Sunday, August 15, 2010

தவப் புதல்வர்கள்-சிறுகதை

மார்கழிக் குளிர் சில்லென்று நின்று குடைந்தது.   நாச்சிமுத்துக் கவுண்டர்   இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தார். கோவிலுக்குள் இப்போதே சில சாதுக்கள் பாட்டு ஆரம்பித்து விட்டனர். ஒரு குரல் மட்டும் இனிமையாக ஒலித்தது. அந்த ரிஷிகேசத்து சந்நியாசி போலும். மடப்பள்ளியில் சமையல் மணம் சுகமாய் நாசியில் சஞ்சரித்தது.


பட்டர்    இவரை நோக்கி  வந்தார்  " கவுண்டர் வாள் ! இன்னிக்கு ராத்திரிக்குள்  பெரும்பாலும்  பாகவதர்கள் எல்லாம் வந்துடுவா . தங்க வைக்க  சில வீடும் தயார் செஞ்சிருக்கேன். கோவில் பிரகாரத்திலேயும் சில சாதுக்கள் தங்குவா. உங்க ரைஸ் மில்   குடோனில கொஞ்சம் பேரை படுக்க வைக்க அனுமதிக்கணும். புதுசா பாய் ஒரு அம்பது இருந்தா பரவாயில்லை. அப்புறம் ரெண்டு குடி தண்ணீர் அண்டா வாடகைக்கு வேணும். சமையல் ஆட்கள் வந்தாச்சு. சாமானும் இறங்கியாச்சு. காலை அடுப்பு மூட்டணும் " பட்டர் அடுக்கிக் கொண்டே போனார். 

கவுண்டர் பட்டருக்கு தெளிவாக சில உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, சாமான்களுக்கு ஏற்பாடு செய்து விட்டு , திரும்பி நடந்தார். ஒன்றா இரண்டா ?  ஐம்பது வருடமாக அவர் இதை விடாமல் அல்லவா செய்து வருகிறார் ? முதுமை அவரை விரட்டிய போதும் இந்த உத்சவம் அவரை பொறுத்த வரை ஒரு தவம். ஒரு பிராயச்சித்தம்.

ல்லாம் ஆறு மாதங்களுக்குள் நடந்து விட்டது. இளைஞன் நாச்சிமுத்து வின் அப்பா தான் முதல் முதலில் அந்தச் செய்தியைச் சொன்னார். உச்சவரம்புச் சட்டம் பிறபபித்தாகி விட்டது என்றும், பத்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது என்றும், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்றும் விவரித்தார்.

முத்துஸ்வாமி அய்யர் அதைக் கேட்டதும், முதலில் தன் உபரி நிலங்களை அங்கே உழுதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும்  பிரித்துக் கொடுத்து விட்டார். ஏதோ அவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டார். கடைசியாய் பத்து ஏக்கர் மட்டும் வைத்துக் கொண்டார். அங்கே தான் அவருக்கு பிரச்சினையே எழுந்தது. அதை உழுது கொண்டிருந்த மயில்சாமி ஒரு நாள் சில முரட்டு ஆட்களுடன் வந்து , இந்த நிலம் தனக்கே சொந்தம் என்று வாதாட , முத்துஸ்வாமி இடிந்து போய் விட்டார்.

பிரச்சினை ஒரு நாள் முற்றியது. ஊர் கூடி நியாயம் கேட்டும் ஒன்றும் பயனில்லை. அரசியல் வேறு புகுந்து கொண்டது. அன்றிரவு அய்யர் நாச்சிமுத்து வின் வீட்டிற்கு வந்தார்.இரவு வெகு நேரம் பேசியதாக  அம்மா பிறகு சொன்னாள். விடிந்து பார்த்தால், வண்டி கட்டி , கிளம்பி விட்டார். சங்கரன் மட்டுமே நாச்சிமுத்துவிடம், தாங்கள் மதராஸ் செல்வதாகவும், உறவினர் உதவுவதாகவும் சொன்னான். இருவரும் ஒரே வயது பள்ளித் தோழர்கள்.

நாச்சிமுத்துவிற்கு  அப்போது வயது பதினைந்து  மட்டும் தான். ஊரே அன்று திரண்டிருந்தது. சங்கரன் போகும் போது சொன்ன வார்த்தைகள் இன்று போல் ஒலித்தன. "ஆச்சு நாச்சிமுத்து ! எங்கப்பா நேத்து சொன்னார். இரண்டாயிரம் வருஷ சகாப்தம் முடிஞ்சு கிளம்பறோம் அப்படீன்னு.! ஒரே வருஷத்தில எங்கப்பா சொந்த ஊர்லயே அகதியாயிட்டார். வர்ரேன். எங்க வீட்டை அவர் விக்கலை. அதை பார்த்துக்கோ."

அவன் தந்தை , தாய், சகோதரி எல்லாரும் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தனர். சங்கரனின் அப்பா கடைசி முறையாக அவர் வாழ்ந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். சங்கரனின் பார்வை கடைசி வரை கோவில் கோபுரத்தையே பார்த்தபடி இருந்தது. வண்டி மெல்ல நகர்ந்து திரும்பியது.

ல்லவர்களின் பேச்சு பலிக்கவில்லை அங்கே. அவர் நிலம் அபகரிக்கப் பட்டது. சில மாதங்களுக்குப் பின் , மயில்சாமி ஒரு கொலை வழக்கில் மாட்டி போலீஸ் பிடித்துக் கொண்டு போனது. பிறகு ஊர்க் கவுண்டரான நாச்சிமுத்துவின்  அப்பா , அதை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு, அய்யருக்கு தகவல் அனுப்பினார். அய்யர் தன் பதிலில் " அது உங்களிடமே இருக்கட்டும். பிறகு பார்க்கலாம். அதில் வரும் வருமானத்தில் மார்கழி விழாவை மட்டும் தவறாமல் நடத்துங்கள்."  என்று எழுதி  விட்டார். கிருஷ்ணர் கோவில் சங்கரனின் பரம்பரைச் சொத்து. மார்கழி விழாவில் ஹரித்துவாரில் இருந்தெல்லாம் சாதுக்கள் வருவார்கள்.  முத்துஸ்வாமி அய்யர் வைராக்கியமாக ஊருக்குத் திரும்பி வர மறுத்து, பட்டணத்திலேயே காலமானார்.

 தந்தைக்குப் பிறகு கோவில் நிர்வாகம் நாச்சிமுத்துவிற்கு வந்தது.

ம்பது   வருஷம் ! அவர் மனம் கணக்குப் போட்டது. இப்போதுதான் அவர் சங்கரனைப் பார்க்கப் போகிறார். சங்கரா , இத்தனை காலமும் உன் மனசை  இவ்வளவு கல்லாவா வச்சிருந்தே ? சட்டைப் பையில் அந்த தபால் அட்டை நெஞ்சில் முட்டியது. ஹரித்துவாரில் இருந்து எழுதியிருந்தான். மார்கழி விழாவில் சநதிப்போம் என்று.


