Tuesday, August 10, 2010

வாய்க்கு ஒரு சமையல், வயித்துக்கு ஒரு சமையல் !!! - சிறுகதை


கு ஆபீசுக்கு கிளம்பும் முன், சுஜாவிடம் ," ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு வாசு வர மாட்டான். அவன் ஏதோ காசி போற க்ரூப்போட சமையலுக்கு போயாச்சு.  அவனுக்கு வேண்டிய இன்னொரு ஆளோட போன் குடுத்திருக்கான்.நானும் வரச் சொல்லிட்டேன். பதினோரு மணிக்கு வருவான். அப்பாவையே வழக்கம் போல பேசச் சொல்லிடு " என்றவாறே காரைக் கிளப்பினான். வழக்கம் போல என்று சொல்லும் போதே அவன் முகத்தில் ஒரு கிண்டல் சிரிப்பு.

ள்ளே கூடத்தில் சுந்தரேசன் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு மருமகளின் வாயைக் கிண்டிக் கொண்டிருந்தார். " என்னமோ இனிமே அரசாங்கம் மார்க்கு முறையை ஒழிக்கப் போறதாமே ? அபப இனிமே என் பேரன்  உன்கிட்டருந்து தப்பிச்சிடுவான்  இல்லையா ?"

சுஜா ரோஷத்தோடு திரும்பி , " மாமா ! காலம் கார்த்தாலே வேண்டாம். உங்க காலம் மாதிரி எஸ் எஸ் எல் சி பெயில் ஆனாக் கூட உத்தியோகம் கிடைக்கற காலமா இது ? ஏன், உங்க பையனண்டை இத எல்லாம் சொல்லறது தானே ? "

அங்கே ஓரத்தில் கோதுமையைப் புடைத்துக் கொண்டே இவர்களின் சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மாமியார்  ஞானம் , " சுஜா ! யாரோ கேட்டைத் திறந்தாப்பல இருந்தது. போய்ப் பாரேன் " என்றார்.

ந்தவன் ஒல்லியாக இருந்தான் இள வயது தான்.
ஏம்ப்பா ? வாசுக்கு பதிலா வந்தியா  ? எந்த ஊரு ? " என சுந்தரேசன் வினவ " என் பேர் சாமி. தொண்டாமுத்தூர் தான் ஊர். மணி அய்யர் கிட்ட இருந்துட்டு இப்ப ரெண்டு வருஷமா நானே சமையல் ஒத்துண்டு பண்ணறேன் "

" பூணல் தேதி தெரியுமா. வர்ற ஆவணி பத்து." என்று சுந்தரேசன் சொல்ல, சாமியும் , " தெரியும் மாமா . அண்ணா சொன்னார்."

"  ரெண்டு நாள்  பண்ணனும். முத நாள்  நாந்தி. ரெண்டாம்  நாள் உபநயனம்." என்ற  சுந்தரேசன் மருமகளைப் பார்த்து , "ஏம்மா ! உன் ஆம்படையான் ஏதாவது மெனு சொன்னானா ?" என்று மூக்குக் கண்ணாடிக்கு மேலே அவளைப் பார்க்க, சுஜா ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டு  அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். " ஏம மாமா இந்த உபசாரம் ? இந்த மெனு விஷயத்தில என்னிக்காவது நாங்க சொல்லி ஏதாவது நடந்திருக்கா . எல்லாம் பாசாங்கு." என்றவாறு கிசுகிசுத்து விட்டு அகன்றாள்.

"வாடா அம்பி   உக்கார்." என்றதும் அவன் ஊஞ்சல் அருகில் வந்து தரையில் அமர்ந்து கொண்டான்.

முதல் நாள் காலையில என்ன ? என்று அவனை பார்க்க, அவன் " காலைல காப்பி. அப்புறம் டிபன். அம்பது பேர் இருப்பாளா ?" என்று கேட்க, "பரவாயில்லை. கெட்டிக்காரன். சரியா ஊகிச்சுட்டே . சொந்தக் காராள் தான் இருப்பா. இட்டிலி மட்டும் போதும். மதியம் சாப்பாடு. ஒரு பொரியல், பச்சடி, மோர்க்குழம்பு, சிம்பிளா ஒரு பாயசம்......" அவர் எழுதி முடித்து விட்டு , இதெல்லாம் பெரிசில்ல . உபநயனம் அன்னிக்கு தான் மெனு பிரமாதமா இருக்கணும் " என்றதும் ஞானமும் சுஜாவும் களுக்கென்று சிரித்து விட்டனர். சாமி திரும்பிப் பார்த்து விழித்தான்.

