Thursday, January 15, 2015

நன்செய் யக்ஞம்

 ண்டர்நட்டில் அனைத்து தமிழ் செய்தித் தாள்களையும் அன்று சுந்தரம் ஆராய்ந்து தகவல்களை ஒரு பேப்பரில் அவசரமாக எழுதிக் கொண்டார்.

எல்லாமே இடம் விற்பனைக்கு விளம்பரங்கள்..ஒன்றிரண்டை அடிக்கோடிட்டு வைத்தார். போனை எடுத்து முதல் நம்பரை கூப்பிட்டார். 
" இது புளியம்பட்டி முத்துசாமி சார் வீடுங்களா ?" 
"ஆமாம் . என்ன விஷயங்க ?"
"இடம் விற்பனை விஷயம் "
"சொல்லுங்க நான் தான் முத்துசாமி."
"உங்களோட எட்டு   ஏக்கர் பூமி பத்தி தான். விவரம் சொல்லறீங்களா ?"
"நல்ல செம்மண் பூமி கம்மாய்க் கரைக்கு சமீபம். கிணறு உண்டு. கம்மாய் வத்தினதுல கிணத்துல தண்ணி இல்ல. பட்டா , சிட்டா, அடங்கல் வில்லங்கம் இல்லாம இருக்கு.நெல்லு, பருப்பு, வாழை, எல்லாம் அமோகமா விளைஞ்ச பூமி "
" என்ன விலை சொல்லறீங்க ?"
சற்றே தயங்கியது குரல்." மொத்தமா முப்பது  லட்சம் கிடச்சா தேவலை. இது சுத்தமான விவசாய பூமி. ரோட்டுல இருந்து அஞ்சு கிலோமீட்டர் தள்ளி இருக்கறதால தான் இந்த ரேட்டு. ரோட்டு மேலே ஏக்கரா இருபதுக்குப் போயிட்டு இருக்குது."
"சரிங்க . நான் இப்பவே கிளம்பி வர்ரேன்.புளியம்பட்டி வந்ததும் கூப்பிடறேன். தோட்டத்துக்கு வழி சொல்லுங்க "

சுந்தரம் முத்துசாமியின் தோட்டத்தை அடைந்த போது உச்சி வெய்யில் நேரம். அந்த வறட்சியிலும் நிலம் காவி பரப்பிய களம் மாதிரி இருந்தது. மூலையில் அவரது வீட்டை அடைந்ததும் திண்ணையில் அமர்ந்தனர். 
"வாங்க என்று வரவேற்ற அவர் மனைவி மோர் கொண்டு வந்து வைத்தாள்.  ஒற்றை நாடியான , வேலைப் பளுவில் இறுகிய தேகம். முற்றத்தின் கல் பாவிய தரை, தேக்குத் தூண் , சற்றுத் தள்ளி இருந்த பெரிய தொழுவம் எல்லாம் ஒரு நன்கு வாழ்ந்த குடும்பத்தின் பெருமையை காட்டின.

" என் பேர் சுந்தரம். மத்திய அரசு வேலைல இருந்து நேத்து தான் ஓய்வு. நானும் ஆம்படையாளும் தான்.பையன் வெளிநாட்டுல .எனக்கு இந்த மாதிரி விவசாய நிலம் வாங்க ஆசை. அதான் " .
அந்த விவசாயியும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு முத்துசாமி  சுந்தரத்தைப் பார்த்து , "எல்லை எல்லாம் காட்டிட்டு வர்றேன் வாங்க"  என்று அழைக்க,
 "அதெல்லாம் பரவாயில்ல . கிரயமாகும் போது பாத்துக்கலாம். அடுத்த வாரம் அக்ரீமெண்டு போட்டுக்கலாம். அஞ்சு லட்சம் தர்ரேன்.என் பையன் ஆறு மாசம் கழிச்சு வருவான். அப்போ கிரயம் வச்சுக்கலாம். அவன் பேர்ல தான் வாங்கப் போறேன்." என்றார் சுந்தரம்.

தன்னுடைய விலாசம் , தொலை பேசி எண்ணெல்லாம் தந்து விட்டு அவர் சென்ற பிறகு முத்துசாமிக்கு நம்பவே முடியவில்லை. அண்டை அசலில் எல்லாரும் நிலத்தை விற்று விட்டு பெண் கல்யாணத்துக்கும், பையன் படிப்புக்கும் செலவு செய்ய நினைத்து , விலைக்கு ஆள் வராமல் தவித்துக் கொண்டிருக்க, தனக்கு இவ்வளவு எளிதாக , விலையும் பேரம் பேசாமல் இந்த மனுஷன் அமைந்தாரே என்று நிம்மதியாய் இருந்தது  . மனம் ஒதிமலை முருகனுக்கு நன்றி சொல்லியது.

டையில் பல தடவை சுந்தரம் கூப்பிட்டு பேச, அங்கே ஒரு நெருக்கம் உருவாகி விட்டிருந்தது. முத்துசாமி அவரை ஐயரே என்று அழைக்கத் தொடக்கி விட்டார். இவரும் அவரைக் கவுண்டர் வாள் என்று கூப்பிட  ஆரம்பித்து விட்டார்.. அக்ரிமண்ட் போடும் தினம் சுந்தரமும் அவர் மனைவி பாக்கியமும் இருந்தனர். சாட்சிக்கு அவர் நண்பர் ராமு.கையெழுத்திட்டு பணம் கொடுத்து வெளியே வருகையில், சுந்தரம் முத்துசாமியிடம், " கவுண்டர் வாள்  இன்னிக்கு எல்லாம் சுப சகுனம் போங்க உங்க பூமியில பசு மாடு குங்குமத்தோட எதிரே நின்னது, அங்க பிள்ளயார் கோவில்ல பூ விழுந்தது எல்லாம் ரொம்ப திருப்தி. எல்லாம் நான் நினைத்த படியே நடக்கறது. இப்போ உங்கள்கிட்ட நான் ஒண்ணு கேப்பேன். தப்பா நினைக்கப் படாது." என்று பீடிகை போட்டார்.

முத்துசாமியின் நெற்றி சுருங்கியது. அய்யர் நிபந்தனை போடுவது இது தான் முதல் முறை . "சொல்லுங்க " என்றார்.

" நானும் என் ஆத்துக் காரியும், காசி ,  கயை , சோமனாதம், ரிஷிகேஷ் , அயோத்தியா அப்படீன்னு ஒரு பெரிய தீர்த்த யாத்திரைப் பட்டியலே வச்சிண்டிருக்கோம். இங்க வந்து நாங்க இப்போதைக்கு விவசாயம் பண்ணப் போறது எல்லாம் இல்லை. நீங்களே எப்பவும் போல கிரயம் வரைக்கும் மட்டும் இல்ல, அதுக்கு அப்புறமும், என் சார்பா இந்த பூமியைப் பாத்துக்குங்க . என்னைப் பொறுத்த வரைக்கும் இது முதலீடு மட்டும். எனக்கு விளைஞ்ச எந்தப் பொருளும் வேண்டாம். உங்களுக்கு விவசாயம் நல்லா இருக்க என்னாலே முடிஞ்சது கூட செய்யறேன். எனக்குத் தெரிஞ்ச ஐ ஏ எஸ் ஆபீசர்  இருக்கார். உங்க குளத்தை தூர் வார சொல்லறேன். நான் கொடுத்த பணத்துல ஒரு அம்பதாயிரம் செலவு பண்ணி அதோ அங்கே ஒரு முப்பது செண்டுல ஒரு குளம் தோண்டுங்க . நான் கிரயத்துக்கு வரும் போது அதையும் திருப்பிக் கொடுத்துடறேன்." 

" ஐயரே எனக்கு விளங்கல்லீங்க. நானே வித்துட்டு நானே பின்ன நிலத்துல இருக்கவா ? உங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா ? அப்படி எல்லாம் முடியாதுங்க . நீங்க குத்தகையாவது வாங்கிக்குங்க." என்று கூற,
" சரி உங்க பிரியம் . முடிஞ்சதைக் குடுங்க." என்று கூறி விட்டு , பாக்கியத்தைப் பார்க்க, மாமி கையோடு கொண்டு வந்திருந்த வேட்டி துண்டு , புடவை ரவிக்கை எல்லாம் தாம்பாளத்தில் இட்டு, தேங்காய் பழம் தாம்பூலத்தோடு கொடுத்து கவுண்டருக்கும், மனைவிக்கும் கொடுத்தனர்.

"இந்த பூமியில் உங்க குடும்பம் சிறப்பா வாழணும் " என்று அவர்களை ஆசீர்வதித்து விட்டு சுந்தரம் புறப்பட்டு சென்று விட்டார். சென்றவர் சும்மா இல்லை. தன நண்பர் மற்றும் தெரிந்தவர் அனைவரையும் தொடர்பு கோண்டு பேசி , கண்மாயை இரண்டு மாதத்துக்குள் தூர் வாரச் செய்து விட்டார். கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் கண்மாய்க்கு செல்லும் வாய்க்கால்களை செப்பனிட்டு விட்டனர். அடுத்த மாத மழையில் கண்மாய் பாதி நிரம்பி விட்டது. ஊரில் எல்லாக் கிணறும் ஊறி விட்டது.

" ஐயரே , நாங்க இப்போ நெல்; போட்டிருக்கோம். மூலை மேட்டுக் காட்டில புல்லு போட்டிருக்கேன். மாட்டுக்கு போதும். நீங்க குடுத்த காசுல தான் முட்டுவளி" என்று போனில் சொல்லி சிரித்தார் முத்துசாமி . "நீங்க விவசாயத்தைக் கவனியுங்க. நான் இந்த வாரம் காசி கிளம்பறேன். நாலு மாசம் ஆகும்.இரண்டு மாதம் தாமதமாக பொங்கல் சமயத்தில் வருகிறேன். கிரயம் அப்பா பாத்துக்கலாம். பணம் ஒண்ணும் அவசரம் இல்லயே ? என்று வினவ , கவுண்டர்  , " பொங்கலுக்கே பாத்துக்கலாம் வாங்க" என்று கூறி விட்டார். அய்யர் ரயிலேறும் போது விவசாய தம்பதியினர் கோவை ரயில் நிலையத்துக்கே வந்து வழியனுப்பினர்.   

பார விளைச்சல் கண்டது அந்த வருடம்.  நெல் மூட்டையை எண்ணியதில் முதலீடு போக நான்கு லட்சம் மிஞ்சும்  என்று பட்டது..  நாளை பொங்கல். அய்யர் வந்து விடுவார். அவரிடம் காட்டிய பின்பு வியாபாரிக்கு கொடுக்க உத்தேசம்.

அய்யர் சற்று இளைத்திருந்தார். ஒரு பெரிய தாமிர செம்பில் கங்கை தீர்த்தம் இருவருக்கும் கொடுத்து பெண்ணுக்கும், பையனுக்கும், பசுவுக்கும் கொடுத்து பின்பு பூமியிலும் தெளிக்கச் செய்தார். முத்துசாமி பாக்கியம் மாமியை அழைத்து முதல் நெல் மூட்டையை வழங்க, , மாமி அதன் மேல் குங்குமம் இட்டு பெற்றுக் கொண்டாள்.