சங்கரன் அவ்வப்போது கடிதம் எழுதுவான். கல்லூரி முடித்து விட்டு சம்ஸ்கிருத விரிவுரையாளராக டில்லியில் இருப்பதாகவும் ஒரு முறை எழுதினான். தமக்கை கல்யாணம் முடிந்ததும், தந்தை இறந்ததும் குறுகிய இடைவெளியில். அதன் பிறகு வெகு காலம் தகவல் இல்லை. பத்து வருஷம் முன்பு மார்கழி விழாவுக்கு வந்த  இந்த ரிஷிகேச  சுவாமிதான் , சங்கரனை தான் பார்த்ததாகவும் சொன்னார் . பிறகு வந்த வருடங்களில் இவர் மட்டும் வருவார். சங்கரன் பற்றிய தகவல் ஏதும் அவரிடம் இல்லை.

சங்கரனின்  வீட்டை மட்டும்   இது நாள் வரை வெள்ளை அடித்து பராமரித்து வந்தார் கவுண்டர். விழாவின் போது சாதுக்கள் மட்டும் அங்கே தங்குவர்.

கோவிலுக்குள் மீண்டும் நுழைந்தார் கவுண்டர். அங்கே பாகவதக் காட்சிகளை விளக்கும் ஒரு சிறு சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. ரிஷிகேச  சுவாமி ஸ்லோகங்களையும் தமிழ் விளக்கங்களையும் தந்து பிருந்தாவனத்தையே அங்கு கூடியிருந்த பக்தர் முன் காண்பித்துக் கொண்டிருந்தார். முழுதும் மழித்த முகமும் தலையும் அந்த முதிய சுவாமிக்கு. அவர் யார், எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. அவரிடம் அனைத்து பண்டிதர்களும், துறவிகளும் பெரும் மரியாதை காட்டினர். இவரோ,பரப்பிரும்மம். கோவிலில் கோவர்த்தன மலையைச் சுண்டு விரலால் தூக்கும் கோலத்தில் இருந்த கிருஷ்ணனை இமை கொட்டாமல் பார்த்தார் . கண்ணில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்தது .

அவர் மட்டுமல்ல. அந்த சுற்று வட்டாரத்தில் கோவர்த்தன கிரிதாரியின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. சங்கரனும் , அவன் தந்தையும் இவனுக்கு தாசர்கள். "எங்க குடும்பமே அவனுக்கு அடிமை" என்று பெருமையாகச் சொல்வான்.


வுண்டர் சுவாமியின் அருகில் போய் அமர்ந்தார். பாட்டு  முடிந்து சுய நினைவுக்கு வந்தவர், "ஒ , கவுண்டரா ? இன்னிக்கு நாம சங்கீர்த்தனம் எப்படி இருந்தது ? காளிங்க நர்த்தனத்தை ரசிச்சீர்களா ?" என்று குழந்தை போல ஆர்வமுடன் கேட்க , கவுண்டர், தயக்கமாக, "சாமீ, அம்பது வருஷத்துக்கு முந்தி இங்க பஜனை நடக்கும், பெரிய அய்யரும் , சங்கரனும் நல்லாப் பாடுவாங்க. சமயத்தில உச்சக் கட்ட பஜனைல எழுந்து நின்னு ஆடவும் செய்வாங்க. நாங்க எல்லாரும் ஆட ஆரம்பிச்சிருவோம். பொம்பளைங்க விம்மி விம்மி அழும். தப்பா நினைக்காதீங்க. சங்கரன் போன பிறகு, நான பஜனைல உக்காந்ததே இல்லைங்க. மடப் பள்ளியோட சரி."

"சாமியார் இப்போது ஒரு மிடறு தண்ணீர் குடித்து விட்டு, கவுண்டரை பார்த்துச் சிரித்தார். "உங்களுக்குத் தெரியுமா ? சங்கர சர்மா இப்போ ஒரு சந்நியாசி. "

கவுண்டர் இப்போது பரபரப்பானார். " எப்படி இருக்கார் ? அவுங்க குடும்பம் ? "

சுவாமி சிரித்தார். " அவர் அத்துவித மார்க்க சந்நியாசி. அவருடைய சந்நியாச ஆசிரமப் பேரு கிருஷ்ணானந்தா. நிலையாக இப்போ எங்கும் இல்லைனும் சொன்னார். அவரைப் போன்றவர்கள் குடும்பத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள் "

கவுண்டர் அப்போது சங்கரன் போட்ட கடிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். ஸ்வாமிகள்  அதைப் பார்த்து விட்டு பெருமூச்செறிந்தார். "சந்நியாசிக்கு கடைசி ஆசைகள் உண்டு போல. அதான் பிறந்த ஊரையும் கிரிதாரியையும் பார்க்க வர்றார் "

கவுண்டர் தள்ளாடியபடியே வீட்டிற்குத் திரும்பினார். சங்கரன் சந்நியாசியா ? இந்த ஊர்ல நடந்த கசப்புதான் அவனை இந்த முடிவுக்குத் தள்ளியதோ ? இன்னும் ஐந்நூறு வருடம் உற்சவம் செய்தாலும் சங்கரனுக்கு செய்த அநீதிக்கு பிரதியாகுமா ? நாளை அவனை எப்படி பார்ப்பது ?

டுத்த நாள் பாண்டுரங்கன் கிரிதர கோபாலனுக்கு உத்சவம். ஊரே திரண்டிருந்தது. அபிஷேகம்  முடிந்து பெரும் நாம சங்கீர்த்தனம் துவங்கியது. பாகவதர்கள் தங்கள் பக்தியால் அந்த ஊரையே மூழ்கடித்துக் கொண்டிருந்தனர். ஸ்வாமிகள் உணர்ச்சி பொங்கப் பாட எல்லாரும் கண்ணை மூடி மெய் மறந்து கிறங்கி இருந்தனர்.