சுந்தரேசன் கோபமாக அவர்களைப் பார்த்து  முறைத்து விட்டு சாமியைப் பார்த்து    "காலைல என்ன போடறது.?"  என கேட்க ,  அவர் முடிக்கும் முன்பே சாமி உற்சாகமா ," ஒரு இட்டிலி சம்பிரதாயத்துக்கு போட்டுட்டு, பூரி, வடை , பருப்பு உசிலி சேவை , மசால் தோசை எல்லாம் போட்டுடலாம் மாமா... " சுந்தரேசன் இதை ரசிக்கவில்லை என்று அப்படியே நிறுத்தினான்.

" ஏண்டா அம்பி. வர்றவாள்லாம்  பூணலை பாப்பாளா இல்ல பாத்ரூமுக்கு  ஒடுவாளா ? உன் மெனு சகிக்கலை " என்றார். சாமியின் முகத்தைப் பார்த்து பெண்மணிகள் இருவரும் புன்முறுவலித்தனர்.

சுந்தரேசன் தொடர்ந்தார்." காலம் கார்த்தாலே வயிறு அப்போதான் இயல்புக்கு வரத் தொடங்கியிருக்கும். அப்போ பார்த்து மசால் தோசை போடுவாயா ? பூரி வேறே ? மணி அய்யர் உனக்கு ஒண்ணுமே சொல்லித் தரலியா ? சரி சரி. இப்ப நான சொல்லறேன் எழுதிக்கோ ?"  சுந்தரேசன் முடிக்கவும் ,ஞானம்  " கீதோபதேசம் ஆரம்பம்" என்று சுஜாவின் காதைக் கடித்து சிரித்தாள்.

" இட்டிலி ஒரு இலைக்கு குறைந்தது நாலு இருக்கணும். கூடவே தேங்காய்ச் சட்டினி. தொட்டுக்க சாம்பார் வேணா இருக்கட்டும். பருப்பை கொட்டி வைக்காதே. பேருக்கு பருப்பு இருந்தா போறும். பின்ன ஒரு கரண்டி பொங்கல். இட்டிலியும் பொங்கலும்  எப்படிப் பண்ணுவே ? என்று அடுத்த கேள்வியை வீசினார் சுந்தரேசன்.

"என்ன மாமா இப்படிக் கேட்டுட்டேள்? ஒன்னரைக்கு ஏழு கலவையில உளுந்தும் அரிசியும் போட்டு ஆட்டி கடைசில கொஞ்சம் சோடா உப்புப் போட்டு வச்சா இட்டிலி பூ மாதிரி வருமே ? அதைப் போல , பொங்கல்ல வழக்கமா போடற அரிசியும் பருப்பும் போட்டு வெந்ததும், மிளகு சீரகம்  எல்லாம்  போட்டு கடைசில மேலுக்கு டால்டா விட்டு இறக்கினா ..." சாமி முடிப்பதற்குள் சுந்தரேசன் இடைமறித்தார்.

"சனியன் சனியன் ! சோடா உப்பாம், டால்டாவாம் ! அம்பி கோயம்புத்தூர்ல நீங்க எல்லாம் ஒரே மாதிரிப் பேசறேள். சோடா உப்பு போட்டா ஒரு இட்டிலிக்கு மேல இறங்காது. டால்டா போட்டா, நாலு மணி நேரத்துக்கு வயித்தை அமுக்கும். இட்டிலிக்கு ரெண்டுக்கு ஏழு போட்டு செய் கொஞ்சம் ஆமணக்கு விதையை போடு.. பூ மாதிரி வரும்.டால்டாவுக்கு  பதில் கால் கரண்டி நெய்யை ஊத்தி பிரட்டீடு. அப்புறம் பாரு."

சாமி இப்போது புதிதாக கேள்வி ஒன்று போட்டான் . " எண்ணெய் எல்லாம் சண் ப்ளவர் தானே ?" இப்போது பெண்மணிகள் இருவரும் வாய் விட்டே சிரித்து விட்டனர். சுந்தரேச அய்யர் இப்போது நன்றாகவே அவர்களை முறைத்து விட்டு , "எனக்காகவா இந்த மெனு ? ஏதோ சொந்த பந்தம் வர்றப்ப  வயிறு வாழ்த்தர மாதிரி இருக்கட்டுமேன்னு சொன்னேன். எதுக்கு சிரிக்கறேள்"  என்று சீறினார்.  ஞானம் சுஜாவை ஓரக் கண்ணால் பார்த்து, " நல்லா மாட்டீண்டான் " என்றுவிட்டு அடக்கிச் சிரித்தாள்.