கவுண்டரும், அய்யரும் எழுந்து தொழுவம் பார்க்கச் சென்றனர். பசுவைத் தடவிய படியே, அய்யர் , முத்துசாமியை நோக்கி, "எப்படி எல்லாம் திருப்தியா ?" என்று கேட்க , முத்துசாமி ," என்னிக்கு உங்க கால் இந்த ஊர்ல பட்டதோ, நான் அன்னிக்கே ராமசாமிக் கவுண்டர் பேரனா மாறிட்டேன் சாமி. எங்க அப்பச்சி கொடும் பஞ்சத்துலயும் ஊரை விட்டுப் போகாம அந்தக் கம்மாயை வெட்டினாரு. இருந்த நெல்லு பூராவும் ஊருக்கு குடுத்தாரு. இப்ப எம்பது வருஷம் அதுதான் எங்களைக் காப்பாத்துச்சு. இப்ப ஏதோ எம் பையன் படிச்சு வெளியூரு போய் சம்பாதிப்பான்னு ஒரு ஆசை வந்ததும், சின்ன பஞ்சத்துக்கே என் குடும்ப ஆஸ்தியை வித்துப்புட்டேன். ஏதோ உங்க பெரிய மனசால இங்க பொழப்பாவது ஓடுது. எங்க இருந்தோ வந்த  நீங்க கம்மாயை வெட்டிக் குடுத்த பின்னால இந்த ஊர்ல விக்க நினச்சவன் எல்லாம் மாறீட்டான். ஒழுங்கா மட்டைப் புடிச்சிட்டு போறான்  "  துண்டால் முத்துசாமி கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

" அடேடே , கவுண்டரே என்ன இது.தைரியமா இருங்க. நீங்க விரும்பினா உங்க பூமியை நீங்களே வச்சுக்கலாம். வேறே இடம் நீங்களே வாங்கிக் குடுங்க . அது போதும் எனக்கு"  கன்றுக்குட்டியை அணைத்தபடியே சுந்தரம் சொன்னார். 

"என்ன சொன்னீங்க , நிஜமாவா சாமீ ? என் பாட்டன் பூமி எனக்கு திரும்ப கிடைக்குமா ? அய்யோ , ஒதிமலை முருகா! பார்வதீ இங்க வா ! அய்யரு சொன்னதைக் கேளு " என்று வீட்டை நோக்கி ஓடி விஷயத்தை சொல்ல , உடல் இறுகிய அந்த உழைப்பாளிகள் இருவரும் மனம்  இளகி தரையில் உட்கார்ந்து விட்டனர்.

" கவுண்டரே ! நீங்க நெல்லு வித்து பணம் குடுங்க போதும். துண்டு விழுந்தா அவசரம் இல்ல . எனக்கு அடுத்த அக்ரிமெண்ட்டுக்குத் தான் வேணும். அடுத்த ஊர்ல உங்கள மாதிரியே யாராவது இருந்தா காமிங்க . என்னால விவசாயம் பண்ண முடியாது. ஆனால் காசி விஸ்வனாதன் அருளால விவசாயம் பண்ணறவாளை அதுல இருந்து வெளியேறாம தடுக்கவாவது முடியறதே. என் ஓய்வுப் பணத்துல பாதியை இதுக்கு ஒதுக்கியிருக்கேன்.எனக்கு வட்டி வேண்டாம். நாராயணன் புண்ணியத்துல முதல் போகாது. நீங்கள்ளாம் என்னை விட  தன்மானம் கொண்ட மனுஷாள்.  அணிலாட்டம் நானும் இங்கே ஒரு ஓரமா செஞ்சுட்டுப் போறேன்."

ய்யரும் மாமியும் நெல் மூட்டையை காரில் ஏற்றிச் சென்ற பொது புழுதி படியும் வரை அந்தக் குடும்பம் பார்த்து நின்றது. காரில் மாமி, " ஏன்னா , சொன்ன மாதிரியே புரட்சி பண்ணீ ட்டேள் " என்று பெருமையோடு சிரிக்க , " பாக்கியம் , நாம ஜாம்பவான் மாதிரி. அவா ஆஞ்சநேயன் மாதிரி. அவாளோட உண்மை பலம் அவாளுக்கு காமிக்க வேண்டியது மட்டும் நம்ம வேலை. மீதியை பகவான் பாத்துப்பாண்டி. ஒரு வகையில இது நம்ம யக்ஞம்  மாதிரி. 

"ஆமாமா . பிரசாதமும் கொடுத்துட்டாரே " என்று பின் சீட்டில் இருந்த நெல் மூட்டையைக் காட்டி சிரித்தாள்.  

Thursday, October 23, 2014

மகாபாரதக் கல்வி ஏன் பொலிவிழந்தது ?

மகாபாரதக் கல்வி ஏன் பொலிவிழந்தது ?

(ஜெயமோகனின் "பெரிதினும் பெரிது"  கட்டுரைக்கு பதில்)

நேற்றைய தினமலர் நாளிதழோடு தீபாவளி சிறப்பு மலர் ஒன்று சேர்த்துக் கொடுத்தார்கள். உள்ளே  இன்ப அதிர்ச்சி . ஜெயமோகனின் " பெரிதினும் பெரிது " என்ற கட்டுரை. கிடைத்த இடத்தில் உட்கார்ந்து வாசித்தேன். மகாபாரதத்தின் பெருமையை, மகிமையை அறிந்தவர்களில் இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகனுக்கு ஈடாக யாரும்  இல்லை என்றே கூறி விடலாம். ஜெயமோகனின் இணைய தளத்தில் இப்போது<இங்கே> வாசிக்கக் கிடைக்கிறது.

அவரும் தன இணைய தளத்தில் தமிழ் மகா பாரதம் எழுதி வருகிறார்- புது வடிவத்தில். தினமும் ஒரு அத்தியாயம் எழுதி வருகிறார். அதிலேயே மூழ்கி இருப்பதால் , அது சம்பந்தமாக பல விஷயங்களை அனாயாசமாக , இயல்பாக இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

வியாசர் மகாபாரதத்திப் பற்றிக் கூறுகையில் , "இங்கில்லாதது எங்கும் இல்லை " என்று கூறினாராம். இது எனக்கு முன்னமே தெரியும். ஆனால் மலையாள சினிமா எழுத்தாளர்  லோஹித தாஸ் கூறிய செய்தி எனக்கு தேன் போன்றது . "வ்யாஸோச்சிஷ்டம்  ஜகத்ஸர்வம் " ( வியாசனின் எச்சிலே ஜகம் முழுவதிலும் ) என்ற சொற்றொடரை அவர் நினைவு கூர்ந்து ஜெயமோகனுக்கு சொல்ல அவரும் அதை கொடுத்து விட்டார். எல்லாரும் படிக்க வேண்டி பரிந்துரைக்கிறேன்.

ஜெயமோகன் சமீப காலமாக மகாபாரதம் மற்றும் அது சார்ந்த படிப்பு தமிழ் நாட்டில் வீழ்ந்ததற்கு காரணம் தேடி , தன முடிவாக சிலவற்றை வைக்கிறார். இந்து மதம் மூன்று கட்டுமானங்கள் மேல் நிற்கிறது.அவை 1 . தத்துவம், 2. பக்தி மன  நிலை, மற்றும் 3.சடங்கு.  நாத்திகப் பிரச்சாரம் காரணமாக தமிழ் நாட்டில் உண்மை பக்தி குறைந்ததாகவும் , அதன் காரணமாக சடங்குகள் மேலோங்கிய ஒரு மதம் மட்டுமே இங்கு நீடிக்கிறது என்று கூறுகிறார்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது உண்மையாகவே தெரியும். நான் மாறுபடுகிறேன். அதன் விளைவே இந்த கட்டுரை. முதலில் ஜெயமோகன் யார் என்று சற்று பார்த்து விட்டு முன்னகர்வது ஒரு சரியான ஆரம்பமாக இருக்கும். அவர் குழப்பமான காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்.கிறித்துவர்கள் அதிகம் சூழ்ந்த நிலையில் வாழ்ந்தவர்.  திராவிடம் வேறு உச்சக் கட்டத்தில் அக்காலத்தில் பிரச்சாரம் செய்து இருக்கிறது. 

நம்மில் யாரைக் கேட்டாலும் தங்கள் பழக்க வழக்கங்கள் பெற்றோரிடம், அதுவும் குறிப்பாகத் தாயிடம் இருந்தே வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவருக்கு மதத்தைப் புகட்ட வேண்டிய தாய் ஒரு சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண்மணி. பைபிளும், எழுத்தச்சனும்  சேர்ந்து படித்தவர். ஜெயமோகன் தன்னுடைய இருபதாம் ஆண்டளவில் ஆர். எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக இருந்து பின்பு விலகி , அரசு வேலையில் சேர்ந்த பின் கம்யூனிச அமைப்பில் சேர்ந்து அதன் பிரச்சாரத்திலும் தீவிரமாக இருந்து பின்பு எழுத்தாளர் ஆன பின், அதையும் நிராகரித்தவர். பின்பு நாராயண குருகுலத்தில் பற்றுக் கொண்டு அவர்களது வேதாந்தம் சார்ந்த மதத்தில் , நம்பிக்கையில் எழுதி வருகிறார்.

அவரது எழுத்தில் மேற்கூறிய அனைத்து நீரோட்டங்களின் தாக்கம் இருக்கும். தாயிடம் இருந்து மதம் கற்காததால் இயல்பாக அவருக்கு சடங்குகள் மீது பிடிப்பு இல்லை.

இந்தப் பின்னணியில் வைத்து  அவரது மேற்கூறிய வாசகத்தைப் படிக்கையில் இந்த முழு கட்டுரையின் குறைபாடு விளங்கி விடும். உண்மையில் இந்து மதத்தின் கட்டுமானம் 1. தத்துவம் 2 புராணம் மற்றும் 3. சடங்கு இந்த மூன்றின் மேலும் தான் உள்ளது.பக்திமன நிலை என்று இரண்டாவது காரணம் சுருக்கப் பட்டதற்கு அவரது இளமைச் சூழலே காரணம் என நான் நினைக்கிறேன்.

இந்த மூன்றும் தனித் தனியாக பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இனக்குழுவும் இங்கே தங்களுக்கென புராணம் வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கென தனி சடங்கு முறைகள் (ஆகமங்கள்).  தனித் தத்துவ கோட்பாடுகள்.  தத்துவமும் , சடங்கும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கிறது இங்கே.  புராணங்களிலும் மக்களின் வாழ்க்கை எப்படி சடங்கையும் தத்துவத்தையும் சமம் செய்து முன்னேறியது என்று வகை வகையாய் கதைகள் கிடைக்கின்றன. இந்த வாழ்க்கை முறைக்கு உபாசனை என்பது பெயர்.உபாசகனின் வாழ்க்கையில் சடங்கும், தத்துவமும் பிரிக்க முடியாதவை.