கவுண்டர் தான் வாசலிலேயே தவம் கிடந்தார். ஒவ்வொரு சாதுவின் முகத்தையும் உற்று நோக்கி, சிலரிடத்தில் பேரை வேறு விசாரித்துக் கொண்டும் தவித்துக் கொண்டு இருந்தார். ஆரத்திக்கு பட்டர் அழைத்த போது கலங்கிய மனத்துடன் தான் உள்ளே போனார். "பட்டரே , உற்சவமே முடியப் போகுது.இன்னும் சங்கரன் வரலை. இப்போ அவன் இல்லாம முடிக்கறதா ?" என்று பரிதாபமாய்க் கேட்க, பட்டர் அவரை புரிந்து கொண்டவர் போலப் பார்த்து விட்டு, " எல்லாம் அவன் வேலை. அவன் கிட்ட விட்டுட்டு வாங்க. சுவாமி உங்களைக் கூபிடுறார் பாருங்க "

கவுண்டர் சுவாமிகளிடம் செல்லும் போது நெஞ்சம் கனத்தது. உள்ளே ஆரத்தி மணி அடிக்கும் போது ," விட்டல, விட்டல , கோபாலா , பாண்டுரங்கா, கோவிந்தா " என்று கோஷம்.  கோவிலே அதிர்ந்தது. மிருதங்கங்களும், கஞ்சிராக்களும் மதுரமாய் முழங்கின.  முதல் வரிசையில் ஸ்வாமிகள் நின்று கொண்டு , கவுண்டரை அழைத்தார். இவர்  அருகில் சென்றதும், ஸ்வாமிகள் கவுண்டரின் கையைப் பிடித்துக் கொண்டார். கண்ணுக்குள் கண் பார்த்து  "நாச்சிமுத்து, இன்னுமா என்னை உனக்குப் புரியலை " என்று கேட்டார்.

அந்த கனிவு, அந்த நெருக்கம் !  கவுண்டர் தீயை மிதித்தது போல சற்றுப் பின் வாங்கினார்.  தெய்வீக  நாகம் தன் உயிருக்கு உயிரான மாணிக்கத்தை வாயைத் திறந்து காட்டியது போலும். காலம் அடைத்து வைத்திருந்த புதிர்கள் விலகின. நாச்சிமுத்து வாயைத் திறக்க நினைத்தும் முடியவில்லை. சுற்றி நின்றோர் கண்ணன் நாம மழை பொழிந்து கொண்டிருக்க, சங்கரன் என்கின்ற கிருஷ்ணானந்தன் அங்கே அன்பு பொழியும் தெய்வீக முகத்தோடு  "இப்போது உனக்கு மகிழ்ச்சியா நாச்சிமுத்து ?" எனக் கேட்டது தான் தாமதம்.  நாச்சிமுத்து வின் உள்ளே அடக்கி வைத்திருந்த உணர்ச்சி ஊற்றுக்கள் வெடித்துப் பீறிட்டன.  "சங்கரா "  என்ற கேவலுடன் மூர்ச்சையாகி விட்டார்.

சுய நினைவு வந்த போது கவுண்டர் சங்கரனின் கனிவான முகத்தில் தான் விழித்தார். ஊர் மக்கள் அனைவரும்  கூடியிருந்தார்கள். எல்லாரும் அவரைத் தேற்றி எழுப்பி ஆசுவாசம் செய்ய, நாச்சி முத்துவிடம், சங்கரன் மெதுவாக, இப்போ எல்லாரையும் சாப்பிடச் சொல்லலாமா நாச்சிமுத்து ? " என சிரித்துக் கொண்டே வினவ , கவுண்டர் வெட்கம் மேலிட்டு  எழுந்து எல்லாருக்கும் வருத்தம் தெரிவித்து  விட்டு, பட்டருக்கு கைகளாலேயே சமிக்ஞை செய்ய , அவர் உடனே பந்தி ஏற்பாட்டுக்கு விரைந்தார்.

சங்கரனோ அவர் கையை விடவே இல்லை. பாகவதர்கள் திருப்தியுடன் பிரசாதம் உண்ணச் செல்ல, நண்பர்கள் இருவரும் , வெளியேறி நடந்தனர். இடது புறம் திரும்பியதும் சங்கரன் திரும்ப , நாச்சிமுத்துவும் புரிந்து கொண்டு நின்றார். அவர்  வாழ்ந்த வீடு. மெள்ள உள்ளே நுழைந்தார் . நேராக பூஜையறையினுள் சென்று தங்கள் குலதெய்வங்கள் குடியிருந்த மாடத்தை பார்த்து விட்டு, ஓய்வாக வெளியே  வந்து வெளித்திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

கவுண்டர் இப்போது தான் வாயைத் திறந்தார். "இத்தனை வருஷமும் இப்படியே பரதேசியா வந்து போய் ...  என்னை ஏன் இப்படி ஏமாத்தினே ? "

சங்கரன் என்கின்ற கிருஷ்ணானந்தர் இப்போது சிரித்தார். "சன்னியாசிகளிடம் உனக்கு சகவாசம் அதிகம்  கூடாது. சந்நியாசிகளுக்கும் பந்தம் கூடாது. நீயே பிரம்மம் என்று என் குரு காதில் ஓதினாலும், இந்த கிரிதாரியும்,   நாச்சிமுத்துவும் , பவானி நதிக்கரையும் அப்பப்ப பந்தப் படுத்திட்டுத் தான் இருந்தது. இன்று எல்லாத்துக்கும் பெரும் ஓய்வு  ! உன்னுடைய நட்பின் ஆழம் இந்த ஐம்பது வருஷம் நீ நடத்துன வைபவத்தில தெரிஞ்சது. அந்தக் கிரிதாரி என்னை அத்துவைத மோக்ஷத்திற்குப் போகச் சொல்லி சம்மதம் சொல்லிட்டான். நீயும் உன்னோட நட்புல இருந்து எனக்கு விடை குடு நாச்சிமுத்து.  " இதைச் சொல்லும் போதே சங்கரனின் பார்வையில் வைராக்கியம் ஏறுவதை நாச்சிமுத்து உணர்ந்தார்.

சங்கரன் அப்படியே எழுந்து , வெளியே நடந்தார். மேல் துண்டு காற்றில் பறந்து ஓடியது. சங்கரனோ நேராக நடந்தார். திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. நாச்சிமுத்து மெல்ல பின் சென்று பார்த்த போது, சங்கரன் நதிக்கரையில் அரச மரத்தடியில் பத்மாசனத்தில் இருப்பது தெரிந்தது . நாச்சிமுத்து விற்கு கால்கள் தள்ளாடின. கோவிலின் கோபுரம் தெரிந்தது. ஏதோ கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.   உடலெங்கும் ரத்த நாளங்கள் பொங்கின. ஐம்பது வருட ஆயாசம் உடலெங்கும்  பரவியது.  அங்கமெல்லாம்  பாரம் குறைந்து ஆடியது.  கண் செருகியது. நீர் பெருகியது.  நெஞ்சு நிறைந்தது. "கிருஷ்ணா"  என்று உதடுகள் மெல்ல உச்சரித்தன.

ஆற்றங்கரைச் சரிவில் அவர் உருண்ட போது சங்கரன் அசையவில்லை. பிராணனை உச்சந்தலைக்கு ஏற்றி நிறுத்தி, ஓங்கார அணை மேல் ஏறி நின்றார். கடைசி முறையாக அவர் "அஹம் பிரம்மாஸ்மி " என்று உச்சரிக்கையில் அங்கே சங்கரன் இல்லை. பிரம்மமே இருந்தது. பிராணன் உச்சந்தலையைப் பிளந்து கொண்டு வெளியேற, மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. காலம் அசையாமல் நின்ற தருணம் அது .