சுந்தரேச அய்யர் இப்போது அவனைப் பார்த்து , "இங்க என் கூட வா" . என்று சமையல் உள்ளினுள் அழைத்துச் சென்றார்.  "மேலே பார்" என்று எக்சாஸ்ட் மின் விசிறியைக் காட்டினார். " இது மாட்டினது முதல் இந்த மாதிரியே இருக்கு " என்று விட்டு, "அப்படியே அங்க பார்" என்று பக்கத்து வீட்டு சமையல் அறை புகைத்துவாரத்தைக் காட்டினார்." எப்படி இருக்கு அது ? " என்று கேட்க , " எண்ணெய்ப் பிசுக்கு தொங்கறது மாமா " என்று சாமி இப்போது அடக்கமாக பதில் சொன்னான். இப்போது அவனுக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை வந்திருந்தது.

"இப்படி சண் பிளவர் ஆயில் சாப்பிடறவா வயித்தில அல்லவா தொங்கும் ? அதை நம்ம தொடலாமோ ? " என்று சுந்தரேச அய்யர் வெற்றியுடன் அவனைப் பார்க்க , அவன் இப்போது சற்றுத் தெளிவாக , " அபப நீங்க வீட்டுல என்ன போடறேள் ? " என்று ஆர்வமாகக் கேட்க , " கடலை எண்ணெய் தாண்டா அம்பி. ஆயிரக்கணக்கான வருஷம் அதை அல்லவா சாப்பிட்டோம். ? இப்ப என்னடான்னா , சண் பிளவர், கொலஸ்ட்ரால் அப்படீன்னு கதை கட்டறா "

இப்போது சாமி கவனமாகி விட்டான். இப்போது பாயசத்தைப் பற்றி பேச்சு. " நன்னா மில்க் மெய்ட் போட்டு அடைப் பிரதமன் போட்டுடலாமா ?" என்று விட்டு மாமாவைப் பார்க்க, அவரோ , முன்னை விட அதிக கோபமாகி , " நோக்கு சயின்ஸ் கூட தெரியலடா !" என்று விட்டு மேலே சொல்லும் முன் சுஜாவைப் பார்க்க , கீழே அவர்கள் இருவரும் ,வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவர் இப்போது விறைப்பாகி, " பாலும் தானியமும் சேரக் கூடவே கூடாது அப்படீங்கிறது ஆயுர்வேத விதி. பாலைப் போயி அரிசியோட கலக்கரயே ? " எனச் சொல்ல  , அவன் அப்போ , பாயசத்துக்கு எதைத்  தான் போடறது ? " என்று அப்பாவியைக் கேட்டான். மாமா ,   "தேங்காய்ப் பாலைப் போடுடா. அசத்திப் புடலாம்" என்று சொல்ல, அவனோ "தேங்காய்ப் பாலா , நேரம் செலவு கூலி , இதெல்லாம் .." என்று இழுத்தான்.

இப்போது சுஜா , " செலவெல்லாம் மாமா பார்க்க மாட்டார். மகன் கை நிறைய சம்பாதிக்கறார். இதுக் கெல்லாமா கணக்கு " என்று விட்டு அய்யரின் முகத்தைப் பார்க்க, அவர் சாமியைப் பார்த்து விட்டு " கேட்டுக்கோடா அம்பி . அவளே சொல்லீட்டா . பின்ன நான என்ன சொல்ல ?" என்று இருவரை பார்த்து முகத்தைக் கோணினார்.

"நாந்தி அன்னிக்கு சாயங்காலத்துக்கு, அல்வாவும் , பக்கோடாவும் காபியும் போடலாம் இல்லையா ?" சாமி இதிலாவது வெற்றி அடையலாம் என்று பார்த்தான்.