உதாரணத்துக்கு ஒரு சைவன் திருநீற்றிலும் மனிதனின் நிலையாமையை உணர்கிறான். ருத்திராக்ஷத்தில் இயல்பான துளையைப் பார்த்து அனைத்து கொட்டைகளின் வழியே ஊடுருவும் இழை போன்று பரமாத்மா மகேஸ்வரன் அனைத்து ஜீவன்களிலும் ஊடுருவி நிற்பதாக காண்கின்றான். சைவனின் , உணவு, படிப்பு அனைத்துமே அவன் வாழ்வின் தத்துவம், மற்றும் நம்பிக்கையின் கலவையே. ஒவ்வொரு குழுவிற்கும் இதே போன்று இங்கே அடையாளம் காட்டி விடலாம்.

மகாபாரதம் இங்கே சற்று உயர்ந்த பீடத்தில் இருக்கிறது. அது சைவமும், வைணவமும் தோன்றியதற்கு முன்பே தோன்றியதால் அதற்கு இந்த இரண்டு சம்பிரதாயங்களும் மதிப்பளித்தன.  ராமாயணமும் அப்படியே. 

மகாபாரதமும்  தமிழ் மண்ணும் ஒன்றாகப் பிணைந்தவை தான்.சங்க இலக்கியம் முதல் சென்ற நூற்றாண்டு வரை  பாரதம் நம் மக்களின் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்திருந்தது. மகேந்திர வர்ம பல்லவன் கிராமம் தோரும் பாரத மண்டபங்களை எழுப்ப ஆணையிட்டு மக்களுக்கு தினமும் பிரசங்கிக்க அந்தணர்களுக்கு நிவந்தம் கொடுத்தது வரலாறு. அவை இன்னும் உள்ளன. 

இப்படி இருக்க, ஏன் இதிகாசப் படிப்பு குறைந்தது ? 
1. நேருவியப் பார்வை. இது அகில இந்தியாவையும் பாதித்தது. தமிழகத்தை மட்டுமல்ல. நேருவிய லட்சியங்களைக் கைக்கொண்ட மூன்று தலைமுறைகள் தங்கள் இலக்கை மாற்றி வைத்தன. பொருளியல் சுதந்திரம் என்ற தாரகம் நோக்கி பாரதம் நகர்ந்தது. இதிலும் பிராம்மணர்கள் முன்னணி வகித்து விட்டனர்.ஜெயமோகன் கூறும் அனைத்து விஷயங்களும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

2. பிராம்மணர்கள் அருகிய சூழல்.: குமாஸ்தாக்களில் இருந்து அறிவியல் வல்லுநர் வரை பிராம்மணர்கள் சென்றது, பாரதத்தின் முதல் சோதனை. அது வரை கிராமம் தோரும் இதிஹாச, புராணப் பிரசங்கத்துக்கு அமைப்புக்கள் இருந்தன. இது தவிர எப்போதும் சஞ்சாரத்தில் இருக்கும், பண்டிதர்கள் , துறவியர் என எல்லாரும் கிராமங்களில் தங்கி தர்ம பிரச்சாரம் செய்ததால் இந்தப் பாரம்பரியம் நீடித்து வந்தது. பிராம்மணர்களின் வெளியேற்றத்தால் அது குலைந்தது. ஓரிருவர் தவிர , பெரும்பாலும் எல்லாரும் இதிகாசங்களை வாய்மொழியாகவே கற்றவர்கள். 

இந்த நிலையில் தான் மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளி வரத்தொடங்கின. கும்ப கோணப் பதிப்பு 1930 முதல் தொடங்கியது. 1952 ஆம் ஆண்டு முதல் அதுவும் நின்றது. பின்பு ராஜாஜியின் குறுகிய பதிப்பு, சோ வின் 'மகாபாரதம் பேசுகிறது " போன்ற முயற்சிகள் மட்டுமே இங்கே நிகழ்ந்தன.

3. மதச் சார்பற்ற படிப்பு:மூன்று  தலைமுறையாக இந்த துரதிருஷ்டம் நம்மைப் பிடித்தாட்டுகிறது.

எந்தக் கால கட்டத்திலும் இந்த இரண்டு இதிகாசங்கள் மட்டுமே நம் வாழ்க்கை முறையின் போக்கை நிர்ணயித்தன. இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் இவைகள் பெருமையை இழப்பதைக் காணுகையில்   இந்த பாரதம் தழுவிய காரணங்களையே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்ட நாத்திக இயக்கங்களினால் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் இல்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நம் புராண , இதிகாசப் படிப்பு முப்பது நாற்பதாண்டு காலமாக குறைந்தே வருகிறது.

அப்படியானால், தமிழகத்தில் நாத்திக இயக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் தான் என்ன ? முதலில் நாத்திக இயக்கம் இங்கே ஜாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கவோ, பகுத்தறிவை புகுத்தவோ வரவில்லை. அவர்களிடம் ஆன்மிகம் குறித்த தெளிவு இல்லை. முதிர்ச்சியும் இல்லை. அவர்களது நாத்திகம்  சமுதாய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஏற்படுத்தப்பட்டது. ஈ வெ ரா சமுதாய அதிகாரத்தை கைப்பற்றிக் கொடுத்தார். அண்ணாதுரை மற்றும் அவரின் சீடர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நாத்திக இயக்கத்தை உபயோகப் படுத்தினர். 

அந்த இயக்கத்தின் தொண்டர்கள் என்பவர்கள் பெரும்பாலும் பாரம்பரியமாக ஆன்மீக பாரம்பரியம் அற்றவர்கள். நாயக்கர்கள், வெறும் இரண்டு மூன்று நூற்றாண்டு வைணவப் பாரம்பரியம் கொண்டவர்கள். மேலும், தமிழ் வைணவ முறைகள் அவர்களுக்கு முற்றிலும் போதிக்கப் பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே. செட்டியார்களில் நகரத்தார் தங்கள் வெள்ளைக்கார பாசத்தால் இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். நாத்திக இயக்கம் பெரும்பாலும் வெள்ளாள ஜாதிகளைக் குறிவைத்தது . வெள்ளாளர்களில்அடுக்கு ஜாதிகள் பல உண்டு. மேல் தட்டு மக்கள் ராஜாக்கள்/ ஜமீன்தார்கள்/பண்ணையார்கள். இவர்கள் 'காங்கிரஸ்காரர்கள்'. நடுத்தட்டு சிறு நில உடைமையாளர்கள் மற்றும் மேற்பார்வை பணி செய்பவர்கள். இந்த இரண்டு தட்டு பிரிவினருக்கும் தத்துவம், புராண சடங்கு சார்ந்த ஆன்மீகப் பின்புலம் அதிகம். 

கடைத் தட்டு வெள்ளாளர்கள் கூலித் தொழிலாளிகள். இந்தக் கடைத்தட்டுக்கு, ஆன்மிகம் என்ற பாரம் பரியம் இருந்தது இல்லை. குல தெய்வம், கிடா வெட்டு போன்ற சடங்குகளுக்கு மேல் இவர்கள் அறியாதவர்கள். இன்றும் கழகத் தலைவர்கள் பலரும் இந்தப் பிரிவில் இருந்தே வந்தவர்கள். இவர்கள் தான் நம் கல்விக்கொள்கைகலை வகுப்பவர்கள்.

வெள்ளாளர்களில் பல தட்டுக்களையும் இணைக்க உத்திகள் நடக்க, இக்கால கட்டத்தில் தான் மேல் தட்டு வெள்ளாளர்களுடைய   பாரம்பரியம் பதவிக்காக தியாகம் செய்யப் பட்டது. அவர்களும் காங்கிரசை உதறி , இறங்கி வந்து திராவிட அரசியலில் இணைந்தார்கள்.

ஆக , நாத்திகம் நம் பாரம்பரியத்தை மறைக்கவில்லை. சுயநலம் மட்டுமே.

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவருக்கும், தான் வசித்த கிராமம், உள்ளூர் கோவில், சாதி, குலம், மற்றும் தொழில்  சார்ந்த மதப் பாரம்பரியம் உண்டு. எங்க அய்யரூ, எங்க பூசாரி, எங்க பண்டாரம், எங்க ஜோசியர், என்று அங்கே உண்டான பந்தம் உண்டு. கிராமங்களில் நிவந்தங்களோடு வாழ்ந்த பௌராணிகர்கள் , நேருவின் திட்டத்தால் இடம் பெயர ஆரம்பிக்கவே, கிராமங்களின் ஆன்மீகக் கல்வி பொலிவிழந்தது. இன்னும் கட்டுக் குலையாத கிராமங்களில் பிராம்மண துவேஷம் என்பதே என்னவென்று தெரியாது. அந்தக் கிராமங்களில் பாரம்பரியம் செழித்துத் தான் இருக்கிறது.

மகாபாரதம் இன்னும் குடும்பங்களின் நினைவில், அங்கங்கே கிடைக்கும் சொற்பொழிவுகளில், பொக்கிஷங்களாய் பாதுகாக்கப் படும் பழைய பிரதிகளில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Thursday, February 20, 2014

கீதையை எப்படிப் படிப்பது ?

கீதையை எப்படிப் படிப்பது ?

ஆசாரியர்கள் அருகி விட்ட இன்றைய சூழ்நிலையில் ஒருவர் கீதையை எப்படிக் கற்க முடியும் ? இதற்கு விதிமுறைகள் உண்டா ? யார் யார் கீதையைப் படிக்க வேண்டும் என்று வரை முறை உண்டா ? கீதை நூலை வீட்டில் வைக்கலாமா ?

இந்தக் கேள்விகள் இயல்பாக இன்றைய இளைய தலைமுறையினர்  மனதில் எழுகின்றன. காரணம், இரண்டு தலைமுறைகள் ஆங்கிலக் கல்வி கற்கும் சமுதாயமாக நாம் மாறி விட்டதும், மதச் சார்பின்மை என்ற பெயரில் "எல்லா மதமும் உண்மை, ஒரே குறிக்கோளை நோக்கிச் செல்பவை " என்னும் அப்பட்டமான பொய்களைப் படிப்பதாலும், சமஸ்கிருதம் என்னும் நமது பண்பாட்டு மொழியில் இருந்து விலகியதாலும் தான்.

இதையும் மீறி எப்படி கீதை கற்பது ?  இன்றைய இந்து சமூகத்தின் அடிப்படையே வேதாந்தம் தான். தங்கள் கொள்கைகளை நிலை நாட்ட சங்கரர் முதலிய  வேதாந்த ஆச்சாரியர்களின் மூன்று தேர்வு நூல்களில் கீதையும் ஒன்று..  காந்தி ஒவ்வொரு இந்துவும் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நூல் கீதை என்கின்றார் . முதலில் ஒரு சில கேள்விகளுக்கு விடை கூறிய பின் எப்படிப் படிப்பது என்று பார்த்து விடலாம்.