பவானித் தாய் தன் இரு தவப் புதல்வர்களையும் பறிகொடுத்த சோகத்தில்  மெள்ள புரண்டோடினாள்.

Tuesday, August 10, 2010

வாய்க்கு ஒரு சமையல், வயித்துக்கு ஒரு சமையல் !!! - சிறுகதை


கு ஆபீசுக்கு கிளம்பும் முன், சுஜாவிடம் ," ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு வாசு வர மாட்டான். அவன் ஏதோ காசி போற க்ரூப்போட சமையலுக்கு போயாச்சு.  அவனுக்கு வேண்டிய இன்னொரு ஆளோட போன் குடுத்திருக்கான்.நானும் வரச் சொல்லிட்டேன். பதினோரு மணிக்கு வருவான். அப்பாவையே வழக்கம் போல பேசச் சொல்லிடு " என்றவாறே காரைக் கிளப்பினான். வழக்கம் போல என்று சொல்லும் போதே அவன் முகத்தில் ஒரு கிண்டல் சிரிப்பு.

ள்ளே கூடத்தில் சுந்தரேசன் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு மருமகளின் வாயைக் கிண்டிக் கொண்டிருந்தார். " என்னமோ இனிமே அரசாங்கம் மார்க்கு முறையை ஒழிக்கப் போறதாமே ? அபப இனிமே என் பேரன்  உன்கிட்டருந்து தப்பிச்சிடுவான்  இல்லையா ?"

சுஜா ரோஷத்தோடு திரும்பி , " மாமா ! காலம் கார்த்தாலே வேண்டாம். உங்க காலம் மாதிரி எஸ் எஸ் எல் சி பெயில் ஆனாக் கூட உத்தியோகம் கிடைக்கற காலமா இது ? ஏன், உங்க பையனண்டை இத எல்லாம் சொல்லறது தானே ? "

அங்கே ஓரத்தில் கோதுமையைப் புடைத்துக் கொண்டே இவர்களின் சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மாமியார்  ஞானம் , " சுஜா ! யாரோ கேட்டைத் திறந்தாப்பல இருந்தது. போய்ப் பாரேன் " என்றார்.

ந்தவன் ஒல்லியாக இருந்தான் இள வயது தான்.
ஏம்ப்பா ? வாசுக்கு பதிலா வந்தியா  ? எந்த ஊரு ? " என சுந்தரேசன் வினவ " என் பேர் சாமி. தொண்டாமுத்தூர் தான் ஊர். மணி அய்யர் கிட்ட இருந்துட்டு இப்ப ரெண்டு வருஷமா நானே சமையல் ஒத்துண்டு பண்ணறேன் "

" பூணல் தேதி தெரியுமா. வர்ற ஆவணி பத்து." என்று சுந்தரேசன் சொல்ல, சாமியும் , " தெரியும் மாமா . அண்ணா சொன்னார்."

"  ரெண்டு நாள்  பண்ணனும். முத நாள்  நாந்தி. ரெண்டாம்  நாள் உபநயனம்." என்ற  சுந்தரேசன் மருமகளைப் பார்த்து , "ஏம்மா ! உன் ஆம்படையான் ஏதாவது மெனு சொன்னானா ?" என்று மூக்குக் கண்ணாடிக்கு மேலே அவளைப் பார்க்க, சுஜா ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டு  அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். " ஏம மாமா இந்த உபசாரம் ? இந்த மெனு விஷயத்தில என்னிக்காவது நாங்க சொல்லி ஏதாவது நடந்திருக்கா . எல்லாம் பாசாங்கு." என்றவாறு கிசுகிசுத்து விட்டு அகன்றாள்.

"வாடா அம்பி   உக்கார்." என்றதும் அவன் ஊஞ்சல் அருகில் வந்து தரையில் அமர்ந்து கொண்டான்.

முதல் நாள் காலையில என்ன ? என்று அவனை பார்க்க, அவன் " காலைல காப்பி. அப்புறம் டிபன். அம்பது பேர் இருப்பாளா ?" என்று கேட்க, "பரவாயில்லை. கெட்டிக்காரன். சரியா ஊகிச்சுட்டே . சொந்தக் காராள் தான் இருப்பா. இட்டிலி மட்டும் போதும். மதியம் சாப்பாடு. ஒரு பொரியல், பச்சடி, மோர்க்குழம்பு, சிம்பிளா ஒரு பாயசம்......" அவர் எழுதி முடித்து விட்டு , இதெல்லாம் பெரிசில்ல . உபநயனம் அன்னிக்கு தான் மெனு பிரமாதமா இருக்கணும் " என்றதும் ஞானமும் சுஜாவும் களுக்கென்று சிரித்து விட்டனர். சாமி திரும்பிப் பார்த்து விழித்தான்.

சுந்தரேசன் கோபமாக அவர்களைப் பார்த்து  முறைத்து விட்டு சாமியைப் பார்த்து    "காலைல என்ன போடறது.?"  என கேட்க ,  அவர் முடிக்கும் முன்பே சாமி உற்சாகமா ," ஒரு இட்டிலி சம்பிரதாயத்துக்கு போட்டுட்டு, பூரி, வடை , பருப்பு உசிலி சேவை , மசால் தோசை எல்லாம் போட்டுடலாம் மாமா... " சுந்தரேசன் இதை ரசிக்கவில்லை என்று அப்படியே நிறுத்தினான்.

" ஏண்டா அம்பி. வர்றவாள்லாம்  பூணலை பாப்பாளா இல்ல பாத்ரூமுக்கு  ஒடுவாளா ? உன் மெனு சகிக்கலை " என்றார். சாமியின் முகத்தைப் பார்த்து பெண்மணிகள் இருவரும் புன்முறுவலித்தனர்.

சுந்தரேசன் தொடர்ந்தார்." காலம் கார்த்தாலே வயிறு அப்போதான் இயல்புக்கு வரத் தொடங்கியிருக்கும். அப்போ பார்த்து மசால் தோசை போடுவாயா ? பூரி வேறே ? மணி அய்யர் உனக்கு ஒண்ணுமே சொல்லித் தரலியா ? சரி சரி. இப்ப நான சொல்லறேன் எழுதிக்கோ ?"  சுந்தரேசன் முடிக்கவும் ,ஞானம்  " கீதோபதேசம் ஆரம்பம்" என்று சுஜாவின் காதைக் கடித்து சிரித்தாள்.