மாமாவோ, "கூடாது கூடாது. சாயங்காலம் எண்ணெய்ப் பதார்த்தமா ? அது பிரதோஷ காலம்டா அம்பி. மத்தியான விருந்து நன்னா செரிச்சி நாலு மணி நேரம் ஆனதுக்கு அப்புறமா ஒரு ப்ரூட் சாலட் பண்ணிடு. ஆவணில ஆப்பிளும், கொய்யாவும், ஆரஞ்சும் , திராட்சையும் கிடைக்கும். நறுக்கித் தேன் கலந்து குடு "

சற்று நேரத்திற்குப் பிறகு சாமி மெனுவையும் அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு போனான். "பாவம்நா இவன் ! இன்னிக்கே இவ்வளவு உபதேசம். உபநயனத் தண்ணிக்கு  இன்னும் எவ்வளவு வாங்குவானோ ?" என்றுவிட்டு ஞானம் சிரிக்க, மாமாவோ , " உங்களுக்கு எல்லாம் , விவஸ்தையே கிடையாது. கிடைத்ததை முழுங்கிண்டு பின்னால டாக்டருக்கு ஓடுவேள். வேணாப் பாரு. சாமி எப்படி அசத்தப் போறான்னுட்டு !" என்று எதையோ நினைத்துப் புன்னகைத்தார்.

சொன்ன மாதிரியே, சாமி அசத்தி விட்டான். சுந்தரேச அய்யர் சமையறை முழுதும் டால்டா வோ , சோடா உப்போ மறைத்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று அவ்வப்பொழுது தேடினார். பயல் உண்மையாகத்தான் இருக்கிறான் என்று உணர்ந்து ஆனந்தப் பட்டார்.

உபநயனம் வெற்றிகரமாக நடந்தது. எல்லாரும் உறவினர்கள் ஆனதால் இரண்டாம் நாள் மதிய விருந்துக்குப் பிறகே புறப்பட்டார்கள். முந்தைய நாளிலிருந்தே , எல்லாரும் சமையலைப் புகழ்ந்த வண்ணம் இருந்தனர். " டே சுந்தரேசா, நல்லாத்தான் சாப்பிட்டேன் . ஆனாலும் வயிறு லேசா இருக்குடா. கச கசன்னு போடாம , குறைஞ்ச அயிட்டம் தான். ஆனா வயித்துக்கு சுகமா இருக்குடா." இது மாதிரி பல புகழ்ச்சிகள். சுந்தரேசனோ, " நாளைக்கு வரைக்கும் இருப்பே. அப்புறம் சொல்லு. " என்று இன்னும் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டார்.

ம்பந்தி  விடைபெறும் போது,"உபநயனம் அமர்க்களம். வாத்தியாரும் நிதானமா சொன்னார். உபசரிப்பும் பிரமாதம். அப்புறம் விருந்து ஏ ஒன. யார் மெனு நீங்கதானா ? சமாளிச் சுட்டேள் போங்கோ.  " என சிலாகித்தார்.

ஞானத்தின் தம்பி, " அத்திம்பேர், அந்த ப்ரூட் சாலட் பாருங்கோ, இன்னும் வாயில இருக்கு. சாயங்காலத்துக்கு அதைக் குடுக்கனுமின்னு தோணித்து பாருங்கோ." என்று பாராட்டினார்.

சுந்தரேச அய்யரோ , " ஏதோ நம்ம ஒண்ணு ரெண்டு சொல்லுவோம். ஆனா சமையல் காரர் கையிலன்னா எல்லாமும் இருக்கு ? ஒரு விண்ணப்பம். நீங்க ஒரு வார்த்தை அவனையும் பாராட்டீட்டு போங்கோ." என்று சொன்னார்.

ல்லாரும் போன பிறகு, சாமி மெல்ல வந்தான். " மாமா , சொல்லீட்டுப் போக வந்தேன். எல்லா ஐடியா வும் உங்களோடது. ஆனா எல்லாரும் என்னைப் பாராட்டிட்டுப் போறா. நாலு கல்யாணம் எனக்கு இங்கேயே புக் ஆயிடுச்சு மாமா. எல்லாம் உங்களால்தான். நாக்குக்கு மட்டுமே சமைச்சுப் போட்ட எனக்கு வயித்துக்காகவும் எப்படி சமைக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தது நீங்கதான்." என்ற படி அய்யரின் காலைத் தொட, அய்யரோ கண்கலங்கி, " டே, டே நான என்னடா பண்ணேன். வெறும் வாய் வார்த்தை. நீ தாண்டா அடுப்படியில வெந்து இவாளுக்கெல்லாம் பண்ணினே. உனக்குத்தான் எல்லாப் பெருமையும். போற இடத்தில பேரைக் காப்பாத்து." என்று அனுப்பி வைத்தார். ஞானமும் சுஜாவும் இப்போது ஐயரைப் பெருமையோடு பார்த்தனர்.

1 comment:

  1. உபநயனம்

    http://sagakalvi.blogspot.com/2011/11/blog-post_23.html

    மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்


    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    ReplyDelete