Sunday, May 19, 2013

கீதை உபதேசமா, விவாதமா அல்லது உரையாடலா ?

கீதை உபதேசமா, விவாதமா  அல்லது உரையாடலா ?

"இந்தத் தலைப்பு வைத்து எழுதுவது சரிதானா ? " என்று பலரும் யோசிப்பர் . நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த விஷயம்  சமீப காலமாக  முற்போக்கு, பின் நவீனத்துவ , நவீன இலக்கியவாதிகளின் கையில் வேறு சிக்கி விட்டது. இதனால் என்னைப் போன்ற பாரம்பரிய ( பிற்போக்கு, மூட ஆச்சார, பழமை  ) வாதிகளுக்கு இது விஷயமாக விளக்க அவசியம் வந்து விட்டது.

 நவீன வாதிகள் பலர் கீதை ஒரு விவாதமே என்கின்றனர். ஜெயமோகன் அதில் ஒருவர். நம்முடைய நெடும் பாரம்பரியமோ  கீதையை உபதேசம் என்கின்றது.

கீதை எழுதப்  பெற்ற காலத்தில் உபதேசம் என்றால் குரு  சீடருக்கு உபதேசிப்பது.    உரையாடல் என்றால் இரு சம அந்தஸ்து பெற்றோர் பேசுவது.   விவாதம் என்றால் இருவரோ பலரோ தம் கருத்துகளை நிலை நாட்ட வாதம் செய்வது.

கீதையில்  விவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அர்ஜுனன் கிருஷ்ணனை விட மேதாவி அல்ல. அவன் எந்த இடத்திலும் அறிவு பூர்வமாக விவாதிக்கவே இல்லை. ஜெயமோகன் மற்றும் நடராஜ குருவின் "விவாத" வாதம் தள்ளுபடி ஆகிறது..

இப்போது நமக்கு உரையாடல் மற்றும் உபதேசம் மட்டுமே மீதம் உள்ளன

இது பற்றி நடுநிலையாகவே பார்ப்போம். சமீப காலமாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தலைவர் பிரபு பாதா தன்னுடைய ஆங்கில கீதை உரையை அமெரிக்காவில் வெளியிடுகையில் " the greatest dialgue ever" அதாவது  "உரையாடல்களிலேயே மிகச் சிறந்தது " என்று குறிப்பிட்டு  விளம்பரம் செய்தார்.

கிருஷ்ணரே கூட பதினெட்டாம் அத்தியாயத்தில்  " இந்த உரையாடலை (சம்வாதம்) என் பக்தர்களிடம் பரப்புபவன் எனக்கு மிகவும் உகந்தவன் " என்கிறார் .

கீதையில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் ஒரு முத்தாய்ப்பு வரும். அதை "புஷ்பிகை" எனவும் வர்ணிப்பர். அதில் முதல் அத்தியாயத்தின் முடிவில்   " ஓம் தத்ஸ திதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு  உபனிஷத்ஸு  ப்ரஹ்ம  வித்யாயாம்  யோக ஸாஸ்த்ரே ஸ்ரீ க்ருஷ்ணார்ஜுன  ஸம்வாதே அர்ஜுன விஷாத யோகோ நாம ப்ரதமோத்யாய : || " என்று வரும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்தந்த அத்தியாயத்தின் பேர் அடிக்கோடிட்ட இடத்தில் வரும்.

இங்கே சிவப்பில் எழுதப் பட்ட வாக்கியம் அனைத்து புஷ்பிகைகளிலும் வரும். இங்கே சம்வாதம் என்று வியாசரே கூறி விட்டார்.  சஞ்சயன் பதினெட்டாம் அத்தியாயத்தில் "ஸம்வாதம் இமம் அத்புதம் ..." என்று கிருஷ்ணரின் கீதையை வர்ணிக்கிறார். சம்வாதம் என்றால் உரையாடல் என்று தான் பொருள்.