" இட்டிலி ஒரு இலைக்கு குறைந்தது நாலு இருக்கணும். கூடவே தேங்காய்ச் சட்டினி. தொட்டுக்க சாம்பார் வேணா இருக்கட்டும். பருப்பை கொட்டி வைக்காதே. பேருக்கு பருப்பு இருந்தா போறும். பின்ன ஒரு கரண்டி பொங்கல். இட்டிலியும் பொங்கலும்  எப்படிப் பண்ணுவே ? என்று அடுத்த கேள்வியை வீசினார் சுந்தரேசன்.

"என்ன மாமா இப்படிக் கேட்டுட்டேள்? ஒன்னரைக்கு ஏழு கலவையில உளுந்தும் அரிசியும் போட்டு ஆட்டி கடைசில கொஞ்சம் சோடா உப்புப் போட்டு வச்சா இட்டிலி பூ மாதிரி வருமே ? அதைப் போல , பொங்கல்ல வழக்கமா போடற அரிசியும் பருப்பும் போட்டு வெந்ததும், மிளகு சீரகம்  எல்லாம்  போட்டு கடைசில மேலுக்கு டால்டா விட்டு இறக்கினா ..." சாமி முடிப்பதற்குள் சுந்தரேசன் இடைமறித்தார்.

"சனியன் சனியன் ! சோடா உப்பாம், டால்டாவாம் ! அம்பி கோயம்புத்தூர்ல நீங்க எல்லாம் ஒரே மாதிரிப் பேசறேள். சோடா உப்பு போட்டா ஒரு இட்டிலிக்கு மேல இறங்காது. டால்டா போட்டா, நாலு மணி நேரத்துக்கு வயித்தை அமுக்கும். இட்டிலிக்கு ரெண்டுக்கு ஏழு போட்டு செய் கொஞ்சம் ஆமணக்கு விதையை போடு.. பூ மாதிரி வரும்.டால்டாவுக்கு  பதில் கால் கரண்டி நெய்யை ஊத்தி பிரட்டீடு. அப்புறம் பாரு."

சாமி இப்போது புதிதாக கேள்வி ஒன்று போட்டான் . " எண்ணெய் எல்லாம் சண் ப்ளவர் தானே ?" இப்போது பெண்மணிகள் இருவரும் வாய் விட்டே சிரித்து விட்டனர். சுந்தரேச அய்யர் இப்போது நன்றாகவே அவர்களை முறைத்து விட்டு , "எனக்காகவா இந்த மெனு ? ஏதோ சொந்த பந்தம் வர்றப்ப  வயிறு வாழ்த்தர மாதிரி இருக்கட்டுமேன்னு சொன்னேன். எதுக்கு சிரிக்கறேள்"  என்று சீறினார்.  ஞானம் சுஜாவை ஓரக் கண்ணால் பார்த்து, " நல்லா மாட்டீண்டான் " என்றுவிட்டு அடக்கிச் சிரித்தாள்.

சுந்தரேச அய்யர் இப்போது அவனைப் பார்த்து , "இங்க என் கூட வா" . என்று சமையல் உள்ளினுள் அழைத்துச் சென்றார்.  "மேலே பார்" என்று எக்சாஸ்ட் மின் விசிறியைக் காட்டினார். " இது மாட்டினது முதல் இந்த மாதிரியே இருக்கு " என்று விட்டு, "அப்படியே அங்க பார்" என்று பக்கத்து வீட்டு சமையல் அறை புகைத்துவாரத்தைக் காட்டினார்." எப்படி இருக்கு அது ? " என்று கேட்க , " எண்ணெய்ப் பிசுக்கு தொங்கறது மாமா " என்று சாமி இப்போது அடக்கமாக பதில் சொன்னான். இப்போது அவனுக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை வந்திருந்தது.

"இப்படி சண் பிளவர் ஆயில் சாப்பிடறவா வயித்தில அல்லவா தொங்கும் ? அதை நம்ம தொடலாமோ ? " என்று சுந்தரேச அய்யர் வெற்றியுடன் அவனைப் பார்க்க , அவன் இப்போது சற்றுத் தெளிவாக , " அபப நீங்க வீட்டுல என்ன போடறேள் ? " என்று ஆர்வமாகக் கேட்க , " கடலை எண்ணெய் தாண்டா அம்பி. ஆயிரக்கணக்கான வருஷம் அதை அல்லவா சாப்பிட்டோம். ? இப்ப என்னடான்னா , சண் பிளவர், கொலஸ்ட்ரால் அப்படீன்னு கதை கட்டறா "

இப்போது சாமி கவனமாகி விட்டான். இப்போது பாயசத்தைப் பற்றி பேச்சு. " நன்னா மில்க் மெய்ட் போட்டு அடைப் பிரதமன் போட்டுடலாமா ?" என்று விட்டு மாமாவைப் பார்க்க, அவரோ , முன்னை விட அதிக கோபமாகி , " நோக்கு சயின்ஸ் கூட தெரியலடா !" என்று விட்டு மேலே சொல்லும் முன் சுஜாவைப் பார்க்க , கீழே அவர்கள் இருவரும் ,வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவர் இப்போது விறைப்பாகி, " பாலும் தானியமும் சேரக் கூடவே கூடாது அப்படீங்கிறது ஆயுர்வேத விதி. பாலைப் போயி அரிசியோட கலக்கரயே ? " எனச் சொல்ல  , அவன் அப்போ , பாயசத்துக்கு எதைத்  தான் போடறது ? " என்று அப்பாவியைக் கேட்டான். மாமா ,   "தேங்காய்ப் பாலைப் போடுடா. அசத்திப் புடலாம்" என்று சொல்ல, அவனோ "தேங்காய்ப் பாலா , நேரம் செலவு கூலி , இதெல்லாம் .." என்று இழுத்தான்.

இப்போது சுஜா , " செலவெல்லாம் மாமா பார்க்க மாட்டார். மகன் கை நிறைய சம்பாதிக்கறார். இதுக் கெல்லாமா கணக்கு " என்று விட்டு அய்யரின் முகத்தைப் பார்க்க, அவர் சாமியைப் பார்த்து விட்டு " கேட்டுக்கோடா அம்பி . அவளே சொல்லீட்டா . பின்ன நான என்ன சொல்ல ?" என்று இருவரை பார்த்து முகத்தைக் கோணினார்.

"நாந்தி அன்னிக்கு சாயங்காலத்துக்கு, அல்வாவும் , பக்கோடாவும் காபியும் போடலாம் இல்லையா ?" சாமி இதிலாவது வெற்றி அடையலாம் என்று பார்த்தான்.