கீதையை அனைத்து சாதியினரும் படிக்கலாமா ?

கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. இதிகாசங்கள் நான்கு வருணங்களுக்கும் பொதுவானவை. ஆகவே பகவத் கீதையை எல்லோரும் படிக்கலாம்.

எப்படி ஆரம்பிப்பது ?

குழந்தைக் கண்ணனோ,  பசுவுடன் நின்ற கோலத்தில் உள்ள கண்ணன் படமோ இருத்தல் உத்தமம். அந்தப் படத்துக்கு ஒரு நல்ல நாளில் அலங்காரம் செய்து, ஜகத் குருவான கண்ணனை அந்தப் படத்தில் ஆவாஹனம் செய்து , நைவேத்தியம் படைத்து, தீப தூப மரியாதைகளுடன் வணங்க வேண்டும். கீதை உரை எடுத்து  ஒரு பலகையில் செய்யப் பட்ட மனையில் அல்லது பீடத்தில் வைத்து அதனை தூப தீபம், நைவேத்தியம் செய்து வணங்கி, பின்பு கண்ணனிடம் பாராயணத்தில் நம்முடன் கூடவே இருக்கும் படி வேண்டி சிரத்தையுடன் படிக்க ஆரம்பிக்க வேண்டும். முதல் ஒரு வாரம் , கீதையின் தியான சுலோகங்களை படிக்க வேண்டும். அவை நன்கு மனப்பாடம் ஆனா பின், முதல் அத்தியாயம் ஆரம்பிக்கலாம். (குழலூதும் கண்ணன் படம் இப்போது வேண்டாம்.)

கீதையைப் படிக்க விதிமுறை உண்டா ?

பொதுவாக நம்முடைய  புனித நூல்களை பூசை அறையில் வைத்துப் படிப்பது உத்தமம். அதுவும் குளித்து அன்றாட பூசைகளை முடித்து (அல்லது  பிராம்மணர்களாய் இருப்பின் சந்தி  முடித்து)  காலையோ அல்லது மாலையோ படித்தல் சிறந்தது. பணி   ஓய்வு  பெற்றவர்கள் நாள் முழுதும் பாராயணம் செய்யலாம். நேரம் இல்லாதவர்கள் உறங்கும் முன் சுத்தமாக இருந்து ஒரு சுலோகமோ  அல்லது இரண்டு சுலோகமோ மனப்பாடம் செய்து உரை படித்து உறங்கச் செல்லலாம்.

கீதையைப் படிக்க வேண்டுமா ? பாராயணம் செய்ய வேண்டுமா ?

கீதையை வெறுமனே படிக்க மூன்று மணி நேரம் போதும்.ஆனால் கீதையை அறிய பல ஜன்மங்கள் வேண்டும் என்று சுவாமி ராம்சுகதாஸ் குறிப்பிடுவார். நானும் இரண்டாவது வகையை மட்டும் குறிப்பிடுகிறேன். இது ஒரு வகை தொடர் பயிலுதல் ஆகும். இதில் ஒவ்வொரு சுலோகமும்  உரக்க  மனப்பாடம் செய்தல் வேண்டும். இதன் பின்னர் பத உரையைப் படித்தல் வேண்டும். பின்னர் சுலோகத்தின் பொழிப்புரையை மொத்தமாக மனத்தில் பதிக்க வேண்டும். இதற்குப் பின்னர் சுலோகத்தின் விரிவுரையை மனதில் இருத்த வேண்டும். ஓரிரு நிமிடம் அன்று கற்ற சுலோகத்தை ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்வில் அதை எங்கு கடைப் பிடிக்கலாம் என்பது பற்றி சற்று தியானித்த பின்னர் எழலாம். இதை பாராயணம் என்று ஒருவாறு உரைக்கலாம். இம்முறையில் ஒரு சுலோகம் வீதம் தினம் படித்தால் தினத்துக்கு மொத்தமாக பதினைந்து முதல் இருபது நிமிடம் ஆகலாம். முழு நூல் எழுநூறு சுலோகங்களால் ஆனது. ஏறக்குறைய இரண்டு வருடம் பிடிக்கும்.

பாராயணம் செய்ய எந்த கீதை உரை சிறந்தது ?

எனக்குத் தெரிந்த வரை நம்முடைய சனாதன பாரம்பரியம் , நம்முடைய பண்பாட்டின் மூல வேரோடு பரிச்சயம் போன்ற அடிப்படை விஷயங்களோடு , சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மூல சுலோகங்கள் , பத அர்த்தங்கள், விரிவுரை ஆகிய அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவது கீதா பிரஸ்ஸின் " தத்வ விவேசனி " . திரு ஜெயதயால் கோயந்தகா அவர்களுடைய ஹிந்தி உரையை திரு சுவாமிநாத ஆத்ரேயன் தமிழில் திறம்பட எழுதியுள்ளார். இதன் விலையும் நூறு ரூபாய் தான். சித்பவானந்தரின் உரை இதற்குப் பின்னர் தான்.சுவாமி ராம் சுகதாஸின் உரை அற்புதமானது . ஆனால்நீளமானது   . ஆகவே பாராயணத்துக்கு உதவாது.

கீதையைப் படிக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ?

ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மேல் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். கீதை கற்கும் பொழுதே சமஸ்கிருதமும் ம் வந்து விடும். இந்தி ஆசிரியர் ஒருவரை அணுகி இந்தி எழுத்தைக் கற்று எளிய சொற்களை படிக்க தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம். இன்று சமஸ்கிருதமும் இந்தியும் ஒரே எழுத்தான தேவநாகரியில் தான் எழுதப் படுகின்றன. சமஸ்கிருதத்தின் அடிப்படை அமைப்பு, அடிப்படை சொற்கள் ஒரு நூறு , போன்றவை அறிந்து வைத்துக் கொள்ளுதல்  ஒரு அற்புதமான தொடக்கத்திற்கு அடித்தளம். இன்றைய இணையம் இதற்கு வெகுவாக உதவும்.




ஏன் கீதை சுலோகங்களை மனப்பாடம் செய்த பின்னரே அர்த்தத்தை ஆராய வேண்டும் ? பாராயணம் செய்யும் முறை என்ன ?

சம்ஸ்கிருத மொழி ஆழம் மிக்கது. அது போலவே விரிவும் மிக்கது. ஒவ்வொரு சொல்லும் அந்தந்த சுலோகத்துக்கு உள்ளேயும் மற்ற இடங்களிலும் வேறு பொருளைத் தரக்கூடும். ஒரு சிறந்த உதாரணம் "கர்மம் " என்ற வார்த்தை. இதற்கு பல பொருள்கள்   கீதையில் உரை ஆசிரியர்களால் கொடுக்கப் படுகின்றன. இது போன்றே யோகம், தர்மம் போன்ற சொற்கள்.

மனப்பாடம் என்பது பாராயண விதி.இதன் முக்கியத்துவம் சொல்லி மாளாது. சுவாமி ராம் சுகதாஸ் கீதையை முதலில் சுலோக வாரியாக, பின்பு அத்தியாயம் வாரியாக, பின்பு முழு மனப் பாடம் செய்து, பின்பு தலை கீழ் மனப் பாடமும் செய்ய வலியுறுத்துகிறார். என்னுடைய வாழ்க்கையைச் செறிவுள்ளதாக்கியவை இந்த பாராயண முயற்சிகளே. இதற்கு எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவும் நமக்கு லட்சம் மடங்கு அனுகூலத்துடன் திரும்பி வரும். ஆகவே எந்த சங்கடமும் பாராமல் தொடங்கவும். முதலில் சற்று சோர்வு வரலாம். தளரக் கூடாது. முந்தைய தினம் படித்தது இன்று மறக்கலாம். சோர்வு வேண்டாம். காலையில் படித்த சுலோகத்தை ஒரு சின்ன துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு நாள் முழுதும் பத்து முறையாவது திரும்பக் கூறுதல் வெகுவாக உதவும்.

கீதா பிரஸ்ஸில் கையடக்க கீதை சுலோகங்கள் மட்டும் அடங்கிய பிரதி சமஸ்கிருதத்திலோ ஆல்லது தமிழிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. வாங்கி எப்போதும் கைவசம் வைத்திருக்கவும். திடீர் திடீர் அன்று நமக்கு சுலோகங்கள் தேவைப் படும். அந்தத் தருணங்களில் நாம் படிக்கும் சுலோகங்களை நாம் என்றென்றும் மறக்க மாட்டோம்.

பகவத் கீதையின் முழு ஒலி வடிவம் நிபுணர்களால் பாடப்பட்டு இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை தரவிறக்கம் செய்து நம் கைபேசியில் பதிந்து கொண்டால் சதா சர்வ காலமும் விரும்பிய நேரம் எல்லாம் கேட்கலாம். ஆரம்ப காலங்களில் இத்தகைய தருணங்கள் அனைத்தும் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுபவை.

நீங்கள் இரண்டு சுற்று முடிக்கும் போது (அதாவது , 4 ஆண்டுகளுக்குப் பின் ) ஒருவாறு உங்களுக்கு ஒரு ஐம்பது முதல் நூறு சுலோகங்கள் நிரந்தர மனப்பாடம் ஆகியிருக்கும். இது குறைந்தாலும் ,  பாதகமில்லை. மிகுந்தால் மகிழ்ச்சியே .

மூன்றாவது சுற்றில் இருந்து   , ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு சுலோகங்கள் பாராயணம் செய்யலாம். நான்காவது சுற்றில் பத்து செய்யலாம். ஐந்தாவது சுற்றில் முழு அத்தியாயமாக செய்யலாம். இந்த சமயங்களில் உங்களுக்கு அந்த சுலோகங்கள் நன்கு பரிச்சயம் ஆகியிருப்பதால் அந்த வேகம் உங்களுக்கு உடன்பாடாகவே தோன்றும். அர்த்தம் மனதில் ஒட , சுலோகம் வாயில் உச்சரிக்கப் பட இப்படியாக நீங்கள் அவற்றில் நிபுணத்துவம் பெற ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில், குறிப்பிட்ட சுலோகங்களில் மனம் லயித்து நின்று விடும். கண்களில் நீர் வரும். உணர்ச்சிப் பெருக்கால் தன வசம்  கூட இழப்போம். இவை எல்லாம் நாம் சரியான பாதையில் போவதை உறுதிப் படுத்தும்.

தினமும் ஒரு அத்தியாயம் பாராயணம் பண்ணும்  போது , பதினெட்டு நாட்களில் முழு பாராயணம் முடிக்கலாம். பத்து வருடம் முடிக்கையில் நீங்கள் நூற்றுக்கு மேல் சுற்று பாராயணம் முடித்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் சுலோகத்தோடு அர்த்தமும் உடனே சிந்திக்கப் படுவதால், அந்தத் தருணங்கள் விலை மதிப்பு மிக்கவை. உங்கள் வாழ்க்கையை  ஆன்மீக உச்சிக்குக் கொண்டு சேர்ப்பவை.

சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், தகுந்த பெரியார்களோடு கலந்து தெளிவு பெற முயல வேண்டும். இணையத்தில் ஏராளமான கீதை உரைகள் விரவிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு அத்தியாய பாராயணம் முடிந்த பின்னும் விசேஷ பூஜைகள் செய்து மகிழுங்கள். முழு சுற்று முடிந்ததும், உற்றார் உறவினர், நண்பர்களை அழைத்து ஒரு விஸ்தாரமான பூஜை ஏற்பாடு செய்யலாம். அன்று சில பிரதிகள் வாங்கி தகுதி உள்ளோருக்கு அப்போது தானம் செய்ய வேண்டும். அவர்களுக்கும் பாராயணம் செய்யும் முறை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கீதையைப் படிப்பதை "ஞான யக்ஞம் " என்று கிருஷ்ணர் சிலாகிக்கிறார். கீதையைப் பிரச்சாரம் செய்பவர்களை தனக்கு மிகவும் உகந்தவர்கள் என்று புகழ்கிறார். கீதையின் ரகசியங்கள் நமக்குத் தெரியத் தெரிய இந்த ஞான வேள்வி மேன் மேலும் சிறப்படையும். கண்ணன் உங்களுடன் இருந்து துணை புரிவானாக.






Monday, February 17, 2014

கீதை இடைச் செருகலா ?

கீதை இடைச் செருகலா ?
இந்தக் கேள்வி பலராலும் குறிப்பாக திராவிட இயக்கத்தினராலும், கம்யூனிஸ்டுகளாலும் முன் வைக்கப் படுவது. இதற்கு சரியான பதில் முன்வைக்கப் படாததால் அதுவும் ஒரு தரப்பாகப் பேசப்படும் அந்தஸ்து பெற்று விட்டது.இவர்களின் பொதுவான வாதம் கீதை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் குப்தர் ஆட்சியில் எழுதப் பட்டது என்பதே. இந்த வாதம் சற்றும் அடிப்படை இல்லாதது என்பது பாரதமும் , கீதையும் சற்றே படித்தவர்களுக்குப் புரிந்து விடும்.

ஆனாலும் இந்த விஷயம் நம்முடைய "பிற்போக்கு" சிந்தனையாளர்களான இடது சாரிகளும், திராவிட வாதிகளும் திரும்ப திரும்ப பேசியதன் விளைவு , இந்த விஷயம் பாமர அளவிலான விவாதங்களிலும் இடம் பெற்று விட்டது. 

என் நண்பர்களுக்காக ஒரு தேடல் பட்டியல் இட்டு இந்த விஷயத்தை எழுதுகிறேன். இதை முன்பே தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும் அனுப்பியிருந்தேன். அதில் சற்று மெருகூட்டி இதோ கீழே எழுதுகிறேன்.

எனக்கு சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட வியப்பு அளித்தது ஓஷோ வின் கீதை தரிசனம். இதில் ஓஷோ ஒரு விஷயத்தை அலசுகிறார். கொதிக்கும் கொலைக் களத்தில் எழுநூறு பாடல்கள் சொல்லப்பட்டிருக்குமா ? படைகள்தான் பொறுக்குமா ? என்பது தான் அந்த விஷயம்.
ஓஷோவின் அலசல் இதோ (என்றோ படித்தது. சற்று சொந்த சரக்கும் இருக்கலாம் )
கீதையை சொன்னவனும் கேட்டவனும் சாமானியர்கள் அல்ல. அர்ஜுனனே சிறந்த தவ யோகி . இதற்கு பாரதத்தில் சான்றுகள் உண்டு. இப்படியிருக்க, இதை நேரடியாக வாய்மொழி உபதேசமாகக் கொள்ளுதலே இந்த “கீதை உண்மையாகவே குருக்ஷேத்திரத்தில் சொல்லப்பட்டதா ? ” என்ற குழப்பத்துக்குக் காரணம். ஏன் இது ஒரு மானசீக உபதேசமாக இருக்கக் கூடாது ? மனோ வேகம் என்பது அளவிட முடியாதது. ஒரு முழு வாழ்க்கையையே ஒருவன் ஒரு கனவாகக் கண்டு முடித்து விடுவான். ஆனால் ஒரு கனவின் அதிக பட்ச நேரம் பதினேழு நொடிகள் தான்.
இது ஒரு மானசீக உபதேசமே என்பது ஓஷோவின் முடிவு. போர்க்களத்தில்தான் கீதை சொல்லப்பட்டது என்பதில் ஓஷோ காட்டும் உறுதி என் போன்ற கிருஷ்ண பக்தர்களையே அதிர வைக்கிறது. எனக்குக் கூட சமயத்தில் பாரதம் உண்மையா என்றெல்லாம் சந்தேகம் வந்து விடும். ஓஷோ தன்னுடைய ” krishna- The man and his philosophy ” என்ற மகத்தான நூலில் கிருஷ்ணன் பரமாத்மாவே தான் என்று ஒரு சின்ன சந்தேகம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். 

சஞ்சயன் கீதையைக் கேட்டது மிக சாதாரணமான சாத்தியம் என்றும் சொல்லி விட்டார். டெலிபதி இன்றைய மனோ விஞ்ஞானத்தில் மிக சாத்தியமாக ஒன்றாகவே பார்க்கப் படுகிறது. அஷ்டமா சித்திகளை சர்வ சாதாரணமாகக் கையாண்டு வந்த மகாபாரத காலத்து அறிஞர்களான சஞ்சயன் போன்றோருக்கு வியாசர் இந்த வித்தையை அளித்தது வியப்பே இல்லை.

கீதையைப் பற்றி பாரதத்தில் உட்குறி ப்புகள் உண்டு. இவையே இந்த இடைச் செருகல் வாத்தி முறியடிக்கும். அதில் ஒன்று 

பீஷ்ம பர்வம் 43 , 45

ஷட்சதானி சவிம்சாணி ச்லோகானாம் ப்ராஹ் கேசவ:
அர்ஜுன சப்த பஞ்சாசத் சப்த சஷ்டிம் து சஞ்சய :
திருதராஷ்டிரா : ச்லோகமேகம் கீதாயாம் மனமுச்யதே ||

இந்த  சுலோகம் கீதைப் பகுதியில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கையை விளக்குகிறது. இதன் பொருள் இது தான். 
கிருஷ்ணர் கூறியது  620 ஸ்லோகம்
அர்ஜுனன் 57 ஸ்லோகம் ,
சஞ்சய 67 ஸ்லோகம்
திருதராஷ்டிரா 1. ஸ்லோகம்
மொத்தம் 745 ஸ்லோகம்
(இதில் நாற்பத்தி ஐந்து இப்போது இல்லை )

இது பீஷ்ம பர்வத்தில் வருகிறது. இன்னொரு விஷயம் கீதை சஞ்சயனால் நேரடியாகப் பார்க்கப் பட்டது. ஆனால்  இறந்த காலத்திலேயே சஞ்சயனால் சொல்லப்படுகிறது. காரணம்  பத்து நாள் வரை சஞ்சயன் குருக்ஷேத்திரப் போர் முனையில் இருந்தார்). பீஷ்மர் இறந்த பிறகே அவர் மன்னன் திருதராஷ்டிரனிடம் வருகிறார். இந்தச் சிறிய தகவல்கள் கூட முரண்பாடு இல்லாமல் வியாசரால் சொல்லப் படுகின்றன. 

மகாபாரதத்தில் இன்னொரு இடத்தில் கிருஷ்ணரே " கீதையை கூறுமிடத்து நான யோக நிலையில் இருந்தேன். என்னாலேயே அதை மீண்டுமுரைக்க இயலாது " என்கிறார்.  

விவேகானந்தர் , சங்கரர் உரைக்கு முன்னர்  பாதராயணர்  எழுதிய உரை ஒன்று இருந்ததாகவும், இராமானுஜர் அதைப் பற்றி எழுதி உள்ளதாகவும் , அராமானுஜர்  காலத்திலேயே அந்த ஓலைக் கட்டு செல்லரித்து விட்டிருந்ததாகவும் எழுதுகிறார். பாதராயணர் காலம் நிச்சயம் பொது சகாப்தத்துக்கு ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டு காலம் முந்தையது. ( மேற்கத்திய ஆசிரியர்களின் கூற்றுப் படியே )
இன்னொரு விஷயம். திருப்பாவையில் கோதை கீதையைப் பற்றி உரைக்கிறாள். அவள் காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர். ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் எழுந்த ஒன்று உடனே தென்னகம் வந்து சேர முடியுமா ?

குப்தர் காலத்துக்கு முன்னமே எழுதப் பெற்ற புராணங்களில் வராஹ  புராணம் போன்றவைகளில் கீதையை பற்றி புகழுரைகள் உண்டு. இது கீதா மகாத்மியம் என்ற பெயரில் பாராயனத்துக்குப் பின் படிக்கப் படுகிறது.;இங்கே  கிடைக்கும்.

இவை போதும் கீதை மகா பாரதத்தின் மூல அங்கமே என்று தெளிவாக உரைக்க .


Sunday, November 3, 2013

வணிக எழுத்து மற்றும் தரமான இலக்கிய எழுத்து

சில காலம் முன்பு ஜெயமோகன் அவர்களின் வலைத் தளத்தில் படிக்கையில், இது குறித்து ஒரு கட்டுரை தென்பட்டது. படித்ததும், மேலும் சில கட்டுரைகள் இந்த விஷயத்தில் இருந்தன.

விஷயம் இது தான். தமிழில் உருவாகும் இலக்கியங்களை அவர் இரு வகைப் படுத்துகிறார்.ஒன்று , பெருவாரியாக ஜனங்கள் படிக்கும் தின, வார, மாத இதழ்களில் வரும் கட்டுரைகள், புனைவுகள் பெரும்பாலும் வணிக நோக்குடன் இலக்கியச் சிறப்பு இல்லாமல் எழுதப் படுகின்றன என்று ஜெயமோகன் சுட்டிக் காட்டுகிறார். இந்தக் குற்றச் சாட்டும் ஐம்பது வருடங்களுக்கு மேலேயே உள்ளது போலும். க நா சு, சுந்தர ராமசாமி போன்றோரும் இதையே எழுதி உள்ளனர்.

ஜெயமோகன் முதலில் கல்கியையே இந்த வணிக எழுத்தின் முன்னோடியாகக் கருதுகிறார். (சில இடத்தில் அவரது எழுத்தை ஆதர்ச எழுத்து என்றும் கூறுவதுண்டு) .அகிலனும், நா பார்த்தசாரதியும் கூட இந்தப் பட்டியலில் தான் போடுகின்றனர். இது தமிழ் வாசகர்களை சற்று அயர வைக்கும். ஆனாலும், ஜெயமோகனும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடி இதைக் கூறி வருகின்றனர். எனக்கும் முதலில் இதை ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது. கேள்வி கேட்டு  எழுதினால் பிராம்மண பாசம் போலும் என்று ஊதி விடுவார்களோ என்ற பயம் வேறு. அதனால் விட்டு விட்டேன். சமீபத்தில் ஜெயமோகன் மீண்டும் ஒரு கட்டுரை இது பற்றி எழுத. என் ஆர்வம் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.

