Thursday, August 5, 2010

மதிப்பு கூட்டல் வழி- ஒரு சிறுகதை


மாலை நேர குளிர் காற்று பூங்காவில் இனிமையாக வீசியது. வைத்தியநாதன் உற்சாகமாக நடந்தார்.

"டே, டே ! கொஞ்சம் மெள்ள நட . இன்னிக்கு என்ன ஆளே மாறிட்டே ?" காசி பின்னாடியே நடந்து வந்தார்.

விஷயம் இருந்தது. அன்று வைத்தி தனது ஆறாவது சொற்பொழிவை பற்றி எண்ணிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய ஆன்மீக வாதி. தத்துவமும் , தருக்கமும் அத்துப்படி. பகவத் கீதையைக் கரைத்துக் குடித்தவர். தன்னை அண்டி வந்த எல்லோருக்கும் தான் பெற்ற அருட் செல்வத்தை வாரி வழங்குவார்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு அவரை பேச அழைத்திருந்தனர். சற்று முன்னர் தான் செயலாளர் பேசினார். "மிஸ்டர் வைத்தி ! நீங்க தான் பேசனுமின்னு நான முன் மொழிந்திருக்கேன். ஏறக்குறைய எல்லாரும் ஏத்துகிட்டாச்சு. முறைப்படி இன்னிக்கு மீட்டிங்க்ல பதிவாயிடும். அபப எங்க பிரசிடன்ட் உங்களைக் கூப்பிட்டுப் பேசுவாரு. வேறு ஏதாவது கண்டிஷன் உண்டா ?" என்று கேட்டார்.  இவர் பதில் சொல்வதற்குள் அங்கே செல் போன சமிக்ஞை செயலிழக்க, தொடர்பு அறுந்து போனது. வீட்டுக்குப் போய் பேசலாம் என விட்டு விட்டார்.

காசிக்கு அதை விவரிக்க, ' என்ன ஒய் ! கொஞ்ச நாளில புக் பப்ளிஷர் தொழிலை விட்டு சமயப் பேச்சாளராயிடுவே போல. சபாஷ் !" எனப் பாராட்டினார் . காசி அவருக்கு ஒரே நண்பர்.. உலக விவகாரங்களில் அவருக்கு ஆலோசகர். யதார்த்த சிந்தனை உள்ளவர். 'என்ன டாபிக் பேசப் போற ? " என்று வினவ, வைத்தி உற்சாகமானார். " பகவத் கீதை ஒன்பதாவது அத்தியாயம் . உபாசனை ரகசியங்களை விவரிக்கும் இடம். இன்றைய நவீன மக்களுக்கு ஏற்ற விஷயம் " என்று அடுக்கினார்.

" ஆமா ! நீயாத்தான் முடிவு பண்ணியா அல்லது ..." என்று காசி கேட்க , " நான்தான் சொன்னேன். ஏன் ?" என்று வைத்தி அவசரமாய்ச் சொன்னார். காசி இப்படிக் கேட்டது அவருக்கு இடித்தது. காசி கைகாரன். ஒரு இடத்திற்கு  சென்றால், ஒரு நிமிடத்தில் அங்கு நிலைமையை ஊகித்து விடுவான். "ஏண்டா அப்படிக் கேட்டே ?" என்று வைத்தி சந்தேகமாய் வினவினார்.

"ஒண்ணுமில்லை . சும்மாத்தான் கேட்டேன் " என்றார் காசி.என்னமோ நினைத்தவர் போல் அவரே தொடர்ந்து " எப்படி. முறையா வந்து கூப்பிடுவாங்களா ?. ந்யூஸ் பேப்பர்ல எல்லாம் வருமில்ல ? சன்மானம் ஏதாவது பேசினாங்களா ? " என்று காசி கேட்க, வைத்தி , " ஏண்டா , நம்ம பேசுறது நம்ம ஆத்ம திருப்திக்கு. இதுல போய் இந்தக் கண்டிஷன் எல்லாம் தேவையா ? என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

"சார், பேனா வாங்குங்க சார். கொரியா பேனா சார். பன்னெண்டு ரூபா தான் சார்." அவர்களது பேச்சில் குறுக்கிட்டுக் கொண்டு அந்த வியாபாரி நுழைந்தான். கழுத்தில், கையில், தோளில் என்று  உடம்பு முழுதும் பேனாக்களைத் தொங்க விட்டிருந்தான்.  