மாமாவோ, "கூடாது கூடாது. சாயங்காலம் எண்ணெய்ப் பதார்த்தமா ? அது பிரதோஷ காலம்டா அம்பி. மத்தியான விருந்து நன்னா செரிச்சி நாலு மணி நேரம் ஆனதுக்கு அப்புறமா ஒரு ப்ரூட் சாலட் பண்ணிடு. ஆவணில ஆப்பிளும், கொய்யாவும், ஆரஞ்சும் , திராட்சையும் கிடைக்கும். நறுக்கித் தேன் கலந்து குடு "

சற்று நேரத்திற்குப் பிறகு சாமி மெனுவையும் அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு போனான். "பாவம்நா இவன் ! இன்னிக்கே இவ்வளவு உபதேசம். உபநயனத் தண்ணிக்கு  இன்னும் எவ்வளவு வாங்குவானோ ?" என்றுவிட்டு ஞானம் சிரிக்க, மாமாவோ , " உங்களுக்கு எல்லாம் , விவஸ்தையே கிடையாது. கிடைத்ததை முழுங்கிண்டு பின்னால டாக்டருக்கு ஓடுவேள். வேணாப் பாரு. சாமி எப்படி அசத்தப் போறான்னுட்டு !" என்று எதையோ நினைத்துப் புன்னகைத்தார்.

சொன்ன மாதிரியே, சாமி அசத்தி விட்டான். சுந்தரேச அய்யர் சமையறை முழுதும் டால்டா வோ , சோடா உப்போ மறைத்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று அவ்வப்பொழுது தேடினார். பயல் உண்மையாகத்தான் இருக்கிறான் என்று உணர்ந்து ஆனந்தப் பட்டார்.

உபநயனம் வெற்றிகரமாக நடந்தது. எல்லாரும் உறவினர்கள் ஆனதால் இரண்டாம் நாள் மதிய விருந்துக்குப் பிறகே புறப்பட்டார்கள். முந்தைய நாளிலிருந்தே , எல்லாரும் சமையலைப் புகழ்ந்த வண்ணம் இருந்தனர். " டே சுந்தரேசா, நல்லாத்தான் சாப்பிட்டேன் . ஆனாலும் வயிறு லேசா இருக்குடா. கச கசன்னு போடாம , குறைஞ்ச அயிட்டம் தான். ஆனா வயித்துக்கு சுகமா இருக்குடா." இது மாதிரி பல புகழ்ச்சிகள். சுந்தரேசனோ, " நாளைக்கு வரைக்கும் இருப்பே. அப்புறம் சொல்லு. " என்று இன்னும் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டார்.

ம்பந்தி  விடைபெறும் போது,"உபநயனம் அமர்க்களம். வாத்தியாரும் நிதானமா சொன்னார். உபசரிப்பும் பிரமாதம். அப்புறம் விருந்து ஏ ஒன. யார் மெனு நீங்கதானா ? சமாளிச் சுட்டேள் போங்கோ.  " என சிலாகித்தார்.

ஞானத்தின் தம்பி, " அத்திம்பேர், அந்த ப்ரூட் சாலட் பாருங்கோ, இன்னும் வாயில இருக்கு. சாயங்காலத்துக்கு அதைக் குடுக்கனுமின்னு தோணித்து பாருங்கோ." என்று பாராட்டினார்.

சுந்தரேச அய்யரோ , " ஏதோ நம்ம ஒண்ணு ரெண்டு சொல்லுவோம். ஆனா சமையல் காரர் கையிலன்னா எல்லாமும் இருக்கு ? ஒரு விண்ணப்பம். நீங்க ஒரு வார்த்தை அவனையும் பாராட்டீட்டு போங்கோ." என்று சொன்னார்.

ல்லாரும் போன பிறகு, சாமி மெல்ல வந்தான். " மாமா , சொல்லீட்டுப் போக வந்தேன். எல்லா ஐடியா வும் உங்களோடது. ஆனா எல்லாரும் என்னைப் பாராட்டிட்டுப் போறா. நாலு கல்யாணம் எனக்கு இங்கேயே புக் ஆயிடுச்சு மாமா. எல்லாம் உங்களால்தான். நாக்குக்கு மட்டுமே சமைச்சுப் போட்ட எனக்கு வயித்துக்காகவும் எப்படி சமைக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தது நீங்கதான்." என்ற படி அய்யரின் காலைத் தொட, அய்யரோ கண்கலங்கி, " டே, டே நான என்னடா பண்ணேன். வெறும் வாய் வார்த்தை. நீ தாண்டா அடுப்படியில வெந்து இவாளுக்கெல்லாம் பண்ணினே. உனக்குத்தான் எல்லாப் பெருமையும். போற இடத்தில பேரைக் காப்பாத்து." என்று அனுப்பி வைத்தார். ஞானமும் சுஜாவும் இப்போது ஐயரைப் பெருமையோடு பார்த்தனர்.

Thursday, August 5, 2010

மதிப்பு கூட்டல் வழி- ஒரு சிறுகதை


மாலை நேர குளிர் காற்று பூங்காவில் இனிமையாக வீசியது. வைத்தியநாதன் உற்சாகமாக நடந்தார்.

"டே, டே ! கொஞ்சம் மெள்ள நட . இன்னிக்கு என்ன ஆளே மாறிட்டே ?" காசி பின்னாடியே நடந்து வந்தார்.

விஷயம் இருந்தது. அன்று வைத்தி தனது ஆறாவது சொற்பொழிவை பற்றி எண்ணிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய ஆன்மீக வாதி. தத்துவமும் , தருக்கமும் அத்துப்படி. பகவத் கீதையைக் கரைத்துக் குடித்தவர். தன்னை அண்டி வந்த எல்லோருக்கும் தான் பெற்ற அருட் செல்வத்தை வாரி வழங்குவார்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு அவரை பேச அழைத்திருந்தனர். சற்று முன்னர் தான் செயலாளர் பேசினார். "மிஸ்டர் வைத்தி ! நீங்க தான் பேசனுமின்னு நான முன் மொழிந்திருக்கேன். ஏறக்குறைய எல்லாரும் ஏத்துகிட்டாச்சு. முறைப்படி இன்னிக்கு மீட்டிங்க்ல பதிவாயிடும். அபப எங்க பிரசிடன்ட் உங்களைக் கூப்பிட்டுப் பேசுவாரு. வேறு ஏதாவது கண்டிஷன் உண்டா ?" என்று கேட்டார்.  இவர் பதில் சொல்வதற்குள் அங்கே செல் போன சமிக்ஞை செயலிழக்க, தொடர்பு அறுந்து போனது. வீட்டுக்குப் போய் பேசலாம் என விட்டு விட்டார்.

காசிக்கு அதை விவரிக்க, ' என்ன ஒய் ! கொஞ்ச நாளில புக் பப்ளிஷர் தொழிலை விட்டு சமயப் பேச்சாளராயிடுவே போல. சபாஷ் !" எனப் பாராட்டினார் . காசி அவருக்கு ஒரே நண்பர்.. உலக விவகாரங்களில் அவருக்கு ஆலோசகர். யதார்த்த சிந்தனை உள்ளவர். 'என்ன டாபிக் பேசப் போற ? " என்று வினவ, வைத்தி உற்சாகமானார். " பகவத் கீதை ஒன்பதாவது அத்தியாயம் . உபாசனை ரகசியங்களை விவரிக்கும் இடம். இன்றைய நவீன மக்களுக்கு ஏற்ற விஷயம் " என்று அடுக்கினார்.