முதலில் கல்கியின் எழுத்து பற்றி. கல்கி தமிழில் ஒரு புது நடையை யே உண்டாக்கினார் என்று பொதுவான கருத்து உண்டு.  பொன்னியின் செல்வன் அதற்கு ஒரு உதாரணம். ஹரிதாஸ் சினிமா காலம் போன்ற சம்பிரதாய இசை மட்டுமே உள்ள சினிமாவில் இருந்து முச்சந்திக் கூத்து மட்டுமே முதலாகிப் போன நடப்புக் கால கட்டத்திலும் கூட பொன்னியின் செல்வன் மகத்தான வாசிப்பு அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது. இது என்ன கல்கியின் வியாபார உத்தியா ? அப்படி என்னதான் இருக்கிறது கல்கியின் நடையில் ? கல்கி எங்கிருந்து அத்தகைய நடையைப் பிடித்தார் ?

ஒரு எழுத்தாளரின் பின்னணி என்பது அவருடைய வர்ணனைகளில் தான் பெரும்பாலும் வெளிப் படும். அங்கு தானே பெண்பால் கவர்ச்சி, காதல் கிளர்ச்சி போன்றவற்றை எழுதி விற்க முடியும் ? இதே வருணனைகளில் தான் அந்த எழுத்தாளரின்  அனுபவத்தின் மூலமும் தெரிந்து விடும்.

இன்றைய தமிழ் விமரிசகர்கள் எந்த அளவிற்கு வாசிப்பு குறைந்தவர்கள் என்பது நாம் இந்த விஷயத்தில் சற்று ஆராய்ந்தால் தெரிந்து விடும். பொன்னியின் செல்வனில் இருந்து ஒரு வாசகம் . அநிருத்தப் பிரம்ம ராயர் தம் மாளிகையில் வெளியில் வந்த கோலம் பற்றி வருணனை - இதோ 

" அன்பில் அநிருத்தர் ஜப, தப, ஸ்நான,பான, கிரியைகளை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்."

இந்த வாக்கியத்தைப் படித்த பாரம்பரியம் தெரிந்த அனைவருக்கும் அவர் தன சந்தியா வந்தனத்தையும், பூசையையும் முடித்து விட்டு வந்தார் என்று தெரிந்து விடும். இதற்கு முன்னர் யார் அதை எழுதினார்கள் என்றால் இப்போதைய விமரிசகர்கள் விழிப்பார்கள். என் தகப்பனார் வயதுடையவர்களைக் கேட்டால் விளங்கி விடும். " அடேடே ! இது கதா காலட்சேபம் செய்யறவா பாணி " என்று கூறி விடுவர். 
அவர்களுக்கு யார் முன்னோடி ? 
" வேறென்ன ? நம்மோட புராணங்கள் தான் "
"அப்போ புராணங்கள்ல வணிக சமாச்சாரங்கள் உண்டா ?"
" சீச்சீ ! வாயைக் கழுவு . புராணங்கள் ஞானிகளால சொல்லப் பட்டது. ஆனால் அது பிராம்மணன் முதல் வேளாளன்  வரை எல்லாருக்கும் பொது. "
" அப்ப புராண பாணில எழுதினா  வணிக  எழுத்தா ?"
" இதெல்லாம் அந்த பகுத்தறிவு  பேசறவாளண்டை  கேளு" என்று எழுந்து பொய் விடுவர்.

அப்போ இந்த வணிக எழுத்து என்று ஓயாது குற்றம் கூறுவது ஏன் ? இதை இன்னொரு கோண த்தில் பார்ப்போம். வணிக எழுத்து நல்ல இலக்கியங்களை மறைக்கிறது என்பது ஒரு குற்றச் சாட்டு . அப்போது அந்த "நல்ல இலக்கியங்கள் " வணிகம் செய்ய லாயக்கில்லை என்பது அர்த்தமா ?

இன்றைய வணிக எழுத்துகளில் பெரும்பாலானவை காதல்,  உணர்ச்சிகளை நியாயப் படுத்தி எழுதப் படுபவை. இதுவும் அநாதி காலமாக நாம் நம் நாட்டில் கண்டதுதான். (மணியன், சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,) 

இன்னொரு பிரிவு , ,துப்பறிதல்  வன்முறை , வீரம் ஆகியவற்றை தூக்கிப் பிடிக்கும் ஒன்று.இதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகம். ( சுஜாதா,ராஜேந்தர், தமிழ்வாணன்,) 

 அடுத்தது குடும்பம், பாசம், வறுமை, விடா முயற்சி , போன்ற சராசரிக் குடும்பங்களின் நிலை குறித்து  மிகையாகவும், நடுத்தரமாகவும் எழுதப் படும் எழுத்து. இது எப்போதும்  பெண்களின மனம் கவர் எழுத்து. (லக்ஷ்மி, நா பா, அகிலன், கல்கி,) 


ஒரு குறிப்பிடும் கணிசமான பிரிவு காம உணர்ச்சிகளைத் தூண்டுபவை. இதுவும் மொத்தத்தில் ஐந்து சதவிகிதம் இருக்கலாம். இது உலக அளவில் உள்ள விகிதாசாரத்துடன் ஒப்பிட்டால் குறைவாகவே இருக்கும் என்பது என் எண்ணம். ( சாண்டில்யன், பால  குமாரன், புஷ்பா தங்கதுரை,)

இவற்றில் எஞ்சியது ஒரு எழுத்து உண்டு. அது காலம் காலமாக நம் மண்ணின் இலட்சியங்களை, அநாதி காலமாகக் கைக்கொள்ளும் பழக்கங்களை, நம் வரலாற்றை செழுமையாக்கும் மாவீரர்கள், அறிஞர்கள், துறவிகள், அவதாரங்கள் போன்றோரின் வாழ்க்கையை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்ப்பவை. புராண காலம் தொட்டு  இன்றைய பாகவதர்கள் வரை அது  நம் வாழ்க்கையை செழுமை ஆக்கிக் கொண்டே வருகிறது. அதற்குப் பெயர் தான் ஆதர்ச எழுத்து. லட்சிய எழுத்து. இதை மட்டுமே நான் ஆதரித்து பேசுகிறேன்.

அரிச்சந்திர புராணத்தைக் கேட்டு காந்தியை பொய் பேசாமல் இருக்கச் செய்தது இந்த எழுத்து தான்.

 "பசுவைக் கொல்பவனை நான் கொல்வேன் என்று குழந்தை சிவாஜியைப் பேச வைத்தது இந்த எழுத்து தான்.

எப்போதோ நடந்த  ராமாயணக் கதையைக் கேட்டு   "படை திரட்டடா ? இலங்கை செல்வோம்  தேவி சீதையை மீட்போம் !"  என்று ஆயிரம் வருடம் முன்பு  குலசேகரப் பெருமாளை பேச வைத்ததும் இந்த எழுத்து. 

விவேகானந்தனை இமயத்தில் இருந்து குமரி வரை இழுத்து வந்து அகிலத்தையே குலுக்கும் வேதாந்த வாதியாக மாற்றியது இந்த எழுத்து தான். 


இந்த எழுத்தின் ஜாம்பவான்கள் தான் கல்கியும், அகிலனும், நா பா வும். அவர்கள் நம் பாரம்பரியத்தின் நீட்சிகள். இவர்கள் எழுத்தைப் படித்து ஒருவன் திருடினான், பெண்ணை அபகரித்தான் , பொய் சொன்னான் என்றால் அதை நம்ப முடியாது.

இப்போது "தரமான இலக்கியங்கள் " பற்றி சற்றுப் பார்த்து விடுவோம். அவைகளை எடுத்துப் படித்தவுடன் நமக்கு முதலாக தெரிந்து விடுவது அவைகள் யதார்த்த  எழுத்துக்கள். அங்கே நல்லது கேட்டது போன்ற தீர்ப்புகள் எழுதக் கூடாது. எழுதிய கணம் அது "இலக்கியத் தரம்" இழந்து விடும். ஜெயகாந்தனின் "ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம் " ஒரு சிறந்த உதாரணம்.அது நான் என்றுமே மறக்க விரும்பும் நூல். மானுட வாழ்க்கையை லட்சியம் இல்லாமல் வாழ முடியும் என்ற விஷயத்தில் நிலை நிற்கும் நூல். 

இந்த    விமரிசனம் செய்யாத மனப் பாங்கு அதை எழுதிய எழுத்தாளர்களிடமும் சென்று சேர்ந்து விட்டது. நான் பள்ளி இறுதி வகுப்பு படிக்கையில் , மேட்டுப் பாளயம் தமிழ்ச் சங்கத்து நிகழ்ச்சியில், ஜெயகாந்தன்  முந்தைய நாள் போதையுடன்,  மேடையில் நின்று கூச்சலிட்டது நினைவில் இன்னும் இருக்கிறது. கூட்டமே ரத்தானது. அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் அண்ணன் , " அவரு அப்படித்தாண்டா !" என்று சாவகாசமாகக் கூறிவிட்டார் . இதுவே கல்கி மது அருந்தி இருக்கட்டும், கலியுகத்தின் இறுதி வரை அது பேசப்படும்.

ஜெயகாந்தனுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை. அவருடைய சமீபத்திய கட்டுரையில் கூட எப்படி அவரும் ஒரு ரிக்ஷாக்காரனும் சேர்ந்து குடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தது பற்றி விலாவாரியாக இருந்தது. இது இந்த தரமான இலக்கியவாதி பட்டம் அளித்த எழுத்து சுதந்திரம்.


நான் இந்த விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டதற்குக் காரணம், தமிழ் எழுத்தாளர் உலகம் எந்த அளவுக்குச் சீர் கெட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே. ஜெயமோகன் அவ்வப் போது எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சேரும் கூட்டங்கள், முகாம்கள்  நடத்துவார். அப்போதெல்லாம் அவர் திரும்பத் திரும்பச் செய்யும் முக்கிய அறிவிப்பு " இங்கே கண்டிப்பாக மது அருந்தக் கூடாது " என்பது தான். இது போன்ற எழுத்தாளர்கள் ஆன்ம சுத்தி இல்லாமல் எழுதுபவை தான் "தரமான இலக்கியங்களா ?" அவை விற்பனை    ரீதியில் போணியாகாமல் போனது ஒன்றே அவர்களுக்கு "இலக்கியவாதி " அந்தஸ்தைக் கொடுத்து விடுமா ?