"சார், இந்த வகைப் பேனா கேம்லின் கம்பனில கூட இல்ல சார். லீக் சுத்தமா ஆகாது சார். மாவு மாதிரி எழுதும் சார். விலை கம்மி சார்." அந்த ஆளை பூங்காவில் இதற்கு முந்திபல தடவை பார்த்திருக்கிறார்கள். கால் மிதி, டார்ச் லைட்,என்று ஏதாவது விற்பான்.

வைத்தி ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து விட்டு, " ரெண்டு பேனா குடுப்பா " என்று பாக்கட்டில் கையை விட்டார். காசி அப்போது அந்தப் பேனாவை அலட்சியமாகப் பார்த்து , நேத்து சாயங்காலம் இதையே ஒரு அம்மாவுக்கு பத்து ரூபாவுக்கு வித்தியே. இப்ப எப்படி பன்னிரண்டு ரூபா ? " என்று கேட்க, "அந்த வியாபாரி, இல்ல சார். அப்படியெல்லாம் நான பண்ண மாட்டேன். ஆளுக்கு ஒரு  விலை வெக்கிற ஆள் நான இல்ல சார் ! " என்று அவசரமாக பதில் சொன்னான்.

"டே வைத்தி ! உனக்கு இந்த பேனா பார்க்கு வாசல்ல நான குறைவா வாங்கித் தர்ரேன்." என்று சொல்லவும், அந்த ஆள் விழிப்பாகி, "சார், இத்தனை நாள் வியாபாரம் பண்ணறோம். ஏதோ இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் கெட வேண்டாம். இந்தாங்க சார் , பத்து ரூபாவே குடுங்க. .கலர் பாத்து எடுங்க " என்று பணிவானான்.

வியாபாரம் முடிந்ததும், வைத்தி , "ஏண்டா அப்படி அவன் வயித்தில அடிச்சே ? இன்னிக்கு ரெண்டு பொறி உருண்டை  கூட கிடைக்காது அந்தக் காசில " என்று அந்த வியாபாரிக்கு பரிவு காட்ட , " நீ ஒரு முட்டாள். நம்ம கிட்ட வர்ற வரைக்கும் 'எது எடுத்தாலும் பத்து ருபா ' அப்படீன்னு ஒரு அட்டை கழுத்துல தொங்க விட்டிருந்தான். நம்ம கிட்ட வரும் போது அத எடுத்துட்டான். இதை நான கவனிச்சேன் . அதுதான் இந்த டிராமா. வைத்தியநாத அய்யர் வெள்ளைச் சோளம். அவருக்கு எப்படி அதெல்லாம் தெரியும் ?" என்று காசி தனக்கே உரிய பாணியில் சொன்னார்.

 வீட்டுக்குத் திரும்பி வரும் போது காசி கேட்டார். "எதுக்குடா பேனா? என்ன விசேஷம் ?"

"ஒ அதுவா ? நேத்து என் பசங்க ரெண்டும் கீதைல பதினஞ்சாவது அத்தியாயம் மனப்பாடமா சொன்னாங்க. பிரமாதமா இருந்துது. அதான் இன்னிக்கு அவங்களுக்கு சின்னதா ஒரு பிரசன்ட்." என்றார் வைத்தி.

"ஏண்டா , பிரசண்டுன்னு சொல்லறே , இப்படியா மொட்டையாக் குடுப்பே ? " என்று அதைப் பிடுங்கி, அருகில் இருந்த ஒரு பான்சி கடையில் இரண்டையும் பாக்கிங் செய்து வாங்கி வந்தார்.

"சரிதான். அழுக்குப் பாவாடை சிலுக்கு தாவணி கதை தான். பத்து ரூபா பேனாவுக்கு இத்தனை சோக்கா ?" என்று வைத்தி  சிரித்தார்.

" வைத்தி , இங்க பாரு. இது பரிசு. விலையைப் பத்தி குழந்தைகள்கிட்ட பேசக் கூடாது. இன்னிக்கு பேசாம இரு " என முன்னமேயே மிரட்டிக் கூட்டி வந்தார்.

வீட்டில் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. வைத்தியின் மனைவிக்கோ இரட்டிப்பு சந்தோசம். திடீரென்று ஏதோ நினைத்தவளாய், " காசி அண்ணா , உண்மையச் சொல்லுங்கோ . இது அவரோட ஐடியாவா , அல்லது உங்களோடதா ? " என்று காசியைப் பார்த்துக் கேட்டாள்.

"உங்களுக்கு எல்லாம் வைத்தியோட அருமை கொஞ்சமும் தெரியலை போல. அவன் அறிஞன் மட்டும் இல்ல. அவனுக்கு எத்தனை அன்புன்னு இப்பத்தான் புரிஞ்சது. கிராஸ்கட் ரோட்டுல நாலு கடை ஏறி வாங்கினான். கொரியா பேனாவாம்." என்று காசி முடித்தார்.

