்
    பி. கு. சலிவன் வீதி வேணுகோபால் சாமி கோவில் அருகே தான் நான் பிறந்து வளர்ந்தது.
    அதனால் உங்கள் கதை என் நினைவுகளை நெருடிவிட்டது. எங்கோ அழைத்து சென்று விட்டது .நன்றி

    அன்பன் பாலகோபால்

    ReplyDelete
  4. it is a good lesson for those who join amway only to sell products. But the initial aim of amway was to give the profit margin back to the consumers. Is amway like any other network marketing where only money is linked and the products are of not of good quality. If some body chooses only amway as their job then is their aim to make money is justified. Or if people only buy products from amway for their personal use will it serve the purpose. But it is good lesson for those who are greedy.

    ReplyDelete