" ஆமா ! நீயாத்தான் முடிவு பண்ணியா அல்லது ..." என்று காசி கேட்க , " நான்தான் சொன்னேன். ஏன் ?" என்று வைத்தி அவசரமாய்ச் சொன்னார். காசி இப்படிக் கேட்டது அவருக்கு இடித்தது. காசி கைகாரன். ஒரு இடத்திற்கு  சென்றால், ஒரு நிமிடத்தில் அங்கு நிலைமையை ஊகித்து விடுவான். "ஏண்டா அப்படிக் கேட்டே ?" என்று வைத்தி சந்தேகமாய் வினவினார்.

"ஒண்ணுமில்லை . சும்மாத்தான் கேட்டேன் " என்றார் காசி.என்னமோ நினைத்தவர் போல் அவரே தொடர்ந்து " எப்படி. முறையா வந்து கூப்பிடுவாங்களா ?. ந்யூஸ் பேப்பர்ல எல்லாம் வருமில்ல ? சன்மானம் ஏதாவது பேசினாங்களா ? " என்று காசி கேட்க, வைத்தி , " ஏண்டா , நம்ம பேசுறது நம்ம ஆத்ம திருப்திக்கு. இதுல போய் இந்தக் கண்டிஷன் எல்லாம் தேவையா ? என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

"சார், பேனா வாங்குங்க சார். கொரியா பேனா சார். பன்னெண்டு ரூபா தான் சார்." அவர்களது பேச்சில் குறுக்கிட்டுக் கொண்டு அந்த வியாபாரி நுழைந்தான். கழுத்தில், கையில், தோளில் என்று  உடம்பு முழுதும் பேனாக்களைத் தொங்க விட்டிருந்தான்.  

"சார், இந்த வகைப் பேனா கேம்லின் கம்பனில கூட இல்ல சார். லீக் சுத்தமா ஆகாது சார். மாவு மாதிரி எழுதும் சார். விலை கம்மி சார்." அந்த ஆளை பூங்காவில் இதற்கு முந்திபல தடவை பார்த்திருக்கிறார்கள். கால் மிதி, டார்ச் லைட்,என்று ஏதாவது விற்பான்.

வைத்தி ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து விட்டு, " ரெண்டு பேனா குடுப்பா " என்று பாக்கட்டில் கையை விட்டார். காசி அப்போது அந்தப் பேனாவை அலட்சியமாகப் பார்த்து , நேத்து சாயங்காலம் இதையே ஒரு அம்மாவுக்கு பத்து ரூபாவுக்கு வித்தியே. இப்ப எப்படி பன்னிரண்டு ரூபா ? " என்று கேட்க, "அந்த வியாபாரி, இல்ல சார். அப்படியெல்லாம் நான பண்ண மாட்டேன். ஆளுக்கு ஒரு  விலை வெக்கிற ஆள் நான இல்ல சார் ! " என்று அவசரமாக பதில் சொன்னான்.

"டே வைத்தி ! உனக்கு இந்த பேனா பார்க்கு வாசல்ல நான குறைவா வாங்கித் தர்ரேன்." என்று சொல்லவும், அந்த ஆள் விழிப்பாகி, "சார், இத்தனை நாள் வியாபாரம் பண்ணறோம். ஏதோ இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் கெட வேண்டாம். இந்தாங்க சார் , பத்து ரூபாவே குடுங்க. .கலர் பாத்து எடுங்க " என்று பணிவானான்.

வியாபாரம் முடிந்ததும், வைத்தி , "ஏண்டா அப்படி அவன் வயித்தில அடிச்சே ? இன்னிக்கு ரெண்டு பொறி உருண்டை  கூட கிடைக்காது அந்தக் காசில " என்று அந்த வியாபாரிக்கு பரிவு காட்ட , " நீ ஒரு முட்டாள். நம்ம கிட்ட வர்ற வரைக்கும் 'எது எடுத்தாலும் பத்து ருபா ' அப்படீன்னு ஒரு அட்டை கழுத்துல தொங்க விட்டிருந்தான். நம்ம கிட்ட வரும் போது அத எடுத்துட்டான். இதை நான கவனிச்சேன் . அதுதான் இந்த டிராமா. வைத்தியநாத அய்யர் வெள்ளைச் சோளம். அவருக்கு எப்படி அதெல்லாம் தெரியும் ?" என்று காசி தனக்கே உரிய பாணியில் சொன்னார்.

 வீட்டுக்குத் திரும்பி வரும் போது காசி கேட்டார். "எதுக்குடா பேனா? என்ன விசேஷம் ?"

"ஒ அதுவா ? நேத்து என் பசங்க ரெண்டும் கீதைல பதினஞ்சாவது அத்தியாயம் மனப்பாடமா சொன்னாங்க. பிரமாதமா இருந்துது. அதான் இன்னிக்கு அவங்களுக்கு சின்னதா ஒரு பிரசன்ட்." என்றார் வைத்தி.

"ஏண்டா , பிரசண்டுன்னு சொல்லறே , இப்படியா மொட்டையாக் குடுப்பே ? " என்று அதைப் பிடுங்கி, அருகில் இருந்த ஒரு பான்சி கடையில் இரண்டையும் பாக்கிங் செய்து வாங்கி வந்தார்.

"சரிதான். அழுக்குப் பாவாடை சிலுக்கு தாவணி கதை தான். பத்து ரூபா பேனாவுக்கு இத்தனை சோக்கா ?" என்று வைத்தி  சிரித்தார்.

" வைத்தி , இங்க பாரு. இது பரிசு. விலையைப் பத்தி குழந்தைகள்கிட்ட பேசக் கூடாது. இன்னிக்கு பேசாம இரு " என முன்னமேயே மிரட்டிக் கூட்டி வந்தார்.

வீட்டில் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. வைத்தியின் மனைவிக்கோ இரட்டிப்பு சந்தோசம். திடீரென்று ஏதோ நினைத்தவளாய், " காசி அண்ணா , உண்மையச் சொல்லுங்கோ . இது அவரோட ஐடியாவா , அல்லது உங்களோடதா ? " என்று காசியைப் பார்த்துக் கேட்டாள்.

"உங்களுக்கு எல்லாம் வைத்தியோட அருமை கொஞ்சமும் தெரியலை போல. அவன் அறிஞன் மட்டும் இல்ல. அவனுக்கு எத்தனை அன்புன்னு இப்பத்தான் புரிஞ்சது. கிராஸ்கட் ரோட்டுல நாலு கடை ஏறி வாங்கினான். கொரியா பேனாவாம்." என்று காசி முடித்தார்.