" குழந்தைகள் இரண்டும் ஓடி வந்து , வைத்தியை பிடித்துக் கொண்டன. அப்பா எவ்வளவு விலை சொல்லுப்பா ? " என்று. வைத்தி இப்போது அதிகக் கலவரமாய் விட்டார். தெருவோரத்தில் வாங்கியதை கடையில் வாங்கியதாகக் காசி சொன்னவுடன் அவருக்கு கை காலே ஓடவில்லை.

அப்போது காசி அவர் உதவிக்கு வந்தார். " நோ குட்டீஸ். பரிசோட விலை எல்லாம் சொல்லக் கூடாது. பாட் மானர்ஸ்." என்று அவர்களைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தார்.

பெரியவன் அவரைப் பார்த்து கொக்காணி காட்டினான். " நாங்க எப்படியும் கண்டு பிடிச்சிடுவோம் பாருங்க." என்று சவால் விட்டு விட்டு, தம்பியைப் பார்த்துத் திரும்பி " டே அன்னிக்கு பரத் ஒரு பேனா கொண்டு வந்தானே, இதே மாதிரி!  எத்தனை விலை சொன்னான் ?" என்று கேட்க, அவன் தம்பி , " ஏதோ நூத்துக்கு குறையாம சொன்னான்டா " என்று மண்டையைச் சொரிந்து கொண்டே பதில் சொன்னான்.

வைத்தியின் மனைவி , " ஏன் அண்ணா , இவ்வளவு விலை கொடுத்திருக்கார். பேசி வாங்கினாரா , இல்ல, எப்பவும் போல .." என்று கிண்டலாய் காசியைப் பார்த்தாள்.

காசி வைத்தியைப் பார்த்து சிரித்தார். " உனக்கு உங்க வீட்டுல ரொம்ப நல்ல பேர்"

தற்குள் வைத்தியின் மனைவி காப்பி போட சமையலறைக்குள் சென்று விட, குழந்தைகளும், பேனாவில் மை நிரப்ப உள்ளே ஓடினர்.

" ஏண்டா கொழந்தைகள் கிட்ட அப்படிப் பொய் சொன்னே . உனக்கு காசி விஸ்வநாதன்னு பேரை விட குருக்ஷேத்திரக் கண்ணன் அப்படீன்னு பேர் வைக்கலாம் " என்று கொதித்தார்.

"அடே வைத்தி. எந்தப் பொருளுக்கும் மதிப்பு நாம் அதை பயன்படுத்துவதிலும், அதை பக்குவமாக பிறருக்கு எடுத்துச் சொல்லறதுல யும் தான் இருக்கு. இப்ப நீ அந்தப் பேனா வெறும் பத்து ரூபா அப்படீன்னு கையில பாக்கிங் இல்லாம குடுத்திருந்தாயானால் உன் குழந்தைகளுக்கு இவ்வளவு சந்தோசம் இருந்திருக்குமா அல்லது உன் பொண்டாட்டி கையால் எனக்கு காப்பி தான் கிடைச்சிருக்குமா ?" காசி சிரித்தார்.

காப்பி வந்தது. வைத்திக்கு காசியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாய்த் தைத்தன. "உண்மைதானோ ? உலகில் மகிழ்ச்சி  பெருகுவது கூட இது போன்ற மெருகுகளால் தானோ ? "
ப்போது பாக்கட்டில் போன் அடித்தது.

"ஹலோ , வைத்தியநாதன் ஹியர் "

"சார். நான் ஸ்ரீதர். கோயம்பத்தூர் ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்புக்கு விழக் கமிட்டி தலைவர்.  உங்களைக் கூப்பிட்டு பேசுங்கன்னு ரஞ்சன் சொன்னார். எல்லாம் பேசியாச்சுன்னும் சம்பிரதாயமா கூப்பிடுங்க போதும்னும் சொன்னார்." என்றது எதிர் முனைக் குரல்.

வைத்தி, இப்போது சோபாவில் சாய்ந்து கொண்டார். " ஆமா ரஞ்சன் பேசினார். ஆனா ஒண்ணும் பேசி முடிவாகலயே. உங்க கிட்ட என்ன சொன்னார் ? "

இப்போது எதிமுனைக் குரல் தடுமாறியது. " இல்ல நீங்க எல்லாத்தையும் ஒத்துக்கிட்டீங்க அப்புடீன்னு ..." என்று இழுத்தார்.