அவர்களுடைய எழுத்தின் இன்னொரு இயல்பு உள்ளது உள்ளபடி எழுதுகிறேன் என்று விட்டு அபத்தங்களைக் கூடச் சேர்த்துக் கொள்ள தயாராகி விடுவார்கள். கோவிலில் , அம்பாளின் அழகும், கோவிலின் கம்பீரமும் கூட தெரியாமல் போகலாம். ஆனால் குருக்களின் அழுக்குப் பூணூல் எழுத்தில் இருக்கும். பிரசாதத்தின் மணம் பற்றி எழுதக் கூடாது. அங்கே வந்து நிற்கும் பணக்காரப் பெண்மணியின் மூக்கில் அமர்ந்து தொந்தரவு  செய்யும் ஈ பற்றி எழுதி விட வேண்டும். அதுவும் முக்கியமாக நமஸ்கரிக்கும் போது எண்ணெய்ப் பிசுக்கை கன்னத்தில் அப்பிக் கொண்ட பேராசிரியர் பற்றி எழுதாமலிருக்கவே முடியாது.


கல்கியின் பாத்திரம் தேவாரத்தை ராக மாலிகையாக பாடுவதாக எழுதி , மோகனமும், பிலஹரி  பற்றியும்,  காம்போதி பற்றியும் எழுதி விட்டால் பிரளயம் தான். மேல் தட்டு எழுத்து, அகம்பாவ எழுத்து , பாமரர்களை தாழ்வு மனப் பான்மையில் ஆழ்த்தும் எழுத்து என்று விமரிசித்து "தரமான இலக்கியம்" பட்டியலில் இருந்து நீக்க முகாந்திரம் தேடிவிடலாம். ஜெயமோகன் தன்னுடைய கிறித்தவ தமிழாசிரியர்    ஆபேரியில் கம்ப ராமாயணப்  பாடல் பாடிக்காணபித்ததாக எழுதியவுடன் தான் கர்நாடக சங்கீதத்துக்கு வெகுஜனத் தன்மை வந்து விட்டது போலும்.

ஆக , இப்போது கட்டாயமான இறுதி வாசகம் ஒன்றை எழுத வந்து விட்டேன். (அது தான் சார் 'பஞ்ச்சு டயலாக்கு ")



வணிக எழுத்து , ஆதர்ச எழுத்து, பாமர எழுத்து போன்றவை உண்மையில் மனிதர்களின் நீட்சியே.  பாமரன், வணிகன், வஞ்சகன், காமுகன்,  அறிஞன், ஞானி போன்றோர் எந்த அளவுக்குச் சமூகத்தில் இருக்கிறங்களோ, அந்தந்த வகை எழுத்துக்கள் சமூகத்தில் அந்தந்த விகிதத்தில் இருக்கும்.

Sunday, June 30, 2013

ராமாயணத் தருணம்

ராமாயணம் உலகின் முதல் காவியம் - "ஆதி காவ்யம்" என   போற்றப் படுகிறது. மகரிஷி வால்மீகி உலகின் முதல் கவி.

மேலே சொன்னவை பலர் முதலிலேயே கேட்டது. பலரும் அப்படியே ஒப்புக் கொண்டு சென்றிருப்பர் . இந்த இரண்டு விஷயங்களை சிறிது ஆராயப் புகுந்தால் ஒரு புதையல் அளவு விஷயங்கள் மறைந்திருப்பது தெரிகிறது. நான் வால்மீகி ராமாயணத்தை இப்போது தான் மூல ஸ்லோகங்களின் மூலம் படிக்க ஆரம்பித்துள்ளேன். சற்றே ஆசுவாசமாக இதைப் படியுங்கள். நான் அனுபவித்த அந்த 'கண்டு கொண்டேன்" தருணம் உங்களுக்கும் வாய்க்கட்டும் .

வால்மீகி காலம் வரை உலகில் இருந்த ஒரே கல்வி வேதக் கல்வி. வேதங்கள் மந்திரங்களால் ஆனவை .மந்திரங்கள் தங்களுக்கென தனி உச்சாடன பாணி கொண்டவை. மிகப் பழையவை. மேலும் அநநாளில் பேச்சுக்கென்று, எழுத்துக்கென்று   சம்ஸ்கிருத மொழி இருந்திருக்கின்றது என்றாலும் அது வேத மொழியினின்று சற்று வேறுபட்டது. பிற்பட்டது.

இந்தச் சூழலில் தான் மூன்று நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அவைகளைத் தான் நான் "ராமாயணத் தருணம்" என்று அழைக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்.

முதல் நிகழ்வு - வால்மீகியும், நாரதரும் சந்திக்கின்றனர். நாரதரிடம் , " இந்த உலகில் சத்தியம், தர்மம், ரூபம், வீரம், கல்வி, அறிவு, கருணை , ஒழுக்கம் போன்ற பண்புகளை பூரணமாகக் கொண்ட மானுடர் இருந்திருக்கிறார்களா ? அப்படியிருப்பின் அவரது கதையை எனக்குக் கூறுங்கள் என்று கேட்க , நாரதரும் . " அப்படி ஒரு தீரன் இருந்தான். நெடு நாட்களுக்கு முன் வாழ்ந்தவன் அவன். ராமன் என்பது அவன் பெயர் " என்று ஆரம்பித்து ராம சரிதத்தை சுருக்கமாகக் கூறுகிறார்.

இரண்டாவது நிகழ்வு - நாரதர் வால்மீகியிடம் விடை பெற்றுச் சென்ற பிறகு , வால்மீகி அழகிய தமஸா நதியில் நீராடிய பின் ,நதிக் கரையில் உலாவச் செல்கிறார். அங்கே இரு கிரவுஞ்ச பட்சிகள் சல்லாபித்தபடி விளையாடுகையில், அழிவே நோக்கமாகக் கொண்ட வேடன் ஒருவன் அதில் ஆண் பறவையை அம்பால்  அடித்து வீழ்த்துகிறான். இறந்து விழுந்த இணையைப் பார்த்து பெண் பறவை கதறுகிறது. சாதுவான் வால்மீகி துடிதுடிக்கிறார். உணர்ச்சி மேலீட்டால் , அந்த வேடனைச் சபிக்கும் வண்ணம் தன வாயினின்று சில சொற்றொடர்களை உதிர்த்தார்.

அது இது தான்

मा निषाद प्रतिष्ठाम्त्व | मगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एक | मवधीः काम मोहितम् || १-२-१५

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வ மகம: ஸாஸ்வதீ:  ஸமா: |
யத் க்ரௌஞ்ச மிதுநாதேக  மவதீ: காம மோஹிதம் || (1-2-15)


இதன் பொருள் :- ஓ நிஷாதனே ! கிரௌஞ்ச பட்சிகளின் வேட்கை மிகுந்த சேர்க்கையில் நீ அவற்றில் ஒன்றைக் கொன்றதால் நீ வருங்காலத்தில் நிரந்தரமாக (அவ) கதியை அடைவாயாக !

வால்மீகியோ முதலில் தன தவ வலிமையைக் குறைக்கும் இது போன்ற கோபமான சாபம் வெளி வந்ததே என்று துணுக்குற்ற போதிலும், இன்னொரு எண்ணம் தலை தூக்கவே அவருக்குள் மகிழ்ச்சி பரவியது. . அதற்குக் காரணம் , அவர் உதிர்த்த சொற்களின் அமைப்பு. அது இது வரை யாராலும் மொழியப்படாதது. புது லயத்தில் அமைந்திருந்தது. அவரது சீடர்களும் , அவரது சொற்களின் அமைப்பை சிலாகித்து அதன் புதுமையை எண்ணி வியந்தனர்.

மூன்றாவது நிகழ்வு : அந்த வார்த்தைகளின் புது அமைப்பை எண்ணி எண்ணி வியந்தபடி ஆஸ்ரமம்  வந்து சேர்ந்த பொழுது , அங்கே சாக்ஷாத் பிரம்ம தேவன் பிரசன்னமானார். வால்மீகியும், சீடர்களும் அவரைப் பணிந்து ஆசனம் அளித்து , உபச்சாரம் செய்து மகிழ்ந்தனர். பிரம்மன் வால்மீகி யைப் பார்த்து , " தங்கள் வாயால் உயர்ந்த சொற்களைக் கூறினீர்கள். அவை என் சங்கல்பத்தால் வெளி வந்தவை.  அந்த ஸ்லோகத்தைக் கொண்டு நீங்கள் நாரதர் கூறிய ராமன் என்னும் மகா மனிதனின் வாழ்க்கை சரிதத்தை எழுதுவீராக. உங்களுக்கு ராமனின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் உள்ளது உள்ளபடியே தோன்றும் !! " என்று ஆக்ஞை கூறி மறைந்தார்.;

மந்திரம் என்ற பழம் அமைப்பிலிருந்து வேறுபட்டு "ஸ்லோகம்" என்ற ஒரு புது வகைக் கவிதை பிறந்த தருணம் அது. வால்மீகி பாடியது அனுஷ்டுப் என்னும் சந்த வகையைச் சார்ந்தது. 32 அக்ஷரங்கள் கொண்டது. உலகின் முதல் மானுடக் கவிதை அது. 

இந்த மூன்று நிகழ்வுகளும் சேர்ந்ததே ராமாயணத் தருணம். அது ஒரு பொன் தருணம் என்று வழி வழி மகான்கள் வியந்து கூறுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ? ஒரு காவியம் ஒரு சாபம் போன்ற பாட்டால் துவங்குவதா ? என்று நண்பர்கள் கேட்கலாம்.  அதில் தான் இருக்கிறது அந்தப் பொன் முடிச்சு. அந்த ஸ்லோகம் உண்மையில் வேடன் நிமித்தமாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது புருஷோத்தமனான , திருமாலுடைய ஸ்தோத்திரம் ஆகும். இதோ மீண்டும் பொருள் எழுதுகிறேன்.

மா நிஷாத - ஓ ,  லக்ஷ்மி நிவாஸரே !
 த்வம் - நீவீர், 
காம மோஹிதம்- காம வயப் பட்ட 
கிரௌஞ்ச - அசுர 
மிதுநாத்- தம்பதிகளில் (ராவண - மண்டோதரி) 
ஏகம்- ஒருவரைக்
அவதீ :- கொன்று 
ஸாஸ்வதீ  ஸ மா:  -என்றும் நிலைக்கும் 
பிரதிஷ்டாம் - புகழை 
அ கம; - பெற்றீரே 

ஓ , திருமகளுரை திருமாலே ! நீர் காம வயப்பட்ட அசுர தம்பதிகளுள் ஒருவரை வீழ்த்தி , என்றும் நிலைக்கும் புகழை அடைந்தீரே !

எப்போதும் , ஒரு காவியம் தன உட்பொருளை முதலில , சுருங்கக் கூறி பிறகு விரித்துக் கூறும். இது நியதி. (காவ்ய அர்த்த ஸூ சனம் கஸ்சின் ஆதயம் ஏவ நிரூப் யதே ). அது போல இது இந்த மகா காவியத்தின் மங்கள ஆரம்பம் . 

அதை சாத்தியமாகிய இந்த நிகழ்வுகளே அந்த பொன்னான " ராமாயணத் தருணம் "




Saturday, June 15, 2013

மார்க்சீயம் இன்று எதனால் நிலை நிற்கிறது ?