இதில் தெளிவு பெற கீதையின் உள் ஸ்லோகங்களையே பார்ப்போம். அர்ஜுனன் மொத்தம் பேசியது  85  ஸ்லோகங்கள்.
முதல் அத்தியாயம்  47 ஸ்லோகத்தில் அவன் பேசியது மட்டூம் 26.
இரண்டாம் அத்தியாயத்தில் அவர் பேசியது 5 ஸ்லோகங்கள்.
மூன்றாம் அத்தியாயத்தில்  3 ஸ்லோகங்கள்.
நான்காம் அத்தியாயத்தில் 1
ஐந்தாம் அத்தியாயத்தில் 1

ஒன்றாம் அத்தியாயம் முழுதும் அர்ஜுனனின் மனக் குழப்பமே நம் முன் நிற்கிறது. பாரத யுத்தத்துக்கு சில மாதம் முன்பு இதே அர்ஜுனன் ப்ருஹன்னளை ரூபத்தில் அவன் இன்று உறவு கொண்டாடுகின்ற அனைத்து வீரர்களையும் யுத்த களத்தில் தோற்கடித்திருந்தான். திடீரென்று அவனுக்கு கலக்கம் வந்து செய்தது  வெறும்  சண்டித்தனம் மட்டுமே. அன்று அவன் செய்தது புலம்பல் மட்டுமே.

இரண்டாம் அத்தியாயத்தில்  அர்ஜுனனின் புலம்பல் வாதத்தை க்ருஷ்ணன் அலித்தனம்  என்று விவரித்தமையால் அர்ஜுனன் மேலும் குழப்பமடைந்து நான் உங்கள் சீடன் . எனக்கு நல்லுரை கூறுங்கள் என்று ஆரம்பிக்கிறான். ( " சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் ")  இதே அத்தியாயத்தில் இடையில் 54 வது ஸ்லோகத்தில் அவன் கேட்டது ஸ்திதப் ப்ரக்ஞனின் இலக்கணம் பற்றி.

 மூன்றாம் அத்தியாயத்திலோ அர்ஜுனன் கிருஷ்ணனைக் கேட்டது சன்யாசம் அல்லது கர்மம் இதில் எது சிறந்தது என்ற கேள்வி.இதிலும் அர்ஜுனனின் சண்டித்தனத்தின் எச்சங்களைக் காணலாம்.

நான்காம் அத்தியாயத்தில் அர்ஜுனன் க்ருஷ்ணனின் திவ்ய பிறப்பு பற்றி சந்தேகம் எழுப்புகிறான்.

இதோடு அர்ஜுனனின் குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன. இப்போது  அவர் க்ருஷ்ணரின்  கருத்துகளை ஸ்ரத்தையோடு கேட்க  தயாராகிறார்.  க்ருஷ்ணரின் உபதேசத்தை எதிர் மறை எண்ணங்கள் இல்லாமல் கேட்கிறார். சில சிறு சந்தேகங்களை அங்கங்கே நிவர்த்தி செய்து கொள்கிறார். பத்தாம் அத்தியாயத்தில் அவர் க்ருஷ்ணனை பரம் பொருளாக ஏற்றுக் கொள்கிறார். பதினொன்றாம் அத்தியாயத்தில் க்ருஷ்ணனின் விராட ரூபம் கண்டு களிக்கிறார். சரணாகதி அடைவதாகக் கூறுகிறார். இதன் பின்னர் பகவான்  கூறும் அனைத்து ஸ்லோகங்களையும் அப்படியே ஸ்வீகரிக்கிறார்.

 இந்த நான்காம் அத்தியாயத்துப் பிறகு உரையாடல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அது சுத்தமாக உபதேசம் மட்டுமே. உபதேசத்தின் இன்னொரு விளக்கம் தகுதி வாய்ந்தவனுக்கு மட்டுமே கொடுப்பது . இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் தன்னுடைய தனிக் கருத்துகளை விட்டு க்ருஷ்ணரின் மொழிகளை ஏற்க முற்பட்ட உடனே உபதேசம் ஆரம்பிக்கிறது எனலாம். நான்காம் அத்தியாயத்தில் முதிர்ந்த சிஷ்யராகி விடுகிறார்.

இதற்குப் பிறகு அவர் அதிக பட்சமாக பதினொன்றாம் அத்தியாயத்தில் 32 ஸ்லோகம் சொல்கிறார். அனைத்தும் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு பிரமித்து சொன்னவை.

நம்முடைய முன்னோர் கீதையை உபதேசம் என்றது இது போன்ற திடமான ஆராய்ச்சியால் தான். வியாசர் சம்வாதம் என்ற போதிலும் அது  சம்வாதத்தில் ஆரம்பித்து வேண்டுமானால் இருக்கலாம். ஆனால்  முடிவதோ உபதேசத்தில் தான் என்று நான் கூறுகிறேன்.

No comments:

Post a Comment