" குழந்தைகள் இரண்டும் ஓடி வந்து , வைத்தியை பிடித்துக் கொண்டன. அப்பா எவ்வளவு விலை சொல்லுப்பா ? " என்று. வைத்தி இப்போது அதிகக் கலவரமாய் விட்டார். தெருவோரத்தில் வாங்கியதை கடையில் வாங்கியதாகக் காசி சொன்னவுடன் அவருக்கு கை காலே ஓடவில்லை.

அப்போது காசி அவர் உதவிக்கு வந்தார். " நோ குட்டீஸ். பரிசோட விலை எல்லாம் சொல்லக் கூடாது. பாட் மானர்ஸ்." என்று அவர்களைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தார்.

பெரியவன் அவரைப் பார்த்து கொக்காணி காட்டினான். " நாங்க எப்படியும் கண்டு பிடிச்சிடுவோம் பாருங்க." என்று சவால் விட்டு விட்டு, தம்பியைப் பார்த்துத் திரும்பி " டே அன்னிக்கு பரத் ஒரு பேனா கொண்டு வந்தானே, இதே மாதிரி!  எத்தனை விலை சொன்னான் ?" என்று கேட்க, அவன் தம்பி , " ஏதோ நூத்துக்கு குறையாம சொன்னான்டா " என்று மண்டையைச் சொரிந்து கொண்டே பதில் சொன்னான்.

வைத்தியின் மனைவி , " ஏன் அண்ணா , இவ்வளவு விலை கொடுத்திருக்கார். பேசி வாங்கினாரா , இல்ல, எப்பவும் போல .." என்று கிண்டலாய் காசியைப் பார்த்தாள்.

காசி வைத்தியைப் பார்த்து சிரித்தார். " உனக்கு உங்க வீட்டுல ரொம்ப நல்ல பேர்"

தற்குள் வைத்தியின் மனைவி காப்பி போட சமையலறைக்குள் சென்று விட, குழந்தைகளும், பேனாவில் மை நிரப்ப உள்ளே ஓடினர்.

" ஏண்டா கொழந்தைகள் கிட்ட அப்படிப் பொய் சொன்னே . உனக்கு காசி விஸ்வநாதன்னு பேரை விட குருக்ஷேத்திரக் கண்ணன் அப்படீன்னு பேர் வைக்கலாம் " என்று கொதித்தார்.

"அடே வைத்தி. எந்தப் பொருளுக்கும் மதிப்பு நாம் அதை பயன்படுத்துவதிலும், அதை பக்குவமாக பிறருக்கு எடுத்துச் சொல்லறதுல யும் தான் இருக்கு. இப்ப நீ அந்தப் பேனா வெறும் பத்து ரூபா அப்படீன்னு கையில பாக்கிங் இல்லாம குடுத்திருந்தாயானால் உன் குழந்தைகளுக்கு இவ்வளவு சந்தோசம் இருந்திருக்குமா அல்லது உன் பொண்டாட்டி கையால் எனக்கு காப்பி தான் கிடைச்சிருக்குமா ?" காசி சிரித்தார்.

காப்பி வந்தது. வைத்திக்கு காசியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாய்த் தைத்தன. "உண்மைதானோ ? உலகில் மகிழ்ச்சி  பெருகுவது கூட இது போன்ற மெருகுகளால் தானோ ? "
ப்போது பாக்கட்டில் போன் அடித்தது.

"ஹலோ , வைத்தியநாதன் ஹியர் "

"சார். நான் ஸ்ரீதர். கோயம்பத்தூர் ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்புக்கு விழக் கமிட்டி தலைவர்.  உங்களைக் கூப்பிட்டு பேசுங்கன்னு ரஞ்சன் சொன்னார். எல்லாம் பேசியாச்சுன்னும் சம்பிரதாயமா கூப்பிடுங்க போதும்னும் சொன்னார்." என்றது எதிர் முனைக் குரல்.

வைத்தி, இப்போது சோபாவில் சாய்ந்து கொண்டார். " ஆமா ரஞ்சன் பேசினார். ஆனா ஒண்ணும் பேசி முடிவாகலயே. உங்க கிட்ட என்ன சொன்னார் ? "

இப்போது எதிமுனைக் குரல் தடுமாறியது. " இல்ல நீங்க எல்லாத்தையும் ஒத்துக்கிட்டீங்க அப்புடீன்னு ..." என்று இழுத்தார்.

" மிஸ்டர் ஸ்ரீதர் . நீங்களோ , அல்லது ரஞ்சனோ, என்னை  வந்து பார்த்து இது விஷயமா பேசறது நல்லது. தலைப்பு பத்தி பேசணும். அப்புறம், அன்னிக்கு புரோக்ராமை எந்த எந்த ந்யூஸ் பேப்பர்ல போடணும் அப்படீங்கற விஷயம், அப்புறம் அன்னைக்கு என்னை அழைச்சுண்டு போக யார் வருவாங்க , என்னுடைய சன்மானம் எவ்வளவு இதை எல்ல்லாம் பேசணும் . நானும் பிரிபேர் ஆகணும் இல்லையா ? பெரிய கூட்டமாச்சே ?" வைத்தி மிகவும் ஓய்வாகச் சாய்ந்து கொண்டார்.

இப்போது எதிர் முனையில்  ஸ்ரீதர்  , " ஒ, சரி. நான் அபப ... ரஞ்சன் கூட பேசீட்டு.. உங்களைப் பார்க்கறேன் " என்று தடுமாறினார்.

" நோ ப்ராப்ளம். நாளைக்கு பகல் முழுதும் நான் பிசி. சாயங்காலம் வாக்கிங் முடிஞ்சு ஏழு மணிக்கு வருவேன் . அபப வேணா வாங்க " என்றவாறு போனை அணைத்தார்.

காசி, இப்போது அர்த்த புஷ்டியோடு வைத்தியைப் பார்த்துப் புன்னகைத்தார். "வள்ளலாருக்கே இல்லாத விஷய ஞானம் இது. கடை விரித்தேன் கொள்வாரில்லை அப்படீன்னு புலம்பினார். பசிச்சவனுக்கு மட்டும்தான் சோறு. இது உனக்கு இன்னிக்கு புரிஞ்சிருச்சு. இனிமே உன் ஆன்மீகப் பகிர்வுகள் தேவையுடைய இடத்திற்கு மட்டும் தான் போகும்.  நீ சொன்னயே அந்தக் கண்ணன் கூட தன் மேல் பொறாமை உள்ளவர்களிடமும், அசிரத்தை உள்ளவர்களிடமும் கீதையின் ரகசியத்தை சொல்லக் கூடாதுன்னு தான்  சொல்லியிருக்காரு ".

நண்பர்கள் இருவரும் இணக்கமாகச் சிரித்தனர் இப்போது.