" மிஸ்டர் ஸ்ரீதர் . நீங்களோ , அல்லது ரஞ்சனோ, என்னை  வந்து பார்த்து இது விஷயமா பேசறது நல்லது. தலைப்பு பத்தி பேசணும். அப்புறம், அன்னிக்கு புரோக்ராமை எந்த எந்த ந்யூஸ் பேப்பர்ல போடணும் அப்படீங்கற விஷயம், அப்புறம் அன்னைக்கு என்னை அழைச்சுண்டு போக யார் வருவாங்க , என்னுடைய சன்மானம் எவ்வளவு இதை எல்ல்லாம் பேசணும் . நானும் பிரிபேர் ஆகணும் இல்லையா ? பெரிய கூட்டமாச்சே ?" வைத்தி மிகவும் ஓய்வாகச் சாய்ந்து கொண்டார்.

இப்போது எதிர் முனையில்  ஸ்ரீதர்  , " ஒ, சரி. நான் அபப ... ரஞ்சன் கூட பேசீட்டு.. உங்களைப் பார்க்கறேன் " என்று தடுமாறினார்.

" நோ ப்ராப்ளம். நாளைக்கு பகல் முழுதும் நான் பிசி. சாயங்காலம் வாக்கிங் முடிஞ்சு ஏழு மணிக்கு வருவேன் . அபப வேணா வாங்க " என்றவாறு போனை அணைத்தார்.

காசி, இப்போது அர்த்த புஷ்டியோடு வைத்தியைப் பார்த்துப் புன்னகைத்தார். "வள்ளலாருக்கே இல்லாத விஷய ஞானம் இது. கடை விரித்தேன் கொள்வாரில்லை அப்படீன்னு புலம்பினார். பசிச்சவனுக்கு மட்டும்தான் சோறு. இது உனக்கு இன்னிக்கு புரிஞ்சிருச்சு. இனிமே உன் ஆன்மீகப் பகிர்வுகள் தேவையுடைய இடத்திற்கு மட்டும் தான் போகும்.  நீ சொன்னயே அந்தக் கண்ணன் கூட தன் மேல் பொறாமை உள்ளவர்களிடமும், அசிரத்தை உள்ளவர்களிடமும் கீதையின் ரகசியத்தை சொல்லக் கூடாதுன்னு தான்  சொல்லியிருக்காரு ".

நண்பர்கள் இருவரும் இணக்கமாகச் சிரித்தனர் இப்போது.

4 comments:

  1. வெங்கட்.. உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய ஞானோதயம் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.. அது என்னென்னு என்னால கொஞ்சம் யூகிக்க முடியுது..
    எந்த நல்ல விஷயமானாலும், இலவசமாக கெடச்சா, அதோட மதிப்பு தெரியாது.. அது மாதிரி, உயர்ந்த கருத்துக்கள, அதை புரிந்து கொள்ளும் உயர்ந்த மனிதர்களிடம், சரியான முறையில், சரியான இடத்தில் சொல்லனும்ங்கறத தான், இந்த கதையின் சாரம்சமாக நான் புரிஞ்சுகிட்டேன்..

    எங்கே சிஷ்யர் தயாராக இருக்கிறாரோ, அங்கே குரு தானாக வருவார்.. எங்கே சிஷ்யரின் தேடல் இருக்கிறதோ, அங்கே குரு அருகிலேயெ வருவார்.. ஆனா, ஒரு சிஷ்யர் தயாராக இல்லாதபோது, குரு போதனை செய்தால், அது விரலுக்கு இரைத்த நீராக மாறிடும்.. அதுதான் பகவத் கீதையின் முதல் நீதி.. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்ட பிறகே, அவர் கீதையை உபதேசிக்கிறார்..

    ஆனா சொற்பொழிவு, இந்த வகையில வருமான்னு தெரியல‌

    ReplyDelete
  2. அன்பரே
    கணினிக்கேற்ற கதையாகமட்டும் தெரியவில்லை
    காலத்துக்கேற்றதாகவும் உள்ளது
    இலவச இணைப்புகள் நிறைந்த காலத்துக்கேற்ற உண்மை
    பாலகோபால்

    ReplyDelete
  3. KS Guruprasad (A) ArunAugust 7, 2010 at 10:43 PM

    Hi Venkat,

    I read this story contains a two-fold message I suppose if I am not wrong

    1) For good deed there should be a reward either cash or kind
    2) Never underestimate value of a reward

    ReplyDelete
  4. Venkat Sir,
    All your stories contain messages.Why dont u write small stories told in mahabaratha?Kindly consider.
    Lakshmi Krishna Iyer

    ReplyDelete