மார்க்சியம் இன்று  எதனால் நிலை நிற்கிறது ?
( இந்த கடிதம் நான் தமிழ எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியது . அவர் தன இணைய தளத்தில் அந்தக் கடிதத்தை பிரசுரித்தார். இது என் நண்பர்களுக்காக இங்கே மீண்டும் வெளியிடப் படுகிறது. )

திரு ஜெயமோகன்
உங்கள் மார்க்சீயம் பற்றிய கட்டுரைகள் மூன்றையும் படித்தேன். கூடவே ‘மார்க்சீயம் தேவையா ?‘ முதலிலேயே படித்தது. இணைய தளத்தில் தமிழில் இந்தத் தலைப்பில் மிக விஸ்தாரமான , ஆழமான எழுத்துக்கள் இவையே.
எனக்கு இது குறித்த புரிதல் குறைவு. இருந்தாலும் மார்க்சீயம்,  நடைமுறைக்கு ஒவ்வாது என்ற உள்ளுணர்வு மட்டும் இருந்தது. நான மூலதனமோ மற்றைய அடிப்படை நூல்களோ படித்ததில்லை. ஒரு சித்தாந்தம் எவ்வாறு செய்முறைப் படுத்தப் படுகிறதோ, அவ்வளவே அதன் சிறப்பு என்பதில் எனக்குத் தெளிவான உடன்பாடு உண்டு. சந்தோஷ் அவர்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு அதே நியாயத்துடன் பதில் சொல்லியுள்ளீர்கள்.
நீங்கள் சொல்லாமல் விட்டவை என்று எனக்குப் படுகின்ற சிலவற்றை இங்கே கூறுகிறேன். கம்யூனிசம் இயற்கை சித்தாந்தம் அல்ல. அது ஒரு எதிரிய விளைவு (reactionary movement) இயக்கம். அது முளைக்க வேண்டுமானால் அப்படிப்பட்ட நிலம் வேண்டும். ஒரு பாரம்பரிய இந்திய  விவசாயியிடம் போய்க் கம்யூனிசத்தைப் பற்றியும் முதலாளித்துவ ஆதிக்கத்தையும்  பேசினால் அது அவனிடம் எந்தவித சலனத்தையும் உண்டுபண்ணாது. ஆனால் அதே விவசாயி,தன் தொழிலைக் கைவிட்டு , ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப்  போகட்டும், அடுத்த கணமே மார்க்சீயம் அவனுக்கு நியாயமானதாகப் பட்டுவிடும். இது,வேதம் ஓதும் ஒரு பாரம்பரிய பிராம்மணன், ஒரு நாவிதன், வண்ணான், கொல்லன், நெசவாளி, எல்லாருக்கும் பொருந்தும்.
கொல்லன்,  பிராம்மணன் முதலானோர், தன் தொழிலைத் தன் தந்தையிடம் இருந்து பெற்றவர்கள் . அங்கே ஏது முதலாளியும் சுரண்டலும் ? அங்கே மார்க்சியம் செல்லாது. அவர்கள் முதலாளித்துவ அமைப்பில் ஏதாவதொரு துருவத்தில் அமரும் போது மார்க்சீயத்துக்கு சாதகமாகவோ பாதகமாகவோ நிலைப்பாடுகளை எடுப்பார்கள். நீங்களே அரசுப் பணியில் அமர்ந்தவுடன் தொழிற்சங்கம் உங்களைக் கவர்ந்து விட்டது. அதிலும் மார்க்சிய சங்கமே உங்கள் இதயத்தில் இடம் பிடித்தது. என் சகோதரர் முறை உள்ள ஒருவர்,அரசு வங்கியில் சேர்ந்து நீங்கள் கூறும் மார்க்சிய யூனியனில்தான் சேர்ந்தார்.ஒரே வித்தியாசம் உங்கள் பக்குவம் அவருக்கு இல்லை.
ஆக,மார்க்சீயம் வளர ஐரோப்பிய மாதிரியான நிலவுடைமை அமைப்பு தேவை. ஆங்கிலேயர் வரும் வரை இங்கே அந்த அமைப்பு இல்லை. நிலம் ஒரு செலாவணியாகக்  கூடிய பொருள் இல்லை (saleable commodity). எல்லாம் மானிய நிலங்கள். ஒருவன் ஊரை விட்டால் நிலமும் போய் விடும். வெள்ளையர் தான் இந்தப் பட்டா முறையைக் கொண்டு வந்தனர். அங்கிருந்து தான் நிவந்தம் , மானியம் எல்லாம் போய்ப் பிரபு முறை உருவாகி விட்டது. ரியல் எஸ்டேட் என்ற துறை உருவாயிற்று.
இந்தப் பிரபு முறைதான் நீங்கள் சொன்ன மாநிலங்களில் மார்க்சியத்தை உருவாக்கியது. சொல்லப் போனால் இவை இரண்டும்  complimentary.  ஒன்றை  ஒன்று  சார்ந்தவை .முதலில் கம்யூனிச சித்தாந்தம்,மேல்தட்டு அறிவுஜீவிகளின் தேநீர் விவாதத்துக்கு மட்டுமே பயன் பட்டது. பிற்பாடு கூலித் தொழிலாளர்களால் தான் பாமரப் படுத்தப் பட்டது. அதுவும் குறிப்பாக வெள்ளாளர்களால். அவர்கள் நுழைந்ததும் தான் கம்யூனிசம் பரவலாகியது. வரவேற்பும் பெற்றது. வெள்ளாளர்களுக்கு சமூக ரீதியில் பிராம்மணர்களும் , உத்தியோக ரீதியில் முதலாளிகளும் எதிரிகளானார்கள். இது பிரபு முறை வந்த பின் (1802 க்கு மேல் )  நடந்தது. அதற்கு முன் ஒரு கிராம ரீதியில் யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
இதன் இன்னொரு விளைவு,தலித்துகள் தனிமைப்படுத்தப்பட்டது. நடுத்தட்டான வெள்ளாளர்,அரசியலை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தனர். அதுவும் 90 களில் இது முறைப் படுத்தப் பட்டது வி பி சிங் காலத்தில். வெள்ளாளர் தங்கள் கிராம மனப் பாங்கை  விடாதவர்கள். தலித்துகளை ‘எப்போதும்’ போல் நடத்தினர். இந்த நேரத்தில் கம்யூனிசம்,தன் தலித்துகளைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டது. இந்த நேரத்தில் வெள்ளாளர் கட்சிகள் வரிசையாக முளைத்து விட, கம்யூனிசத்தின் பார்வை தலித்துகளை நோக்கித் திரும்பியது. இருந்தும் தங்கள் வெள்ளாள ஆதரிப்பைக் காட்ட அவ்வப்போது முயன்றே வந்தது. 2007 களில் ஐ ஐ டி  27  சதவீத   இட ஒதுக்கீடு ஒரு உதாரணம். சீதாராம் எச்சூரி இந்த விஷயத்தில் பிடிவாதமாக நின்றது குறிப்பிடத்தக்கது. கடைசியில் காரத்தும் இதற்குப் பணிந்தார்.
நான்,அறிவிக்கப்பட்ட இந்துத்துவ வாதியல்ல என்றாலும் அதன் சார்பு நிலைப்பாட்டைக்  கொண்டவன். இந்துத்துவமும் ஒரு எதிரிய விளைவே. நம் தேசியப் பண்பாடுகளை, அதன் ஆணிவேர்களைக் குறி வைத்துத் தாக்கும் நிலை வந்த போது பிறந்தது தான் அது . அதன் குறிக்கோள்கள் நிறைவேறிய பிறகு அதன் தேவை இருக்காது. (it is time bound) இதன் நோக்கமே பழையதை, சிறந்ததை  நிலை நிறுத்தல்.இதற்கு ஒன்றும் பெரிய படிப்பறிவோ ,  அலசும் சக்தியோ தேவையில்லை. இதன் காரணம்தானோ என்னவோ, இந்துத்துவ களத்தில்  மார்சியவாதிகள் போல் படைப்பாளிகளும் , பேச்சாளர்களும் உருவாகவில்லை. ஆனால் அங்கும் சிலர் உள்ளனர். ஆனால் கம்யூனிசமோ இத்தகைய அறிவுஜீவித் தனத்தை ஏவி இதற்குப் பிறகு என்றென்றும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமைப்பை உருவாக்க முனைகிறது. (it is not time bound) . இது தான் அதன் அபாயம்.
நகர்ப்புற சேரிகளில் மார்க்சிய இயக்கத்துக்கு இருக்கும் வரவேற்பு கிராமங்களில் இருக்கவே இருக்காது. நகரத் தொழிலாளி அதிக கூலி வாங்கினாலும் இதே நிலை. காரணம் வருணப் பாகுபாடு ஸ்திரமாக உள்ள இடங்களில் மார்க்சியம் செல்லாது.
மார்க்சியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் உள்ள இன்னொரு அடிப்படை வேறுபாடு ,கருத்து சுதந்திரம்,மற்றும் கருத்து வேறுபாட்டை அங்கீகரிப்பது. எண்பதுகளில் நான கல்லூரியில் படிக்கையில் திரு கோவிந்தாச்சாரி அடிக்கடி என்னைக் கோவையில் சந்திப்பார். ஒரு நாள் அவரிடம் விவேகானந்தர் மற்றும் சங்கரர் தான் நமக்கு வழிகாட்டிகள் என்று சற்று முதிர்ச்சி அற்ற பாணியில் கூறினேன். அவரோ உடனே சங்கரரைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரே போடாகப் போட்டார். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு வைணவர் என்று. இருந்தாலும் அங்கே செயல் முறையில் எந்த விரிசலும் இல்லை. இந்த மாதிரி விஷயங்கள் கம்யூனிசத்தில் சாத்தியமே இல்லை.
மார்க்சியமும்,முதலாளித்துவமும் அதிகாரத்தை மையத்தை நோக்கித் திருப்புபவை (centralization ). ஆனால் நம் இயல்பான வாழ்க்கை முறையோ பரவலாக்கத்தை (decentralization) அடிப்படை ஆகக் கொண்டது. வெள்ளையன் வருவதற்கு முன்னர் வரை ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாகவே இருந்திருக்கிறது. சாணக்கியரும் கூடப் போரிலும்  கிராமத்தைத் தொடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.  முஸ்லிம் மன்னர்களும் இந்த முறை அவர்களின் வரி வசூலிபபுக்கும் ஆட்சிக்கும் சாதகமானதாக இருந்ததால் அந்தத் தொன்று தொட்ட முறையை ஆதரித்தனர்.
முதலாளித்துவம்,வெள்ளையனின் கண்டுபிடிப்பு. இயல்பும் கூட.  கம்யூனிசமும் அப்படியே. நம் நாட்டில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும்  வரை மற்றது இருக்கும்.

வேங்கடசுப்ரமணியன்